கல்லை மட்டும் கண்டால்...

>> Saturday, August 30, 2008

ஊனக் கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு இவை வெறும் கற்குவியல்கள் தான். கலைக் கண்ணுடன் பார்ப்பவர்களுக்கு, வீழ்ந்து நொறுங்கிக் கிடக்கும் கற்கள் ஒவ்வொன்றும் தன் சோகக் கதையினைச் சொல்லும்.

ஒரு வீட்டைக் கஷ்டப்பட்டு, கடன்பட்டு கட்டி முடிக்கிறீர்கள். ஆனால் ஒரே நாளில் உங்கள் வீடு இயற்கை இடர்களால் இடிந்து போனால், இடிந்தது வீட்டின் சுவராக மட்டும் இருக்காது, உங்கள் மனமும்தான் இடிந்து போயிருக்கும். இடிந்து போன வீட்டுச் சுவரைப் பார்க்கும் உங்கள் கண்களுக்கு மட்டும் அவற்றின் உயிர்ப்புதன்மை தெரியும், காரணம் கஷ்டப்பட்டு உழைப்பைக் கொட்டி எழுப்பிய வீடு அது.

அதேப்போல்தான் ஆயிரம் வருடங்கள் காலம் திடமாக நின்ற, தமிழகத்தின் பழம்பெரும் கோயிலான தஞ்சை இராசராசீச்சுரம் திருக்கற்றளி, இன்று மெல்ல மெல்ல சில பொறுப்பற்ற தரப்பினரின் கையில் சிக்குண்டு சின்னாப்பின்னமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அக்கோயிலின் உயிர்ப்பை உள்வாங்கிக் கொண்ட பல கலை ரசிகர்களின் நெஞ்சம் இப்பொழுது விம்மிக் கொண்டிருக்கும் என்றுக் கூறினால் அது மிகையாகாது. இக்கோயிலின் பாதுகாப்பிற்கு அரணாக விளங்க வேண்டிய இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையே 'வேலியே பயிரை மேய்ந்தது போல' அதன் அழிவிற்கு வித்திட்டு விட்டதை நினைத்தால் சங்கடமாக உள்ளது.

இக்கோயிலின் திருப்பணிக்கு தமிழக அரசு போதிய நிதியுதவிகள் வழங்கியுள்ள போதிலும், அதனை முறையாகப் பயன்படுத்தாது, முறையான ஆய்வுகள் நடத்தாது, பழங்கால கட்டிடங்களைக் கையாள்வதில் போதுமான நிபுணத்துவம் இல்லாத தரப்பினரைக் கொண்டு இக்கோயிலைப் பதம் பார்த்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இக்கோயிலுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தினை எடுத்துக் காட்டும், மேலும் பல படங்கள் உங்கள் பார்வைக்காக..



படங்களைத் தரவிறக்கம் செய்ய நினைத்தால் இங்கே சுட்டவும் : தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆபத்து!

Read more...

தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆபத்து!

>> Friday, August 29, 2008


அண்மையில் 'கல்லுக்குள் நகரம்' என்ற பதிவின் வாயிலாக தஞ்சை பெருவுடையார் ஆலயத்தைப் பற்றிய சில சிறப்புகளைக் குறிப்பிட்டிருந்தேன். தமிழர்களின் சிறப்பை எல்லாம் ஒருங்கே வடித்து, அதனைக் கலை விருந்தாகப் படைக்க அரும்பெரும் தொண்டாற்றிய உடையார் ஸ்ர்ராசராசதேவரையும், கலைத்தாயின் மைந்தர்களான சோழர்காலச் சிற்பிகளையும் இவ்வேளையில் நாம் நினைவுக் கூர்ந்தே ஆகவேண்டும். என்னே அவர்களின் சாதனை..!

ஐக்கிய நாட்டுச் சபையின் கீழ் செயல்பட்டுவரும் யுனேசுகோ அமைப்பின் வழி உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கற்றளி, அண்மைய காலமாக பெரும் சோதனைக்கு உட்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்ததோடு, நெஞ்சம் விம்மவும் செய்கிறது.

இக்கோயிலின் விமானத்தைப் பாருங்கள்... எவ்வளவு கலைவேலைப்பாடுகளுடன் அமைந்த உயர்ந்த கருங்கல் விமானம்..!


ஆகம விதி, சில்ப சாத்திர நுணுக்கங்கள், புராதன கணித முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒவ்வொரு கல்லும் அடித்தளத்திலிருந்து விமானம் உச்சி வரை எடைக்கு எடை, நாற்புறத்திலும் சம அளவிலான பாரம் கொடுக்கப்பட்டு ஒரு பிரமிட்டைப் போல் கட்டி எழுப்பியுள்ளனர் நம் தமிழர்கள். இப்புராதன கட்டுமானத்தின் நுணுக்கங்களை இன்றளவிலும் பொறியியலாளர்களால் முழுமையாகப் புரிந்துக் கொள்ள இயலவில்லை.

நவீன தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில், அவற்றைப் பயன்படுத்தி இக்கோயிலைக் காலங்காலமாய் நிலைத்து நிற்கச் செய்து, வருங்கால சந்ததியினர் வரலாற்றை நினைத்து பூரித்துவிடும்படி செய்ய வேண்டாமா? முக்கிய விடயங்களை அறிவிக்கும் கல்வெட்டுகளைப் பாதுகாத்து வரலாற்றைக் காக்க வேண்டாமா?

ஆனால் அண்மைய காலமாக இக்கோயிலுக்கு ஏற்பட்ட சோதனை என்ன?

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை அண்மையில் தஞ்சை பெருவுடையார் கோயிலில் மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபடுவதாகக் கூறி, கோயிலின் பல பகுதிகளைச் சேதப்படுத்தி, வரலாற்றைச் சிதைத்து உள்ளனர். புனரமைப்பு என்றப் பெயரில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருகற்றளியைச் சேதப்படுத்தப்படும் வேளையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தஞ்சை இராசராசீச்சுரம் திருக்கற்றளியின் இரண்டாவது கோபுரமான ராசராசன் கோபுரத்துடன் இணைத்து தெற்கு - வடக்காக 125.21 மீ.நீளமும், கிழக்கு மேற்காக 241.51 மீ.நீளத்துக்கு நான்கு புறங்களிலும் திருசுற்று மாளிகை எனப்படும் சுற்று மண்டபத்துடன் கூடிய மதில் சுவர்கள் அமைந்துள்ளன. கோயிலின் வடக்குப்புற திருச்சுற்றின் ஒரு பகுதியில் சுவரின் அடித்தளம் மன்ணில் புதைந்ததுடன், அதனருகே மற்றொரு மேற்கூரையில் விரிசலும் ஏற்பட்டது அண்மையில் கண்டறியப்பட்டது.



இக்கோயிலைப் பராமரித்து வரும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை அதைச் சீரமைக்க முடிவெடுத்து, வடக்கு திருச்சுற்று மாளிகையில் அம்மன் சன்னதிக்கும், சுப்பிரமணியர் சன்னதிக்கும் இடைப்பட்ட பகுதியில் 50 மீட்டர் நீளத்துக்கு சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்க ரூ.59 லட்சத்தை ஒதுக்கி, முதல் தவணையாக ரூ.25 லட்சத்தை அனுமதித்து பணிகள் தொடங்கின.

பழுதடைந்த கற்களுக்கு மாற்றாக புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான் மலையிலிருந்து பெரிய கருங்கல் பாறைகள் கொண்டு வரப்பட்டன. இத்திருச்சுற்று மாளிகையில் 206 லிங்கங்கள் உள்ளன. பணி நடைப்பெறும் பகுதியில் இருந்த 23 லிங்கங்கள் அகற்றப்பட்டு பணிகள் நடைப்பெறுகின்றன.

பாதுகாப்பான வகையில் கல் தூண்களைப் பிரித்தெடுக்கத் தவறியதால் பெரும்பாலான சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளுடன் கூடிய தூண்கள் துண்டு துண்டாக உடைந்து சேதமடைந்துள்ளன. இந்தத் தூண்கள் பழைய நிலையில் மீண்டும் இணைக்க முடியாத அளவுக்குச் சேதமடைந்துள்ளன. பழங்கால கட்டிடங்களைப் பற்றிய தகவல்களும், கட்டிட நுணுக்கங்களும், அதனைப் புனரமைக்கும் வேலைகளில் சற்றும் முன் அனுபவமில்லாதவர்களால் வந்த வினை இது!

தஞ்சை பெருவுடையார் கோயில் திருச்சுற்று மாளிகையிலிருந்து பிரித்தெடுத்தபோது சிதைந்த கல்வெட்டுத் தூண்கள் (வலது) மகா மண்டபம் குமுதப்படையில் இயந்திரம் கொண்டு அறுக்கப்பட்டப் பகுதி.


இவர்களால் சேதப்படுத்தப்பட்ட தூண்களிலுள்ள கல்வெட்டில் இராசராச சோழனின் வாய்மொழி உத்தரவின் பேரில், சோழநாட்டு அமன்குடியைச் சேர்ந்த சேனாதிபதி மும்முடி சோழ பிரம்மராயன் தலைமையில் இந்தத் திருச்சுற்று மாளிகை கட்டப்பட்டது என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேச் செய்திக் குறிப்பு விமானத்தின் பின்புறமுள்ள கருவூர் சித்தர் சன்னதிக்கு அருகிலுள்ள திருச்சுற்று மாளிகை தூண் உட்பட மூன்று இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உடைக்கப்பட்ட தூண்களில் இராசராச சோழனும் அவரது மகன் இராசேந்திர சோழனும், இக்கோயிலுக்காக அளித்த செப்புத் திருமேனிகள் மற்றும் நகைகள் குறித்து கூறப்பட்டுள்ளன.



பழமையான கட்டிடங்களைப் பிரித்தெடுக்கும் போது முக்கிய ஆவணங்களாகத் திகழும் கல்வெட்டுகளைப் பாதுகாப்பது அவசியம். தூண்களுக்கு அழிவு நேரிட்டதுபோல் இக்கோயிலின் மகா மண்டபத்தின் தென்புற துணை பீடம், அதிட்டானம் ஆகிய பகுதிகளில் திருப்பணி என்ற பெயரால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

அதிக எடையுள்ள கற்களைப் பிரித்தெடுக்கும் பணியில் மனித உழைப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதால், தூண்கள் கீழே விழுந்து சேதமடைந்துள்ளன. பல லட்சம் நிதி ஒதுக்கி செலவு செய்யும் தொல்லியல் ஆய்வுத் துறை நவீன இயந்திரங்களைக் கொண்டு பணிகளைச் செய்திருந்தால் இந்த இழப்பை தவிர்த்திருக்கலாம்.

தொல்லியல் ஆய்வுத் துறையால் ஏற்பட்ட இந்தச் சேதம் 'ஒரு தேசிய இழப்பு' என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


துறை சார்ந்த வல்லுநர்களின் நேரடி மேற்பார்வையில் இப்பணி நடைப்பெறாததால் இராசராசனின் பல கல்வெட்டுகள் முர்றிலுமாக அழிந்துவிட்டன. இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்றுச் சின்னங்களின் முன்புள்ள அறிவிப்புப் பலகையில், அச்சின்னத்துக்கு சேதம் ஏற்படுத்துபவர்கள் கடுமையான தண்டனைக்குரியவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



அத்தகைய அறிவிப்பு வெளியிட்ட தொல்லியல் ஆய்வுத் துறையினரே வரலாற்றுச் சின்னத்தின் கல்வெட்டுகளை அழித்தால் அவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது? இனியாவது தொல்லியல் ஆய்வுத் துறையின் உயர்நிலை அலுவலர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மேலும் அழிவுகள் ஏற்படாத வகையில் இக்கோயிலைக் காப்பாற்ற வேண்டும் என்பதே கலை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு. புலம்பெயர் தமிழர்களான மலேசியத் தமிழர்களின் எதிர்ப்பார்ப்பும் அதுதான் என நம்புகிறேன்.

இப்பதிவைப் படிப்பவர்கள் தயவு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டு கடிதத்தையும், பதிவில் உள்ள படங்களையும், கொடுக்கப்பட்டுள்ள முகவரிகளுக்கு அஞ்சல் மூலமோ அல்லது மின்மடல் மூலமோ அனுப்பி வைத்து, சம்பந்தப்பட்டவர்களை உரிய நடவடிக்கை எடுக்கக் கூறலாம்.

Dear Sir/Madam,

I write in respond to the plea by G.P.Srinivasan in his article “Imminent Danger to Thanjavur Big Temple” as published in the Haindava Keralam website, i.e http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=6999&SKIN=B on 21st August 2008. Please see the attachment enclosed for reference.

The article clearly explains the appalling renovation works supposedly being carried out to restore/conserve a World Heritage Monument as declared by UNESCO. It also depicts the lack of awareness, respect and sensitivity by the named responsible body i.e ASI (Archeological Survey of India ) into the preservation of such an ancient, sacred, religious and cultural shrine.

Therefore, I am appealing to the UNESCO and relevant Indian Authorities to promptly intervene to stop such an atrocious dilapidation and insult of our Ancestral Testimony. I urge you to respond and rely on your compassionate understanding of this very sensitive matter.

Yours Sincerely,

உங்கள் பெயர்
( A Malaysian of Indian Origin and Devoted Hindu Practitioner).

கடிதம் அனுப்ப வேண்டிய முகவரிகள் :-

Hon'ble Smt. Ambika Soni,

Union Minister for Culture,
Govt. of India, New Delhi TEL. -26499332, 26494199, 26494652Fax 26494652, 9868181830(M)22, Akbar Road, New Delhi

Hon'ble Smt. Sonia Gandhi,
UPA Chairperson,
New Delhi
soniagandhi@sansad.nic.in
Fax: +91 (0)1123017047

Hon'ble Dr. Manmohan Singh,
Prime Minister of India, New Delhi
manmohan@sansad.nic.in pmosb@pmo.nic.in
Tel.Telephone: 91-11-23012312.
Fax: 91-11-23019545 / 91-11-23016857 Tel. 23018939, 23011156, 23018907, 23019334, 23015470

Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru Kalaignar Mu. Karunanidhi,
Chennai. cmcell@tn.gov.in

The World Heritage Centre, UNESCO
Attention:
Mr Francesco Bandarin, Director, F.Bandarin@unesco.org
United Nations Educational, Scientific and Cultural Organization
7, place de Fontenoy
75352 Paris 07 SP, France
Tel: +33-(0)1-45 68 15 71 / +33-(0)1-45 68 18 76
Fax: +33-(0)1-45 68 55 70
E-Mail: wh-info@unesco.org
Technical support: wh-support@unesco.org

Mme Zohra Nidaye,
Secretary, Central and South Asia Unit z.ndiaye@unesco.org

Mme Anne Lemaistre,
Chief of Policy and Statutory Implementation Unit A.Lemaistre@unesco.org

Mme Minja Yang,
Director and UNESCO Representative to Bhutan, India, Maldives and Sri Lanka
m.yang@unesco.org

மலேசிய இந்திய தூதரகம்

High Commission Of India
No. 2, Jalan Taman Duta,
Off Jalan Duta,
50480 Kuala Lumpur

Tel: (00-603) 20933510
Fax: (00-603) 20933507, 20925826

E-mail: hc.kl@streamyx.com

தமிழ் நாடு அரசு

tourism and culture tamil nadu
Dr. V. Irai Anbu IAS
Secretary to the Government,
Secretariat, Chennai - 600 009

Phone : 25670820 (O), 25384990 (R)
Fax : 25670820, 25670716, 25676287
E-Mail : toursec@tn.gov.in

Department of Archaeology,
Tamil Valarchi Valaagam,
Halls Road, Egmore,
Chennai – 600 008.

மின்மனுவில் உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்.

http://www.ipetitions.com/petition/tanjavurtemple/

Read more...

சுவாமி சிதானந்தா நேற்றிரவு மகா சமாதி..




'த‌னித்திரு, ப‌சித்திரு, விழித்திரு' என்ற‌ வாச‌க‌ங்க‌ளின் வ‌ழி ஆன்மீத்திற்கு அடிப்ப‌டையான‌ ஒழுக்க‌ங்க‌ளை எளிமையாக‌வும், அதே வேளையில் தெளிவாக‌வும் உல‌க‌ ம‌க்க‌ளுக்கு எடுத்திய‌ம்பும் தெய்வீக‌ வாழ்க்கைச் ச‌ங்க‌த்தின் த‌லைவ‌ர் சுவாமி சிதான‌ந்த‌ ச‌ர‌சுவ‌தி, நேற்றிர‌வு ம‌லேசிய‌ நேர‌ப்ப‌டி இர‌வு 11 ம‌ணிய‌ள‌வில் ரிஷிகேசில் ம‌கா ச‌மாதியை எய்தினார்.

த‌ன‌து இனிமையான‌ புன்ன‌கையிலும், அன்பான‌ பேச்சிலும் ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ம‌ன‌ங்க‌ளின் ஆன்மீக‌த் தேட‌ல்க‌ளுக்கு 'உள்ள‌ங்கை நெல்லிக்க‌னி'தான் ஆன்மீக‌ம் என‌ எடுத்துக் காட்டிய‌வ‌ர் சுவாமி சிதான‌ந்த‌ ச‌ர‌சுவ‌தி.


1943‍ல் சிறீ சுவாமி சிவான‌ந்த‌ர் ஆசிர‌ம‌த்தில், த‌ன் ஆன்மீக‌த் தேட‌ல்க‌ளைத் தொட‌ங்கிய‌ சிறீத‌ர் ராவ் (சுவாமி சிதான‌ந்தாவின் இய‌ற்பெய‌ர்) 1948‍ல் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ யோக‌ வேதாந்த‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் துணை வேந்த‌ராக‌வும், ராஜ‌ யோக‌ பேராசிரிய‌ராக‌வும் சுவாமி சிவான‌ந்தா அவ‌ர்க‌ளால் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார். ப‌த‌ஞ்ச‌லி யோக‌ சூத்திர‌த்தை க‌ரைத்துக் குடித்த‌ சுவாமி அவ‌ர்க‌ளின் போத‌னைக‌ள் ப‌ல‌ரையும் அன்று விய‌க்க‌ வைத்த‌து. துணை வேந்த‌ர் பொறுப்பேற்ற‌ அதே ஆண்டின் இறுதியில் 'தெய்வீக‌ வாழ்க்கைச் ச‌ங்க‌த்தின்' பொதுச் செய‌லாள‌ராக‌ சுவாமி சிதான‌ந்தா நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

10‍ஆம் திக‌தி சூலை மாத‌ம் 1949‍ஆம் ஆண்டில் சிறீத‌ர் ராவ், சிறீ சுவாமி சிவான‌ந்தா அவ‌ர்க‌ளால் ச‌ன்னியாச‌ தீட்சைப் பெற்று 'சுவாமி சிதான‌ந்தா' என்ற‌ ஆன்மீக‌ப் பெய‌ரைப் பெற்றார்.
'சிதான‌ந்தா' என்றால் தெளிவும் அருளும் பெற்று விள‌ங்குப‌வ‌ன் என்றுப் பொருள்ப‌டுகிற‌து.

1959ஆம் ஆண்டில் சுவாமி சிதான‌ந்தாவை அவ‌ர் குரு, த‌ன‌து பிர‌திநியாக‌ அமெரிக்காவிற்கு அனுப்பி ' தெய்வீக‌ வாழ்க்கைச் ச‌ங்க‌த்தின் கொள்கைக‌ளைப் பிர‌ச்சார‌ம் செய்ய‌ வைத்தார். மூன்று ஆண்டுக‌ள் அங்கு சேவையாற்றிய‌ப் பின், 1962‍ல் தாய‌க‌ம் திரும்பினார்.


1963‍ஆம் ஆண்டில் சிறீ சுவாமி சிவான‌ந்தா அவ‌ர்க‌ளின் ம‌கா ச‌மாதியை அடுத்து, தெய்வீக‌ வாழ்க்கைச் ச‌ங்க‌த்தின் த‌லைவ‌ர் ப‌த‌வியை சுவாமி சிதான‌ந்தா ஏற்றார். அன்று தொட‌ங்கி சுவாமி சிதான‌ந்தா உல‌கின் ப‌ல‌ நாடுக‌ளுக்குப் ப‌ய‌ண‌ம் மேற்கொண்டு ஆன்மீக‌க் க‌ருத்துக‌ளை ப‌ர‌ப்ப‌லானார். ப‌ல‌ நாடுக‌ளில் தெய்வீக‌ வாழ்க்கைச் ச‌ங்க‌த்தின் கிளைக‌ளையும் ஏற்ப‌டுத்தினார். ம‌லேசியாவில் ப‌த்தும‌லை ஆல‌ய‌ம் அருகே 'ம‌லேசிய‌ தெய்வீக‌ வாழ்க்கைச் ச‌ங்க‌ம்' அமைந்துள்ள‌து குறிப்பிட‌த் த‌க்க‌து.

வாழ்நாளில் ப‌ல‌ ம‌ன‌ங்க‌ளுக்கு ஒளிவிள‌க்காய் அமைந்த‌ அந்த‌ ஆன்மீக‌ச் சுட‌ர், நேற்று சுத்த‌ சைத‌ன்ய‌த்தில் நிலைப்பெற்று பிர‌ம்ம‌ ஐக்கிய‌ம் எய்திய‌து. நிலைப்பெற்றுவிட்ட‌ அவ‌ரின் ஆன்மீக‌ போத‌னைக‌ள், க‌ரைச்சேர‌ துடிக்கும் ம‌ன‌ங்க‌ளுக்கு க‌ல‌ங்க‌ரை விள‌க்க‌மாய் விள‌ங்கும் என்ப‌தில் ஐய‌மில்லை.

சுவாமி சிதான‌ந்தா ச‌ர‌சுவ‌தி திருவ‌டி போற்றி..

Read more...

24 மணிநேர மகா யாகம்,உண்ணா நோன்புப் போராட்டம்..

>> Wednesday, August 27, 2008


வருகின்ற ஆகசுட்டு 30-ஆம் திகதி தொடங்கி 31-ஆம் திகதி வரை, இந்துராப்பு மக்கள் சக்தி தேசிய அளவில் மகா யாகமும் உண்ணா நோன்புப் போராட்டமும் நடத்தவுள்ளது.

திகதி : 30 ஆகசுட்டு 2008 – 31 ஆகசுட்டு 2008

நேரம் : 8.00 காலை (சனி 30 ஆகசுட்டு - ஞாயிறு 31 ஆகசுட்டு)

இடம் : தேவி சிறீ மகா மாரியம்மன் ஆலயம், சாலான் பெசார், மந்தின், நெகிரி செம்பிலான்.

இந்த மகா யாகத்திற்கு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் குறைந்தது ஒரு பேருந்தாவது வர வேண்டும் என்பது தலைவர் வேதமூர்த்தியின் வேண்டுகோள். மகா யாகத்தில் கலந்துக் கொள்பவர்கள் 24 மணிநேரமும் ஆலயத்தில் இருக்கும்படியும், உண்ணா நோன்புப் போராட்டத்தில் கலந்துக் கொள்ள எண்ணம் கொண்டவர்கள், தயவு செய்து முன்கூட்டியே நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் உங்கள் பெயரைப் பதிவு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

24 மணிநேரம் இடைவிடாது இறைவவின் நாமம் உச்சரிக்கப்பட இம்மகா யாகம் நடைப்பெறும். இந்த மகா யாகத்தில் இ.சா வில் கைதான ஐந்து இந்துராப்பு தலைவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், இந்துராப்பு போராட்டத்தில் கைதான போராட்டவாதிகளுக்கும் மற்றும் 51 வருடங்களாக அம்னோ அரசாங்கத்தினால் ஒடுக்கப்பட்ட மலேசிய இந்தியர்களுக்குமாக பிராத்தனை நடைப்பெறவுள்ளது.

மேலும் தகவல்களுக்கு :-

திரு.அரிதாசு - 012-3323 490
திரு.சிவா - 019 6944 693 / 06- 7672995/6

மறவாமல் கலந்துக் கொள்வீராக....

Read more...

51-வது சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் அமைதி போராட்டம்..


வருகின்ற ஆகசுட்டு 31-ஆம் திகதி மலேசியா தனது 51-வது சுதந்திர தின நாளைக் கொண்டாடும் அதே நாளில், இந்து உரிமைப் பணிப்படை தனது அமைதிப் போராட்டத்தை லண்டனில் நடத்தவுள்ளது. 51 வருடங்களாக மலேசிய இந்தியர்களை ஒடுக்கி, அவர்களின் உரிமையைக் காற்றில் பறக்கவிட்ட அம்னோ அரசாங்கத்திற்கு எதிராக லண்டனில் அமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் லண்டன்வாழ் மலேசிய இந்தியர்கள் மற்றும் மனித உரிமைக் கழகங்கள் கலந்துக் கொண்டு, மலேசிய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தையும், மனித உரிமைகளையும் முறையாகப் பேணிக் காத்திட வேண்டும் என மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தவுள்ளனர்.

இப்போராட்டத்தின் நிரல் பற்றிய தகவலை அறிந்துக் கொள்ள, கொடுக்கப்பட்டிருக்கும் இணைய இணைப்பைச் சுட்டவும் : லண்டன் அமைதிப் போராட்டம்

Read more...

மக்கள் சக்தியின் வெற்றி!


நேற்று விறுவிறுப்பாக நடைப்பெற்ற பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில், தேசிய முன்னனியின் வேட்பாளர் அரிப் ஷா ஓமார் மற்றும் அக்கிம் கட்சியின் வேட்பாளர் அனாஃபி அகமதுவை எதிர்த்துப் போட்டியிட்ட மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அனுவார் இபுராகிம் 15,671 பெரும்பான்மை ஓட்டு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றார்.

ஓட்டுகளின் என்ணிக்கை..

தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை : 58,459

அனுவார் இபுராகிம் (மக்கள் கூட்டணி) : 31,195

அரிப் ஷா ஓமார் (தேசிய முன்னணி) : 15,524

அனாஃபி அகமது (அக்கிம்) : 92

வாக்களித்தவர்கள் சதவிகிதம் : 81.01 %

பழுதான ஓட்டுகள் : 447

திரும்பப் பெறப்படாத ஓட்டுகள் : 98

கடந்த நாட்டின் 12-வது பொதுத் தேர்தலில் மக்கள் நீதிக் கட்சியின் வேட்பாளர் வான் அசிசா இசுமாயிலுக்கு கிடைத்த ஓட்டுகளைவிட இம்முறை அவரின் கணவர் அனுவார் இபுராகிமிற்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனுவாரின் வெற்றி ஒரு தனிப்பட்ட மனிதரின் வெற்றி அல்ல. மாற்றத்தை விரும்பிய பெர்மாத்தாங் பாவ் மக்கள் கொடுத்த ஆதரவுதான் இன்று அனுவாரை வெற்றிப் பெறச் செய்துள்ளது.

விரைவில் அனுவாரின் புத்ரா ஜெயாவில் காலடி எடுத்து வைக்கும் கனவு நிஜமாகவேண்டும். அடுத்த கணமே கமுந்திங் தடுப்புக் காவல் கதவுகள் திறக்கப்பட்டு ஐந்து பறவைகள் சுதந்திரமாய் பறக்க வேண்டும்.

மக்கள் சக்தி மகத்தானது..!

வாழ்க சனநாயகம்..!

Read more...

என்ன கொடுமை சாமி இது..!

>> Tuesday, August 26, 2008

மலேசியாவிலேயே 'யூ டியூப்' தளத்தில் ஓர் அமைச்சர் பேட்டிக் கொடுத்திருக்கிறார் என்றால் அது நம்ம சாமிவேலு அண்ணாச்சிதான். 12-வது பொதுத் தேர்தலுக்கு முன்பு 'யூ டியூப்' தளத்தில் 'ஓம் சக்தி' என்ற ஒளிப்படச் சுருள்கள் வெளிவந்திருந்ததை நாம் மறந்திருக்க முடியாது. இப்பொழுது நெகிழ்வட்டு ஒன்றினை வெளியிட்டு பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யும் முதல் மலேசிய (முன்னால்) அமைச்சரும் இவரே.. :)

சரி அவர் கதை சொல்லும் அழகை ரசிப்போம்..

பகுதி 1



பகுதி 2



இப்படி நெகிழ்வட்டு வெளியிட்டு, கன்னத்தில் கைவைத்துக் கொண்டே பிரச்சாரம் செய்கிற அளவிற்கு உங்களை கொண்டுவந்துவிட்டனரே சாமி..

மைக்கா ஓல்டிங்ஸ் கதை என்ன ஆச்சி சாமி..? பெர்மாத்தாங் பாவ் பங்குதாரர்கள் கேட்கிறார்கள்.. அதையும் பிரச்சாரத்தில் சொல்லியிருக்கலாம்..!

Read more...

கைதானவர்கள் விடுதலை!

>> Monday, August 25, 2008

கடந்த 23-ஆம் திகதி, பண்டார் பெர்டா செபராங் ஜெயாவில் நடைப்பெற்ற மறியலில் கைதான ஒன்பது இந்துராப்பு ஆதரவாளர்களில் இரு பெண்மணிகள், நேற்று மதியம் 2 மணியளவிலும் மற்ற எழுவர் இன்று மாலை 6 மணியளவிலும் விடுவிக்கப்பட்டனர்.

சாந்தி 30, சாரதா 34 ஆகிய இருவரையும் பேராக் மாநில இந்துராப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.வேதமூர்த்தி பிணை கையெழுத்திட்டப் பின் விடுவித்தனர்.

இந்துராப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.தனேந்திரனையும் மற்ற அறுவரையும் மத்திய செபராங் பிறை மாவட்ட காவல் நிலையத்திலிருந்து வட செபராங் பிறை மாவட்ட காவல் நிலையத்திற்கு இன்று காலையில் கொண்டு சென்றனர். அதன்பின் மாலை 6 மணியளவில் எழுவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பட்டவெர்த் காவல் நிலையத்திற்கு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் திரு.இராமசாமி, காப்பார் நாடாளுமன்றத் தொகுதி தலைவர் திரு.மாணிக்கவாசகம், ரூனி லியு போன்றோர் வருகை புரிந்திருந்தனர். காவல் நிலையத்தின் வெளியே சுமார் இருநூறு இந்துராப்பு ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர்.

பிணையிலிருந்து விடுவிக்கப்பட்ட திரு.தனேந்திரன், இந்துராப்பு ஆதரவாளர்களை நோக்கி உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட காவல்த் துறையினர் கூட்டத்தினைக் கலைக்க முயன்றனர். அவ்விடத்தில் பினாங்கு துணை முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், அவர்களை மதிக்காது காவல்த் துறையினர் அராஜகமாக நடந்துக் கொண்டனர். கலகத் தடுப்புப் படை முன்னிருத்தப்பட்டிருந்தது.

காலையில் பட்டவெர்த் காவல் நிலையத்தில் கைதானவர்களின் குடும்பத்தினரோடு திரு. மாணிக்கவாசகம் உரையாடுதல்



பினாங்கு மாநிலத் துணை முதல்வர், திரு.மாணிக்கவாசகம், ரூனி லியு ஆகியோர் காவல் நிலையத்தில்...


திரு.தனேந்திரனும் மற்ற அறுவரும் விடுவிக்கப்பட்டப் பின்...


திரு.தனேந்திரன் ஆதரவாளர்களை நோக்கி உரையாடுதல்...


காவல்த்துறையினர் கூட்டத்தினரைப் படம் பிடித்தல்..


திரண்டிருந்த கூட்டத்தினைக் கலைக்க காவல்த் துறையினர் முயல்தல்...


கலகத் தடுப்புப் படை முன்னிருத்தப்பட்டு தயார் நிலையில் இருத்தல்..




தமிழர்கள் மட்டும் இந்த நாட்டில் நியாயத்திற்காக ஒன்று கூடினால் தவறு..! ஆனால் மாரா பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தால் அது தவறு கிடையாதாம்...!

நமக்கொரு நியாயம், அவர்களுக்கோர் நியாயம்..!

Read more...

உன் திசையில் உலகத் திசை



உன்
கண்களில் உண்டு
எரிமலை

உன்
கைகளில் உண்டு
வல்லமை

அகிலத்தை
அசைக்கும் சக்தி
உன்
வார்த்தைகள்

உன் பின்
இளைஞர் படை திரட்சி
உன்னிலே
வெளிப்படும் பெரும் புரட்சி

சிறை என்ன சிறை
இன்று அது உன்
சின்ன அறை..
மக்கள் சக்தி - உன்
மிகப்பெரிய அறை...
இதய அறை!



மெல்ல எழுந்ததற்கே
இத்தனைக் கைவிலங்கு
பொங்கி நீ எழுந்தால்
சிதறுத் தேங்காயாய்
சிறுமதி ஆட்சியாளர்..

உன் திசை
வெற்றி தரும்
பெரும் திசை!
எல்லா திசையினரும்
தேடி வருவார்கள்
ஒருநாள்
உன் திசை...

விண்ணும் மண்ணும்
உன்
சிங்க மடியில்
வெற்றி மலர்களை இறைக்கும்

உனக்காக
வெற்றிப் பல்லக்கு
சுமந்திருக்கிறோம்

மனித உரிமைப் போராட்டச்
சுமைக் கூட
சுகம் தரும் சுமை!

(கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ், சுவீடன்)
khileefrancis@yahoo.com

Read more...

கொடி அறிமுக நிகழ்வு மற்றும் இந்துராப்பு மறியல்

கடந்த 23-ஆம் திகதி பினாங்கில், இந்துராப்பு கொடி அறிமுக நிகழ்வின் நிழற்படங்களும், நகர்ப்படமும், செபராங் ஜெயா பண்டார் பெர்டாவில் ஒன்பது இந்துராப்பு ஆதரவாளர்கள் கைது செய்ததன் பேரில் நடத்தப்பட்ட மறியலின் நிழற்படங்களும் உங்கள் பார்வைக்கு..

வழங்கியவர் : திரு.அரிபாலன் (பினாங்கு) நன்றி







பெர்மாத்தாங் பாவ் தொகுதிவாழ் தமிழர்களின் ஓட்டு யாருக்கு?

Read more...

இந்துராப்பு கட்டமைப்பில் புல்லுருவிகள்!

>> Sunday, August 24, 2008

HINDRAF
135-3 JALAN TOMAN 7
KEMAYAN SQUARE
70200 SEREMBAN

விரிவான ஊடக அறிக்கை 23 ஆகசுட்டு 2008

கரு : உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதான திரு.வசந்தகுமார் காவல்த் துறையின் சிறப்புப் படை பிரிவினரால், இந்துராப்பின் செயல்பாடுகளைக் கண்டறிய நியமிக்கப்பட்டவர். திரு.இராமசந்திரன் மெய்யப்பன் (ராமாஜி) மற்றும் திரு.ரெகு இந்துராப்பின் கட்டமைப்பை உடைத்தெறிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கைக்கூலிகள்.

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகியிருக்கும் திரு.வசந்தகுமார் தன்னார்வ அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 2007-ஆம் ஆண்டில் இந்துராப்பு இயக்கத்தில் இணைந்தார். அப்போதைய சூழ்நிலையில் "இந்தியர்களின் நலனுக்காக அதிரடியான செயல்களில் இறங்குபவர்களை" அவர் எதிர்ப்பார்த்ததாகவும், நான் பிரிட்டிஷ் அரசாங்கத்தின்மீது தொடுத்த வழக்கு அவரை வெகுவாக ஈர்த்ததாகவும் கூறி இந்துராப்பு இயக்கத்தில் இணைந்தார். அன்றிலிருந்து அவர் தன்னார்வ ஊழியராக இந்துராப்பில் சேவையாற்றி வந்தார், நானும் அவரை பொருளாளராக நியமித்தேன்.

கடந்த சனவரி மாதம் 2008-ஆம் ஆண்டில், திரு.வசந்தகுமார் இந்துராப்பின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக,காவல்த்துறையின் சிறப்புப் படைப் பிரிவினரால் நியமிக்கப்பட்டவர் எனும் விடயம் என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. மேற்கொண்டு அவரின் செயல்பாடுகளைக் கண்காணிக்கையில், அவ்விடயம் உண்மை என வெளிப்படையாகவேத் தெரிந்தது.

கடந்த மார்ச்சு மாதம் 2008-ஆம் ஆண்டில், இருவேறு நிகழ்வுகளில் நான் சந்தித்த அரசாங்கத்தின் இரு உயர் அதிகாரிகள் என்னிடம், திரு.வசந்தகுமார் இ.சாவில் கைதாகியுள்ள இந்துராப்பு வழக்கறிஞர்களிடையே பிளவு ஏற்படுத்த முனைவதாகவும், இந்துராப்பு கட்டமைப்பை தகர்த்தெறிவதற்கு தடுப்புக் காவலில் இருந்து கொண்டே செயல்பட்டுவருவதாகவும் கூறினர்.

இந்துராப்பு இயக்கத்தின் செயலாளராக இருந்து வந்த திரு.வி.கே ரெகு, இந்துராப்பின் நலனைப் பாதிக்கும் காரியங்களை முன்நின்று செய்ததால் அவரை கடந்த அக்டோபர் மாதம் 2007-ஆம் ஆண்டில் நான் பணி நீக்கம் செய்தேன்.

இந்துராப்பு ஐவரும் கைதான பிறகு, பத்து பேர்கள் கொண்ட தலைமைத்துவ செயற்குழு ஒன்றினை ஏற்படுத்தி திரு.தனேந்திரனை இந்துராப்பு தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், திரு.இராமாஜியை இந்துராப்பின் ஆன்மீக ஆலோசகராகவும் நியமித்தேன்.

திரு.ராமாஜியும் திரு.ரெகுவும் அடிக்கடி கமுந்திங்கு தடுப்புக் காவலில் உள்ள திரு.வசந்தகுமாரை மறைமுகமாகச் சந்தித்து, இந்துராப்பு இயக்கத்தினை பிளவுப்படுத்துவதற்கு திட்டம் தீட்டிவருவதுடன், இந்துராப்பை பதிவு பெற்ற ஓர் அமைப்பாக மாற்றி அவர்கள் கைவசம் கொண்டு வர முயன்றுவருவது அவர்களுடைய அண்மைய செயல்பாடுகளின்வழி புலப்படுகின்றது.

கடந்த ஐந்து மாதங்களில், திரு.ராமாஜியும், திரு.ரெகுவும் பிரதமர் இலாகாவுடன், பிரதமரின் அந்தரங்க செயலாருடன் மற்றும் ம.இ.காவின் சில தலைவர்களுடன் ரகசிய,அதிகாரபூர்வமற்ற சந்திப்புக் கூட்டத்தை பலமுறை நடத்தியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உண்டு. இவர்களின் அனைத்து செயல்பாடுகளும் இந்துராப்பு அமைப்பை பிளவுபடுத்தி, திரு.வசந்தகுமார் விடுதலை பெற்று வந்ததும் தலைமைத்துவ அதிகாரத்தை அவரோடு பகிர்ந்துக் கொள்வதற்காகத்தான் என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

இந்துராப்பு இயக்கத்தினை ஒரு சட்டப்பூர்வமான இயக்கமாக அரசாங்கம் அங்கீகரித்தால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை, ஆனால் அந்த அங்கீகாரம் திரு.ரெகு,திரு.இராமாஜி,திரு.வசந்தகுமார் மற்றும் ம.இ.கா பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும். அப்பொழுதுதான் இந்துராப்பு இதுவரையில் மக்கள் சக்தியின் வழி பேணி காத்த ஒற்றுமையும் பலமும் நிரந்தரமாக அழிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்படும்.

இத்தனைக் காலங்களாக இந்த முக்கியமான விடயங்களை மறைத்து வைத்திருந்ததற்காக இந்துராப்பு மக்கள் சக்தி ஆதரவாளர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்துராப்பு ஆதரவாளர்களிடையே இருந்த ஒற்றுமையும் இணக்கமும் பாழ்பட்டு போகக் கூடாது என்பதற்காகவும், இந்துராப்பு இயக்கம் உடைந்து சிதறிவிடக் கூடாது என்பதற்காகவும் நான் இவ்விடயங்களை வெளிப்படுத்தாது மறைத்து வைத்திருந்தேன். இந்துராப்பின் உண்மையான போராட்டங்களுக்காக, திரு.வசந்தகுமார் உட்பட 'இசா'வில் கைதான மற்ற நால்வரையும் வெளிகொண்டு வருவதே நம் அனைவருடைய முக்கியக் குறிக்கோளாக இருக்கும் என்று நான் மனமார நம்புகிறேன்.

இன்று பட்டவெர்த்தில் நடந்தவையாவும் இந்துராப்பு ஆதரவாளர்களின் விவேகத்தினைக் கேள்விக்குறியாக்கிய பெருத்த அவமானமாகும். அண்மைய சில நாட்களாக திரு.இராமாஜியும், திரு.ரெகுவும் இருபதாயிரம் ஆதரவாளர்களை ஒன்று திரட்டி ஐந்து இந்துராப்பு தலைவர்களின் விடுதலைக்காகவும், இந்துராப்பின் 18 அம்ச கோரிக்கைகள் நிறைவேறவும் யாகம் நிகழ்த்த போவதாக தமிழ் நாளேடுகளில் விளம்பரங்கள் செய்து வந்தனர். இந்த யாகத்தை இந்து சேவை சங்கமும் மக்கள் சக்தி என்றப் பெயரில் அவர்களால் பதிப்புரிமை பெறப்பட்ட ஒரு இயக்கமும் இணைந்து செய்தனர். இந்த யாகம் நிகழ்ந்த இடம் பெர்மாத்தாங் பாவ் தொகுதியாகும். இங்குதான் மலேசியாவின் முன்னால் துணைப் பிரதமர் வருகின்ற இடைத்தேர்தலில் களமிறங்குகின்றார். மக்கள் சக்தி என்ற பெயரைப் பயன்படுத்தி திரு.இராமாஜியும், திரு.ரெகுவும் திரளான மக்கள் கூட்டத்தை எதிர்ப்பார்த்து, பிரதமர் படாவியையும் அழைத்து சீனர் ஆலயத்தில் யாகம் நடத்தி (இதுவே முதல் முறை) சில உள்ளூர் பாப் இசைக் கலைஞர்களின் கலைநிகழ்ச்சியினையும் நடத்தியிருக்கின்றனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து இந்துராப்பு ஆதரவாளர்களையும் நான் பொறுமை காக்கும்படி கேட்டுக் கொள்வதோடு, உண்மைத் தகவல்களையும், தற்போதைய நிலவரங்களையும் அறிந்துக் கொள்ள http://www.hindraf.org/ அல்லது http://www.hindraf.co.uk/ எனும் அகப்பக்கங்களை நாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்துராப்பு இயக்கத்தின் தலைவன் என்கிற முறையில், இயக்கத்திற்காக நடத்திய போராட்டங்களில் ஏற்பட்ட பல இழப்புகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்வதோடு, அனைத்து இந்துராப்பு ஆதரவாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கடந்த 51 ஆண்டுகளாக நம் சமுதாயத்தில் காணப்படாத மிகப் பெரிய ஒர்றுமையைக் கண்டு அதனை கலைக்க முயல்பவர்களையும், தன் சுயநலத்திற்காக செயல்படும் புல்லுறுவிகளையும் இனங்கண்டு, நாம் அனைவரும் ஒன்றினைந்து அவர்களை விரட்டியடிப்போம். இந்த இக்கட்டான நிலைமையில் எல்லாம் வல்ல இறைவன் நமக்குத் துணையாக இருக்கவேண்டும் என விழைகிறேன், அதோடு என்னை நல்ல வழியிலேயே நடத்திச் செல்ல அவன் அருளையும் வேண்டுகிறேன்.

பொ.வேதமூர்த்தி
இந்துராப்பு தலைவர்
இலண்டன்
waytha@hotmail.com

செபராங் ஜெயாவில் நடைப்பெற்ற மறியலில் கைதான திரு.தனேந்திரன், பெர்மாத்தாங் பாவ் தொகுதி இடைத்தேர்தல் முடியும்வரையில் விடுவிக்கப்பட மாட்டார் எனும் தகவல் நமக்குக் கிடைத்துள்ளது. அவரை தேர்தல் பிரச்சாரம் செய்வதிலிருந்து முன்னனி அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. வருகின்ற 26 ஆக்சுட்டு நடைப்பெறும் இடைத்தேர்தலில் தேசிய முன்னனிக்கு இந்தியர்கள் நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்.

போராட்டம் தொடரும்...

Read more...

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்!

நேற்று பினாங்குத் தீவில் இந்து உரிமைப் பணிப்படையின் கொடி அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் உரையாற்ற திரு.நரகன், கோலாலம்பூரிலிருந்து திரு.சம்புலிங்கம் போன்றோர் வருகை புரிந்திருந்தனர். லண்டனிலிருந்து திரு.வேதமூர்த்தியுடன் தொலையுரையாடல் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வு காவல்த் துறையின் பலத்த காவலுடன் இரவு எட்டு மணிக்கு ஆரம்பமானது.



நிகழ்வில் கொடி அறிமுகம் செய்வதற்கு ஏற்பாட்டாளர்கள் என்னை மேடைக்கு அழைத்தனர். தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதும் நான் மலேசியக் கொடியை திறந்து வைத்தேன். அதன்பிறகு திரு.சம்புலிங்கம் இந்து உரிமைப் பணிப்படையின் கொடியினை திறந்து வைத்தார். நிகழ்வு மிக உணர்ச்சிகரமாக சென்று கொண்டிருந்தது. அதன் பிறகு திரு.சம்புலிங்கம், திரு.நரகன் போன்றோரின் உணர்ச்சிகரமான உரை பலரையும் ஆட்படுத்தியிருந்தது. இந்து உரிமைப் பணிப்படையின் குறிக்கோள் என்ன என்பதனை 'நீர்மப் படிம உருகாட்டி'யின் வழி அரங்கின் பெரிய திரையில் திரு.நரகன் விளக்கிக் காட்டியது அனைவருக்கும் பயனுள்ளதாய் அமைந்தது.



நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருந்தாலும், வருகையாளர்களில் பலரின் முகங்களில் கவலை தோய்ந்துக் கிடந்ததைக் காண முடிந்தது. அதற்குக் காரணம் அன்று மாலையில் செபராங்க் ஜெயாவில் ஏற்பட்ட கலவரமும், மக்கள் சக்தி ஆதரவாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கைது நடவடிக்கைதான். அதனாலேயே, அன்று மண்டபத்தின் வெளியே பல காவல்த் துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் நின்றுக் கொண்டிருந்தனர். ஏது நடந்தாலும் கொடி அறிமுக விழாவை வெற்றிகரமாக நடத்திவிட வேண்டும் என பினாங்கு மாநில மக்கள் சக்தி ஆதரவாளர்கள் காட்டிய மும்முரம் பாராட்டிற்குரியது. இவ்வேளையில் இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினருக்கும், காவல்த் துறையின் பலத்த கண்காணிப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு, நிகழ்வைச் சிறப்பித்த வருகையாளர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

இருப்பினும் நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால் இரவு 10 மணியளவில் நிறுத்தப்பட்டது. செபராங் ஜேயாவில் கைதான எட்டு மக்கள் சக்தி ஆதரவாளர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க உடனடியாக அனைவரும் செல்ல வேண்டும் என திரு.சம்புலிங்கம் அனைவரையும் பணித்து நிகழ்வை முடித்து வைத்தார். பினாங்குத் தீவிலிருந்து ஒரு பெரியப் படையே செபராங் ஜெயாவை நோக்கிப் புறப்பட்டது.

நேற்று மாலை நடந்தது என்ன?

இராமசந்திரன் என்கிற திரு.இராமாஜியும், இந்து உரிமைப் பணிப்படையின் முன்னால் செயலாளர் திரு.ரெகுவும் பினாங்கு செபராங் ஜெயாவில் யாகம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். நேற்றைய நாளிதழில் செபராங் ஜெயா சிறீ கருமாரியம்மன் ஆலயத்தில் யாகம் நடைப்பெறவிருப்பதாக திரு.ரெகு அறிவிப்புச் செய்திருந்தார். ஆனால் நேற்று அக்கோயிலில் அனுமதி மறுக்கப்பட்டு, கோயில் கதவும் இழுத்து மூடப்பட்டுள்ளது. எனவே, அருகில் உள்ள ஒரு சீனர் ஆலயத்தில் யாகத்தை தொடங்கியிருக்கின்றனர். இந்த யாகம் நடத்தப்பெறுவதன் காரணம், 5 இந்துராப்பு தலைவர்களும் விரைவில் விடுதலைப்பெற வேண்டும் என்பதற்காகவும், பாரிசான் மற்றும் மக்கள் கூட்டணி இந்துராப்பின் 18 கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவுமே என்று திரு ரெகு நிருபர் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். (மலேசியா கினி படச்சுருளைக் காண்க)

அண்மைய காலமாகவே இந்துராப்பு இயக்கத்தில் பிரிவினைவாத கொள்கைகளைப் பரப்பி வருவதாக திரு.இராமாஜி மீதும் திரு.ரெகு மீதும் பலரின் குற்றச்சாட்டுகள் பாய்ந்துள்ளன. இவர்கள் தங்களின் பரப்புரைகளின் வழி பலரை இந்துராப்பிலிருந்து திசை திருப்புவதாகவும், தற்போதைய இந்துராப்பு கட்டமைப்பின் தலைவர்களையும் ஒருங்கிணைப்பாளர்களையும் புறக்கணிக்கக் கோருவதாகவும் பல குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது வந்த வண்ணம் இருந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேற்று திரு.இராமாஜியும்,திரு.ரெகுவும் 'மக்கள் சக்தி' என்றப் பெயரில் இந்து சேவை சங்கத்தோடு இணைந்து நடத்திய யாகம் ஏதோ அரசியல் நோக்கம் உடையதாய் இருக்க வேண்டும் எனப் பல இந்துராப்பு ஆதரவாளர்கள் கருதியதின் பேரில் பிரச்சனை மூண்டது. மதியம் இரண்டு மணியளவில் சுமார் 200 மக்கள் சக்தி ஆதரவாளர்கள் சீனர் ஆலயத்தின் வெளியே அமைதி மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.


மாலை 4 மணியளவில் திரு.ரெகுவும், திரு.இராமாஜியும் நிருபர் சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்து யாகம் நடைப்பெற்றக் காரணத்தை விளக்கிக் கொண்டிருந்தார். அவ்வேளையில் பினாங்கு இந்துராப்பு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு.அன்பழகன் அச்சந்திப்புக் கூட்டத்திற்கு வந்து 'ரெகு இந்துராப்பின் செயலாளர் அல்ல! அவர் இந்துராப்பு அமைப்பைப் பற்றி பேசக் கூடாது!" எனக் கண்டிக்க அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது. நேரம் ஆக ஆக பலர் வாக்குவாதங்களில் ஈடுபட கைகலப்பு நடைப்பெறும் சாத்தியம் இருந்ததால், மக்கள் நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு. கலைவாணர் கூட்டத்தினரிடையே சமரசம் செய்ய முற்பட, அவரை மறித்து இன்னொருவர் 'அரசியல் பேச வேண்டாம்!" என்று கூக்குரலிட மீண்டும் பெரிய கலகம் ஏற்பட்டது. (மலேசியா கினி படச்சுருளைக் காண்க)


இதற்கிடையில் மக்கள் சக்தியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான திரு.தனேந்திரன் மக்கள் சக்தி ஆதரவாளர்களோடு செபராங் ஜெயா சிறீ கருமாரியம்மன் ஆலயத்தின் முன்பு ஒன்றுகூடி திரு.ரெகு மற்றும் திரு.இராமாஜியின் செயலை வன்மையாகக் கண்டித்தார். "எப்படி இந்து சமய வழிப்பாட்டினை சீனர் ஆலயத்தில் நடத்த முடியும்! இது இந்து சமயத்திற்கு ஓர் இழிவு! பன்றிகளை வெட்டும் இடத்தில் யாகம் நடத்துவதா! இது போன்றச் செயல்களை நாம் அனுமதிக்கக்கூடாது" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் சில மக்கள் சக்தி ஆதரவாளர்கள் செபராங் ஜெயா காவல் நிலையத்தில் யாகத்தினை நிறுத்துவதற்காகப் புகார் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில், யாகம் நடைப்பெற்ற சீனர் ஆலயத்திற்கு, மாலை 5.30 மணியளவில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் பிரதமர் அப்துல்லா அகமது படாவியின் திடீர் பிரவேசம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த படாவி, திடீரென்று காவல்த்துறையின் பலத்த பாதுகாப்போடு யாகம் நடைப்பெற்ற இடத்திற்கு வந்திருக்கிறார். அங்கே திரு.ரெகுவிடம் இந்துராப்பின் 18 கோரிக்கைகள் தொடர்பான மகஜரைப் பெற்றுக் கொண்டு, திரு.ரெகுவின் வின்ணப்பத்தின் பேரில் அங்கு ஓர் உரையையும் நிகழ்த்திவிட்டுச் சென்றுள்ளார். "மலேசிய இந்தியர்களின் 18 கோரிக்கைகளை தாம் கவனிக்கவிருப்பதாகவும் ஒரு புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டும் சென்றுள்ளார். இத்தனைக் காலங்களாக முறையாக கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மகஜர்களை தொட்டுப் பார்க்காத இவர், திடீரென்று அழையா விருந்தாளியாக வந்து மகஜரைப் பெற்றுக் கொள்வதென்பது, இந்தியர்களை 'மடையர்கள்' என்று எண்ணுவதற்குச் சமமாகும். நிகழ்வின் ஏற்பாட்டாளர் அழையாமல் பிரதமர் வந்திருக்க முடியுமா?

ஒரு சிறு குழந்தைக்குக் கூட தெரியும் படாவியின் குள்ளநரித்தனம். படாவியே..! வேண்டாம் இந்த வேண்டாத நடிப்பு..!

படாவி, யாகத்தில் கலந்துக் கொண்டவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில் கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணி " டத்தோ சிறீ, ஏன் எங்கள் 5 தலைவர்களைக் கைது செய்தீர்கள், அவர்கள் பாவம்!" என்று படாவியைப் பார்த்து கேட்டிருக்கிறார். மற்றொருவர் "டத்தோ சிறீ, ஏன் அவர்களை இ.சா சட்டத்தில் கைது செய்துள்ளீர்கள், ம.இ.கா எங்களுக்கு ஒன்றும் செய்யாத பட்சத்தில் அந்த ஐந்து தலைவர்கள்தான் எங்களின் உண்மையான நிலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்!" என்று கேட்க, படாவி " அவர்களின் நிலைமை எனக்குத் தெரியும், சட்டப்படி அவர்களுக்கு நீதி கிடைத்திட ஆவண செய்வோம், என்னை வந்து சந்தியுங்கள்" என்று கூறிவிட்டு அங்கிருந்து நழுவி இருக்கிறார். படாவி அங்கிருந்து செல்லும் வேலையில், சாலையோரமாக நின்றிருந்த மக்கள் சக்தி ஆதரவாளர்கள் "இந்துராப்பு வாழ்க! ரீபோர்மாசி! ஈடுப் அன்வார்!" என்று முழங்கினர்.



சீனர் ஆலயத்தில் ஏற்பட்ட அமளி துமளியைக் கண்ட ஆலய நிர்வாகத்தினர், அங்கிருந்தவர்களை உடனடியாக வெளியேறும்படி உரக்கக் கத்தியதும் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். இதுதான் சமயம் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த காவல்த் துறையினர் மாலை 6.30 மணியளவில் மக்கள் சக்தி ஆதரவாளர்களைக் கைது செய்யும் படலத்தில் இறங்கினர்.திரு.தனேந்திரன் உட்பட மேலும் எண்மரைக் கைது செய்தனர். அவர்களில் இருவர் பெண்மணிகள் ஆவர். இவர்களை பண்டார் பெட்ரா, புக்கிட்டு மெருத்தாசாம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.

அண்மையில் 'மத மாற்றம்' குறித்த கருத்தரங்கை வழக்கறிஞர் மன்றம் ஏற்பாடு செய்தபோது, 300 ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்தரங்கை நடைப்பெறவிடாது ஊறு விளைவித்தனர். அவர்களைக் கைது செய்யாத காவல்த்துறை, நேற்று தமிழர்களைக் கைது செய்து ஒருதலைபட்சமாக நடந்துக் கொண்டது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த விவகாரம் குறித்து இந்துராப்பு தலைவர் திரு.வேதமூர்த்தியைக் கேட்ட பொழுது, அவர் பினாங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட யாகத்திற்கும் இந்துராப்பின் அமைப்பிற்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது, அவ்வாறு செய்வதற்கு இந்துராப்பு அனுமதி வழங்கவில்லை என கூறியுள்ளார். அவர் வெளியிட்ட மற்றுமொரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், இ.சா வில் கைதான திரு.வசந்தகுமார், திரு.ரெகு மற்றும் திரு.இராமாஜி போன்றோர் பாரிசான் அரசாங்கத்தால் அமர்த்தப்பட்டவர்கள் என்றும், அவர்களின் நடவடிக்கையை தாம் பல மாதங்களாக அறிந்து வைத்திருப்பினும், மக்களின் ஒற்றுமைக் கருதி அவ்விடயத்தை தாம் வெளியே சொல்லவில்லை எனக் கூறியுள்ளார். அதற்காக அவர் அனைவரிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்துராப்பு எனும் கட்டமைப்பில் பல சோதனைகள், வேதனைகள், தடங்கல்கள் இருந்துவந்தாலும் அனைத்தையும் வெற்றிகரமாகக் கடந்து வந்துகொண்டிருக்கும் நம்மை, சில புல்லுருவிகள், அரசாங்கத்தின் கையாட்கள் பிரிக்க சதி செய்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்களின் வண்டவாளங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது நம்முடைய தலையாயக் கடமையாகும். மக்கள் என்றும் உண்மைக்கு மட்டுமே உழைப்பவர்களாகவும், தன் போராட்டத்தின் குறிக்கோளில் தெளிவு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்றால், இந்துராப்பு கட்டமைப்பின் பல மர்ம முடிச்சுகள் அவிழ்த்து விடப் படவேண்டும். யார் உண்மையான போராட்டவாதி, யார் சுயநலவாதி, யார் தன் சுயஆதாயத்திற்காக இந்துராப்பை கைப்பிள்ளையாக பயன்படுத்துகிறார்கள் என்பதை படம்பிடித்துக் காட்ட வேண்டும்.

உண்மையான போராட்டவாதி யாரையும் சார்ந்தவன் அல்ல.

சுயசிந்தனை கொண்ட ஓர் அமைப்பின் போராட்டவாதி என்றுமே அவ்வமைப்பின் கொள்கைக்காக மட்டுமே போராடுபவனாக இருப்பான்.

நேற்று நடந்த நிகழ்வுகளைச் சுருங்கச் சொன்னால்...

பாரிசான் = ஆதாயம்
இந்துராப்பு = நஷ்டம்

நம்மை ஏதோ ஒருவகையில் பிரித்துவிட்ட வெற்றிக் களிப்பில் அவர்கள் வெற்றியைக் கொண்டாட, நம் பாடு திண்டாட...

எங்கே நம் சுயநிந்தனை?! எங்கே நம் விழிப்புணர்வு?!

மலேசியா கினி படச்சுருள்



போராட்டம் தொடரும்...

Read more...

தமிழின் தலையெழுத்து...!

>> Sunday, August 17, 2008

அண்மையில் தமிழர்களுக்கும் சிந்துவெளி நாகரீகத்திற்கும் உள்ளத் தொடர்பை மொழி ஆய்வியல் ரீதியாக நிரூபணமாக்கும் சில திடுக்கிடும் தகவல்களைக் கொண்ட கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. இக்கட்டுரையை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ம.இராசேந்திரன் படைத்திருந்தார். இதோ வாசகர்களுக்காக அக்கட்டுரை...

தமிழின் தலையெழுத்து, பெருமையும் வியப்பும் தருகிறது. தலைக்காவிரி என்பதைப்போல தலையெழுத்தைத் தொடக்க கால எழுத்து என்றும் பொருள் கொள்ளலாம். மன அனுபவ வெளிப்பாடு பேச்சு மொழி என்றால், பதிவு எழுத்து மொழியாகும். எழுத்து என்றால் ஒலிஎழுத்து என்றும் வரி எழுத்து என்றும் இரண்டையும் குறிக்கும். எழுப்பப்படுதலாலும் எழுதப்படுதலாலும் இரண்டு வகைக்கும் பொதுச் சொல்லாக இருந்த எழுத்து பிறகு வரி வடிவ எழுத்திற்கு மட்டுமே உரியதாக வழக்கத்திற்கு வந்துவிட்டது.

நெடுங்காலத்திற்கு முன்பே தமிழுக்கு எழுத்து இருந்திருக்கிறது. இப்போதும்கூட எழுத்தில்லா மொழிகள் பல உள்ளன. பாரசீக மன்னன் டரையசு என்பவனுக்கு சிந்தியர்கள் ஒரு தூது அனுப்பியதாக கிரேக்க வரலாற்றாசிரியர் அராடோட்டசு குறிப்பிடுகிறார். அஞ்சி ஓடாவிட்டால் இறந்துவிடுவாய் என்பதே தூதின் செய்தி. தவளை தண்ணீருக்குள் அஞ்சி மறைவதுபோலவும், எலி வளைக்குள் ஒளிவது போலவும் ஓடாவிட்டால் அம்புகளால் நீ கொல்லப்படுவாய் என்பதைச் சொல்வதற்காக, ஒருவரிடம் தவளை, எலி, அம்பு ஆகியவற்றைக் கொடுத்தனுப்பினார்கள். அது எழுத்தில்லாத காலம்.

தொல்காப்பியர் மெய்யெழுத்துகளும் எ,ஒ குறில்களும் புள்ளிபெறும் என்று வரிவடிவ எழுத்துகளைப் பற்றி நூற்பா தந்துள்ளார். சித்திரக் கோடுகள், குறியீடுகள், எழுத்துகள் என்று உலக மொழிகளின் எழுத்து வளர்ச்சியும் வரலாறும் அறியப்பட்டு வருகின்றன.

ஒரு பொருளைக் குறிக்க வரையப்பட்ட சித்திர எழுத்து உரு எழுத்து என்றும்; எண்ணத்தை வெளிப்படுத்துவது கரு எழுத்து என்றும்; ஓசையைக் காட்டுவது ஒலி எழுத்து என்றும்; உணர்வை வெளிப்படுத்துவது உணர்வெழுத்தென்றும் தமிழில் பல்வேறு எழுத்துகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.



சிந்துவெளி எழுத்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்ட தொன்மையான எழுத்துகளாகும். எல்லோரும் ஏற்கத் தக்க வகையில் இதுவரை யாரும் இவற்றைப் படித்தறிய முடியவில்லை. சிந்துவெளிக்குப் பின் கிடைப்பவை குறியீடுகள். குறியீடுகளையும் படித்தறிய முடியவில்லை. ஆனால் சிந்துவெளி எழுத்துகளும் குறியீடுகளும் முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகள், கல்வெட்டுகள் நாணயங்கள் என்று மக்கள் வாழ்க்கையோடு கலந்து இடம்பெற்றுள்ளன.

சிந்துவெளி எழுத்துகள், குறியீடுகளுக்குப் பிறகு வந்தவை பிராமி எழுத்துகள். தமிழுக்கும், சமற்கிருதத்திற்கும், பிராகிருதத்திற்கும், பாலிக்கும் பொதுவாகவும் தமிழ் தவிர மற்ற மொழிகளுக்கு வர்க்க எழுத்துகளைக் கூடுதலாகவும் கொண்டு பிராமி எழுத்துகள் உள்ளன.

அப்படியென்றால் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உட்பட்ட நாடுகள் அடங்கிய நிலப்பகுதி முழுவதும் மொழிகள் வேறுவேறாக வழங்கப்பட்டு வந்திருப்பினும் பொதுவாக ஒரே எழுத்து முறை (சிற்சில கூடுதல் எழுத்துகளுடன்) இருந்து வந்துள்ளது.

அசோகன் கல்வெட்டுகளால் அறியப்பட்ட பிராமி எழுத்து, அசோகன் ஆட்சிக்கு உட்படாத தமிழ் நாட்டில் தமிழுக்கு உரியதாக இருந்திருக்கிறது. அசோகன் கல்வெட்டுகளில் குசராத்து மாநிலம் கிர்நார் 16ஆம் பாறைக் கல்வெட்டில் சேர சோழ பாண்டியர்களும் சத்தியபுத்திரராகிய அதியமான் மரபினரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் கிடைத்த எழுத்தாதாரங்கள் அசோகன் காலத்துக்கும் முற்பட்டவை என்று தொல்லியல் அறிஞர்கள் பேராசிரியர் முனைவர் கா.ராசனும் முனைவர் தூ.இராசவேலும் கருதுகின்றனர்.

'அத்திபடாவிலும்' அயோத்தியாவிலும் கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமற்கிருத கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அசோகன் கல்வெட்டுகளில் பிராகிருத மொழிக் கல்வெட்டுகள் உள்ளன. தமிழகத்தின் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் ஒரே எழுத்து (பிராமி) முறையில் (வர்க்க எழுத்துகள் தவிர) அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புத்தமத நூலான லலித விசுத்தாரத்திலும் சமண நூலான பன்னவனசுதாவிலும் 'பிராமி' குறிப்பிடப்படுகிறது. பிராமி எழுத்தை உருவாக்கியவர் புத்தர் என்றும் சமண சமய தீர்த்தங்கரர் ரிசபதேவர் மகள் பிராதமி பெயரில் உருவாக்கப்பட்டதென்றும் பிராமி பற்றிய சமயக் கதைகள் பல உள்ளன.

அசோகன் கல்வெட்டில் இடம் பெற்றதால் பிராமி என்று அழைக்கப்படுகிறது. மொழியின் பெயரில் எழுத்து அமைக்கப்படுவதே மரபு. அசோகன் என்பதோ பிராமி என்பதோ மொழிகளின் பெயர்களாக இல்லை.

எந்த ஒரு தனிப்பட்ட மொழிக்கும் பிராமியை உடைமையாக்கிவிடக் கூடாது என்பதால் பயன்படுத்தியவர் பெயரில் அசோகன் பிராமி என்று அழைக்கப்படிருக்கலாம். அதிலும் தமிழ் மொழிக்கான பிராமியைத் தென்பிராமி என்றும் தமிழ் பிராமி என்றும் தமிழில் அழைக்கிறோம். தொல்காப்பியரும் சங்க இலக்கியப் பாடல்களும் 'தமிழியில் தாம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் பேராசிரியர் மதிவாணன் கூறுகிறார்.

இந்தியாவின் தொன்மையான வரிவடிவமாம் சிந்து வெளிக் குறியீடுகள் பூம்புகார், மயிலாடுதுறை, செம்பியம், கண்டியூர் முதுமக்கள் தாழிகளிலும், சூலூர் மண்வட்டிலிலும் இடம் பெற்றுள்ளமையைத் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். சிந்துவெளி எழுத்துகளின் காலம் குறைந்தது கி.மு1500 என்று கருதப்படுகிறது.

சிந்துவெளி எழுத்துகளுக்கும் பிராமி எழுத்துகளுக்கும் இடைப்பட்ட குறியீடுகள் இந்தியாவின் தமிழகத்தில்தான் குறிப்பாக சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள ஊர்களில்தான் அதிக அளவில் கிடைத்துள்ளன. பிராமி இந்திய மொழிகளுக்கான எழுத்துகளின் தாய் என்று ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்.

புதிய கற்காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் (விந்தியமலைப் பகுதி நீங்கலாக) திராவிட இன மொழிகளே பேசப்பட்டன என்று பேராசிரியர் பி.டிசீனிவாச ஐயங்காரும் (Stone Age in India) பேராசிரியர் டி.ஆர்.சேச ஐயங்காரும் (Dravidian India) திராவிட மொழி தென்னிந்திய மொழி மட்டுமன்று, காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழி என்று அறிஞர் அம்பேத்காரும் (The unTouchables) கூறியுள்ளார்.

தமிழ் பிராமி எழுத்துகளோடு கிடைத்துள்ள குறியீடுகளை அதற்கும் முற்பட்ட சிந்துவெளி எழுத்துகளோடு இணைத்துக் கொள்ளத் தேவைப்படும் இணைப்புக் கண்ணிகள் கிடைக்குமாயின் தமிழின் தலையெழுத்து தீர்மானமாகிவிடும்.

Read more...

இனவாத ஆசிரியை கௌரவிப்பு..!

>> Friday, August 15, 2008



அண்மையில் குவாலா லாங்காட் மாவட்டத்திலுள்ள, தெலுக் பங்லிமா காராங் இடைநிலைப்பள்ளியில், ருசுனித்தா என்ற வரலாற்றுப் பாட ஆசிரியை, நான்காம் மற்றும் ஐந்தாம் படிவம் பயிலும் தமிழ் மாணவர்களை 'கில்லிங்', பரையர்,‘கருங்குரங்குகள்’, ‘நீக்ரோக்கள்’, தமிழர்கள் நாய்க்குப் பிறந்தவர்கள், வேசிமக்கள், தமிழ் இளைஞர்கள் விறையற்றவர்கள், பெண்களுக்கு எப்போதும் மாத விலக்கு இருந்து கொண்டே இருக்கும் என மிகவும் மரியாதையான முறையில் புகழ்ந்து பேசியிருக்கின்றார்.

அவரை கௌரவிக்கும் வகையில் கல்வி அமைச்சினால், அதே மாவட்டத்தில் அவர் வசிப்பிடத்திற்கு மிக அருகாமையில், (முன்பிருந்த பள்ளியைவிட) இன்னும் பல வசதிகளோடு கூடிய விவேகப் பள்ளி ஒன்றிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

நீதி கேட்கச் சென்ற பெற்றோர்களையும், தன்னார்வ இயக்கங்களையும் கொலைக்காரர்கள் எனச் சித்தரிக்கும் வகையில், ருசுனித்தாவிற்கு பாதுகாப்பும் கொடுக்க அரசாங்கம் முனைந்துள்ளது பாராட்டிற்குரியது. முடிந்தால் அவர் பணிபுரியும் இடத்திலும், அவர் வீட்டைச் சுற்றியும் கலகத் தடுப்புப் படையினரை 24 மணிநேரமும் காவலுக்கு வைத்து 'தோக்கோ குரு' எனும் பட்டத்திற்குகந்த ருசுனித்தாவிற்கு பாதுகாப்பு அளிக்குமாறு முன்மொழிகிறேன்.

முடிந்தால் அவர் தினமும் தன் பணியிடத்திற்குச் செல்லும்வேளையில், முகமூடி அணிந்த காவல்த் துறையின் சிறப்புப் படையினரும் துணைக்குச் சென்று கல்வியுகத்தின் கடைந்தெடுத்த மாணிக்கத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது எனது தனிக் கோரிக்கை.

அப்படியென்றால், பலப்பேர் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்ட மாணவர்கள் செய்த புகார்? பெற்றோர்கள், தன்னார்வ இயக்கங்கள், அரசியல் கட்சிகள் விடுத்த வேண்டுகோள், கொடுத்த மனு எல்லாமே?

விழலுக்கு இரைத்த நீர்தான்.....

இனி எத்தனை காலம் பொறுத்திருப்பது? நாமெல்லாம் இந்த நாட்டில் மதமாற்றம் குறித்து கருத்தரங்கு நடத்தக் கூடாது, யூ.ஐ.டி.எம் பல்கலைக்கழகத்தில் பூமிபுத்ராக்களைத் தவிர பிற இனத்தார் கல்விப் பயில இடம் கேட்கக் கூடாது, சம உரிமை, கருத்துச் சுதந்திரம், சமய சுதந்திரம், பொருளாதாரச் சமப் பங்கீடு இவற்றைப் பற்றி வாய்திறக்கக் கூடாது, இன்னும் எதைக் கேட்க நினைத்தாலும், கூடாது..கூடாது..கூடாது...!!!

இதுதான் பல இனங்கள் ஒற்றுமையாக வாழும் மலேசியா... இன்னும் 15 நாட்களே எஞ்சியுள்ளன மலேசியாவின் 51-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு...

மலேசியத் தமிழர்களுக்கு எப்பொழுது சுதந்திரம்......?

இவ்விவகாரம் குறித்த முந்தைய பதிவு : தமிழர்களை 'கில்லிங்', பரையர்கள் என்பதா?


அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு



வாக்களித்தவர் எண்ணிக்கை : 29

இடைநீக்கம் : 13%

வேறு பள்ளிக்கு மாற்றம் : 3%

வேலையை விட்டு நிரந்தர நீக்கம் : 75%

மறுவாழ்வுப் பயிற்சி : 0%

மன்னித்து விடலாம் : 6%

Read more...

இண்ட்ராப்பின் தேசிய கொடி அறிமுக விழா..

படத்தைச் சுட்டிப் பெரிதாக்கிப் பாருங்கள்..



நிகழ்வில் திரளாகக் கலந்துக் கொண்டு, இண்ட்ராப் இயக்கத்திற்கு ஆதரவு அளிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றனர்.

Read more...

வாக்கு நமது போதிமரம்

>> Thursday, August 14, 2008



சகோதரர்களே ...

நாம் என்ன
சீட்டெடுக்கும் கிளிகளா?
நெல்மணிகளை மட்டும்
வலுக்கட்டாயமாக - நம்
வாயில் திணிக்கிறார்கள் ...

நாம் என்ன
ரப்பர் மரங்களா?
நம்முடலில் எத்தனைமுறை
வாக்குப் பாலெடுக்கக்
கீறிக் கொண்டிருப்பார்கள் ...

நாம் என்ன
போதி மரமா?
தேர்தல் காலத்தில் மட்டும்
நம்முன் அமர்ந்து
ஞான தவமிருக்கிறார்கள்

நமது வீட்டுச் சுவர்களில்
தங்கள் வரலாற்றை
எழுதிச் சொல்பவர்
நம் உரிமை வாழ்வைப்
பின்தள்ளிச் செல்கிறார்கள்

நமது வாக்குகளால்
நாடாளுமன்றம் சென்றவர்கள்
நமது வீடு உடைபடுகையில்
நீலிக் கண்ணீர் வடிக்கவும்
முன் வராமல்
அரசு சட்டத்தின் பின்
ஒளிந்து கொண்டார்கள் ...

நாம்
அவர்கள் கையில்
கொடுத்ததோ அமுதசுரபி
அவர்கள்
நம் கையில் திணிப்பதோ
பிச்சைப் பாத்திரம் ...



நாம்
உரிமை போர் வாளை
அவர்களுக்கு கொடுத்தோம்
அவர்கள்
பட்டாக் கத்தியை
நம் தோழமைக்குப் பரிசளிக்கிறார்கள் ...

நமக்காக
இயற்றப்பட்ட நீதிச் சட்டங்கள்
நமது கழுத்துகளுக்குத்
தூக்குக் கயிறை கொண்டு வரும்
மாயாசாலம் யார் அறிவார்?

விரும்பும் மரக்கிளைகளில்
கூடு கட்டும் குருவிகள் ...!
ஒரு வீடு கட்டும்
அடிப்படை உரிமை
மண்ணின் மைந்தர்களுக்கு இல்லையா?

நம்மைப் பாதுகாக்க எழுந்த
நீதிச் சட்டங்கள் - இன்று
நமது கண்களில்
மிளகாய் பொடி தூவுகின்றனவே!

சமூகக் காவலர்களே
சன்மார்க்க
அரசியல் சேவையாளர்களே
எங்கள் ஓட்டுகளால்
நீங்கள் எசமானர்கள் ...

வாக்காளர்கள் இன்று
உங்கள்
வாய்பேசா செம்மறிகளா!

(ஏ.எஸ்.பிரான்சிஸ், சுவீடன்)
khileefrancis@yahoo.com

Read more...

கல்லுக்குள் நகரம் , கண்டுபிடிப்பு!

>> Wednesday, August 13, 2008



அன்று....

கல்லிலே கலை வண்ணம் கண்டவர்களில் பெயர்ப்போனவர்கள் தமிழர்கள். ஆயக் கலைகள் அறுபத்து நான்கில் ஒன்றான சிற்பக் கலையின் பிறப்பிடமே தமிழகம்தான் என்று கூறும் அளவிற்கு, ஆயிரக்கணக்கான பழங்கால கலைப்படைப்புகள் தங்களிடமுள்ள உயிர்ப்பையும் வனப்பையும் இன்றளவிலும் பறைச்சாற்றிக் கொண்டிருக்கின்றன. கலைகளின் பொற்காலம் எனக் கருதப்படும் கி.பி 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர்களின் ஆட்சி வடதமிழகத்தில் கோலோச்சி இருந்த சமயம், முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன்(1) எனும் அரசன் மாமல்லபுரத்தில்(2) குடவரைக் கோயில்களை(3) எழுப்பி சிற்பக் கலைக்கோர் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திக் கொடுத்தான். இவன் ஆட்சிக் காலத்தில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய பெருஞ்சமயங்கள் பரஸ்பரம் பெற்றுத் திகழ்ந்ததோடல்லாமல், அவற்றின் வழிபாட்டுத் தலங்கள் சிற்பக் கலை, நடனக் கலை, ஓவியக் கலை ஆகியவற்றைப் பேணிக்காக்கும் ஒருக் கலைக்கூடமாக அன்று செழிப்புற்றிருந்தன.

குடைவரைக் கோயில்கள் - மாமல்லபுரம்


ஒற்றைக் கல் யானை, ஒற்றைக்கல் தளி - மாமல்லபுரம்


முதலாம் மகேந்திரவர்மனுக்கு அடுத்து பல்லவ பட்டத்து அரியணையில் ஏறிய முதலாம் நரசிம்மவர்மன்(4), வாதாபி மன்னன் இரண்டாம் புலகேசியைக் கொன்று, வாதாபியை வென்று, பல்லவ சாம்ராஜ்ஜியத்தை மேலைசாளுக்கியம் வரை விஸ்தரித்து மாமல்லன்(5) என்றப் பெயரோடு திகழ்ந்தான். ஆனால் அவனுக்கு அழியாப் புகழ் பெற்றுத் தந்தவை போர்களின் வீரசாகசங்கள் அல்ல, மாற்றாக அவன் சிற்பக் கலைகளுக்குச் செய்த சேவையே நிலையான புகழை ஈட்டித் தந்தன.

குடைவரைக் கோயில் - மாமல்லபுரம்


பகீரதன் தபசு அல்லது அர்சுன தபசு (புடைப்புச் சிற்பங்கள்) - மாமல்லபுரம்


இன்றளவிலும் காலத்தால் அழியாத மாமல்லபுரப் புடைப்புச் சிற்பங்களும்(6), குடைவரக் கோயில்களும், ஒற்றைக்கல் தளிகளும்(7) நரசிம்மவர்ம பல்லவனின் புகழ்பாடும் சின்னங்களாகத் திகழ்ந்து வருகின்றன. இவன் காலத்தில்தான், பல்லவப் போர்ப் படையின் தளபதியாக விளங்கிய பரஞ்சோதி(8) வாதாபியை வெற்றிக் கண்டதும், அங்கு பரவலாக வணங்கப்பட்ட கணபதி சிலையை முதன்முதலாக தமிழகத்திற்குக் கொண்டு வந்து, திருசெங்காட்டங்குடி எனும் ஊரில் பிரதிட்டை செய்தார். அதற்கு முன்பு தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இல்லை என்பது வரலாற்று ஆய்வாளார்களின் கருத்து. மாமல்லபுரத்தில் புகழ்பெற்ற புடைப்புச் சிற்பங்கள் கொண்ட பாறை ஒன்று உள்ளது. வெடிப்பு ஏற்பட்டு இரண்டாகக் காட்சியளிப்பதுபோல் இருக்கும் அந்த மாபாறையின் பெயர் அருச்சுனன் தபசு. இப்பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் அருச்சுனன் சிவபெருமானை நோக்கி, பாசுபத அசுத்திரம் பெற வேண்டி ஒற்றைக் காலில் தவம் செய்வதுபோல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு சாராரின் வாதம். ஆனால் பாறையில் ஏற்பட்ட வெடிப்பு ஊனமாகத் தெரிந்தாலும் அதனையும் கலைநயத்தோடு ஒரு ஆறாக வடிவது போல அந்த வெடிப்பைச் சித்தரித்து ஊனத்தை நீக்கியிருக்கிறார்கள் பண்டைய தமிழக சிற்பிகள். ஒற்றைக் காலில் தவம் புரியும் அந்த மனிதன் அருச்சுனன் அல்ல, ஆகாச கங்கையை பூமிக்கு வரவழைக்க வேண்டி பகீரதன் புரியும் தவம் என்பதே உண்மை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இப்பாறையை பகீரதன் தபசு எனவும் குறிப்பிடுகின்றனர். இப்பாறையில் ஒரு பூனையும் ஒற்றைக் காலில் தவம் புரிவதுபோலும், சில எலிகள் அப்பூனையைக் கவனிப்பதுபோலவும் நகைச்சுவையாக சித்தரித்துள்ளனர்.

பெரும்பாறையில் புடைப்புச் சிற்பங்கள் - மாமல்லபுரம்


ஒற்றைக் கல் தளி - மாமல்லபுரம்


வரலாற்றில் தமிழர்களின் மற்றுமொரு உன்னதக் கலைப்படைப்பின் விருந்தாக அமைவது, தஞ்சையில்(9) உள்ள இராசராசேச்சுரம் திருகற்றளி அல்லது தஞ்சை பெருவுடையார் ஆலயமாகும். தற்போது பிரகதீசுவரர் ஆலயம், தஞ்சை பெரிய கோயில் எனும் பெயர்களால் இக்கலைச்சின்னம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் உலகின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இராசராசேச்சுரம் (தஞ்சை பெரிய கோயில்) - தஞ்சாவூர்


உலகமே இன்று வியந்து நிற்கும் இம்மாபெரும் திருகற்றளியை எழுப்பியவர், அருள்மொழிவர்மன் எனும் இயற்பெயர்கொண்ட முதலாம் இராசராசசோழ தேவர் ஆவார். இவர் ஆட்சி நடைப்பெற்றக் காலம் (கி.பி 985 - கி.பி 1012), தமிழகத்தின் பொற்காலம் என்றே வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும், வளர்ந்து வரும் வசதிக்கும், ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராசராசசோழ தேவர் கட்ட நினைத்தார் போலும். 216 அடிகள் உயரமுள்ள கோயில் விமானத்தை நவீன தொழில்நுட்பம் ஏதும் இல்லாத அக்காலத்தில் எப்படி எழுப்பியிருப்பார்கள் என்று ஆராய்சியாளர்களும், இக்கோயிலை காண வருகின்றவர்களும் மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள். இராசராசேச்சுரம் விமானத்தை அமைப்பதற்கு, விமானத் தளத்தை நோக்கி சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிருந்து ஒரு செங்குத்தான பாலம் ஒன்றை கட்டி, அதில் யானைகளைக் கொண்டு டன் கணக்கிலான கற்களை ஏற்றிச் சென்றதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாலம் தொடங்கப்பட்ட இடத்தினையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கோயிலின் மற்றுமொருச் சிறப்பு, அங்கு வீற்றிருக்கும் நந்தி சிலையாகும். இக்கோயில் நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர், நீளம் 7 மீட்டர், அகலம் 3 மீட்டர் ஆகும். நந்திச் சிலை குடிகொண்டிருக்கும் மண்டபமானது நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தஞ்சை பெரிய கோயில் நந்தி - தஞ்சாவூர்


முதலாம் இராசராசசோழ தேவருக்குப் பின் அரியணைக் கண்டவன், அவரின் புதல்வனான முதலாம் இராசேந்திர சோழனாவான். இராசேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம் (மலேசியா), சிறீவிசயம், சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராசேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராசேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.

கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில் - கங்கை கொண்ட சோழபுரம்


தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில், தஞ்சை பெரியக் கோயிலையொத்த வடிவமைப்பைச் சார்ந்து இருந்தாலும், கட்டிட அமைப்பில் பெண்மையின் மென்மையையும் அழகையும் புகுத்தி தனக்கென்று ஒரு சிறப்பைப் பெற்றிருக்கிறது. தஞ்சை பெரிய கோயில் ஆண் என்றால், கங்கை கொண்ட சோழீச்சுரம் பெண் எனக் கொள்ளலாம். ஒரு பெண்ணின் அழகு, எவ்வாறு அவளைப் பார்ப்பவர் உள்ளங்களைச் சுண்டி இழுக்கிறதோ அத்தகையது கங்கை கொண்ட சோழீச்சுரம். கோயில் கட்டிட அமைப்பில் நேர்க்கோடுகளுக்கு பதில் வளைகோடுகள் கையாளப்பட்டிருப்பதினால்தான் இக்கோயில் பெண்மையின் அம்சங்களைப் பறைச்சாற்றுகிறது. தஞ்சை பெரிய கோயிலைவிட, கங்கை கொண்ட சோழீச்சுர கோயிலைப் பொலிவுப்படுத்துவத்தில் இராசேந்திரன் முனைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று....

இத்தனைச் வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கியிருக்கும் தமிழர் சிற்ப, கட்டிடக் கலையின் பெருமையை மீண்டும் பறைச்சாற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இப்பொழுது நமக்கு வாய்த்துள்ளது. இந்த வாய்ப்பை முழுமையாக தமிழர்கள் தமிழர்களுக்காக பயன்படுத்திக் கொள்ள, இத்தனைக் காலம் பூமிக்கடியில் புதைந்திருந்த ரகசியத்தை தமிழன்னை வெளிக்கொணர்ந்திருக்கிறாள். தொடந்து வாசியுங்கள்...

ஒரேக் கல்லில் ஒரு பெரிய நகரத்தையே உருவாக்குவது சாத்தியமா? சமீபத்தில் தஞ்சைக்கு வந்த தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வந்த ஒரு கோரிக்கை மனுதான் இந்த அதிசயத்தைச் சுமந்து நிற்கிறது. இந்த மனுவைக் கொடுத்தவர் ஆ.அரசு.

தமிழ் மரபுக் கட்டிடக் கலைஞரான இவர் வழக்கறிஞரும்கூட. 'காய்-கனி களஞ்சிய குளிர்பதனக் கிடங்கை மரத்தால் அமைக்கலாம் எனக் கண்டுபிடித்துச் சொன்னதற்காக இவர் மத்திய அரசின் நிதியைப் பெற்றவர். இத்திட்டம் தற்போது உலகப் பொருளகத்தின் ஒப்புதலுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கேள்விக்கு அரசு எடுத்ததுமே, "அந்தப் பாறை தமிழகத்தில் முக்கியமான ஓர் இடத்தில் இருக்கிறது. அது பற்றிய விவரங்களை நான் தற்போது யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள விரும்பவில்லை" என்று ஆரம்பித்தார்.

"சில மாதங்களுக்கு முன் என் பிறந்தநாளையொட்டி ஒரு கோயிலுக்குப் போனேன். அங்கிருந்து திரும்பி வரும்போதுதான் அந்த பிரம்மாண்டமான பாறையைப் பார்த்தேன். அதன் மீது ஏறிப் பார்த்தபோது, கண்ணுக்கு எட்டிய தூரம்வரை ஒரே கல் பாறையாகக் காட்சி அளித்தது. இதுபற்றி அங்கே இருந்தவர்களிடம் விசாரித்தபோது நிறைய உபரி தகவல்கள் கிடைத்தன. காரில் அந்தப் பாறையைச் சுற்றி சுற்றி வந்து பார்த்தபோதும் முழுமையாகப் பார்க்க முடியாத அளவு பிரம்மாண்டமாய் இருந்தது.

அதைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டி, முதல்வர் தஞ்சை வந்தபோது அவரிடம் கோரிக்கை மனுக் கொடுத்தேன். வேறு எங்குமே காண முடியாத அந்தப் பாறை தமிழகத்தில் இருப்பதே நமக்குக் கிடைத்த வரம். இத்தனை நாட்களாக இதைக் கண்டுபிடிக்காமல் இருந்திருக்கிறோம். இந்தப் பாறையின் நீளம் ஐந்து கிலோ மீட்டர், உயரம் ஆயிரம் அடி, மொத்தம் 45 கோடி கன மீட்டர், உள்பரப்பு மட்டுமே 25 சதுர கிலோ மீட்டர்,. இந்த ஒற்றைக் கல் பாறையின் மூன்றில் இரண்டு பகுதி பூமிக்கு வெளியே இருக்கிறது. ஒரு பகுதி பூமிக்கு கீழே உள்ளது. இந்தப் பாறை 'கிரானைடு' வகையைச் சேர்ந்தது.

புவியியலின்படி காலத்தால் மிகத் தொன்மையான இது மிக அரிதான கடினப் பாறை. அசுந்தா, எல்லோரா குகைகள், புத்தரின் பல நூறு அடி உயரச் சிலை உள்ள ஆப்கனின் பாமியான் குன்றுகளை நான் சொல்லும் ஒற்றைக் கல் பாறையோடு ஒப்பிடலாம். ஆனால் அவை எல்லாம் பல நூறு கற்பலகை இணைந்து உருவான குன்றுகள். இவற்றில் எதுவுமே ஒற்றைக்கல் கிடையாது. நான் குறிப்பிடும் ஒற்றைக் கல் பாறை உலகின் முதல் பேரதிசயம்! தமிழ்த் தாயின் அரிய கருவூலம். இந்த வைரக்கல்லைப் பட்டை தீட்டி உலகின் பார்வைக்கு வழங்கும் கடமை நமக்கு இருக்கிறது.



மலை வடிவமாக இருக்கும் இந்த ஒற்றைக் கல் பாறையைக் கலை வடிவமாக மாற்ற முடியும். இந்தப் பாறையைக் குடைந்து இதனுள் ஓர் ஊரையே உருவாக்க முடியும். தஞ்சைப் பெரிய கோயிலைப் போல நான்கு மடங்கு உயரக் கோயில் குடையலாம். இந்திய நாடாளுமன்றத்தை விட மிகப் பெரிய அழகிய கூடம் பல கட்டலாம். பல குடைவரைக் கோயில்கள் அமைக்கலாம். நூறு அடி உயரமுள்ள கற்படிமம் பல ஆயிரம் வடிக்கலாம். சங்கத் தமிழ் இலக்கிய வரி அனைத்தையும் இங்கே முப்பரிமாண படைப்பு ஓவியமாக வடிக்கலாம். 1330 திருக்குறட்களை ஓவியம் ஆக்கலாம். மனித வரலாற்றை, புராணங்களை, இதிகாசங்களை, இலக்கியங்களை, வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை 'எல்லாம் காட்சிப் படிமம் ஆக்கலாம்' இப்படி அரசு சொல்லிக் கொண்டே போகிறார்.

"ஒற்றைக் கல் பாறையைக் குடையும்போது கிடைக்கும் நாற்பதாயிரம் தூண்களில் புகழ் பெற்ற உலகத் தலைவர்களின் உருவச் சிலைகளைச் செதுக்கலாம். இதற்காக அரசு பத்து காசு செலவு செய்ய வேண்டியதில்லை. பாறையைக் குடையும்போது பல லட்சம் லாரி மணல், சல்லி கற்கள் கிடைக்கும். அதை விற்பனை செய்யும் போது 500 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும். திட்டச் செலவுகள் நூறு கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் 400 கோடி ரூபாய் அரசுக்கு ஆதாயம்தான். அதனால் இந்தப் பாறையை மாநில அரசு தன் அரிய வகைக் கருவூலமாக அறிவித்து அதைப் பாதுகாக்க வேண்டும்.

பல்லவர், சோழர், பாண்டியர் கால கட்டிடங்களை, சிற்பங்களை இப்போதும் நாம் கண்டு வியக்கிறோம்.. அத்தகைய கலைவடிவங்களை வடிக்கும் கலை நுட்ப அறிவு இப்போதும் நம்மிடையே இருக்கிறது. ஒரு கட்டிடம் அது கட்டப்பட்ட கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் தொழில்நுட்ப அறிவை, பண்பாட்டை, கலையை பிற்காலத்தில் மக்களுக்குக் காட்டும் வரலாற்று நினைவுப் பெட்டகம். நாமும் நம்முடையச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்லும் வகையில் அரிய ஒற்றைக் கல் பாறை நம்மிடம் இருக்கிறது.

இந்த விடயங்களை எல்லாம் முதல்வருக்கு அளித்த மனுவில் சொல்லியிருக்கிறேன். தமிழை, தமிழரை, தமிழரின் பண்பாட்டை, கலையைத் தன் உயிர் மூச்சாகக் கருதும் முதல்வர் ஒற்றைக் கல் சிற்பக் கலை நகரை அமைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். இந்தப் பாறை 'கிரானைடு' வகையைச் சேர்ந்தது என்பதால் இதற்குப் பல பெரும்புள்ளிகள் குறிவைத்திருக்கிறார்கள்.. பாறை இருக்குமிடத்தை நான் சொல்லிவிட்டால், அதற்குப் பலரும் உரிமைக் கொண்டாடுவார்கள். அதனால்தான் அது இருக்கும் இடத்தை யாரிடமும் நான் சொல்லவில்லை என்கிறார் அரசு.

இந்தத் திட்டம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியை நேரில் சந்திக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அரசு. இதற்காக வி.ஐ.பி கவிஞர் மூலமாக பேசி வருகிறார். அதே நேரம் அந்தப் பாறையின் முழுப் பரிணாமத்தையும் சுழலுந்து உதவியோடு ஒளிப்படக்கருவியில் பதிவு செய்து, அது தொடர்பான ஆவணங்களைத் திரட்டும் பணியிலும் இறங்கியிருக்கிறார் அரசு.

தமிழர்களின் பெருமையை மறக்கடிக்கும் வேலைகள் பல ஆங்காங்கே நடந்தாலும், அவற்றைப் புறக்கணித்து தமிழரின் தொன்மையை, சிறப்பை உலகிற்கு கலைநயத்துடன் வெளிக்கொணர நல்லதொரு வாய்ப்பை தமிழன்னை நமக்கு வழங்கியிருக்கிறாள். பூமிக்கும் பாதகமில்லாமல், சுற்றுச் சூழலுக்கும் கேடுவிளைவிக்காது, முறையான ஆராய்ச்சிகளுக்குப்பின் இம்மாபெரும் திட்டம் விரைவில் செயல் வடிவம் காண வேண்டும் என தமிழர்கள் அனைவரும் மனதார வாழ்த்திடுவோம். கல்லிலே கலைவண்ணம் கானத் துடிக்கும் ஆ.அரசுவின் கனவு பலித்திட வாழ்த்துகள்.

Get this widget | Track details | eSnips Social DNA


சில தகவல்கள் :-

(1) மகேந்திரவர்மப் பல்லவன் (கி.பி. 600 முதல் 630 வரை)

(2) மாமல்லபுரத்தில் (தற்போதைய மகாபலிபுரம்)

(3) குடவரைக் கோயில்களை (மாபெரும் பாறைகளைக் குடைந்து எழுப்பப்படும் ஆலயங்கள்)

(4) முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி 630 - 668 வரை) இவனின் மற்றொரு பெயர் 'மாமல்லன்'

(5) மாமல்லன் (சிறந்த மல்யுத்த வீரன்)

(6) புடைப்புச் சிற்பங்கள் (நாற்புறத்திலிருந்தும் பார்க்கக்கூடிய முப்பரிமாண அமைப்பிலுள்ள சிற்பங்களாகவன்றி, சுவரோடு ஒட்டியபடி சுவரிலிருந்து வெளித்தள்ளிக் கொண்டிருப்பது போல் அமைந்தவை.)

(7) ஒற்றைக்கல் தளி (ஒரே பாறையைக் கொண்டு செதுக்கப்பட்ட ஆலயம்)

(8) பரஞ்சோதி (இவர் ஒரு சிறந்த சிவ பக்தர். இவர் அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவரை சிறுத்தொண்ட நாயனார் என அழைப்பர்.)

(9) தஞ்சை (தற்போது தஞ்சாவூர்)

மேற்கோள்கள் :-

1 ) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D

2) http://en.wikipedia.org/wiki/Chola

3) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

4)http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

5) http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

6) நயனம் : 21 பார்வை : 32 - பக்கம் 23

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP