மருத்துவமனையில் உதயாவின் தாயார்!

>> Thursday, November 20, 2008


அம்னோவின் கைப்பாவைகளான உள்துறை அமைச்சும் காவல்த்துறையும் இண்ட்ராஃப் இயக்கத்திற்கு எதிராக நடைமுறைப்படுத்திவரும் அடக்குமுறைகளுக்கு ஒரு முடிவே இல்லையென தெரிகிறது.

இரத்தகொதிப்பு மற்றும் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டும் இரைப்பை சுரப்பியில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியும் திரு.உதயகுமாரின் தாயார் திருமதி.கலைவாணி, கடந்த 12ஆம் திகதி நவம்பரன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எட்டு நாட்களுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இவ்விடயம் குறித்து பல முறை கமுந்திங் தடுப்புக் காவல் மைய உயரதிகாரிகளிடம், திரு.உதயகுமார் தன் தாயாரைச் சென்று சந்திக்க அனுமதி வழங்கக் கோரியும் மறுக்கப்பட்டு வந்துள்ளது. தன் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடயமே உதயகுமாருக்கு 16 நவம்பரன்றுதான் குமாரி.சாந்தியின் வழி தெரிய வந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே உதயகுமாரின் தாயார்தானா என்பதை உறுதிப்படுத்த, காவல்த்துறையின் சிறப்பு பிரிவிலிருந்து நான்கு அதிகாரிகள் கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் திருமதி.கலைவாணி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். அங்கு திருமதி.கலைவாணிக்கு சிகிச்சையளித்துவரும் தாதியர்களிடம் இவர்கள் துருவி துருவி கேள்விகள் கேட்டுவிட்டு, பின் நோயாளி உதயாவின் தாயார் என்பதனை நினைவூட்டல் செய்தும் எச்சரித்துவிட்டும் சென்றுள்ளனர்.

படுத்தப் படுக்கையாகக் கிடந்த திருமதி.கலைவாணியையும் அவ்வதிகாரிகள் கேள்விகள் கேட்டு துளைத்ததோடு, உதயாவைச் சந்திக்க வேண்டுமா என்றும் கேட்டுள்ளனர்.

மலேசியக் காவல்த்துறையினர் அச்சுறுத்தும் வகையிலும் மிரட்டல் பாணியிலும் மருத்துவமனை ஊழியர்களிடமும் திருமதி.கலைவாணியிடமும் கேள்விகள் கேட்டும் எச்சரிக்கை செய்தும் இருக்கின்றனர். உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு தாயை மகன் சந்திக்க அனுமதி கோருவதற்கும் இவர்களின் நடவடிக்கைகளுக்கும் முற்றிலும் தொடர்பு இல்லாமல் இருக்கிறது.

நான்கு அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து கேள்விகள் கேட்பதற்குதான் இவர்களுக்கு சம்பளமா? மக்களின் பணம் இப்படித்தான் அநாவசியமாகச் செலவு செய்யப்பட்டு வருகிறது. நாங்கள் சிறை உயர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், உதயாவை தன் தாயைச் சென்று சந்திக்க அனுமதிக்க வேண்டும். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள இயலாத நிலையில் உள்ளார். அண்மையில் தீபாவளிக்கு கமுந்திங் சிறைக்குச் செல்வதற்கு கூட அவர் உடல்நிலை அனுமதிக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.

நன்றி.

திரு.வேதமூர்த்தி
லண்டன்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP