மூன்று மாதங்களாக மின்சாரமின்றி தவிக்கும் காப்பார் தமிழ்ப் பள்ளி..!

>> Saturday, August 2, 2008


HINDU RIGHTS ACTION FORCE
No. 135-3-A, Jalan Toman 7,
Kemayan Square,
70200 Seremban, Negeri Sembilan
Malaysia. Tel : +606-7672995/6
Fax: +6-06-7672997 Email waytha@hotmail.com

Y.A.B. DATO’ SERI ABDULLAH AHMAD BADAWI
Minister of Finance
Block Utama,
Bangunan Perdana Putra,
Pusat Pentadbiran Kerajaan Persekutuan,
62502 Putrajaya Tel: 03 8888 8000
Fax: 03 8888 3444
Email: abdullah@kdn.gov.my

29/07/2008
BY FAX/HAND

மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு,

கரு: சாலான் ஆகோப், காப்பார் தமிழ்ப் பள்ளியில் மூன்று மாதங்களாக மின்சாரம் இல்லை.

மேற்குறிப்பிட்டுள்ளதுபோல், சாலான் ஆகோப் காப்பார் தமிழ்ப் பள்ளியில் கடந்த 07-08-2008 தொடங்கி இந்நாள் வரை ( மூன்று மாத காலங்கள் ) மின்கடத்தி எரிந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது என்பதை உங்களுடைய பார்வைக்குக் கொண்டு வருகிறேன். (தமிழ் நேசன் 10/07/08 பக்கம் 5)

இச்சம்பவம் தொடர்பாக அப்பள்ளியில் பயில்கின்ற 161 தமிழ் மாணவர்களின் கல்வி தடைப்பட்டுள்ளதோடு, கற்றல் கற்பித்தலில் சுணக்கமும் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனைக் குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்கம் மாவட்ட கல்வி இலாகாவில் புகார் கொடுத்த போதிலும் இன்றுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததிற்கான காரணம் என்ன? இதற்கு ஒரே காரணம் கடந்த 50 வருடங்களாக அம்னோ அரசாங்கம் கையாண்டுவரும் இனவாத அரசியலும் அதன் இனவாதக் கல்விக் கொள்கைகளும்தான். தமிழ்ப் பள்ளி என்ற ஒரு காரணத்தினாலேயே, ஒருப் பள்ளிக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டிய வசதிகளைப் பூர்த்தி செய்வதில் மாவட்ட கல்வி இலாகா காட்டி வரும் மெத்தனப்போக்கு எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. மனிதத் தன்மைக்கு வித்திடும் முறையான கல்வியைப் போதிப்பதில் உங்கள் அரசாங்கம் ஓரவஞ்சனையைக் கற்பிக்கக்கூடாது.

சாலான் ஆகோப் தமிழ்ப் பள்ளியானது தற்போது பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வருகிறது. பள்ளியில் சிற்றுண்டிச் சாலை இல்லை, கரையான்களால் அரிக்கப்பட்ட பலகைகளுடனும், ஆங்காங்கே வெடிப்புகள் கொண்ட சுவரோடும் பள்ளி பரிதாபக் காட்சி கொடுக்கிறது. ஏறக்குறைய இதே நிலையில்தான் மலேசியாவில் உள்ள 523 தமிழ்ப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதே நிலைமை இசுலாமிய, மலாய்ப் பள்ளிகளில் ஏற்பட நீங்கள் அனுமதித்திருப்பீர்களா? சாலான் ஆகோப் பள்ளி மட்டுமல்லாது ஏறக்குறைய 523 தமிழ்ப் பள்ளிகளும் தரமான கட்டிடம், கணினி அறை, இணைய வசதி, பட்டதாரி ஆசிரியர்கள், கருவூல மையம், விளையாட்டுத் திடல் மற்றும் இன்னும் பல அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டே இயங்கி வருகின்றன.

மலேசிய அரசாங்கம் பல பில்லியன் ரிங்கிட்டுகள் மனித மூலதன மேம்பாட்டிற்காக செலவு செய்து வந்தாலும், தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு வித்திடும் காரியங்களில் மட்டும் இரட்டடிப்பு செய்து வருவதன் காரணம், மலாய்க்காரர்கள், சீனர்கள், பூர்வக்குடியினர், சபா, சரவாக் பூர்வகுடியினரைப்போல் அல்லாது, மலேசிய இந்தியர்கள் பொருளாதாரத்திலும் அரசியலிலும் வலுவற்ற சமுதாயமாகக் கருதப்படுவதால்தான்.

சாலான் ஆகோப் தமிழ்ப் பள்ளியின் விவகாரம் குறித்து நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியில், வருகின்ற திங்கட்கிழமைக்குள் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படாவிடில் பெற்றோர்களும் சுற்றுவட்டார மக்களும், திங்கட்கிழமை காலை நேரத்தில் பள்ளியின் முன்பு அமைதி மறியலில் ஈடுபடுவர் என அறிவித்துள்ளனர். உங்களுடைய ஆட்சித் திறமையின்மையின் பிரதிபலிப்பாகத்தான் மலேசிய இந்தியர்கள் அம்னோவிற்கு எதிராகப் போர்க்கொடி தூக்க எத்தனித்திருக்கின்றனர்.

அரசாங்கத்தின் பிரித்தாளும் கொள்கையை உடைத்தெறிய, 25 நவம்பர் அன்று மடைத் திறந்த வெள்ளம்போல் திரண்ட ஒரு லட்சம் இந்திய மக்களின் பிரதிநிதிகளான ஐந்து இண்ட்ராப் தலைவர்களை, கைது செய்து முறையான விசாரணையின்றி கொடுங்கோல் சட்டமான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் இரண்டு வருடங்களுக்கு அல்லது காலவரையறை அற்று தடுப்புக் காவலில் தண்டனையை அனுபவிக்க வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இம்மலேசியத் திருநாடு எப்படி எங்களுக்கு சொந்தமோ, அதேப்போல்தான் உங்களுக்கும். நாமெல்லோரும் மலேசியாவின் மூன்றாவது நான்காவது தலைமுறையினரைச் சார்ந்தவர்களாவோம்.

நமக்குள் இருக்கும் வேற்றுமைகளில் ஒன்று, நீங்கள் இராணுவம், காவல்த் துறை, அரசாங்கத் துறைகள் மற்றும் அதிகார வர்கத்தினர் போன்றவர்களின் பாதுகாப்பில் இருக்கிறீர்கள். நீங்கள் நடைமுறைப்படுத்திவரும் இனவாதம், மதவாதம், ஒடுக்கி அடக்கி ஆளும் கொள்கை, தொடர்ச்சியான காலனித்துவம் போன்றவற்றிற்கு எதிராக நிச்சயம் ஒருநாள் பொறுமைக் காத்து வந்த மக்களின் உணர்ச்சிகள் காட்டாறாகப் பாயத்தான் போகிறது.

நன்றி.

நம்பிக்கையுடன்,

திரு.வேதமூர்த்தி
இலண்டன்

இவ்வேளையில் குழந்தைகளின் கல்வியின் நலனுக்காக வேண்டி, இனவாத அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், சுற்றுவட்டார மக்களையும் மனதார பாராட்டுவோம்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

Anonymous August 3, 2008 at 10:03 PM  

இப்படிப் போராட்டங்கள் நடத்தினால் தான் நம் கோரிக்கைகள் இவர்களின் கவனத்திற்கு எட்டுகின்றன. உண்மையில் இவை அனைத்தும் நம் அடிப்படை உரிமைகள்.
இவைகளை கூட தர மருக்கும் நம் தலைவர்களை எப்படி நொந்துக் கொள்வது?...
சதீஸ் சார், நம் இந்தியர்களின் கவனிக்கப் பட வேண்டிய இக்கட்டான சூல்நிலைகளை ஓலைச்சுவடியின் மூலம் ஆயிரக்கணக்காணோர் பார்வைக்கு கொண்டு வரும் உங்கள் சமுதாயப் பணி மெண்மேலும் தொடர வேண்டும்.

Sathis Kumar August 4, 2008 at 5:59 PM  

உங்களுடைய பாராட்டுகள், தம் குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறைக் கொண்டுள்ள பெற்றோர்களைச் சாரட்டும்.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP