"அல்தான்துயாவை அப்துல் ரசாக்கிற்கு அறிமுகப்படுத்தியவர் நஜீப் துன் ரசாக்!!!! - தனிப்பட்ட துப்பறிவாளர் பாலசுப்பிரமணியம் சத்தியப் பிரமாணம்..!!!

>> Thursday, July 3, 2008

மலேசியாக் கினி படச்சுருள்





நான் பாலசுப்பிரமணியம் /பெ பெருமாள் கீழ்காணும் சத்தியப் பிரமாணத்தில் தகவல்களை நேர்மைக்குப் புறம்பின்றி அறிவிக்கிறேன்.

1. நான் இதற்கு முன்பு அரச மலேசிய போலீஸ் படையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. போலீஸ் படையில் 'கான்ஸ்டெபலாக' 1981ஆம் ஆண்டு இணைந்து பின் 'லேன்ஸ் காப்பரலாக' பதவி உயர்வு பெற்று இறுதியாக 1998-ஆம் ஆண்டில் சிறப்புக் காவல்த்துறைப்படையில் பணியாற்றி வேலையை இராஜினாமா செய்தேன்.

2.போலீஸ் வேலையை துறந்தவுடன் தனிப்பட்ட துப்பறிவாளராக இன்று வரை வேலை செய்து வருகிறேன்.

3. 2006ஆம் ஆண்டில் சூன் மாதத்திற்கும் சூலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அப்துல் ரசாக் பகிண்டா, அவர் பணி புரியும் 'பங்குனான் கெத்தா அஸ்லி' ஜாலான் அம்பாங்கில் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அவரை சில அனாமதேயர்களின் தொந்தரவிலிருந்து பாதுகாக்க என்னை 10 நாட்கள் நியமித்தார்.

4. 2 1/2 நாட்கள் கழித்து அப்துல் ரசாக்கிடமிருந்து முறையான கட்டளைகள் ஏதும் எனக்கு பிறப்பிக்கப்படாததால், அவருடனான வேலையை விட்டு விட்டேன்.

5. இருப்பினும் அக்டோபர் 5-ஆம் திகதி 2006-ல் என்னை மீண்டும் பாதுகாப்புப் பணியில் அப்துல் ரசாக் நியமித்தார். அடிக்கடி .எஸ்.பி தான் எனக் கூறிக் கொண்டு ஒரு சீனர் என நம்பப்படும் அனாமதேயப் பேர்வழி ரசாக்கிற்கு கைப்பேசியின் மூலம் பணம் கேட்டு மிரட்டி வருவதால் நான் மீண்டும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டேன். பின்னாளில் அந்த அனாமதேயப் பேர்வழி மொங்கோலிய அழகி அல்தான்துயாவினால் பணியில் அமர்த்தப்பட்ட ஆங் என அழைக்கப்படும் தனிப்பட்ட துப்பறிவாளர் எனத் தெரிந்துக் கொண்டேன்.

6. இதுப்போன்ற மிரட்டல் அழைப்புகள் வருவதற்குக் காரணம் அல்தான்துயாதான் என்பதனை அப்துல் ரசாக் அறிந்து வைத்திருந்ததாகவும், கூடிய விரைவில் அல்தான்துயா மலேசியாவிற்கு வந்து தம்மை தொடர்புக் கொள்வதற்குச் சாத்தியம் இருப்பதாகவும் அவர் என்னிடம் கூறியிருந்தார்.

7. மொங்கோலிய மந்திரவாதியால் அல்தான்துயாவிற்கு சக்தி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அப்துல் ரசாக்கினால் அல்தான்துயா முகத்தைக் காண இயலாது எனவும் அவரிடம் கூறப்பட்டதாக என்னிடம் கூறினார்.

8. அல்தான்துயாவைப் பற்றி நான் அப்துல் ரசாக்கிடம் விசாரித்த பொழுது, அல்தான்துயா தமது தோழி எனவும், அவளை ஒரு முக்கியப் புள்ளி ஒருவர் தமக்கு அறிமுகப்படுத்தி வைத்து, பொருளாதார ரீதியில் அவளை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

9. .எஸ்.பி தான் எனும் அனாமதேயப் பேர்வழியின் மிரட்டல் அழைப்புகள் தொடர்பாக உடனடியாக காவல் நிலையத்தில் புகார் ஒன்று செய்யுமாறு அப்துல் ரசாக்கை கேட்டுக் கொண்டேன். ஆனால், இந்த விடயத்தில் பல முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் புகார் கொடுக்க வேண்டாம் எனக் கூறி அப்துல் ரசாக் மறுத்து விட்டார்.

10. அல்தான்துயா ஓர் ஏமாற்றுப் பேர்வழி என்றும் பிறரை வசீகரப்படுத்துவதில் அவள் மிகவும் கெட்டிக்காரி என்றும் அப்துல் ரசாக் என்னிடம் கூறினார். அல்தான்துயா பண விஷயத்தில் மிகவும் கராராக நடந்துக் கொள்வாள் என்றும், தாம் அவளுக்கு மொங்கோலியாவில் சொத்துகள் வாங்கிக் கொடுத்ததாக அப்துல் ரசாக் என்னிடம் மேலும் கூறினார்.

11. அதனையடுத்து அப்துல் ரசாக் என்னிடம் கைப்பேசியைக் கொடுத்து, பண மிரட்டல் தொடர்பான சில ஒலிப்பதிவு செய்யப்பட்ட அழைப்புகளை (voice mail) என்னைக் கேட்கச் சொன்னார். கொடுக்கவேண்டியப் பணம் வராவிடில், அப்துல் ரசாக் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என்றும் அப்துல் ரசாக்கின் மகள் ரொவேனாவை கடத்திவிடுவேன் என்றும் அந்த பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் அச்சுறுத்தின.

12. அதனால் அப்துல் ரசாக் பகிண்டாவின் மகள் ரொவேனாவையும் நான் பாதுகாக்க நேரிட்டது.

13. அக்டோபர் 9-ஆம் திகதி 2006-ல் காலை மணி 9.30க்கு, அப்துல் ரசாக்கிடமிருந்து எனக்கு ஒரு கைப்பேசி அழைப்பு வந்தது. அல்தான்துயா தற்போது தமது அலுவலகத்தில் இருப்பதாகவும், உடனடியாக என்னை அங்கு வருமாறும் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டார். அச்சமயம் நான் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்ததால், என்னுடைய உதவியாளர் சுராஸ் என்பவரை அப்துல் ரசாக்கின் அலுவலகத்திற்குச் செல்லுமாறு பணித்துவிட்டு நான் சற்று தாமதமாகச் சென்றேன். அப்துல் ரசாக்கின் அலுவலகத்தில் காணப்பட்ட அல்தான்துயா மற்றும் அவளுடைய இரு மொங்கோலிய தோழிகளையும் கண்ட சுராஸ் நிலைமையை சமாளித்து அம்மூவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு செய்துவிட்டார். ஆனால் வெளியேறுவதற்கு முன் அல்தான்துயா 'மலாயா தங்கும் விடுதியின்' பெயர் பொறிக்கப்பட்ட துண்டுச் சீட்டில் தம்மை உடனடியாக கைப்பேசியின்வழி தொடர்புக் கொள்ளுமாறு ( கைப்பேசி எண்கள் எழுதப்பட்டிருந்தது) தங்கும் விடுதியின் அறை எண் எழுதி அப்துல் ரசாக்கின் அலுவலகத்தில் அக்குறிப்பை விட்டுச் சென்றுள்ளார்.

14. அன்றைய தினம் சுராஸை சந்தித்த அல்தான்துயா தம்மை 'அமீனா' என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகவும், அவள் தனது காதலன் அப்துல் ரசாக்கை சந்திக்க வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறாள்.

15. இருப்பினும் மறுநாள் மதியம் 12 மணியளவில் இம்மூன்று மொங்கோலிய பெண்களும் அப்துல் ரசாக் பணிபுரியும் 'பங்குனான் கெத்தா அஸ்லீ' ஜாலான் அம்பாங்கிற்கு மீண்டும் வந்து விட்டார்கள். அவர்கள் கட்டிடத்தினுள் நுழையவில்லை, ஆனால் மீண்டும் சுராஸிடம் தாங்கள் அமீனாவின் காதலன் அப்துல் ரசாக்கை சந்திக்க வந்திருப்பதாகக் கூறினார்கள்.

16. அக்டோபர் 11-ஆம் திகதி 2006-ல் அமீனா அப்துல் ரசாக்கின் அலுவலகத்திற்கு தனியாளாக வந்து என்னிடம் ஒரு துண்டுச் சீட்டை கொடுத்து அப்துல் ரசாக்கிடம் கொடுத்து விடுமாறு கேட்டுக் கொண்டார். நானும் அப்படியே செய்தேன். அப்துல் ரசாக் என்னிடம் அத்துண்டுச் சீட்டில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை என்னிடம் காட்டினார். உடனடியாக தம்மை தொடர்புக் கொள்ளுமாறு அத்துண்டுச் சீட்டில் அமீனா எழுதியிருந்தார்.


17. தொடர்ச்சியான மிரட்டல், தொந்தரவு வராமல் இருப்பதற்கு, அப்துல் ரசாக்கை நான் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் செய்து விடுமாறு மீண்டும் கேட்டுக் கொண்டேன். ஆனால் அதற்கு அவர், அல்தான்துயாவிடம் நிச்சயம் பணம் தட்டுப்பாடு நிலவும் என்றும், கூடிய விரைவில் அவள் மொங்கோலியா சென்றுவிடுவாள் என்றும் கூறினார்.

18. இதற்கிடையில் சுராஸை நான் மலாயா தங்கும் விடுதியின் வெளியே அல்தான்துயாவையும் அவளது தோழிகளையும் கண்காணிப்பதற்கு ரோந்துப் பணியில் அமர்த்தினேன். ஆனால், விரைவில் சுராஸை அடையாளம் கண்டு விட்ட அம்மூவரும் சுராஸிடம் நெருங்கிப் பழகி நண்பர்களாகிவிட்டனர். இதனால், சுராஸும் அவர்களுடைய தங்கும் விடுதி அறையில் சில இரவுகளை கழித்துள்ளான்.

19. சுராஸ் அல்தான்துயாவிடம் நெருங்கிப் பழகும் விவகாரம் அறிந்த அப்துல் ரசாக், உடனடியாக சுராஸை அத்தங்கும் விடுதியிலிருந்து வெளியேற்றுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார்.

20. அக்டோபர் 14-ஆம் திகதி 2006ல், அமீனா மீண்டும் அப்துல் ரசாக்கை சந்திக்க டாமான்சாரா ஹைட்ஸ்சில் அமைந்திருக்கும் அவரது இல்லத்திற்கு வந்துவிட்டாள். அச்சமயம் நான் அங்கு இல்லை. அப்துல் ரசாக் என்னை கைப்பேசியின்வழி தொடர்புக் கொண்டு விஷயத்தைச் சொல்லவும் நான் அவர் இல்லத்திற்கு விரைந்தேன். நான் அங்கு சென்றடைந்த சமயம், அமீனா அப்துல் ரசாக் இல்லத்தின் வெளிக்கதவினருகே நின்றுக் கொண்டு "ரசாக்! பாஸ்டர்ட்! வெளியே வா..!" என கத்திக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவளை நான் சமாதானப்படுத்த முயன்றும் அவள் விடுவதாய் இல்லை, எனவே நான் போலீசுக்கு தகவல் கொடுத்ததும், போலீசாரின் இரு ரோந்து வாகனம் அங்கு வந்தது. நான் நடந்தவற்றை காவல்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததும், அவர்கள் அமீனாவை 'பிரிக்ஃபீல்ட்ஸ்' காவல் நிலையத்திற்குக் கொண்டுச் சென்றனர்.

21. நான் போலீசாரின் ரோந்து வாகனத்தை வாடகைக் காரின் மூலம் பின்தொடர்ந்துச் சென்றேன். அதற்கிடையில் அப்துல் ரசாக்கையும் அவரது குடும்ப வழக்கறிஞர் டிரானையும் காவல் நிலையத்திற்கு வந்து புகார் செய்யுமாறு கேட்டேன், அவர்களிருவரும் மறுத்துவிட்டனர்.

22. நான் 'பிரிக்ஃபீல்ட்ஸ்' காவல் நிலையத்தில் இருந்தபோது, அமீனா நியமித்த தனிப்பட்ட துப்பறிவாளர் ஆங் அங்கு வந்துச் சேர்ந்தார். அதன்பின் நானும் அவரும் கலந்துரையாடினோம். பாரிஸ் நகரில் குத்தகை ஒன்று கிடைத்திட உதவி புரிந்த அல்தான்துயாவிற்காக, அப்துல் ரசாக் அமெரிக்க டாலர் 500,000.00, மற்றும் மொங்கோலியாவிற்கான விமானப் பயணச் சீட்டு மூன்றையும் ஏற்பாடு செய்து தருமாறு ஆங் கேட்டுக் கொண்டார்.

23. அச்சமயம் அமீனா சமாதானமடைந்திருந்தார். 'பிரிக்ஃபீல்ட்ஸ்' காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவல்த்துறை அதிகாரி, இப்பிரச்சனையை வெளியில் சுமூகமாகப் பேசித் தீர்வுக் கண்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

24. அதன்பின் ஆங் என்னிடம் தெரிவித்த விஷயத்தை அப்துல் ரசாக்கிடம் தெரிவித்தேன், அதோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க எனக்கு யாரும் உதவ முன்வராததைக் குறித்து மனவேதனை அடைவதாகவும் அப்துல் ரசாக்கிடம் தெரிவித்தேன். அதன்பின் வெகுநேரமாக அப்துல் ரசாக்கோடு கலந்துரையாடிவிட்டு, இப்பணியிலிருந்து நான் வெளியேறுவதாக அவரிடம் தெரிவித்தேன்.

25. இக்கலந்துரையாடல் நடைப்பெற்றச் சமயம், நான் தொடர்ந்து அப்துல் ரசாக்கிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக, அப்துல் ரசாக் என்னிடம் கூறியதாவது :

1) சிங்கப்பூரில் நடைப்பெற்ற வைர கண்காட்சி நிகழ்வு ஒன்றில், அல்தான்துயாவை தம்மிடம் அறிமுகப்படுத்தி வைத்தவர் நஜீப் துன் ரசாக்.

2) அல்தான்துயாவோடு தமக்கு உடலுறவு அனுபவங்கள் உள்ளதாக நஜீப் துன் ரசாக், அப்துல் ரசாக்கிடம் தெரிவித்தார்.

3) தற்போது தாம் வகிக்கும் துணைப் பிரதமர் பதவிக்கு பங்கம் ஏற்படும் என்ற அச்சத்தினாலும், அல்தான்துயாவிடமிருந்து தமக்கு ஏதும் மிரட்டல்கள் வந்துவிடக்கூடாது என்பதாலும், அவளை கவனிக்கும் பொறுப்பை அப்துல் ரசாக்கிடம், நஜீப் துன் ரசாக் ஒப்படைத்தார்.

4) நஜிப் துன் ரசாக்கும், அப்துல் ரசாக் பகிண்டாவும், அமீனாவும் பாரிஸ் நகரில் நடைப்பெற்ற விருந்து நிகழ்வில் ஒன்றாகவே இருந்துள்ளனர்.

5) நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் குத்தகை கிடைத்திட அல்தான்துயா பேருதவி புரிந்துள்ளதால், அமெரிக்க டாலர் 500,000ஐ தமக்குரிய பங்காகக் கொடுக்கும்படி அல்தான்துயா கேட்டுள்ளார்.

26. அக்டோபர் 19, 2006ல், நான் அப்துல் ரசாக்கின் இல்லத்திற்கு இரவு நேரப் பணிக்காகச் சென்றிருந்தேன். என்னுடைய காரை வழக்கம்போல் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்தேன். அச்சமயம் ஒரு மஞ்சள் நிற பெர்டானா வாடகைக் கார் என் முன்னால் கடந்துச் சென்றது. காரினுள் 3 பெண்கள் அமர்ந்திருந்ததைக் காண முடிந்தது, அவர்களில் ஒருத்தி அமீனா. வாடகைக்கார் சுற்றி வளைத்து நேராக வீட்டின் முன் வந்து நின்றது. காரின் கண்ணாடி இறக்கப்பட்டது, அம்மூன்றுப் பெண்மணிகளும் என்னிடம் "ஹேப்பி தீபாவளி" என்றனர். அதன்பின் வாடகைக் கார் அங்கிருந்து சென்றுவிட்டது.

27. 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் அதே வாடகைக் கார் வீட்டின் முன் வந்து நின்றது. இம்முறை அமீனா மட்டும் வாடகைக் காரினுள் அமர்ந்திருந்தாள். வாடகைக் காரினிலிருந்து இறங்கிய அமீனா நேரே என்னிடம் வந்து பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால். நான் அப்துல் ரசாக்கிற்கு "அமீனா இங்கே இருக்கிறாள்" என்று குறுந்தகவல் அனுப்பினேன். மறுமொழியாக அப்துல் ரசாக்கின் குறுந்தகவல் " என் ஆட்கள் வரும்வரை அவளுடன் சற்று நேரம் காலம் கடத்து" என வந்தது.

28. அமீனாவுடன் நான் பேசிக் கொண்டிருந்த பொழுது, அமீனா என்னிடம் கூறியதாவது :

1) அப்துல் ரசாக்கை தாம் நஜீப் துன் ராசாக்வுடன் சிங்கப்பூரில் சந்தித்ததாக கூறினார்.

2) அப்துல் ரசாக்கையும், நஜீப் துன் ரசாக்கையும் தாம் பாரிஸ் நகரில் விருந்து நிகழ்வு ஒன்றில் சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

3) பாரிஸ் நகரில் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் குத்தகையைப் பெற்றுத் தர உதவியதற்காக அல்தான்துயாவிற்கு அமெரிக்க டாலர் 500,000 பங்கு கொடுப்பதாக வாக்களிக்கப்பட்டது.

4) அப்துல் ரசாக் தமக்கு மொங்கோலியாவில் வீடு வாங்கிக் கொடுத்ததாகவும், அதனை தமது அண்ணன் வங்கியீல் அடகு வைத்து விட்டதால் அதனை திரும்பப் பெறுவதற்கு பணம் தேவைப்படுகிறது எனக் கூறினார்.

5) தனது தாயார் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரது மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது என்று கூறினார்.

6) அப்துல் ரசாக் தம்மை கொரியாவில் திருமணம் புரிந்துக் கொண்டதாகவும், தனது தாயார் கொரியா நாட்டைச் சார்ந்தவர் என்றும், தனது தந்தை மொங்கோலிய சீன கலப்புடையவர் என்றும் அவர் கூறினார்.

7) நான் அவளை அப்துல் ரசாக்கை சந்திக்க விடாமல் தடுத்தால், நஜீப் துன் ரசாக்கை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தர முடியுமா என என்னிடம் கேட்டாள்.

29. சுமார் 15 நிமிடங்கள் அமீனாவோடு பேசிய பிறகு, சிவப்பு நிற 'புரோட்டோன் ஏரோபேக்' கார் ஒன்று வந்தது. அக்காரில் ஒரு பெண்மணி இரண்டு ஆண்கள் தென்பட்டார்கள். எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது வந்தவர்கள் லேன்ஸ் காப்பரல் ரோஹானிசா, அசீலா அட்ரீ மற்றும் சிருல் அஸஹார் என்று. அம்மூவரும் சாதாரண உடையில் காணப்பட்டார்கள். அசீலா என்னை நோக்கி வந்தார், மற்ற இருவரும் காரில் அமர்ந்திருந்தனர்.

30. அசிலா என்னிடம், அல்தான்துயாவைக் காட்டி "இவள்தான் அமீனாவா?" எனக் கேட்டதற்கு நான் "ஆம்" என்றேன். அதன்பின் அவர் அங்கிருந்து சற்று தூரமாக நடந்துச் சென்று கைப்பேசியில் சில அழைப்புகளைச் செய்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
10 நிமிடங்கள் கழித்து ஒரு மலாய்க்காரர் ஓட்டி வந்த நீல நிற புரோட்டோன் சாகா எங்களை கடந்துச் சென்றது. கடக்கும் வேளை கார் கண்ணாடி இறக்கப்பட்டு, அவ்வோட்டுநர் எங்களை பார்த்த வண்ணம் சென்றார்.

31. அதன் பின் அசிலா என்னிடம், "அமீனாவை நாங்கள் இங்கிருந்து கொண்டுச் செல்கிறோம்" எனக் கூறினார். நான் அமீனாவிடம், அவளைக் கைது செய்வதற்கு போலீஸ் அதிகாரிகள் வந்திருப்பதாகக் கூறினேன். சிவப்பு நிற புரோட்டோன் காரில் அமர்ந்திருந்த இருவரும் பின் வெளியேறி இருக்கைகளை மாற்றிக் கொண்டனர். ரொஹானிசாவும் அமினாவும் பின் இருக்கையில் அமர இரு ஆண்களும் முன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். அவர்கள் அங்கிருந்துச் சென்றனர். அதுவே நான் அமீனாவைக் கடைசியாகப் பார்த்த தருணம்.

32. இச்சம்பவம் நடக்கையில் அப்துல் ரசாக் தமது இல்லத்தில் இல்லை.

33. அக்டோபர் 19,2006ற்குப் பிறகு நான் தொடர்ந்து அப்துல் ரசாக்கின் டாமான்சாரா ஹைட்ஸ் இல்லத்தில் இரவு 7 மணியிலிருந்து மறுநாள் காலை 8 மணிவரை பணியில் இருந்தேன். அக்டோபர் 20-ஆம் திகதி காலையில் அப்துல் ரசாக்கிற்கு அமினாவின் உறவினர்ப் பெண்ணான ஏமி மிரட்டல் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி இருந்தார்.

34. அக்டோபர் 20-ஆம் திகதி இரவு, அமீனாவின் மொங்கோலிய தோழிகளிருவரும் அப்துல் ரசாக்கின் வீட்டிற்கு வந்து அமீனாவைப் பற்றி விசாரித்தனர். நான் அமீனாவை காவல்த்துறையினர் கைது செய்து விட்டதாகக் கூறினேன்.

35. இச்சம்பவம் நடந்து சில நாட்களுக்குப்பின் அமீனாவின் மொங்கோலிய தோழிகளிருவரும், திரு.ஆங் மற்றும் ஏமி என்றழைக்கப்படும் அமீனாவின் உறவினர்ப் பெண்ணுடன், அப்துல் ரசாக்கின் வீட்டிற்கு வந்தனர். அமீனா எங்கே என்றுக் கேட்டவர்கள், அமீனா அப்துல் ரசாக்கீன் வீட்டில்தான் இருக்க வேண்டும் எனவும் சந்தேகித்தனர்.

36. அச்சமயம் வாக்குவாதம் நடைப்பெற, நான் போலீசாரை அழைத்தேன். சற்று நேரத்தில் அங்கே ரோந்து வாகனத்தில் போலீசார் வந்திறங்கினர். அதனையடுத்து மற்றொரு போலீஸ் ரோந்து வாகனமும் அங்கே வந்தது. அக்காரில் 'டாங் வாங்கி' காவல் நிலைய போலீஸ் அதிகாரி வந்திருந்தார். அமீனா காணாமல் போனதற்கு அடுத்து ஏமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், அப்புகாரை விசாரிக்கும் பொறுப்பதிகாரி வந்திருந்தார்.

37. நான் அப்துல் ரசாக்கிற்கு கைப்பேசியின்வழி தொடர்புக் கொண்டு, அவரின் வீட்டின் முன் நடக்கும் சம்பவங்களை தெரியப்படுத்தினேன். அவர் உடனே டி.சி.பி மூசா சஃப்ரியத் தொடர்புக் கொண்டு, பின் மீண்டும் என்னை கைப்பேசியின்வழி அழைத்தார். சற்று நேரத்தில் டி.சி.பி சஃப்ரி என்னை கைப்பேசியின்வழி தொடர்பு கொள்வார் என்றும், கைப்பேசியை 'டாங் வாங்கி' காவல் நிலைய போலீஸ் அதிகாரியிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

38. அதன் பின் டி.சி.பி சஃப்ரியிடமிருந்து எனக்கு கைப்பேசி அழைப்பு வந்தது. கைப்பேசியை 'டாங் வாங்கி' போலீஸ் அதிகாரியிடம் நீட்டினேன். அவர்களிருவரும் 3-4 நிமிடங்களுக்கு கலந்துரையாடினர். அதன்பின், 'டாங் வாங்கி' போலீஸ் அதிகாரி மொங்கோலியப் பெண்களை அங்கிருந்து கலைந்துச் செல்லுமாறு உத்தரவிட்டார். நாளை தம்மை காவல் நிலையத்தில் வந்து சந்திக்குமாறு அப்பெண்களைப் பணித்தார்.

39. அக்டோபர் 24-ஆம் திகதி 2006ல், மொங்கோலிய பெண்களின் தொடர்ச்சியான மிரட்டல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், சில ஆலோசனைகளுக்குப் பிறகு அப்துல் ரசாக் பகிண்டா என்னை அவருடன் பிரிக்ஃபீல்ட்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்கு அழைத்தார்.

40. இதற்குமுன் ஏமி எனக்கு குறுஞ்செய்தியின் மூலம், அவள் தாய்லாந்து செல்லவிருப்பதாகவும், அங்குள்ள மொங்கோலிய தூதரகத்தில் அமீனா காணாமல் போன விவகாரம் தொடர்பாக புகார் கொடுக்கப் போவதாகவும் கூறியிருந்தாள். இதேப் போன்றதொரு குறுந்தகவலையும் அப்துல் ரசாக்கிற்கு அவள் அனுப்பியிருந்தாள். இதன் அடிப்படையீல்தான் போலீஸ் புகார் ஒன்றைச் செய்ய அறிவுரைக்கப்பட்டதாக அப்துல் ரசாக் என்னிடம் கூறினார்.

41. அப்துல் ரசாக் என்னிடம், டி.எஸ்.பி மூசா சஃப்ரி, பிரிக்ஃபீல்ட்ஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி டி.எஸ்.பி இட்ரீஸை தமக்கு அறிமுகப்படுத்தியதாகவும், டி.எஸ்.பி இட்ரீஸ் தமக்கு .எஸ்.பி தோனியை அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

42. அப்துல் ரசாக் பகிண்டா பிரிக்ஃபீல்ட்ஸ் காவல் நிலையத்தில் .எச்.பி தோனி முன்னிலையில் புகார் அளிக்கும் பொழுது, இவ்விஷயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை தயார் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், அப்துல் ரசாக் தாம் வெளிநாட்டிற்குச் செல்ல விருப்பதால் மறுத்துவிட்டார். ஆனால் தாம் அறிக்கை ஒன்றைத் தயார் செய்து 'பேன் டிரவில்' சேமித்துக் கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அவர் அப்படீ செய்யவில்லை என்பது .எஸ்.பி தோனி சொல்லி எனக்குத் தெரிந்தது.

43. இருப்பினும் .எஸ்.பி தோனி மறுநாள் என்னுடைய வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டார்.

44. நான் அப்துல் ரசாக்கின் கீழ் வேலை செய்வதை அக்டோபர் 26-ஆம் திகதியோடு நிறுத்திக் கொண்டேன். அவர் அன்றைய தினம் தனியாக ஹாங் காங்கிற்கு சென்றுவிட்டார்.

45. நவம்பர் மாத மத்தியில், எனக்கு ஜாலான் ஹங் துவா மத்திய காவல்த்துறை அலுவலகத்திலிருந்து .எஸ்.பி தோனியின் அழைப்பு வந்தது. அவர் அமீனா வழக்குத் தொடர்பாக என்னை சந்திக்க வேண்டும் எனக் கூறினார். அங்கு நான் சென்றதும் உடனடியாக குற்றத் தடுப்புச் சட்டம் 506ன் கீழ் கைது செய்யப்பட்டேன்.

46. கைதாகி தடுப்புக் காவலில் 5 நாட்கள் வைக்கப்படுவதாக அறிவித்தார்கள். ஆனால் மூன்றாவது நாள் நான் பிணையில் விடுவிக்கப்பட்டேன்.

47. 2006ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில், D9 என அழைக்கப்படும் மத்திய காவல்த்துறை அலுவலகத்தின் ஒரு பிரிவில் இருந்து, துப்பறிவாளர் ஒருவர் என்னை ஹங் துவா மத்திய காவல்த்துறை அலுவலகத்திற்கு அழைத்துவரப் பணிக்கப்பட்டார்.

48. அதன் பின் புக்கிட் அமானுக்கு என்னை மாற்றம் செய்தனர். அங்கே என்னை விசாரிக்கத் தொடங்கினர். அப்துல் ரசாக்கின் கைப்பேசியிலிருந்து எனக்கு வந்த குறுஞ்செய்தியான " என் ஆட்கள் வரும்வரை அவளுடன் சற்று நேரம் காலம் கடத்து" எனும் குறுந்தகவல் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்டனர். இந்தக் குறுந்தகவல் அப்துல் ரசாக்கின் கைப்பேசியின்வழி பெறப்பட்டதைத் தெரிந்துக் கொண்டேன்.

49. அதன் பின் என்னுடைய வாக்குமூலத்தை ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரை தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு வாங்கிக் கொண்டனர். எனக்குத் தெரிந்த அனைத்தையும், குறிப்பாக நஜீப் துன் ரசாக்கிற்கும் அல்தான்துயாவிற்கும் உள்ளத் தொடர்பு உட்பட எல்லாவற்றையும் கூறினேன். ஆனால் இறுதியாக அறிக்கையில் கையொப்பமிடும் போது நான் நஜீப்பைப் பற்றிக் கூறிய விஷயங்கள் அங்கு இடம் பெற வில்லை. அவை நீக்கப்பட்டுவிட்டன.

50. ஷா ஆலாம் நீதிமன்றத்தில் அசீலா, சிருல், அப்துல் ரசாக் போன்றோரின் வழக்கு நடைப்பெற்ற பொழுது எனக்கு கிடைத்த ஆதாரங்களைச் சமர்ப்பித்தேன். ஆனால், நீதிமன்றத்தில் யாரும் நஜீப் துன் ரசாக்கிற்கும் அல்தான்துயாவிற்கும் உள்ளத் தொடர்பைப் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பவில்லை.

51. அப்துல் ரசாக் கைதாகும் சமயம் நான் அவருடன் காலை 6.30 மணியளவில் அவரின் வழக்கறிஞரின் அலுவலகத்தில் இருந்தேன். அப்பொழுது அப்துல் ரசாக் முந்தையா நாள் நஜீப்பிற்கு குறுந்தகவல் அனுப்பி தாம் கைதாகும் சூழ்நிலையில் இருப்பதை நம்பமுடியவில்லை என தெரிவித்ததாகவும், அதற்கு மறுபதில் ஏதும் வரவில்லை எனவும் அவர் கூறினார்.

52. காலை 7.30 மணியளவில் அப்துல் ரசாக்கிற்கு நஜீப்பிடமிருந்து குறுந்தகவல் ஒன்று வந்தது. அக்குறுந்தகவலை என்னிடமும், அப்துல் ரசாக்கின் வழக்கறிஞரிடமும் அப்துல் ரசாக் காட்டினார். அக்குறுந்தகவலில் "நான் போலீஸ் படைத் தலைவரை இன்று காலை 11 மணிக்கு சந்திக்கிறேன். பிரச்சனை சுமூகமாக முடிந்துவிடும். சமாதானமாக இரு" என்று இருந்தது.

53. அதன்பின், அன்றைய தினமே காலையில் அப்துல் ரசாக் பகிண்டா தமது அலுவலகம் அமைந்துள்ள 'பங்குனான் கெத்தா அஸ்லி' ஜாலான் அம்பாங்கில் கைதாகிய விஷயம் எனக்குத் தெரிய வந்தது.

54. நான் செய்த சட்டப்பூர்வமான அறிவிப்பின் காரணம் :

1) அல்தான்துயா கொலை வழக்கின் விசாரணையை அதிகாரத்துவத்தில் உள்ளவர்கள் முறையாக செயல்படுத்தாது இருப்பது கண்டு வேதனை அடைவதால்.

2) கைக்கூலிகளை மட்டும் மையமாக வைத்து கொலை வழக்கை திசைத்திருப்பப் பார்க்கும் இவ்வழக்கில், முக்கிய புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்பதற்காக.

3) மீண்டும் இவ்வழக்கு தொடர்பாக மூடப்பட்ட கோப்புகளை தூசி தட்டி எடுத்து புதிய ஆதாரங்களோடு முறையான விசாரணையை அதிகாரத்தில் உள்ளவர்கள் நடத்த வேண்டும் என்பதற்காக.

4) கடந்த 17 வருடங்களாக அரச மலேசியப் போலீஸ் படையில் பணிப்புரிந்த அனுபவத்தின் பேரில் என்னால் கூறிப்பிட்டு ஒன்றைச் சொல்ல முடியும். மேலிடத்தின் பிரத்தியேஎக உத்தரவின்றி, எந்த ஒரு போலிஸ் அதிகாரியும் ஒருவரின் தலையை துப்பாக்கியால் சுட்டு, உடலில் வெடிமருந்து வைத்து வெடித்துவிடக் கூடிய அதிகாரம் கிடையாது என்பதனால்.

5) குற்றம் சுமத்தப்பட்டவர்கள், குறிப்பாக அசிலாவும் சீருலும் வழக்கு மன்றத்தில் சத்தியம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். காரணம் சத்தியம் யார் முன்னிலையில் செய்கிறார்களே அவர்களே, குற்றவாளிக் கூண்டில் நிற்பவர்களுக்கு பேச வேண்டியதைக் கற்றுக் கொடுப்பதால்.

55) Statutory Declaration Act 1960. எனும் சட்டத்தின் கீழ் நான் சத்தியப் பிரமாணத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களும் உண்மை என அறிவிக்கிறேன்.

பாலசுப்பிரமணியம் த/பெ பெருமாள்
சூலை 1,2008

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

VIKNESHWARAN ADAKKALAM July 4, 2008 at 12:46 PM  

விளக்கமான பதிவை தந்தமைக்கு நன்றி..
இவ்வளவு நடந்தும் அமைதி காத்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறது ஒரு காட்டுப் பூனை. விவ்வழக்கின் மர்மங்கள் உடைக்கப்பட்டு... அதிகார துஸ்பரியோகத்தின் பேரில் சரியான தண்டைக் கிடைத்தால் மற்றவர்களுக்கு நல்ல பாடமாக அமையும்...

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP