தொழிலாள‌ர் தின‌ம்.. - வ‌ர‌லாறு

>> Thursday, May 1, 2008


மே தின வரலாறு

தொழிலாளர் போராட்டம்


18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.


பிரான்சில் தொழிலாளர் இயக்கம்

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோசத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைஇத்தும் தோல்வியில் முடிவடைந்தன.


ஆசுத்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்

ஆசுத்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.


ரசியாவில் மே தினம்

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரசியத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரசியத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரசியத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரசியப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


அமெரிக்காவில்


அமெரிக்காவில் 1832இல் பொசுடனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க்கு, சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோரு என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளதொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.


சிக்காகோ பேரெழுச்சி


மே 3, 1886 அன்று “மெக்கார்மிக்கு ஆர் வசுடிங் மெசின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஏமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.


அமெரிக்காவின் கறுப்பு தினம்


நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப்பு ஃபிச‌ர், சார்ச்சு ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.


அனைத்து நாடுகளிலும் மே தினம்


1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக்கு ஏங்கெல்சு உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்சு வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

த‌க‌வ‌ல் : த‌மிழ் வீக்கிப்பீடியா


இவ்வேளையில், குறைந்த‌ வ‌ருமான‌ம் ஈட்டும் இந்நாட்டு தோட்ட‌ப் பாட்டாளிக‌ளுக்கு விடிய‌ல் பிற‌ந்திட‌ இறைவ‌னை பிரார்த்தித்துக் கொள்வோம்! இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் தோட்ட‌ப் பாட்டாளிக‌ள் த‌ங்க‌ளுக்குள் புத்தாக்க‌ சிந்த‌னையை ஏற்ப‌டுத்தி, செய‌லில் இற‌ங்கி வெற்றிக் க‌னியை ஈட்டுவ‌தற்கு முய‌ல‌ வேண்டும்!

உழைக்கும் வ‌ர்க்க‌ம் க‌ண்ணீர் சிந்தினால், மானுட‌ குல‌ம் அழிவை நோக்குகிற‌து என‌ அறிக‌! இன்று மே தின‌ம் முன்னிட்டு ம‌லேசிய‌ தோட்ட‌ப் பாட்டாளிக‌ளின் வ‌ர‌லாற்று சிற‌ப்பு க‌ட்டுரை இட‌ம்பெறும்..

அனைத்து தொழிலாள‌ர்க‌ளுக்கும் தொழிலாள‌ர் தின‌ ந‌ல்வாழ்த்துக‌ள்..

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

3 கருத்து ஓலை(கள்):

Anonymous May 1, 2008 at 11:55 AM  

//உழைக்கும் வ‌ர்க்க‌ம் க‌ண்ணீர் சிந்தினால், மானுட‌ குல‌ம் அழிவை நோக்குகிற‌து என‌ அறிக‌! //

டச் பன்னிட்டிங்க தல....

Sathis Kumar May 1, 2008 at 8:32 PM  

ந‌ன்றி ஐயா, ஆனால் வ‌ருந்த‌த்த‌க்க‌ உண்மையிது.. மானுட‌ குல‌ம் அழிவைதான் எதிர்நோக்கியுள்ள‌து..

Anonymous May 3, 2008 at 6:38 PM  

தொழிலாளர் குமுகாயமாக மலேசியத்தில் கால்பதித்த எமது தமிழரின் போராட்டக் காலத்தை மிக அழகுற படம்பிடித்து காட்டியுள்ள தங்களின் எழுத்துக்கு அடியேனின் நன்றிகள் ஐயா!

மலேசியத் தமிழ் முன்னோர்களின் வரலாற்றை இன்றைய இளையோர்கள் கண்டிப்பாக அறிய வேண்டும்.

கூடவே, தொன்மையான தமிழினத்தின் தொடக்க கால வரலாற்றையும் இளையோர் உணர வேண்டும்.

தனது சொந்த இன, மொழி, சமய, பண்பாட்டு, வரலாற்றை அறியாத இனம் தலைநிமிர்ந்து நிற்காது! தன்னம்பிக்கை பெறாது!

மலேசியத் தமிழனின் தமிழனின் வரலாற்றை அறியச் செய்த ஐயா சதீஷ் அவர்களின் பணி அருமை. தொடர்க ஐயா!

தமிழ் இளைஞனைத் தலைநிமிரச் செய்ய
தமிழர் வரலாற்று உணர்ச்சியை ஊட்டுவோம்!

தமிழுயிர் அன்பன்;
ஆய்தன்

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP