சுங்கை கித்தா 2 தோட்டத்திற்கு குடிநீர் வசதி?

>> Monday, April 6, 2009

படத்தைச் சுட்டி பெரிதாக்கி படிக்கவும்


கடந்த 20 ஆண்டுகளாக குடிநீர் மற்றும் மின்சார வசதியில்லாமல்......”

தவறு! நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை சுங்கை கித்தா 2 தோட்டத்து மக்களுக்கு அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்துகொடுக்கவில்லை!

சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் மாநில அரசாங்க அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும்......”

யார் அந்த நில உரிமையாளர்? நிலம் சட்டவிரோதமாக கைமாறியுள்ளதாக தோட்டத்து மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்களே? அவ்விவகாரம் குறித்து ஏதேனும் ஆய்வு நடந்ததா?

குடிநீர் இலாகாவின் உதவியோடு இங்குள்ள மக்களுக்கு குடிநீர் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக......”

ஏற்கனவே ஒருமுறை குடிநீர் இலாகா ஏற்படுத்திக் கொடுத்த குடிநீர் வசதியை பிடுங்கிவிட்டாராமே அந்த (நில உரிமையாளர்?) நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இந்த குடிநீர் வசதி எத்தனை காலத்திற்கு நீடிக்குமோ? ஓட்டைக் கவர்வதற்காக நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இந்த (தற்காலிக??) குடிநீர் வசதி நிரந்தரமாக இருக்குமா, அல்லது தேர்தலுக்குப்பின் அதுவும் பிடுங்கப்படுமா?

கடந்த 20 ஆண்டுகளாக தேமு செய்ய முடியாததை ஒரே நாளில் கெடா மாநில அரசாங்கம் செய்துள்ளதாக மக்கள் கூட்டணி கட்சியின் வேட்பாளர் மணிகுமார் கூறினார்.”

நிலத்தை அபகரித்ததோடு மட்டுமல்லாது, அங்கு வசிக்கும் மக்களை துரத்தியடித்துவிட்டு நிலத்தை மேம்பாட்டாளர்களிடம் விற்றுவிட துடிக்கும் தேமு ஒரு பக்கம். இடைத்தேர்தலில் ஓட்டைக் கவர்வதற்காக தற்காலிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் மக்கள் கூட்டணி ஒருபக்கம். இவ்விரு கட்சிகளுக்கும் என்ன வேறுபாடு?

”......... சுங்கை கித்தா தோட்ட நிலத்தை மாநில அரசாங்கம் நில ஆர்ஜித சட்டத்தின் கீழ் வாங்கி அந்த நிலத்தில் மக்கள் மலிவு விலை வீடமைப்பு திட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.”

நிலத்தின் உரிமையாளர்? நிலத்தை விற்று பணம் பார்க்க துடியாய் துடிக்க, அவரின் ஆசையை மக்கள் கூட்டணியே நிறைவேற்ற எண்ணம் கொண்டுள்ளது. நிலத்தை மக்கள் கூட்டணி அரசாங்கம் வாங்கி, அந்நிலத்தில் மலிவு விலை வீடுகள் கட்டி அம்மக்களுக்கே விற்று பணம் பார்க்க விருப்பமோ? ஒருநாளைக்கு ரி. 9.00- தினக்கூலியாக பெற்றுவரும் அம்மக்கள் மலிவு விலை வீட்டைக்கூட வாங்க முடியாதே!

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு வந்த இம்மக்களுக்கு நஷ்ட ஈடாக, அந்நிலத்திலேயே அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகளை இனாமாக கொடுக்க வேண்டும்! அதுதான் நியாயம்! தேமு கொடுக்கத் தயாரா? மக்கள் கூட்டணி கொடுக்கத் தயாரா? ம்ம்ம்... இக்காலத்தில் நியாயத்தைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்!

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP