எதியோபிய நாகரிகர் முன்னோர் தமிழர்
>> Thursday, April 7, 2011
குறைவில்லாதது..
என் தாயார் விமலா அம்மையாருக்குச் சமர்ப்பணம்..


வாசகர்களுக்கு வணக்கம்,
இண்ட்ராஃப் மக்கள் சக்தி கூடிய விரைவில், மலேசிய இந்தியர்களின் உரிமைப் போராட்டங்களைச் சித்தரிக்கும் கவிதை நூலொன்றை வெளியிடவுள்ளது. எனவே வாசகர்களிடமிருந்து கவிதைகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. தரமான கவிதைகள், ஆழமான கருத்துகள் கொண்ட கவிதைகள், தேர்ந்தெடுக்கப்பட்டு நூலில் பிரசுரிக்கப்படும்.
வாசகர்களின் படைப்புகள் மரபுக் கவிதையாகவோ, உரைவீச்சாகவோ, 'ஹைக்கூ'வடிவிலோ இருக்கலாம். முடிந்த மட்டும் கவிதைகள் சுருக்கமாகவும் அல்லாமல் நீளமாகவும் அல்லாமல் ஒருபக்கத் தாளில் இடம்பெறும்படி அமைந்திடுதல் நல்லது. வாசகர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட படைப்புகளை அனுப்பலாம்.
கவிதைகளை கொடுக்கப்பட்ட மின்மடல் முகவரிக்கு 20-ஆம் திகதி செப்டம்பர் மாதத்திற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் : olaichuvadi@gmail.com
நம் உரிமைப் போராட்டங்களை நினைவுக் கூறவிருக்கும் இக்கவிதை நூலுக்கு உங்களுடைய பங்கு மிக முக்கியம். எனவே, இன்றே கவிதை எழுதத் தொடங்குங்கள்...
அண்மையில் தமிழர்களுக்கும் சிந்துவெளி நாகரீகத்திற்கும் உள்ளத் தொடர்பை மொழி ஆய்வியல் ரீதியாக நிரூபணமாக்கும் சில திடுக்கிடும் தகவல்களைக் கொண்ட கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. இக்கட்டுரையை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ம.இராசேந்திரன் படைத்திருந்தார். இதோ வாசகர்களுக்காக அக்கட்டுரை...
தமிழின் தலையெழுத்து, பெருமையும் வியப்பும் தருகிறது. தலைக்காவிரி என்பதைப்போல தலையெழுத்தைத் தொடக்க கால எழுத்து என்றும் பொருள் கொள்ளலாம். மன அனுபவ வெளிப்பாடு பேச்சு மொழி என்றால், பதிவு எழுத்து மொழியாகும். எழுத்து என்றால் ஒலிஎழுத்து என்றும் வரி எழுத்து என்றும் இரண்டையும் குறிக்கும். எழுப்பப்படுதலாலும் எழுதப்படுதலாலும் இரண்டு வகைக்கும் பொதுச் சொல்லாக இருந்த எழுத்து பிறகு வரி வடிவ எழுத்திற்கு மட்டுமே உரியதாக வழக்கத்திற்கு வந்துவிட்டது.
நெடுங்காலத்திற்கு முன்பே தமிழுக்கு எழுத்து இருந்திருக்கிறது. இப்போதும்கூட எழுத்தில்லா மொழிகள் பல உள்ளன. பாரசீக மன்னன் டரையசு என்பவனுக்கு சிந்தியர்கள் ஒரு தூது அனுப்பியதாக கிரேக்க வரலாற்றாசிரியர் அராடோட்டசு குறிப்பிடுகிறார். அஞ்சி ஓடாவிட்டால் இறந்துவிடுவாய் என்பதே தூதின் செய்தி. தவளை தண்ணீருக்குள் அஞ்சி மறைவதுபோலவும், எலி வளைக்குள் ஒளிவது போலவும் ஓடாவிட்டால் அம்புகளால் நீ கொல்லப்படுவாய் என்பதைச் சொல்வதற்காக, ஒருவரிடம் தவளை, எலி, அம்பு ஆகியவற்றைக் கொடுத்தனுப்பினார்கள். அது எழுத்தில்லாத காலம்.
தொல்காப்பியர் மெய்யெழுத்துகளும் எ,ஒ குறில்களும் புள்ளிபெறும் என்று வரிவடிவ எழுத்துகளைப் பற்றி நூற்பா தந்துள்ளார். சித்திரக் கோடுகள், குறியீடுகள், எழுத்துகள் என்று உலக மொழிகளின் எழுத்து வளர்ச்சியும் வரலாறும் அறியப்பட்டு வருகின்றன.
ஒரு பொருளைக் குறிக்க வரையப்பட்ட சித்திர எழுத்து உரு எழுத்து என்றும்; எண்ணத்தை வெளிப்படுத்துவது கரு எழுத்து என்றும்; ஓசையைக் காட்டுவது ஒலி எழுத்து என்றும்; உணர்வை வெளிப்படுத்துவது உணர்வெழுத்தென்றும் தமிழில் பல்வேறு எழுத்துகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
சிந்துவெளி எழுத்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்ட தொன்மையான எழுத்துகளாகும். எல்லோரும் ஏற்கத் தக்க வகையில் இதுவரை யாரும் இவற்றைப் படித்தறிய முடியவில்லை. சிந்துவெளிக்குப் பின் கிடைப்பவை குறியீடுகள். குறியீடுகளையும் படித்தறிய முடியவில்லை. ஆனால் சிந்துவெளி எழுத்துகளும் குறியீடுகளும் முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகள், கல்வெட்டுகள் நாணயங்கள் என்று மக்கள் வாழ்க்கையோடு கலந்து இடம்பெற்றுள்ளன.
சிந்துவெளி எழுத்துகள், குறியீடுகளுக்குப் பிறகு வந்தவை பிராமி எழுத்துகள். தமிழுக்கும், சமற்கிருதத்திற்கும், பிராகிருதத்திற்கும், பாலிக்கும் பொதுவாகவும் தமிழ் தவிர மற்ற மொழிகளுக்கு வர்க்க எழுத்துகளைக் கூடுதலாகவும் கொண்டு பிராமி எழுத்துகள் உள்ளன.
அப்படியென்றால் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உட்பட்ட நாடுகள் அடங்கிய நிலப்பகுதி முழுவதும் மொழிகள் வேறுவேறாக வழங்கப்பட்டு வந்திருப்பினும் பொதுவாக ஒரே எழுத்து முறை (சிற்சில கூடுதல் எழுத்துகளுடன்) இருந்து வந்துள்ளது.
அசோகன் கல்வெட்டுகளால் அறியப்பட்ட பிராமி எழுத்து, அசோகன் ஆட்சிக்கு உட்படாத தமிழ் நாட்டில் தமிழுக்கு உரியதாக இருந்திருக்கிறது. அசோகன் கல்வெட்டுகளில் குசராத்து மாநிலம் கிர்நார் 16ஆம் பாறைக் கல்வெட்டில் சேர சோழ பாண்டியர்களும் சத்தியபுத்திரராகிய அதியமான் மரபினரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் கிடைத்த எழுத்தாதாரங்கள் அசோகன் காலத்துக்கும் முற்பட்டவை என்று தொல்லியல் அறிஞர்கள் பேராசிரியர் முனைவர் கா.ராசனும் முனைவர் தூ.இராசவேலும் கருதுகின்றனர்.
'அத்திபடாவிலும்' அயோத்தியாவிலும் கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமற்கிருத கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அசோகன் கல்வெட்டுகளில் பிராகிருத மொழிக் கல்வெட்டுகள் உள்ளன. தமிழகத்தின் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் ஒரே எழுத்து (பிராமி) முறையில் (வர்க்க எழுத்துகள் தவிர) அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
புத்தமத நூலான லலித விசுத்தாரத்திலும் சமண நூலான பன்னவனசுதாவிலும் 'பிராமி' குறிப்பிடப்படுகிறது. பிராமி எழுத்தை உருவாக்கியவர் புத்தர் என்றும் சமண சமய தீர்த்தங்கரர் ரிசபதேவர் மகள் பிராதமி பெயரில் உருவாக்கப்பட்டதென்றும் பிராமி பற்றிய சமயக் கதைகள் பல உள்ளன.
அசோகன் கல்வெட்டில் இடம் பெற்றதால் பிராமி என்று அழைக்கப்படுகிறது. மொழியின் பெயரில் எழுத்து அமைக்கப்படுவதே மரபு. அசோகன் என்பதோ பிராமி என்பதோ மொழிகளின் பெயர்களாக இல்லை.
எந்த ஒரு தனிப்பட்ட மொழிக்கும் பிராமியை உடைமையாக்கிவிடக் கூடாது என்பதால் பயன்படுத்தியவர் பெயரில் அசோகன் பிராமி என்று அழைக்கப்படிருக்கலாம். அதிலும் தமிழ் மொழிக்கான பிராமியைத் தென்பிராமி என்றும் தமிழ் பிராமி என்றும் தமிழில் அழைக்கிறோம். தொல்காப்பியரும் சங்க இலக்கியப் பாடல்களும் 'தமிழியில் தாம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் பேராசிரியர் மதிவாணன் கூறுகிறார்.
இந்தியாவின் தொன்மையான வரிவடிவமாம் சிந்து வெளிக் குறியீடுகள் பூம்புகார், மயிலாடுதுறை, செம்பியம், கண்டியூர் முதுமக்கள் தாழிகளிலும், சூலூர் மண்வட்டிலிலும் இடம் பெற்றுள்ளமையைத் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். சிந்துவெளி எழுத்துகளின் காலம் குறைந்தது கி.மு1500 என்று கருதப்படுகிறது.
சிந்துவெளி எழுத்துகளுக்கும் பிராமி எழுத்துகளுக்கும் இடைப்பட்ட குறியீடுகள் இந்தியாவின் தமிழகத்தில்தான் குறிப்பாக சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள ஊர்களில்தான் அதிக அளவில் கிடைத்துள்ளன. பிராமி இந்திய மொழிகளுக்கான எழுத்துகளின் தாய் என்று ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்.
புதிய கற்காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் (விந்தியமலைப் பகுதி நீங்கலாக) திராவிட இன மொழிகளே பேசப்பட்டன என்று பேராசிரியர் பி.டிசீனிவாச ஐயங்காரும் (Stone Age in India) பேராசிரியர் டி.ஆர்.சேச ஐயங்காரும் (Dravidian India) திராவிட மொழி தென்னிந்திய மொழி மட்டுமன்று, காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழி என்று அறிஞர் அம்பேத்காரும் (The unTouchables) கூறியுள்ளார்.
தமிழ் பிராமி எழுத்துகளோடு கிடைத்துள்ள குறியீடுகளை அதற்கும் முற்பட்ட சிந்துவெளி எழுத்துகளோடு இணைத்துக் கொள்ளத் தேவைப்படும் இணைப்புக் கண்ணிகள் கிடைக்குமாயின் தமிழின் தலையெழுத்து தீர்மானமாகிவிடும்.

சகோதரர்களே ...
நாம் என்ன
சீட்டெடுக்கும் கிளிகளா?
நெல்மணிகளை மட்டும்
வலுக்கட்டாயமாக - நம்
வாயில் திணிக்கிறார்கள் ...
நாம் என்ன
ரப்பர் மரங்களா?
நம்முடலில் எத்தனைமுறை
வாக்குப் பாலெடுக்கக்
கீறிக் கொண்டிருப்பார்கள் ...
நாம் என்ன
போதி மரமா?
தேர்தல் காலத்தில் மட்டும்
நம்முன் அமர்ந்து
ஞான தவமிருக்கிறார்கள்
நமது வீட்டுச் சுவர்களில்
தங்கள் வரலாற்றை
எழுதிச் சொல்பவர்
நம் உரிமை வாழ்வைப்
பின்தள்ளிச் செல்கிறார்கள்
நமது வாக்குகளால்
நாடாளுமன்றம் சென்றவர்கள்
நமது வீடு உடைபடுகையில்
நீலிக் கண்ணீர் வடிக்கவும்
முன் வராமல்
அரசு சட்டத்தின் பின்
ஒளிந்து கொண்டார்கள் ...
நாம்
அவர்கள் கையில்
கொடுத்ததோ அமுதசுரபி
அவர்கள்
நம் கையில் திணிப்பதோ
பிச்சைப் பாத்திரம் ...
நாம்
உரிமை போர் வாளை
அவர்களுக்கு கொடுத்தோம்
அவர்கள்
பட்டாக் கத்தியை
நம் தோழமைக்குப் பரிசளிக்கிறார்கள் ...
நமக்காக
இயற்றப்பட்ட நீதிச் சட்டங்கள்
நமது கழுத்துகளுக்குத்
தூக்குக் கயிறை கொண்டு வரும்
மாயாசாலம் யார் அறிவார்?
விரும்பும் மரக்கிளைகளில்
கூடு கட்டும் குருவிகள் ...!
ஒரு வீடு கட்டும்
அடிப்படை உரிமை
மண்ணின் மைந்தர்களுக்கு இல்லையா?
நம்மைப் பாதுகாக்க எழுந்த
நீதிச் சட்டங்கள் - இன்று
நமது கண்களில்
மிளகாய் பொடி தூவுகின்றனவே!
சமூகக் காவலர்களே
சன்மார்க்க
அரசியல் சேவையாளர்களே
எங்கள் ஓட்டுகளால்
நீங்கள் எசமானர்கள் ...
வாக்காளர்கள் இன்று
உங்கள்
வாய்பேசா செம்மறிகளா!
(ஏ.எஸ்.பிரான்சிஸ், சுவீடன்)
khileefrancis@yahoo.com

"குழலினிது யாழினிது என்பர் மழலைச் சொல் கேளாதவர்" என்பது மழலைகளுக்குறியச் சிறப்பு. மழலை மொழிக்கு எவ்வளவு இனிமை உளதோ, அதேப்போன்று அமுத மொழியாம் தமிழ் மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உளது. தோண்டத் தோண்ட அமுத சுரபியாய், ஊற்றெடுக்கும் மணற்கேணியாய் விளங்கும் இனிய தமிழில் மழலைகளுக்கு பெயர் சூட்டினால் அது தமிழுக்கு நாம் ஆற்றும் மிகப் பெரிய சிறப்பு அல்லவோ.. தமிழர்களாய்ப் பிறந்த நாம் இன்று இனிய தமிழில் பெயர் வைப்பதைத் தவிர்த்து வருவது மிகவும் வருந்தத்தக்கச் செயலாகும்.
இனி வரும் காலங்களில், உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டித்தான் பாருங்களேன். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்ற மாட்டார்களா என்ன? தமிழில் பெயரிடுவதை ஒரு புரட்சியாகச் செய்வோமே..
உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு இனிய தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா? கீழ்கண்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்து தமிழ்ப் பெயர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
"குழந்தைகளின் செல்லப் பெயர்கள்"
தாய்த் தமிழைத் தூய்மை செய்வோம்
-கம்பார் கனிமொழி குப்புசாமி-
வடமொழி - தமிழ்
அதம்செய்தது யானை - அழிவுசெய்தது யானை
அதர்மம் செய்யற்க! - தீமை செய்யற்க!
அதிசயமாய் இருக்கிறது - வியப்பாய் இருக்கிறது
அதிபதியானான் - பெருந்தலைவனானான்
அதிபர் வந்தார் - தலைவர் வந்தார்
அதிர்ஷ்டமாகக் கிடைத்தது - நல்வாய்ப்பாகக் கிடைத்தது
அதிரசம் வேண்டுமா? - பண்ணியாரம் வேண்டுமா?
அதிருப்தி தந்தது - மனக்குறை தந்தது
அதோகதி அடைந்தான் - கீழ்நிலை அடைந்தான்
அந்தரங்கமாகப் பேசினான் - சமுக்கமாகப் பேசினான்
அந்தமில்லாதது அறிவு - முடிவில்லாதது அறிவு
அந்தஸ்தைப் பார்ப்பதில்லை - தரத்தை பார்ப்பதில்லை
அந்தாதிப் பாடல்கள் - கடைமுதல் பாடல்கள்
அந்திமக் காலம்வரையில் - இறுதிக் காலம்வரை
அந்நியனாக எண்ணாதே - வேற்றாளாக எண்ணாதே
அநாதையாய்த் திரிகிறான் - எதிலியாய்த் திரிகிறான்
அநாமதேய அறிக்கை - பெயரற்ற அறிக்கை
அநியாயமாகப் பேசாதே! - நேர்மையின்றிப் பேசாதே!
அநீதி இழைக்காதே! - தீங்கு இழைக்காதே!
அப்பாவி மக்கள் - குற்றமற்ற மக்கள்
அப்பாவி அவன் - வெள்ளைமனத்தான் அவன்
அப்பியாசம் செய்தான் - பயிற்சி செய்தான்
அப்பிராயம் உண்டு - எண்ணம் உண்டு
அப்பிராயம் கூறினான் - கருத்துக் கூறினான்
அப்பிராணி இவன் - அறியாதவன் இவன்
அபகரிக்காதே பொருளை - பறிக்காதே, பொருளை
அபச்சாரமான செயல் - மதிப்பற்ற செயலது
அபத்தமாய்ப் பேசாதே - பொய்மொழி பேசாதே
அபயம் அளித்தான் - தஞ்சமளித்தான்
அபராதம் கட்டினான் - தண்டம் கட்டினான்
அபரிமித விளைச்சல் - அளவில்லா விளைச்சல்
அபலைப் பெண்ணவள் - பேதைப் பெண்ணவள்
அபாயத்திற்குரிய இடம் - பேரிடர்க்குரிய இடம்
அபாயம் வரலாம் - கேடு வரலாம்
அபாயத்திற்கு வழியாகும் - ஏதத்திற்கு வழியாகும்
அபாயம் வருமா? - இடர் வருமா?
அபார வெற்றி - பெரு (நிலை) வெற்றி
அபாரமான விளையாட்டு - மிகச்சிறப்பான விளையாட்டு
அபிநயத்தோடு ஆடினாள் - நளிநயத்தோடு ஆடினாள்
அபிப்பிராயம் என்ன? - கருத்து என்ன?
அபிப்பிராயப்பட்டான் - விருப்பப்பட்டான்
அபிப்பிராயம் கேட்டாயா? - கருத்துக் கேட்டாயா?
அபிமானமுண்டு உன்னிடம் - மதிப்புண்டு உன்னிடம்
அபிமானம் உண்டு - நன்மதிப்புண்டு
அபிமானியானவன் - பற்றாளனானவன்
அபிவிருத்தி கண்டது - வளர்ச்சி கண்டது
ஞாயிறு நண்பன் (04.05.2008)
தொடரும்...
மறைமலையடிகளைப் பற்றிய சிறு குறிப்புகள்..
மறைமலையடிகள் (1875-1950)
" சோழ நாட்டிலே நாகப்பட்டினத்துக்கு அருகிலே காடம்பாடி என்னும் ஊரிலே தோன்றிக் கல்வியொழுக்கங்களில் தலைசிறந்து, சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியராய்த் திகழ்ந்து, துறவு நிலையுற்று, பல்லாவரத்தில் பொதுநிலைக் கழகத் தலைவராய் வீற்றிருந்த சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் தமிழ்நாடு செய்த பெருந்தவவுருவினர்.
இவர் 'மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்' 'திருக்குரளாராய்ச்சி' முதலிய நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
"முகிழ்ந்து மணங்கமழ்ந்து அழகாய் மலரும் பருவத்தே ஓர் அரிய செங்கழுநீர்ப்பூ அதனருமையறியான் ஒருவனாற்கிள்ளியெறியப் பட்டு அழிந்தாற் போலவும், மறைநிலாக் காலத்தே திணிந்து பரந்த இருளின்கட் செல்லும் நெறி இதுவெனக் காட்டுதற்கு ஏற்றி வைத்த பேரொளி விளக்கு சடுதியில் வீசிய சூறைக் காற்றினால் அவிந்து மறைந்தாற் போலவும், நீண்டநாள் வறுமையால் வருந்திய ஒருவன் புதையலாய்க் கண்டெடுத்த பொன் நிறைந்த குடம் ஒன்று வன்நெஞ்சக் கள்வனொருவனாற் கவர்ந்து கொள்ளப்பட்டாற் போலவும் இத்தமிழ் நாட்டுக்கு ஒரு கல்வி மலராய் ஓர் அறிவு விளக்காய் ஓர் அருங்குணப் புதையலாய்த் தோன்றிய இவ்விளைஞர் தமது 43ஆம் ஆண்டில் கதுமெனக் கூற்றுவனாற் கவரப்பட்டது ஒரு பெருங்கொடுமையன்றோ?"
தமிழ் மொழி தனித்தியங்கும் வல்லமையற்றது. அது வடமொழி இலக்கியங்களையும் இலக்கணங்களையும் கடன்பெற்றுத்தான் இயங்குகிறது. தமிழர்களுக்கு அறிவில்லை. அப்படி அறிவுப்பெற்றிருக்கின்றார்கள் என்றால் அவர்கள் ஆரியவழிப்பட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்துகள் பரவி இருந்த காலம். தமிழ்ப்புலவர்களே தமிழைத் தாழ்த்தி வடமொழியை உயர்த்திக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், தமிழ் உணர்வுமிக்க அறிஞபெருமக்கள் துடித்தெழுந்து தமிழின் பெருமையை எடுத்துக்காட்டிப் போராடினர். ஆனாலும், பிறமொழி கலவாத உரைநடை வழக்கை, பேச்சு வழக்கை செயற்படுத்திக் காட்டா நிலையே அன்று இருந்து வந்தது.
இந்த நிலையில் ஒரு மாற்றம், பெருமாற்றம் உருவானது. தித்தமிழ் இயக்கம் தோற்றம் பெற்றது. இது எப்படி நடந்தது என்பது குறித்து 1937இல் வெளிவந்த வடச்சொற்றமிழ் அகரவரிசை என்னும் தம் நூலிலே, மறைமலையடிகள் அவர்களின் மகளார் மதிப்புமிகு நீலாம்பிகையம்மையார் எடுத்துரைத்துள்ளார்.
"யான் பதின்மூன்றாண்டுச் சிறுமியாய் இருந்தபோது, 1916 ஆம் ஆண்டில் ஒருநாட் சாயுங்காலம் என் தந்தையாருடன் தோட்டத்தில் உலாவிக் கொண்டுவருகையில், தந்தையார் இராமலிங்க அடிகளார் அருளிச் செய்த திருவருட்பாவிலுள்ள, "பெற்ற தாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப்பெறுந் தாய்மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்..."
என்னும் பாட்டைப் பாடினார்கள். அப்பாட்டின் இரண்டாம் அடியாகிய உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் என்பதனைச் சொன்னபோது, என் தந்தையாரவர்கள் என்னை நோக்கி, "அம்மா! இப்போது நான் பாடிய பாட்டைத் தூயதமிழில் இராமலிங்க அடிகள் எவ்வளவு அழகாகப் பாடியிருக்கிறார்கள்! ஆனால், அப்பாட்டின் இரண்டாமடியிலுள்ள 'தேகம்' என்னும் வடச்சொல்லை நீக்கி, 'யாக்கை' என்னும் தனித்தமிழ்ச் சொல்லை அவர்கள் அங்கே அமைத்துப் பாடி இருந்தால் இன்னும் எவ்வளவோ நன்றாயிருக்கும்.
தமிழில் பிறமொழிச்சொற்களைச் சேர்ப்பதால், தமிழ் தன் இனிமையை இழந்துபோவதோடு, பல தமிழ்ச் சொற்களும் வழக்கில் இல்லாமல் இறந்து போகின்றன" என்றார்கள். இது கேட்ட அன்று முதல் தனித்தமிழிலேயே பேசவும் எழுதவும் தந்தையாரும் யானும் உறுதிகொண்டோம்." தனித்தமிழ் இயக்கம் தொடங்கிய வரலாறு இது.
சுவாமி வேதாசலம் என்னும் தம் வடமொழிப்பெயரை மறைமலையடிகளார் என்று தூயத்தமிழ்ப்பெயராக மாற்றஞ்செய்துகொண்டார்.. 'சமரச சன்மார்க்கம்' என்னும் தம் இல்லத்தின் பெயரை 'பொதுநிலைக் கழகம்' என்றும், தாம் நடத்திவந்த 'ஞானசாகரம்' திங்களிதழை 'அறிவுக்கடல்' என்றும் மாற்றிக்கொண்டதோடு தாம் முன்னம் எழுதி வெளியிட்டிருந்த நூல்களில் அமைந்திருந்த பிறமொழிச்சொற்களைப் புதிய பதிப்புகளில் தமிழாக்கி வெளியிட்டார். தம் உரையாடலில், மேடைப்பேச்சில், எழுத்தில் இலக்கிய மணங்கமழும் இலக்கணப் பிழையற்ற தூயத்தமிழ் நடையையே கடைப்பிடித்தார். தமிழ், வடமொழி, ஆங்கிலம் என மும்மொழியில் புலமைபெற்றிருந்த அடிகளார், அம்மொழி இலக்கியங்களையும் ஆராய்ந்து தமிழின் தனித்தன்மையை உலகிற்கு உணர்த்தினார். சமய நெறிகளை அறிவுநிலையில் ஆராய்ந்து வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்தார்.
தமிழ்த் தழைத்தோங்கி நிற்பதற்கு, அப்பெருமகனார் ஆற்றிய தொண்டு, அளப்பரியது. தமிழோடு இணைந்துவாழும் பெருவாழ்வே அவர் வாழ்வு. அவர் கண்ட தனித்தமிழ் இயக்கத்தைப் போற்றி, அவரைப் பின்பற்றியவர் எண்ணிலடங்கார்.
-கம்பார் கனிமொழி-
தகவல் : ஞாயிறு நண்பன் (4.5.2008)

சென்னை : தமிழ் பிராமி லிபிகள் பொறிக்கப்பட்ட ஓர் உடைந்த சாடியொன்று அண்மையில் எகிப்தில் கசீர் அல் கடீம் எனும் செங்கடலின் கரையோரம் அமைந்துள்ள பழங்கால ரோமானியர்களின் வசிப்பிடத்தில், அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு வழி இவ்வெழுத்துகள் கி.மு முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தவையாக இருக்கும் எனவும் இது ஒரு மகிழ்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு எனவும் வேதியியலாளர்கள் கூறுகிறார்கள்.
இத்தமிழ் பிராமி லிபிகள் சாடியின் இருபுறத்தில் இருமுறை பொறிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன. பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் 'பானை ஒரி' (பானையை தொங்கவிடுவதற்காக கயிற்றால் நெய்யப்பட்ட வலை)எனும் அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றன. பிரிட்டனில் உள்ள 'சவுத்தாம்தன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த தொல்பொருளாராய்ச்சிக் குழுவில் அடங்கிய பேராசிரியர் டீ.பீகோக்கு மற்றும் முனைவர் எல்.புளூ ஆகியோர், அண்மையில் எகிப்திலுள்ள கசீர் அல் கடீம் எனும் பழமைவாய்ந்த இடத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்பொழுது, பழங்கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட உடைந்த சாடியைக் கண்டெடுத்துள்ளனர்.
இலண்டனில் அமைந்துள்ள பிரிட்டிசு அருங்காட்சியகத்தில் பழங்கால பானை,கலன்கள் குறித்த ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த முனைவர் ரோபேர்த்தா தோம்பேரு, கண்டெடுக்கப்பட்ட இவ்வுடைந்த சாடி இந்தியாவில் தயாரிக்கப்பட்டதென்றும், இச்சாடி கொல்கலன் வகையைச் சார்ந்தது எனவும் அடையாளம் கண்டுபிடித்துள்ளார்.
தொல்லியல் நிபுணரான ஐராவதம் மகாதேவன், கண்டெடுக்கப்பட்ட சாடியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் கி.மு ஒன்றாம் நூற்றாண்டின் தமிழ் பிராமி லிபி வகையை சார்ந்தவை என அறுதியிட்டுக் கூறுகிறார். இக்கூற்றிற்கான ஆதாரங்களை திரட்டுவதில் அவர், பாண்டிச்சேரியில் அமைந்துள்ள பிரென்சு கல்வி கழகத்தில் பணியாற்றும் மொழியியல் நிபுணரான பேராசிரியர் சுப்பராயுலு, புதுச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் கே.இராசன், மற்றும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வீ.செல்வகுமார் போன்றோரின் நிபுணத்துவங்களை உதவியாகப் பெற்றுள்ளார்.
அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள சாடியில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் 'பானை ஒரி' என ஒலிப்பதாகவும், 'ஒரி' எனும் சொல் தமிழில் 'உரி' (கயிற்றில் நெய்யப்பட்ட வலை) என அழைக்கப்படுவதாகவும், அது மருவி 'ஒரி' என பர்சி எனும் மத்திய திராவிட மொழியில் இன்று வழக்கில் இருப்பதாகவும் திரு.மகாதேவன் தெரிவித்தார். தற்காலத்தில் கன்னட மொழியில் 'ஒட்டி' என புழங்கிவரும் சொல் 'ஒர்ரி' எனும் சொல்லின் மருவலாக இருக்கக் கூடும் என அவர் தெரிவித்தார்.
கசீர் அல் கடீமில் கண்டெடுக்கப்பட்ட சாடியில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ் பிராமி எழுத்துக்களை 'ஒர்ரி' எனவும் வாசிக்கலாம், ஆனால் பெரும்பாலும் தமிழ் பிராமி லிபியை பொறுத்தமட்டில் ஒரே விதமான ஒலிகளை இரட்டிப்புப் செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேப் போன்ற அகழ்வாராய்ச்சியொன்று கசீர் அல் கடீமில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பெற்று, தமிழ் பிராமி லிபிகள் பொறிக்கப்பட்ட கி.பி முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த இரண்டு சாடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதேப் போன்ற தமிழ் பிராமி லிபிகள் பொறிக்கப்பட்ட சாடிகள் 1995ஆம் ஆண்டில் எகிப்தின் செங்கடல் கரையோரம் அமைந்துள்ள பெரேனிக்கே எனும் பழங்கால ரோமானியர்களின் குடியிருப்புப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திரு.மகாதேவன் கூறினார்.
மேற்கத்திய இலக்கியங்களிலும், தமிழ் சங்க கால இலக்கியங்களிலும் குறிப்பிட்டுள்ளதுபோல ரோமானியர்களுக்கும் தமிழர்களுக்கும் செங்கடல் வழி வணிகத் தொடர்பானது நூற்றாண்டின் ஆரம்பக் காலக்கட்டத்திலேயே கொடிக்கட்டி பறந்ததை இத்தகு கண்டுபிடிப்புகள் ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளன.
'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்று சும்மாகவா கூறினார்கள் நம் முன்னோர்கள்.. வெறும் வெற்றிலையை வாயில் போட்டு மென்று, திண்ணையில் வேலை வெட்டி இல்லாமல் அமர்ந்துக் கொண்டு கூறிய பழமொழியல்ல இது. அனுபவப்பூர்வமாகவே சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
வாழ்க தமிழர்.. வளர்க அவர்தம் மாண்பு..!
* தமிழ்ப் பிராமி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப்பயன்பட்ட எழுத்து முறைமை. இது தமிழி எனவும் அழைக்கப்படுகிறது. இது அசோகனின் பிராமி எழுத்து முறையில் இருந்து உருவானது. தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில் தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடியில் எழுதுவதற்கேற்ப அவை வட்டெழுத்துக்களாக பின்னர் உருமாறின
தகவல் : தமிழ் வீக்கிப்பீடியா
கதவைத் தட்டினேன், சிறிது நேரம் கழித்து ஒரு சிவத்த மனிதர் கதவைத் திறந்தார்.
"வணக்கம் சார்!"..
பதிலுக்கு அவரும்,
"வணக்கம், என்ன வேண்டும்..?"
"சார், கவிதை புத்தகம் விக்கிறதா கேள்விப்பட்டேன்... அதான் வாங்க வந்தேன்.."
முகத்தில் புன்னகையுடன்
"ஓ, நண்பன்லே பாத்தீங்களா.."
நானும் தலையாட்டினேன்.
"இருங்க கொண்டு வரேன்.. உள்ள வரீங்கலா..?"
'பரவால சார், நான் இங்கையே நிக்கிறேன், நீங்க கொண்டு வாங்க.."
சற்று நேரம் கழித்து சாசனம் என் கையில் வந்தது. ஆம், அதுதான் கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் இயற்றிய கவிதை தொகுப்பு நூல். குறிப்பாக இந்நூலை நான் வாங்கியதற்குக் காரணம், அந்நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கவிதைகளும் மலேசிய இந்தியர்கள் தற்காலத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போராட்டத்தை உணர்ச்சிப்பூர்வமாக சித்தரிப்பதாக இருக்கின்றன.
சாசனத்தை கையில் பெற்றுக் கொண்டப் பிறகு கவிஞர் ஏ.எஸ் பிரான்சிஸ் அவர்கள் 'மக்கள் சக்தி' எனும் இன்னொரு புத்தகத்தையும் அறிமுகப்படுத்தினார். இரு புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன்.
"இந்த ரெண்டு புத்தகங்களையும் என் அன்பளிப்பா வெச்சிகுங்க.."
என்று 'கரை கடந்த கனவு' மற்றும் 'ஊசிப்போன உறவுகள்' எனும் இரு கவிதை நூல்களை அன்போடு கொடுத்தார். மகிழ்ச்சியில் பெற்றுக் கொண்டேன்.
வீட்டிற்குச் சென்றதும் புத்தகத்தை திறந்தேன்.. முகவுரை தென்பட்டது..
அதில் சாசனத்திற்கு கவிஞர் இப்படி இலக்கணம் கற்பிக்கிறார்...
" தூக்கு மேடைக்கு தந்திரமாக, செல்லமாக அழைத்துச் செல்லப்படுகிறது ஓரினம், மூக்கணாங்கயிறு மாட்டப்பட்ட காளையாக சமூகம், தனது சக்தியை, வல்லமையை அறியாது சாதுவானப் பசுவாகத் தலையாட்டி நிற்கிறது, "நல்ல உழைப்புப் பால் தரும் சமூகம்" எனச் சிரித்துக் கொண்டே தட்டிக் கொடுக்கிறார்கள் அரசியல் தலைவர்கள்.
செல்வ நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் சரிசமமாகத் தரப்படும்; நாட்டின் வளம் குடிமக்கள் அனைவருக்கும் நியாயமான வரமாகும் என்ற வாக்குறுதிகள் தன் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கின்றன.
மன்னராட்சி மணிமகுடம், மலையேறிவிட்ட பின்பு, மக்களாட்சி சிம்மாசனத்தில் அமர்ந்து மணிமகுடம் சூடியது. மக்களாட்சி அரசியல் மக்களை மந்தைகளாக ஓட்டி நடத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறது. சிந்திப்பவர்களை, சிறந்த கருத்து உரைப்பவர்களைத் தனிமைச் சிறைகளில் வாழ குடியுரிமை தருகிறது.
இன்றைய நாட்டு அரசியல், குடிமக்களின் நியாயமான உரிமைகளுக்கு விலங்கிட்டு அவர்களது சுதந்திரச் சிந்தனையைத் தேயிலை இலையெனக் கிள்ளி சுடு சாதனங்களில் உலர வைக்கிறது.
ஏழைகள் பரம ஏழைகளாக இழிபடவும், பணக்காரர்கள் கொழுத்த பணக்காரர்களாக எடுபடவும் இங்கே சட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. பணக்காரர்களின் சட்டைப் பையில் அமைதியாக உறக்கம் கொண்டுள்ளது சமூக நீதி.
பணமுதலை முதலாளிகளுக்கு கைககட்டி சேவகம் செய்ய, முன்வந்து பணிந்து நிற்கிறது அரசியல் சட்டங்கள்.
நாட்டில் அமைதி தவழ்கிறது; இணக்கம் வளர்கிறது; பசிக்கு சோறு இருக்கிறது; பொருளாதாரம் பீடுநடை போடுகிறது. இருந்தென்ன? மக்களின் சமதர்மப் போராட்டத் தலைகள் கொய்யாப்பழங்களாக கொய்யப்படுகின்றன.
போராட்டம்தான் மனித உரிமையை காக்கும். மனித மாண்பை மதிக்கும், சமதர்ம அரசு கோலோச்ச, எதிர்ப்பின் உச்சம்தான் போராட்டம். இது ஒதுக்கப்பாட்ட உலகம் அறிந்த ஒரே மொழி. சரித்திரம் சொல்லும் சன்மார்க்க மொழி.
போராட்ட சமூகத்தில்தான் மாற்றம்மறுமலர்ச்சி தழைத்தோங்கும். மனித சாசனம் மதிக்கப்பட, இனங்களின் உரிமைகள் காக்கப்பட தனி மனித உள்ளத்தில் எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருக்க வேண்டும் போராட்டம்..."
என்றும் அன்புடன்,
ஏ.எசஸ்.பிரான்சிஸ்
சாசனம்
செத்துக் கொண்டிருக்கும்
சமூக ஓலம்!
காயடிக்கப்பட்ட சமூகத்தின்
இறுதிக் காலம்!!
நசுக்கப்பட்ட நீதியின்
தூக்குக் கோலம்!!!
'சாசனம்', 'மக்கள் சக்தி' கவிதைகளோடு உறவாட நினைக்கும் வாசகர்கள், கீழ்கண்ட முகவரியில் கவிஞர் ஏ.எஸ்.பிரான்சிஸ் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
ஏ.எஸ்.பிரான்சிஸ்,
கவிஞர் & எழுத்தாளர்,
60b, Punchak Bukit Mutiara Satu,
Pearl Hill Villa
11200, Tanjung Bunga, Penang
H/P : 016-4892496 / 04-8900293
E-mail : khileefrancis@yahoo.com
போராட்டம் தொடரும்...
பல எழுத்தாளர்கள் புனைந்துள்ள 'சரித்திர கதைகள்' எனும் மென்நூல் உங்கள் பதிவிறக்கத்திற்காக.. பதிவிறக்கம் செய்திட கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டுங்கள் : சரித்திர கதைகள்
சரித்திர கதைகளைப் படிப்பதன்வழி வாசகர்கள் தங்களுடைய கற்பனா சக்தியையும் மொழி வளத்தையும் பெருக்கிக் கொள்ள வழிவகுக்கும். படித்து இன்புறுங்கள்...
மதியாரும் மாமனாரும்
வருங்கால மாமனார் என அப்போது எனக்குத் தெரியாததால், மதியார் வாசலை மிதியாதே என்பதுபோல் அவர் வீட்டுக்குப் போகாமல் பங்சார் ரோட்டை நோக்கி நடந்தேன். வெள்ளைக் கைக்குட்டையை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டேன் சரண்டரின் சின்னமாக.
பங்சாரில் நடு ரோட்டில் சில மோட்டார் சைக்கிள்களும் காடிகளும் எரிக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருந்தன! போலீஸ் காடிகளின் ஓட்டமும் நின்று போய் இருந்தது. ஆன் சென் ரோட்டுப் பக்கமிருந்தும் ஆஜி டோலா கம்பத்துப் பகுதியிலிருந்தும் எதோ ஆரவாரமான சப்தங்களும் கூக்குரல்களும், இனங்காண முடியாத அலறல் சப்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன.
இனிமேலும் சாலையில் நடப்பது சரியில்லை என முடிவுக்கு வந்த நான், சாலை ஓரமாக இருந்த இரயில்வே தொழிலாளர் குடியிருப்புகள் ஏதேனும் ஒன்றில் இரவைக் கழிக்கலாம் என்று எண்ணினேன். அப்போதுதான் ராதாமணியின் வீடு அங்கு இருப்பது நினைவுக்கு வந்தது.
அப்போது தமிழர் திருநாள் நாடகங்களில் எங்களுடன் நடித்துவந்தவர் ராதாமணி. பிற்காலத்தில் இவர் புகழ்பெற்ற வானொலி நடிகையானார். பிரபல எழுத்தாளர் பெரி நில பழனிவேலனை மணந்து கொண்டு சிங்கப்பூருக்குச் சென்றார். தமிழை மிக அழகாகப் பேசும் நம் நாட்டு நடிகையரில் முக்கியமானவர்.
இரயில்வே குவார்ட்டர்சில் இருந்த இவர்களது வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினேன் தட்டினேன். திறக்கப்படவில்லை. வீட்டில் யாரும் இல்லையா? அல்லது பயந்துக்கொண்டு திறக்கப்படவில்லையா என்பது தெரியவில்லை.
வேறுவழியில்லை! எப்படியோ நடந்துதான் சென்றாகவேண்டும். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, சாலையைக் கடந்து லீவர் பிரதர்ஸ் பக்கம் வந்து பந்தாய் பகுதியை நோக்கி வேக நடைப்போட்டேன். திடீரென ஒரு கும்பல் கம்பத்துப் பக்கமிருந்து ஓடி வந்து கத்திக் கொண்டே யாரையோ விரட்டிக் கொண்டு பந்தாய் டாலாம் திசையை நோக்கி ஓடியது! இனியும் நடந்து செல்வது பெரும் ஆபத்து! அருகே இருந்தது பூங்கா ராயா ரெஸ்டாரண்டுக்கு ஓடிச் சென்று கதவைப் பலமாகத் தட்டினேன். மீண்டும் மீண்டும் தட்டிய பிறகு இலேசாகக் கதவைத் திறந்து மூக்கைமட்டும் வெளியே நீட்டிக் கொண்டு பார்த்தது ஓர் உருவம்.
விஷயத்தை விளக்கி, இன்று இரவு மட்டும் தங்க இடம் தரும்படி கெஞ்சினேன். மலையாளமும் தமிழும் கலந்து "அடபயம் வாணாம். இப்படியே சி.இ.பி. குள்ளே பூந்து போ நம்ம ஆள்களை ஒண்ணும் செய்யாது!? என்று கூறிவிட்டுக் கதவைப் பட்டென மூடிக்கொண்டார் அந்த மனிதர்.
இதுபோன்ற சந்தர்ப்பத்தில், நகர் முழுமைக்கும் மின்சாரம் விநியோகிக்கும் சி.இ.பி. பவர் ஸ்டேஷனுக்குள் நுழைந்தால் என்ன ஆகும்! நகர மின்சார விநியோகத்தைக் கீழறுப்புச் செய்ய எவனோ புகுந்து விட்டான் என என்னைப் போட்டுத் தள்ளிவிட மாட்டார்களா? புத்திசாலித்தனமாக சி.இ.பி பவர் ஸ்டேஷனுக்கு நுழையவில்லை நான்.
அடுத்த கட்டடத்தின் நுழைவாசலில் கம்பி கேட் இல்லை. உள்ளே சென்றேன். கும்மிருட்டு! கரப்பான் பூச்சி நாற்றம். உலகிலேயே எனக்கு இரண்டே இரண்டிற்குத்தான் அதிகப் பயம்! ஒன்று, நம்பவைத்துக் கழுத்தறுக்கும் நாசக்காரர்கள், மற்றொன்று கரப்பான் பூச்சி! வேறு என்ன செய்வது.
'நாயர் பிடிச்ச புலிவாலு!' என்பதுபோல், திரும்பி பிரிக்பீல்ட்ஸை நோக்கிப் போவதும் முடியாது தொடர்ந்து கம்போங் குறிஞ்சியை நோக்கிச் செல்லவும் முடியாது! கலவரத்தில் சிக்குவதைவிட, கரப்பான் பூச்சிகளிடையே உட்கார்ந்திருப்பது உசிதம் எனப்பட்டது.
கட்டடத்திற்குள் நுழைந்தேன். மாடிப்படிகளுக்குக் கீழே படுத்துக்கொள்ளத் தக்க இடம் இருந்தது. விடியும் வரை அங்கேயே ஒளிந்திருக்கலாம் காலையில் பயணத்தைத் துவங்கலாம் என முடிவு செய்தேன்.
நேரம் செல்லச் செல்ல அச்சம் அதிகரித்தது. சாலையில் யார்யாரோ இங்கும் அங்கும் ஓடுவதும் யாரோ யாரையோ விரட்டிச் செல்வதுமாக அப்போதைக்கப்போது சப்தம். 'நிமிடம் வருடமாக நகர்ந்தது' எனக் கதைகளில் படிக்கிறோம். அதை அப்போதுதான் உணர்ந்தேன். வெளியே கலகக்காரர்கள் நடமாட்டம். உள்ளே கரப்பான் பூச்சிகளின் தாக்குதல். கட்டடத்திற்கு வெளியே வாசல் ஓரமாக நாலைந்து பேரின் நடமாட்ட அரவம். ஏதோ தகரடின்களை திறப்பது போன்ற சப்தம், வந்து எட்டிப்பார்க்கும் தைரியம் எனக்கில்லை.
கட்டடத்தைப் பற்றவைத்துவிடுவார்களோ! இந்த இடமும் பாதுகாப்பு இல்லை என்பது உறுதி. இங்கிருந்து வெளியாகிவிட வேண்டும். காத்திருந்தேன். கட்டடத்தின் ஓரமாகக் கேட்ட சப்தம் நின்றதும் மெதுவாக வந்து எட்டிப் பார்த்தேன்.
ஒருவரும் இல்லை. வெளியே வந்து திகைத்து நின்றேன். என்ன செய்வது? எங்கே செல்வது? ஒன்றும் புரியவில்லை. இந்தக் கோலாலம்பூரில் நடுவீதியில் நிற்கும் நிலை எனக்கு ஏற்படும் என எண்ணிக்கூடப் பார்த்தது இல்லை நான்!
"குடை நிழல் ஏறிக் குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்தோர் நாள் நண்ணினும் நண்ணுவர்! எனத் தெரியாமலா சொன்னார்கள்!
கலவரத்தைத் தூண்டிவிட்டவர்கள் எல்லாம் சொகுசாக பாதுகாப்பாக வீட்டுக்குள் குடும்பத்துடன் குதூகலமாக இருக்கிறார்கள்! அப்பாவிகளான நாம் அல்லல்பட்டு நடுவீதியில் நிற்கிறோம். கட்டத்திற்கு வெளியே கிடந்த தகர டின்னும் எண்ணெய் நாற்றமும் தீமூட்டும் முயற்சி நடந்திருக்கிறது என்பதைக் காட்டியது. தீவைப்பு முயற்சியை மேற்கொண்டவர்கள் போலீஸ் காடியின் சப்தம் கேட்டு ஓடி ஒளிந்திருக்கலாம் அல்லது அது காங்கிரீட் கட்டடமானதால் தீவைக்கும் முயற்சி பலிக்காமல் போயிருக்கலாம். கட்டடத்தின் முதல் மாடி ஜன்னல் திறக்கப்பட்டு விளக்கு எரிந்தது. ஆள் நடமாட்டம் தெரிந்தது. உதவி கேட்டு பலமாகக் குரல் கொடுத்தேன். மேலே இருந்து ஓர் உருவம் தலையை நீட்டி என்னை உற்றுபார்த்து விட்டு " சார் நீங்களா? இங்கே என்ன செய்கிறீர்கள்? " எனக் குரல் கொடுத்தது.
எனக்கு அது யார் என்று உடனடியாகத் தெரியாவிட்டாலும் யாரோ அறிமுகமானவர்கள் என அறிந்ததும் போன உயிர் திரும்பி வந்தது.
" ஆமா... ஆமா... இராத்திரிதர்களும்... அதுதான் என்று கத்தினேன்.
கதவைத் திறந்து கொண்டு வந்து அன்று என்னைக் காப்பாற்றியது ரமணி.
தமிழர் கதை தொடரும்...
-பாவலர் சங்கு சண்முகம்
Blogger templates made by
AllBlogTools.com
Back to TOP