கொஞ்சம் விவேகத்தைக் கையாளுங்கள் - இண்ட்ராஃப் நினைவுறுத்தல்

>> Wednesday, September 11, 2013

மேலும் பல ஆலயங்களை தகர்ப்பதன்வழி இந்து ஆலயங்களின் பிரச்சனைகளை கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தீர்த்துவிடப்போவதில்லை. தலைநகர் ஜாலான் பி.ரம்லியில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் ஆலய விவகாரத்தை கவனமாகவும் விவேகமாகவும் கையாள வேண்டியுள்ளது. இல்லையென்றால் அது தெங்கு அட்னானை மட்டுமல்லாது அவரின் முதலாளியான பிரதமர் நஜீப் துன் ரசாக்கையும் வெகுவாக பாதித்துவிடும்.

இன்று இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு கடந்தகாலங்களில் வகுக்கபட்ட தவறான கொள்கைகளே காரணம் என்பதனை பிரதமரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அப்படி அவர் சுட்டிக்காட்டிய தவறான கொள்கைகளில் ஒன்று இந்து ஆலய விவகாரங்கள் குறித்த கவனமான புரிதல் இல்லாததாகும். ஓர் ஆலத்தை உடைக்கும்பொழுது அங்குள்ள கற்கள், சுண்ணாம்பு மற்றும் சிலைகளை மட்டும் நீங்கள் அகற்றவில்லை, மாறாக நாட்டிலுள்ள பல லட்சம் சாதாரண மக்களின் அடிமனங்களையும் நீங்கள் துளைக்கிறீர்கள்.

 2008-ஆம் ஆண்டுவரை எண்ணிலடங்கா இந்து ஆலயங்கள் உடைப்பட்டதன்வழி இந்திய சமூகத்தின் ஆதரவு வெகுமளவில் சரியத் தொடங்கியது. 2008-ஆம் ஆண்டிற்குப் பிறகு பாரிசான் நேசனல் நல்ல பாடத்தையும் கற்றுக் கொண்டது. அதே சாதாரண இந்தியனின் வாக்குதான் பாரிசான் நேசனல் 2013-ஆம் ஆண்டு புத்ரா ஜெயாவை கைப்பற்ற உதவியும் புரிந்தது. ஆனால் அவையனைத்தும் இன்று மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் ஏன் இந்து ஆலயங்களுக்கு மட்டும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது? ஏன் தேவாலயத்திறோ, மசூதிக்கோ, சீனர் கோயிலுக்கோ இதுபோன்ற பிரச்சனைகள் எழுவதில்லை என ஆராயும்போது பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதல் இல்லாததே அதற்குக் காரணம் எனத் தெரியவருகிறது.

 இந்த காரணங்களினால்தான் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் திரு.வேதமூர்த்தியும் அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றார்.
இப்பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்து வைத்திருக்கும் திரு.வேதமூர்த்தி, அதற்கான சிறந்த தீர்வுகளையும் அறிந்து வைத்திருக்கிறார். எனவே பதவியில் இருக்கும் அவரை கடமையாற்ற வழிவிடவேண்டும்.

அதைவிடுத்து, பல்வேறு பிரச்சனைகள் முறையாகக் கவனிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் கூட்டுப் பொறுப்பு என்ற பெயரில் அவரை வாய்மூடி இருக்கச் சொல்வது நியாயமில்லை.



 2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு ஹிண்ட்ராஃப் உடனான கையெழுத்து உடன்படிக்கையின்படி தெங்கு அட்னான் இந்தியர்களுக்கான சிறப்புக் குழுவின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தி நாட்டில் உள்ள இந்து ஆலய மற்றும் இடுகாட்டுப் பிரச்சனைகளை கவனிக்க ஆவண செய்ய வேண்டும்.

 ஹிண்ட்ராஃப் செயல்திட்டத்தில் கையெழுத்திட்ட தெங்கு அட்னான் அதன் உள்ளடக்கங்கள் என்னவென்று குறைந்தபட்சம் படித்தாவது தெரிந்திருப்பார். இருப்பினும், ஹிண்ட்ராஃப் செயல்திட்டத்தின் உள்ளடக்கங்களை மீண்டுமொருமுறை நினைவுறுத்துகிறேன்.

 1.4 - இடப்பெயர்வுக்கு ஆளான இந்திய தோட்டத் தொழிலாளர்களின் வழிப்பாட்டுத் தளங்களும் இடுகாடுகளும்

 இடப்பெயர்வுக்கு ஆளான இந்திய தோட்டத் தொழிலாளர்களின் வழிப்பாட்டுத் தளங்கள் மற்றும் இடுகாடுகள் எதிர்நோக்கும் சவால்களை களையும் சிறப்புத் திட்டங்கள் :

 1. முதன்மைக் குழுவின் கீழ் ஒரு துணைக் குழு அமைக்கப்பட்டு ESC-யின் மேற்பார்வையில் நாட்டிலுள்ள இந்து வழிப்பாட்டுத் தளங்கள் மற்றும் இடுகாடுகள் அனைத்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அதன்பின் விவரமான பரிந்துரைகளின்படி அவை எதிர்நோக்கும் பிரச்சனைகளை களைய ஆவண செய்ய வேண்டும். 

2. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் யாதெனில், 2018-ஆம் ஆண்டிற்குள் எந்தவொரு இந்து வழிப்பாட்டுத் தளமும் இடுகாடும் சிறப்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களில் மட்டுமே அமைந்திருப்பதை உறுதி செய்வதாகும்.

  அமைதி கொள்ளுங்கள்

 தெங்கு அட்னான் அவர்களே, இப்பிரச்சனைகளுக்கான தீர்வு நீங்கள் கையெழுத்திட்ட உடன்படிக்கையிலேயே உள்ளது. எனவே அரசாங்கத்திடம் உள்ள வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி இப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கி செயல்படுங்கள். திரு.வேதமூர்த்தியை பணியில் அமர்த்துங்கள். அவர் அரசாங்கத்தில் இணைந்ததே இத்தகைய காரணங்களினால்தான்.

மீண்டும் ஒருமுறை ஹிண்ட்ராஃப் - பாரிசான் நேசனல் உடனான உடன்படிக்கையின் ஒரு சரத்தை உங்களுக்கு நினைவுறுத்துகிறேன்.

 பிரிவு 3 : ஐந்தாண்டுகால செயல்திட்ட பரிந்துரைகளை செயல்படுத்தும் கட்டுமானம். ”பிரதமர் துறையின் கீழ் ஒரு பிரத்தியேக குழு அமைக்கபட்டு, போதுமான நிதி ஒதுக்கிடுகளை வழங்கி அதனை முறையாகவும் விவேகமாகவும் செயல்திட்டங்களுக்காகப் பயன்படுத்த முழு அதிகாரம் வழங்கப்படும்.”

 “இந்த சிறப்புக் குழுவானது செயல்திட்டத்தின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முழு பொறுப்பினையும் ஏற்று கண்காணிப்பாளாரகவும் மேற்பார்வையாளராகவும் இருந்து சம்பந்தபட்ட அரசாங்கத்தின் துறைகளின் வழி செயல்திட்டம் செயல்படுவதை உறுதி செய்யும்.”

 எனவே, தெங்கு அட்னான் அவர்களே, இந்து வழிப்பாட்டுத் தளங்களினால் உங்களுக்கு பிரச்சனை எழக்கூடாது என்று கருதினீர்கள் என்றால், இப்போது நீங்கள் கையாளும் முறையைக் கைவிடுங்கள். அமைதி பெறுங்கள். சற்று விவேகத்தைப் பயன்படுத்தி சரியான முறையைக் கையாளுங்கள்.

 இனியும் இந்நாடு இதுபோன்ற உணர்வுகளை மதிக்காத சம்பவங்களை தாங்கிக் கொள்ளாது.

நா.கணேசன்
ஹிண்ட்ராஃப் ஆலோசகர்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP