Showing posts with label புவா பாலா. Show all posts
Showing posts with label புவா பாலா. Show all posts

புவா பாலா ஓவியக் கண்காட்சி

>> Monday, December 21, 2009



முத்தியாரா ஓவியக் கண்காட்சியகத்தின் ஏற்பாட்டில் நேற்றுபுவா பாலா நினைவலைகள்எனும் கருப்பொருளை தாங்கிய ஓவியக் கண்காட்சி தொடங்கியது. 20-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதிவரை நடைப்பெறவுள்ள இக்கண்காட்சியைக் காண பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர். பினாங்கு இந்தியர்களின் பாரம்பரிய கிராமமான புவா பாலாவை கடந்த செப்தெம்பர் மாதமன்று மாநில அரசாங்கம் மற்றும் மேம்பாட்டாளர்கள் இணைந்து தரைமட்டமாக்கி அங்குள்ள மக்களை விரட்டியடித்தனர். இதன்வழி அங்கு பணக்காரர்கள் மட்டுமே வசிக்கக்கூடிய ஆடம்பர அடுக்குமாடி கட்டிட பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருகின்றன.

200 ஆண்டுகளாய் பிரவுன் தோட்டத்தில் வியர்வையையும் உதிரத்தையும் உதிர்த்து வாழ்ந்த இந்திய மக்களுக்காக கொடுக்கப்பட்ட 6.2 ஏக்கர் நிலமும் அங்கு படர்ந்திருந்த பசுமையும், இயற்கையாய் தேங்கியிருந்த நிலத்தடி நீரும் முற்றிலும் அழிக்கப்பட்டதன் வழி ஒரு சரித்திரம் நம் புறக்கண்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. அச்சரித்திர சான்றுகள் இன்று ஓவியங்களின் வடிவில் உயிர்தெழுந்து நம் உணர்வலைகளை தட்டியெழுப்பப் புறப்பட்டிருக்கின்றன.

அப்பாரம்பரிய கிராமம் உடைபடுவதற்கு ஒருவாரம் முன்பாக, 13 ஓவியக் கலைஞர்கள் அக்கிராமத்தின் உயிரோட்டத்தை தூரிகையியால் வார்த்தெடுத்த ஓவியங்கள் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இக்கண்காட்சியினை முனைவர் டத்தோ அன்வார் ஃபசால் அதிகாரப்பூர்வமாக நேற்று திறந்து வைத்தார். அந்நிகழ்வின் காணொளி காட்சி கீழே :



முத்தியாரா ஓவியக்கண்காட்சியகத்தின் முகவரி :


118, Lebuh Armenian,
10200 Pulau Pinang, Malaysia.

அலைப்பேசி எண்கள் : 604-262 0167

Read more...

நாங்களும் படம் காட்டுவோம்..

>> Tuesday, October 27, 2009

அம்னோவைக்காட்டிலும் நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை நிரூபிக்கும் வகையில், பினாங்கு மாநில டி..பி தலைவர்களும் மண்டோர்களும் முன்னால் புவா பாலா கிராமவாசியான திருமதி சாந்தா ஏற்பாடு செய்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு நமக்கெல்லாம் படம் காட்டியிருக்கின்றனர். நுஸ்மெட்ரோ வழங்கிய சலுகையைப் பெற்றுக் கொண்டவர்களில் திருமதி சாந்தாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரவுன் கார்டனில் வசித்துவரும் திருமதி சாந்தா லிம் குவான் எங், இராமசாமி, ஆர்.எஸ்.என் இராயர், இரவீந்திரன், தனசேகரன் போன்றவர்களுக்கு பொன்னாடை இட்டு தீபாவளி விருந்து அளித்திருக்கிறார்.

புவா பாலா கிராம பக்கமே எட்டிப் பார்த்திடாத லிம் குவான் எங் மெனக்கெட்டு புவா பாலா அருகிலுள்ள பிரவுன் கார்டனுக்கு தீபாவளி விருந்துண்ண சென்றுள்ளது அவரின் தாராள மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

மக்கள் ஓசை (26 அத்தோபர் 2009, பக்கம் 14)


படம் காட்டுவது தொடரும்...

Read more...

புவா பாலா மாட்டுக் கொட்டகை, கிணறு உடைப்பு ! - பி.ப சங்கம் கேள்வி எழுப்புகிறது

>> Tuesday, October 20, 2009



பத்திரிகை செய்தி (1)
15.10.2009

கம்போங் புவா பாலா

புவா பாலா கிராமத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் தாங்கள் தினமும் பினாங்கு மாநிலத்தில் உள்ள பசும்பால் குடிக்கும் பயனீட்டாளர்களுக்கு வழங்கிவந்த பசும்பாலை தொடர்ந்து வழங்க முடியுமா என்ற அச்சத்தில் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

இந்த புவா பாலா கிராமத்தில் சுமார் 100 ஆண்டு காலமாக மிகப்பெரிய மாட்டுக்கொட்டகையை வைத்திருக்கின்ற இந்த 3 சகோதரர்களான சிவானந்தம், முருகன், சுப்பிரமணியம் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டுக்கொட்டகையின் ஒரு பகுதியை புவா பாலா கிராமத்தில் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளவிருக்கும் மேம்பாட்டாளர் உடைத்ததன் காரணமாக இந்த அச்சம் ஏற்பட்டிருப்பதாக பி..சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.



கடந்த புதன்கிழமை வரை இந்த சகோதரர்களுக்குச் சொந்தமான 150 மாடுகள் தினமும் 300 லிட்டர் பசும்பாலை கொடுத்து வந்தன. ஆனால் நேற்று மேம்பாட்டாளர் திடீரென்று மாட்டுக்கொட்டகையின் ஒரு பகுதியை உடைத்துத் தரைமட்டமாக்கியதால் திகிலும் பயமும் அடைந்த கறவைமாடுகள் 300 லிட்டர் பால் கொடுப்பதற்குப் பதிலாக 140 லிட்டர் பாலையே கொடுத்ததாக சிவானந்தம் பி..சங்கத்திடம் தனது மனக்குமுறலைக் கொட்டியதாக சுப்பாராவ் மேலும் கூறினார்.

ஏற்கெனவே வீடுகளை உடைத்த மேம்பாட்டாளர் இப்பொழுது திடீரென்று எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மாட்டுக்கொட்டகையை உடைத்தது மிகப்பெரிய தவறு என அவர் கூறினார்.

திரு சிவாவும் அவருடைய சகோதரர்களும் பிரிதொரு இடத்தில் மாட்டுக்கொட்டகையை கட்டிக்கொள்வதற்கு இரண்டு வாரம் காலக்கெட்டு கேட்டிருந்தார்கள். ஆனால் அதற்கும் மேம்பாட்டாளர் சம்மதிக்காமல் திடீரென்று மாட்டுக்கொட்டகையை உடைத்தது இந்தக் கால்நடைகள் மீது கருணை இல்லாததையே காட்டுகின்றது என்றார் அவர்.

இப்பொழுது இந்த மாட்டுக்கொட்டகையிலிருக்கும் மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் கறவை மாடுகள் கொடுக்கின்ற 300 லிட்டர் பால் இப்பொழுது 150 லிட்டர் பாலாக குறைந்திருக்கின்றது. இது மேலும் குறையக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அச்சகோதரர்கள் பி..சங்கத்திடம் கூறியதாக சுப்பாராவ் கூறினார்.

தங்களின் வருமானத்தை இழந்துள்ள இச்சகோதரர்களுக்கு மாநில அரசாங்கம் கட்டாயமாக நிதி உதவி செய்து தர வேண்டும் என்றும் என்.வி.சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.



பத்திரிகை செய்தி (2)
15.10.2009

200 ஆண்டு கால கிணறு மூடப்படுகின்றது

படத்தில் காணப்படும் கிணறுதான் சுமார் 200 ஆண்டு காலமாக இந்த கம்போங் புவா பாலா கிராமத்தில் இருக்கின்றது. ஒரு காலத்தில் பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இக்கிராமத்தில் இருக்கும் சுமார் இதே போன்ற 10 கிணறுகளிலிருந்துதான் பினாங்கு மக்களுக்கு இக்கிராமத்திலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டிருக்கின்றது.

கே.டி.சிவானந்தம் என்பவரின் மாட்டுக் கொட்டகையிலிருக்கும் இந்தக் கிணறு இப்பொழுது மேம்பாட்டாளரின் அராஜகப் போக்கினால் எந்த நேரத்திலும் மூடப்படக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றது. சிவானந்தம் தன் மாட்டுக் கொட்டகையில் இருக்கும் 150 மாடுகளுக்கும் 50 ஆடுகளுக்கும் இந்தக் கிணற்றிலிருந்தான் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்துகிறார்.



இந்தக் கிணற்றிலிருந்து சுமார் 50 லிட்டர் தண்ணீர் ஒரு தடவை எடுக்கப்பட்ட அடுத்த ஐந்தே நிமிடங்களிலேயே அந்தக் கிணற்றில் 50 லிட்டர் தண்ணீர் ஊறிவிடும். இந்தக் காட்சியை நாம் நேரடியாகப் பார்க்கும்பொழுதுதான் இந்த புவா பலா கிராமத்தில் எவ்வாறு கிணறுகளில் தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது என்ற உண்மை தெரிகிறது.

இந்த நீரின் சுவையே வித்தியாசமாக இருக்கிறது. இப்பொழுது இந்தக் கிணற்றை மேம்பாட்டாளர் மூடவிருப்பதால் சிவானந்தத்தின் 150 மாடுகளுக்கும் 50 ஆடுகளுக்கும் எங்கேயிருந்து அவர் தண்ணீர் எடுக்கப்போகின்றார் என்பதுதான் பெரிய கேள்வி.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திலும் தனது மனக்குறையை திரு சிவானந்தம் பகிர்ந்துகொண்டார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி

Read more...

லிம் குவான் எங்குடன் நேரடி விவாதத்திற்குத் தயார்! - இண்ட்ராஃப் சவால்

>> Thursday, September 24, 2009


கடந்த 12-வது பொதுத் தேர்தலின்போது இண்ட்ராஃப்பின் ஆதரவைப் பெற்ற எதிர்கட்சிகள் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப கடமையாற்றவில்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் புவா பாலா கிராம நில மோசடியாகும்.

இண்ட்ராஃப் எதிர்பார்ப்பது அரசியல் தீர்வல்ல, மாறாக அரசியல் விளையாட்டுகளில் சிக்கி சுபிட்சத்தை இழக்காததொரு மக்களுக்கான தீர்வினையே அது எதிர்பார்க்கிறது.

லிம் குவான் எங்கை பொறுத்தவரை, ஊடகம் மற்றும் அரசியல் பலம் அவருக்கு பக்கபலமாக இருக்கிறது, ஆனால் இண்ட்ராஃபை பொறுத்தமட்டில் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் உண்மைகள் துணை நிற்கின்றன.

52 வருட காலமாக அம்னோ அரசாங்கம் சிறுபான்மையினரின்மீதான திட்டமிட்ட அடக்குமுறை, ஒடுக்குமுறை கொள்கைகளை அமுல்படுத்தி வந்ததன் காரணத்தினாலும், ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பினாலும் கடந்த பொதுத்தேர்தலில் இண்ட்ராஃப் நாடெங்கிலும் உள்ள தனது ஆதரவாளர்களைக் கொண்டு எதிர்கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டது. அதன் எதிரொலியாக 5 மாநிலங்கள் மக்கள் விரும்பி வாக்களித்த எதிர்கட்சிகளின் வசமுமானது.

புவா பாலா கிராம விவகாரத்தை பொறுத்தமட்டில், எதிர்கட்சிகள் கடைப்பிடிப்பதாகக் கூறிவரும் திறமையான நிர்வாகம், பொறுப்பான அரசாங்கம், வெளிப்படையான அணுகுமுறைகள் எனும் கொள்கைகள் நடைமுறைகளில் செயலாக்கம் காணவில்லை என்பதே உண்மை. தொடர்ந்து பழைய அரசாங்கத்தின்மீது பழியைப் போடுவதை விடுத்து, மாநில அரசு நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் உடனான சனநாயகத் தொடர்பினை விளக்குவதற்கு வெளிப்படையானதொரு நேரடி விவாதத்தில் லிம் குவான் எங் கலந்துகொள்ள வேண்டுமென இண்ட்ராஃப் அழைப்பு விடுக்கிறது.

ஓர் இயக்கமாகட்டும் நிர்வாகமாகட்டும், அதன் செயல்பாட்டில் உண்மை இருக்க வேண்டும். மாறாக போலி அரசியல்தனம் கொண்டு தங்களின் இருப்பை பலப்படுத்திக் கொள்வதில் மட்டுமே முனைப்பு காட்டி மக்களின் நலன்களை மறந்துவிடக் கூடாது. நம் நாட்டு அரசியலைப் பொறுத்தமட்டில் ஆளுங்கட்சியாகட்டும் எதிர்கட்சியாகட்டும், முதலில் கட்சியின் நலனையே முன்னிறுத்துகிறார்கள்.

இண்ட்ராஃபை பொறுத்தமட்டில் புவா பாலா கிராம நில மோசடி விவகாரம் இன்னும் முடியாத ஓர் அத்தியாயமாகும். உண்மை நிலவரம் பொதுமக்களுக்கு தெரிந்தாக வேண்டும். பொதுமக்கள் நீதிபதியாக இருக்க வேண்டுமேயொழிய அரசியல் இலாபத்திற்காக குழப்பங்களை விதைக்கும் ஊடகங்கள் அல்ல.

நாட்டை உலுக்கிவரும் பிரச்சனைகள் குறித்து பொறுப்பில் இருக்கும் தரப்புகள் பொது விவாதத்திற்கு அழைக்கப்பட வேண்டும். நாகரீகமடைந்த நாடுகளில் இம்முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. சனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுத்து லிம் குவான் எங் இண்ட்ராஃபின் அழைப்பை ஏற்று பொது விவாதத்திற்கு வர வேண்டும். மக்களை பிரதிநிதிக்கும் இண்ட்ராஃப் எழுப்பும் கேள்விகளுக்கு மக்கள் முன்பு பதில் கொடுக்க வேண்டும்.

மாற்றத்தை எதிர்பார்த்து ஓட்டு போட்ட மக்களுக்கு உண்மையைச் சொல்ல வருவாரா லிம் குவான் எங்?


(புவா பாலா நிலமோசடி குறித்து லிம் குவான் எங்குடன் தொலைக்காட்சியில் நேரடியாக விவாதிக்க இண்ட்ராஃப் ஆலோசகர் திரு.நரகன் தயாராக இருக்கிறார்.)

போராட்டம் தொடரும்...

Read more...

"வீடு" - குறும்படம்

>> Monday, August 24, 2009

சுதந்திர மாதத்தை முன்னிட்டு "15 மலேசியா" எனப்படும் 15 குறும்படங்கள் வெளியீட்டின் வரிசையில், "வீடு" எனும் இக்குறும்படம் தற்கால இந்திய மலேசியர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளில் ஒன்றினை அழகாக நமக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளது.

இக்குறும்படத்தைப் பார்த்ததும் உங்களது மனக்கண்களில் 'சட்டென' நிழலாடும் அந்த விடயம் என்னவென்று யூகிக்க வேண்டிய அவசியமில்லை!

Read more...

புவா பாலா கிராம வழக்கு - நீதிமன்றத்திலிருந்து நேரடியாக..

>> Friday, August 21, 2009

Read more...

புவா பாலாவில் மனிதச் சங்கிலி!

>> Friday, August 14, 2009

இன்று வருவானோ, நாளை வருவானோ என்று அனுதினமும் மன உளைச்சலுடன் வாழ்க்கையைக் ஓட்டிக் கொண்டிருக்கும் புவா பாலா கிராம மக்களுக்கு நேற்றுமொரு பலப்பரிட்சை ஏற்பட்டது. புலி வருது, புலி வருது என்கிற கதையாக அக்கிராம மக்களை அனுதினமும் மிரட்டிக் கொண்டிருந்த நுஸ்மெட்ரோ நில மேம்பாட்டாளர்கள், நேற்று காலை 7 மணியளவில் புல்டோசர்களுடன் கிராமத்தினுள் நுழைய, மக்களனைவரும் கொதித்தெழுந்துவிட்டனர். இச்செய்தி காட்டுத் தீப்போல் பரவ, சற்று நேரத்திற்கெல்லாம் பொதுமக்கள் ஒன்றுதிரளத் தொடங்கிவிட்டனர்.

புல்டோசர்களை உள்ளே நுழைய விடாமல் கிராம மக்கள் மனித சங்கிலி அமைத்து நில மேம்பாட்டாளர்களை தடுத்து நிறுத்தினர்.

ஆண்கள் வேளைக்குச் செல்லவில்லை! குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை! வீட்டில் உலை கொதிக்கவில்லை. காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மக்களுக்கெதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் நில மேம்பாட்டாளர்கள் பின் வாங்கினார். ஆனால், இரவு நேரங்களில் அங்குள்ள கிராம மக்கள் நிம்மதியான உறக்கத்தினைக் காண இயலவில்லை. கனவுகளிலும் புல்டோசர்களின் சத்தம்!

இன்னும் எத்தனை முறை இம்மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வேடிக்கை பார்க்கப்போகிறார்களோ??



போராட்டம் தொடரும்...

Read more...

புவா பாலா மக்களே! கொடுக்கறத வாங்கிட்டு போங்க..!

>> Thursday, August 13, 2009

இன்று பாமரர் முதல் படித்தவர்வரை புவா பாலா கிராம நில விவகாரம் குறித்து பெரும்பான்மையினர் கேட்கும் கேள்வி "கொடுக்கறத வாயமூடிக்கிட்டு வாங்கிட்டு போக வேண்டியதானே?"

சில நாட்களுக்குமுன், நான் குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தின் மின் தூக்கியில் நுழைந்த சமயம் என் அண்டை வீட்டுக்காரைப் பார்க்க நேர்ந்தது.

நான் கைகளில் தமிழ் நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவர் என்னிடம் பேச்சு கொடுக்கத் தொடங்கினார்.

"என்னையா இது அநியாயமா இருக்கு!"

அவர் எதைப்பற்றி கூறுகிறார் என்பதனை யூகித்தவனாய், ஏதும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு நாளிதழைப் புரட்டத் தொடங்கினேன்.

"சும்மா கொடுக்கறத வாங்கிட்டு போக வேண்டியதானே இவனுங்க..."

அவரை நிமிர்ந்துப் பார்த்தேன்.

சில நிமிடங்களில் மின் தூக்கி கீழ் மாடியை வந்தடைந்தது.

மின் தூக்கியிலிருந்து வேர்க்க விறுவிறுக்க என் அண்டை வீட்டுக்காரர் வெளியேறியக் காட்சியைக் கண்டு புன்னகைத்தவாரே மீண்டும் நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தேன்.

அவர் ஒருவேளை மனதில் நினைத்திருக்கக் கூடும்.

"இந்த சனியன் கிட்ட இப்படியொரு கேள்விய கேட்டு மாட்டிகிட்டோமே...!"

அவரிடம் அப்படி என்ன பேசினேன் என்று நான் கூற ஆரம்பித்தால் நிறைய தணிக்கைகள் செய்ய வேண்டும் என்பதனால், கீழே இணைக்கப்பட்டுள்ள காணொளிப் பேட்டியைக் கேட்டு புரியாத சில விடயங்களை அறிந்து புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கூடிய விரைவில் ஆங்கில மொழிப் பேட்டியும் வெளியிடப்படும்..

பாகம் 1


பாகம் 2


பாகம் 3


பாகம் 4


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. ( குறள் எண் : 423)

போராட்டம் தொடரும்...

Read more...

புவா பாலா நிலமோசடி - சில கேள்விகள்

>> Sunday, August 9, 2009


மாநில முதல்வர் லிம் குவான் எங் அவர்களே,
எங்கள் கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள்.

பினாங்கு மாநில அதிகாரிகள் கூட்டுறவுக் கழகத்திற்கு உங்கள் அரசு செய்த எங்கள் கிராம நில விற்பனை.

தேர்தல் தேதி : 8 மார்ச் 2008

கிராம செயற்குழு உங்களைச் சந்தித்த தேதி : 13 மார்ச் 2008
இந்தத் தேதியில் இன்னும் நில விற்பனை பூர்த்தி அடையாமல் இருந்தால், இந்த நில விற்பனையைத் தடுத்து நிறுத்துவதாக கிரமச் செயற்குழுவிடம் உறுதிக் கூறியுள்ளீர்கள்.

கேள்வி 1

ஏன் 14 மார்ச் 2008-ல், உங்கள் அரசாங்கம் ரி.ம 3.2 மில்லியனை அந்த கூட்டுறவுக் கழகத்திடமிருந்து பெற்றுக் கொண்டது?

கேள்வி 2

ஏன் 27 மார்ச் 2008-ல், உங்கள் அரசு அந்த கூட்டுறவின் பெயரில் புவா பாலா கிராம நிலத்தை பதிவு செய்தது?


கேள்வி 3

ஏன் 14 ஏப்ரல் 2008-ல், நுஸ்மெட்ரோ வென்சர்ஸ் எனும் மேம்பாட்டாளர் இந்த நிலத்தை கேவியட் செய்துக் கொள்ள உங்கள அரசு உடந்தையாக இருந்தது?

தேசிய நிலச் சட்டப்பிரிவு 320

உங்கள அரசு, புவா பாலா கிராம நில பரிவர்த்தனையில் தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளது. கிராம நிர்வாகத்தினரும் இந்தப் புகாரை இரண்டு முறை செய்துள்ளனர்.

கேள்வி 4

உங்கள் அரசு புவா பாலா நில விற்பனையில் நிறைய தவறுகளைக் கண்டுபிடித்துள்ளதாகப் புகார் செய்துள்ளது. அப்படியானால் ஏன் இந்த நிலப் பரிவர்த்தனையை முழுமைப் படுத்தி, நிலத்தை விற்று முடித்தீர்கள்?

தேசிய நிலச் சட்டப்பிரிவு 320-ன் படி, ஒரு நிலப் பரிவர்த்தனையில் தில்லுமுல்லு (FRAUD) கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிலப் பட்டா மூலம் செய்யப்பட்ட நில உரிமை மாற்றம் தடுத்து நிறுத்த முடியும்.

கேள்வி 5

ஏன் உங்கள் அரசு, ஊழல் தடுப்பு ஆணையம், (MACC), தன் விசாரணையை முடிக்கும் வரை காத்திருக்கக் கூடாது? MACC பின்னர் தில்லு முல்லு நடந்திருப்பதை உறுதிப்படுத்தினால், நீங்கள் அந்த கூட்டுறவுக்குக் கொடுத்த நிலத்தை மீட்டுக் கொள்ள வேண்டி வரும். இது கிராம மக்களுக்கு நன்மையாக முடியும். பின்னர் உங்கள் அரசு தலைவர்களான இராமசாமி, கர்பால் சிங், மற்றும் சனீசுவர நேதாஜி இராயர் ஆகியோர் கொடுத்த வாக்கிற்கிணங்க, இக்கிராமத்தை இந்திய பாரம்பரிய கிராமமாக அறிவிக்கலாம். ஏன், MACC விசாரணை முடிவிற்குக் காத்திருக்கக் கூடாது?


நிலப் பட்டாவில் கட்டுப்பாடுகள்

கேள்வி 6

நிலப்பட்டாவில் சில கட்டுப்பாடு சரத்துகள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?
இந்த நிலம் எந்த வியாபார நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியாது. அந்தக் கோப்பராசி எந்த தரப்பினரோடும் கூட்டு முயற்சியில் ( JOINT VENTURE ) நிலத்தை மேம்படுத்த அனுமதியில்லை.

கேள்வி 7

உங்கள் அரசு எப்படி தொடர்ந்து இதுபோன்ற சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை அனுமதித்து வருகின்றது?

கேள்வி 8

உங்களுக்குப் பின் வரும் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு தெரியுமா?

"கோ ஹீ சிங் Vs வில் ராஜா மற்றும் அனூர், உயர் நீதிமன்ற நீதிபதி சங்கர் மகாதேவ் (1993) வழங்கிய தீர்ப்பு"

மேற்கண்ட கட்டுப்பாடுகள் உள்ள நிலத்தை எவரும் கேவியட் செய்து கொள்ள முடியாது என நீதிமன்ற தீர்ப்பு உள்ளது.

கேள்வி 9

உங்கள் அரசாங்கம் எப்படி இந்த சட்டத்திற்குப் புறம்பான நில கேவிட்டை அனுமதித்தது? நுஸ்மெட்ரோ வென்சர்ஸ் இந்த புவா பாலா நில விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளது, சட்டத்திற்குப் புறம்பானது என்பதை தாங்கள் அறியவில்லையா?

கேள்வி 10

இன்று வரை, அந்த நிலப்பட்டாவில் உள்ள கட்டுப்பாடுகள் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்படவில்லை என்பதை தாங்கள் அறிவீர்களா?

சிறி டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் 3-8-2009 தேதியன்று, நீதிமன்றத்தில் தேசிய நிலச் சட்டம் பிரிவு 116(1)(d)-யைப் பயன்படுத்த விண்ணப்பம் செய்தாராம். அந்தச் சட்டப்பிரிவின்படி அரசு அனுமதியில்லாமல், மேம்பாட்டாளர் கிராமத்தை வந்து உடைத்து நொறுக்க முடியாது. இராயர் செய்த விண்ணப்பம் என்ன ஆனது? ஏன் லிம் அவர்களே நீங்கள் இந்த சட்டப்பிரிவைப் பற்றி அறவே பேச மாட்டேன் என்கிறீர்கள்?

கேள்வி 11

ஒருவர் தமக்கென்று, தம் சட்ட ஆலோசனைக்கு ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்வது பழக்கம்தானே?

நீங்கள் கிராம மக்களை ஒரு வழக்கறிஞர் பிரதிநிதித்து உங்களை சந்திப்பதை கடைசிவரை மறுத்து வந்துள்ளீர்கள்.

இது சரியா?

ஆ. திருவேங்கடம்
புவா பாலா கிராம மக்களுக்காக ..


தயவு செய்து இதனை நகலெடுத்து தெரிந்தவர்களிடம் கொடுத்து படிக்கச் சொல்லவும்.

Read more...

புவா பாலா வெள்ளிக்கிழமை உடைக்கப்படுமாம்!

>> Tuesday, August 4, 2009


சற்று முன்பு பினாங்கு மாநில அரசுடனான புவா பாலா மக்களின் சந்திப்புக் கூட்டத்தில், லிம் குவான் எங் மீண்டும் அரைத்த மாவையே அரைத்திருக்கிறார்.

சந்திப்புக் கூட்டத்தில் கிராம மக்களிடம் அவர் கூறியதாவது ;

புவா பாலா கிராமத்தில் 1200 சதுர அடியில் இரண்டு மாடி வீடு. மேல் மாடி 600 சதுர அடி, கீழ் மாடி 600 சதுர அடி. வீட்டிற்கு வெளியில் கூடுதல் 200 சதுர அடி நிலம்.
அதாவது 6.5 ஏக்கர் புவா பாலா கிராம நிலத்தில் 0.7 ஏக்கர் நிலம் 24 குடும்பங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இவ்வீடுகளைக் கட்டி முடிக்கும்வரையில் அக்கிராம மக்கள் தங்குவதற்கு தற்காலிக இடமோ, அல்லது வாடகைப் பணமோ ஏதும் கொடுக்கப்படாது. ஒரே வீட்டில் வசிக்கும் கூட்டுக் குடும்பங்களுக்கு வீடோ அல்லது பணமோ கொடுக்கப்படாது.


நுஸ்மெட்ரோ அளிக்கும் இம்முடிவை மக்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும், இல்லையெனில் நுஸ்மெட்ரோ வருகின்ற வெள்ளிக்கிழமை கிராமத்தை தரைமட்டமாக்கிவிட்டுச் சென்றுவிடுவார்கள் என லிம் குவான் எங் கிராம மக்களை வற்புறுத்தியிருக்கிறார். இதற்கிடையில் கூட்டரசு நீதிமன்றத்தில் இந்நில விவகாரம் குறித்து புவா பாலா வழக்கறிஞர் திரு.டர்சான் சிங் வழக்கு ஒன்றினை பதிவு செய்துள்ளார். அவ்வழக்கு எதிர்வரும் 18-ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் செவிமடுக்கப்படும். எனவே, கிராமத்து வீடுகளை நில மேம்பாட்டாளர்கள் உடைக்கக்கூடாது என்பது சட்டம். காரணம், இவையனைத்தும் ஆதாரங்கள் என்கிற அடிப்படையில் ஒரு செங்கல்லைக் கூட அசைக்கக்கூடாது. அப்படி அசைத்தால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் ஒரு செயலாகக் கருதப்படும். நுஸ்மெட்ரோ வருகின்ற வெள்ளிக்கிழமை வீடுகளைத் தரைமட்டமாக்கப்போவதாகக் கூறியுள்ளார்கள்.

இதனைச் சொல்லியே மக்களை பயமுறுத்தி, கொடுக்கும் ரொட்டித் துண்டுகளை வாங்கிக் கொண்டுச் செல்லுங்கள் என்கிறது பினாங்கு மாநில அரசு.

அவர்கள் பரிந்துரைக்கும் திட்டத்திற்குச் சம்மதம் தெரிவிப்பவர்கள் ஒப்பந்தக் கடிதத்தில் கையெழுத்திடுமாறு லிம் குவான் எங் மக்களை கேட்டுக் கொண்டார். ஆனால், மக்கள் தங்களுடைய முடிவை ஏதும் கூறாமல் வந்துவிட்டனர். இச்சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு கிராம மக்களின் வழக்கறிஞருக்கு வழக்கம்போல் அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு கொலைக் குற்றவாளிக்குக் கூட தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், தமக்கென்று ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளும் உரிமையை சட்டம் நமக்கு வழங்குகிறது. ஆனால், 200 ஆண்டுகாலமாக இந்நிலத்தில் வாழ்ந்துவரும் இந்த மக்களுக்கு ஒரு வழக்கறிஞரை தங்களுடைய பிரதிநிதியாக வைத்துக் கொள்ளக்கூட அனுமதியளிக்கப்படவில்லை! இவர்கள் செய்த குற்றம் என்ன? 200 ஆண்டுகாலமாய் தன்னுடைய சொந்த உழைப்பைக் கொட்டி இந்நிலத்தில் வாழ்ந்தது குற்றமா?

அம்னோ அரசாங்கம்தான் நம்மை ஏமாற்றிவிட்டது, மக்கள் கூட்டணியாவது எங்களைக் காப்பாற்றும் என நம்பியிருந்த இந்த அப்பாவி மக்களை அரசியல் இலாபத்திற்காக பகடைக் காய்களாகப் பலரும் பயன்படுத்திவிட்டனர்.

இம்மலேசிய திருநாட்டில், அதிகாரத்துவமும் முதலாளித்துவமும் எப்படியெல்லாம் ஏழை மக்களை நசுக்கிப் பிழிகிறது என்பதனைக் கண்கூடாகவே பார்த்து வருகிறோம். அதற்கு ஒரு நல்ல படிப்பினையான உதாரணம் கம்போங் புவா பாலா!

இன்னும் 48 மணி நேரங்களே எஞ்சியுள்ளன. நாம் என்ன செய்யப் போகிறோம்? வரலாற்றைப் புரட்டிப் போட வேண்டுமா? மாற்றைத்தை விரும்பினால் மட்டும் போதாது, அம்மாற்றத்தை நாம்தான் ஏற்படுத்த வேண்டும்! இந்நாட்டில் தமிழனுக்கென்று 200 ஆண்டுகால தொன்மையான கிராமம் காப்பாற்றப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்கள் வருகையை எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று நிச்சயப்படுத்துங்கள்! இன்று 1000 பேர் திரண்டதைக் கண்டு அஞ்சியவர்கள் வெள்ளிக்கிழமையன்று திரளும் மக்கள் வெள்ளத்தைக் கண்டு தங்களுடைய முடிவையே மாற்றிக் கொள்ள வேண்டும்!

உடனடியாக லிம் குவான் எங்கை தேசிய நில சட்டவிதி பிரிவு 76- (National Land Code Section 76) பயன்படுத்தி புவா பாலா நிலத்தை கையகப்படுத்தி கிராம மக்களிடமே ஒப்படைக்குமாறு நெருக்குதல் கொடுங்கள். நாட்டில் பல இயக்கங்கள், சங்கங்கள் இருக்கின்றன. அனைத்து இயக்கங்களும் அவர்களுக்கே உரித்த பாணியில் நூதன போராட்டத்தை முன்னின்று மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

போராட்டம் தொடரும்...

Read more...

புவா பாலாவில் தற்போது...

>> Sunday, August 2, 2009

காலை 10:00

சிலாங்கூர், பேராக் மாநில இண்ட்ராஃபினர் மற்றும் வருகையாளர்கள் ஆரஞ்சு நிற உடைகளில் அமர்ந்திருக்கின்றனர். கிராமவாசிகள் நிகழ்வின் ஏற்பாடுகளை மும்முரமாக செய்துக்கொண்டிருக்கின்றனர். ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரிக்க குழுமியிருக்கின்றனர்.
காவல்த்துறையினரும் ஆங்காங்கே சாதாரண உடைகளில் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.





காலை 11:00

சிறு மழை தூறலுக்குப் பின் வேலைகள் மீண்டும் தொடர்கின்றன..





மேலும் செய்திகள் பின்தொடரும்..

Read more...

புவா பாலா நிலமோசடி அம்பலம்! ஆதாரங்கள் சிக்கின!

>> Friday, July 31, 2009

இன்று மதியம் மூன்று மணியளவில் இண்ட்ராஃப், ஜெரிட், சுவாராம் போன்ற மனித உரிமை இயக்கங்களோடு இணைந்து புவா பாலா கிராம மக்கள், பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்கை சந்தித்து மனு ஒன்றினைச் சமர்ப்பிக்க சென்றனர். கோப்பராசியிடமிருந்து புவா பாலா நிலத்தை விற்கவோ, வாடகைக்கு விடவோ, அல்லது வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தவோ முடியாது எனவும் அப்படி மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக அந்நிலம் பயன்படுத்தப்படுமெனின், அது மாநில அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. (இணைக்கப்பட்டுள்ள படங்களைக் காண்க)

கூட்டுறவு கழகத்திற்கும் நுஸ்மெட்ரோ வெஞ்சூர்சுக்கும் இடையிலேயான இவ்வொப்பந்தக் கடிதமானது 27-03-2008 எனும் திகதியில் கையெழுத்திடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதாவது விற்க, வாடகைக்கு விட, வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்தக்கூடாத இந்நிலத்தை விற்க அனுமதியளித்தவர்கள் பக்காதான் மாநில அரசுதான் என்பது ஊர்சிதப்படுகிறது. எனவே, மாநில அரசு நுஸ்மெட்ரோ வென்சூர்சுக்கு சல்லி காசு கொடுக்க வேண்டிய அவசியமில்லை என வாதம் எழுந்துள்ளது. கூட்டுறவு கழகத்திடமிருந்து 3.2 மில்லியன் செலவில் புவா பாலா நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தலாம்.

இதனை லிம் குவான் எங்கிற்கு நினைவூட்டி உரிய நடவடிக்கை எடுக்க கோரும் முயற்சியாக இன்று புவா பாலா கிராம மக்கள் முதல்வரிடம் மனுவைச் சமர்ப்பிக்கச் சென்றனர். அம்மனுவை முதல்வரின் செயலாளர் பெற்றுக் கொண்டுள்ளார்.

லிம் குவான் எங்கிற்கு கொடுக்கப்பட்ட மனு


கூட்டுறவு கழகத்திடமிருந்து நுஸ்மெட்ரோவிற்கு விற்கப்பட்ட விவரம்




பகுதி 1


பகுதி 2




போராட்டம் தொடரும்...

Read more...

புவா பாலாவில் மற்றுமொரு விசேசமுங்கோ..

>> Thursday, July 30, 2009

எதிர்வரும் (02-08-2009) ஞாயிற்றுக்கிழமை, புவா பாலா கிராமத்தில் பண்பாட்டு, கலாச்சார விழா நடைப்பெறவுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், கோலாட்டம் மற்றும் விளையாட்டுகளான உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் காலை 10 மணி தொடங்கி இரவு 8 மணிவரை நடைப்பெறவிருக்கின்றது. அன்றைய நிகழ்விற்கான மதிய, மாலை உணவினை கிராமத்துப் பெண்கள் சமைத்து பரிமாறவுள்ளனர்.

பினாங்கில் 200 வருடங்களாக நிலைப்பெற்றிருந்த தமிழர்களின் பாரம்பரிய கிராமம் இனி இருக்குமா என்பது கேள்விக்குறியே! இந்நிகழ்வானது அக்கிராமத்தின் கடைசி நிகழ்வாகக் கூட இருக்கலாம். எனவே, இவ்வறிவிப்பை அழைப்பிதழாக ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு புவா பாலா கிராம மக்களுக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறோம்.

கீழ்காணும் அழைப்பிதழை உங்களுக்கு அறிமுகமானவர்களிடமும் இணைய நண்பர்களிடமும் மின்னஞ்சல்வழி, அச்சடித்து அனுப்பி தெரியபடுத்தவும்.





இக்கண்,

-உங்கள் வரவை பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் புவா பாலா தமிழ் மக்கள்-

போராட்டம் தொடரும்..

Read more...

புவா பாலா முருகன் யுனேசுகோவிற்குப் பயணம்!

>> Tuesday, July 28, 2009


புவா பாலா கிராமத்தில் மாடுகள் வளர்த்து வரும் கே.முருகன்(வயது 46) என்பவர் நேற்று (திங்கட்கிழமை) மாலை (பிரிட்டன் நேரப்படி) லண்டன் மாநகரைச் சென்றடைந்தார். அங்கு அவரைச் சந்தித்து வரவேற்ற இண்ட்ராஃப் தலைவர் திரு.வேதமூர்த்தி புவா பாலா கிராம விவகாரத்தை பாரிசு மாநகரில் அமைந்துள்ள யுனேசுகோவின் உலக பாரம்பரிய தலைமையகத்தின் பார்வைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார். பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் உதவியோடு பாரிசு நகரில் யுனேசுகோ அதிகாரிகளுடன் சந்திப்பு கூட்டம் நடத்த திரு.வேதமூர்த்தி ஏற்பாடு செய்திருக்கிறார்.

நாளை அவ்விருவரும் பாரிசு நகருக்கு பயணமாகின்றனர்.


இத்தகு நடவடிக்கையின்வழி அனைத்துலக ரீதியில் சம்பந்தப்பட்டவர்களின் மீது குறிப்பாக பினாங்கு மாநில முதல்வரிடம் புவா பாலா கிராமத்தை பாரம்பரிய கிராமமாக அறிவிக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்கக்கோரி நெருக்குதல் அளிக்கலாம்.

முருகனின் இம்முயற்சி அனைத்துலக பார்வையை 6.5 ஏக்கர் புவா பால நிலத்தின் மீது விழ வைப்பதோடு, யுனேசுகோவின் நெருக்குதல்களின்வழி புவா பாலா கிராமத்தை காப்பாற்றி, அதனை தமிழர் பாரம்பரிய கிராமமாக நிலைப்பெறச் செய்ய முடியும் எனும் நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.

இதற்கிடையில், பினாங்கு மாநில அரசு நுஸ்மெட்ரோ வெஞ்சூர்சின் மேம்பாட்டு திட்டத்தை ரத்து செய்திருப்பினும் கூட்டரசு நீதிமன்றத்தின் ஆணையின்கீழ் புவா பாலா நிலத்தை இடித்துத் தள்ளுவதற்கு அந்நில மேம்பாட்டாளர்களுக்கு இன்னும் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விடயத்தில், மேலும் சில ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.

கிராம மக்களின் வீடுகளை உடைத்துவிட்டு, பிறகு பேரம் பேசினால் மக்கள் அடிபணிந்துபோகக் கூடும், நட்ட ஈடை வாங்கிக் கொண்டு நிலத்தை விட்டுக் கொடுக்கக்கூடும் என்பது மேம்பாட்டாளர்களின் திட்டங்களில் ஒன்றாக இருக்கக் கூடும் என ஐயுறப்படுகிறது.

கிராம நிலத்தில் சிறுபகுதியை மட்டும் பாரம்பரிய நிலமாக ஒதுக்கீடு செய்து, பெறும்பகுதி நிலத்தில் நுஸ்மெட்ரோவின் ஆடம்பர அடுக்குமாடி திட்டத்தை செயல்படுத்த பினாங்கு மாநில அரசு நில மேம்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் வெற்றியளிக்கும் தீர்வாக பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் இதனை வழிமொழிந்தாலும், பாரம்பரிய நிலம் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்!

முறையே செயல்படுத்துவன வேண்டியவற்றை காலந்தாழ்த்தி செயலாற்றிவரும் பினாங்கு மாநில அரசின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?

பொறுத்திருந்து பார்ப்போம்...

போராட்டம் தொடரும்...

Read more...

வெற்று வாக்குறுதிகளால் வஞ்சிக்கப்பட்ட புவா பாலா மக்கள்!

>> Wednesday, July 22, 2009

கடந்த சனவரி மாதம் 19-ஆம் திகதி, புவா பாலா கிராம மக்கள் 'பொங்கல் திருவிழா 2009' நிகழ்வினை ஏற்று நடத்தினர். இவ்விழாவில் பினாங்கு மாநில துணைமுதல்வர் திரு.இராமசாமி, வழக்கறிஞர் கர்பால் சிங், சிறீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் இரவீந்திரன் மற்றும் பல அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.

அந்நிகழ்வில் பக்காதான் அரசியல்வாதிகள் புவா பாலா கிராம மக்களுக்கு கொடுத்த வெற்று வாக்குறுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளி காட்சியில் இடம்பெற்றுள்ளது.

Read more...

உரிமைக்காக அடம்பிடிப்பது தவறா?

>> Friday, July 17, 2009



மலேசியா இன்று இணையதளத்தில் இன்று வெளியான ஒரு கடிதத்தை கீழே இணைத்துள்ளேன். அக்கடிதம் குறித்த எனது சில கேள்விகளையும் கீழே பதிவிட்டுள்ளேன்.

***



கம்போங் புவா பாலா குடியிருப்பாளர்களில் சிலர் அடம்பிடிக்கிறார்கள்



கடிதம்-Dr Vijaya Bharath

கடந்த சில வாரங்களாக கம்போங் புவா பாலா விவகாரம் தொடர்பாக பல்வேறு நிகழ்வுகளைக் கண்டு வருகிறோம். கோ சு கூன் தலைமையில் முந்தைய அரசு, குறிப்பிட்ட ஒரு கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரின் நன்மையை முன்னிட்டு தங்களை வஞ்சித்து விட்டதை எண்ணி கிராமவாசிகள் ஆத்திரம் கொண்டார்கள்.

அதன்பின்னர், முந்தைய அரசைக் குறைகூறும் இந்தப் போக்கு, பி.உதயகுமார் உள்பட சில மூன்றாம் தரப்பினரின் தூண்டுதலின் விளைவாக நடப்பு அரசைக் குறை சொல்லும் போக்காக மெல்லமெல்ல மாற்றம் கண்டிருப்பதையும் பார்க்கிறோம்.

இசா-விலிருந்து விடுதலையாகி வந்ததிலிருந்து உதயகுமார் அம்னோவைக் குறைசொல்வதை விட்டுவிட்டார். முதலமைச்சர் நினைத்தால் கிராமவாசிகளின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியும் என்று கூறி தாம் சட்டம் அறியாதவர் என்பதை அவர் வெளிப்படையாகக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அவர் அறியாமல் சொல்லவில்லை என்றும் அது, பக்காத்தானுக்கு ஆதரவாகவுள்ள இந்தியர்களிடம் வேண்டுமென்றே ஆத்திரமூட்டி தம் புதிய கட்சிக்கு, பாகாமுக்கு, உறுப்பினர்களைச் சேர்க்கும் ஒரு தந்திரம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

அவரின் சகோதரர் பி.வேதமூர்த்திக்கு, மலேசியாவுக்குத் திரும்பும் துணிச்சல் இன்னும் வரவில்லை.

10,000 மலேசிய இந்தியர்களைத் திரட்டி ஜசெக அலுவலகங்களுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அவர் விடுத்த மிரட்டல் பிசுபிசுத்துப் போனதால் சங்கடத்துக்கு ஆளான அவர் இப்போது முதலமைச்சரிடம் மகஜர் வழங்க மனைவியையும் பிள்ளையையும் அனுப்பி வைக்கிறார்.

கிராமவாசிகள் இருக்கிறார்களே, அவர்களில் எல்லாருமே தர்மவான்கள் அல்லர். அவர்களில் சிலர், பினாங்கு பக்காத்தானை மிரட்டி அடிபணிய வைக்கும் நோக்கில், இவ்விவகாரத்தை இனரீதியான ஒன்றாக திரித்துக் கூறுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பிரதிநிதிகள், அந்தக் கிராமத்துச் சென்று கிராமவாசிகளைச் சந்தித்து அவர்களின் உணர்வுகளையும் கருத்துகளையும் அறிந்துகொள்ள முற்பட்டபோது முந்தைய அரசாங்கம் செய்த தவறுகளுக்கு இவர்கள் குறைகூறப்பட்டார்கள், பழித்துரைக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் முந்தைய அரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எவரும் ஒருமுறையேனும் கிராமத்துக்கு வருகை புரிந்ததில்லை என்ற உண்மையைக் கிராமவாசிகள் மறந்துவிட்டார்கள்.

மேம்பாட்டாளரிடம் ரிம90,000-க்குப் பதிலாக ரிம200,000 இழப்பீடு வழங்குமாறு வலியுறுத்தப்போவதாக முதல்வர் கூறியபோது, அதற்குக் கைமாறாக கிராமவாசிகள் என்ன செய்தார்கள்-முதல்வர் பதவி விலகி மலாக்காவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

முதல்வர் மனம் விட்டுப் பேசலாம் என்று அழைப்பு விடுத்தபோது கிராமவாசிகள் என்ன செய்தார்கள். சுலோகங்கள் எழுதிய அறிவிப்புப் பலகையை ஏந்தி வந்தார்கள். பேச்சுகளில் மூன்றாம் தரப்பினர் கலந்துகொள்வதை முதல்வர் விரும்பாதபோது கலந்துரையாடலே வேண்டாம் என்று கூறி அவர்கள் கலைந்து சென்று விட்டனர்.

அதன்பின்னர், குடியிருப்பாளர் சங்கத் தலைவர் எம்.சுகுமாறன், முதல் அமைச்சரைச் சந்தித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார் என்பதை அறிந்ததும் வீம்புகொண்ட கிராமவாசிகளில் சிலர், குறிப்பாக சி.தர்மராஜும், ஜே.ஸ்டீபனும் அவரைக் குறைகூறினர். இரண்டாவது முறை சந்தித்துப்பேச முதல்வர் விடுத்த அழைப்பையும் அவர்க்கள் ஏற்க மறுத்தனர்.

இப்படிப்பட்ட செயல்களெல்லாம் நிற்க வேண்டும்.

நியாய உணர்வுடன் அப்பாவி கிராமமக்களுக்கு இழப்பிடு வழங்கப்பட வேண்டும். அருகிலேயே ஒரு நிலத்தை- ஆடுமாடு வளர்ப்புக்கு வசதியுள்ளதாக- அவர்களுக்கு வழங்கலாம். முடிந்தால், அவர்களைத் திருப்திபடுத்தும் வகையில் இந்திய கிராமியத் தன்மைகள் நிரம்பியதாகவும் அதைக் கட்டிக்காத்து வரலாம்.

அதே நேரத்தில், முதல்வரைச் சந்திக்க மறுப்பதுடன் அந்த நிலத்தை மாநில அரசு கையகப்படுத்த நினைத்தால் அதற்காக ரிம 300 மில்லியனைச் செலுத்த வேண்டுமே என்பதைப் பற்றிக் கவலையும் படாத மற்றவர்களைப் பொருத்தவரை அவர்களின் வீடுகளை அம்னோவுடன் தொடர்புகொண்ட நூஸ்மெட்ரோ நிறுவனம் இடித்துத் தள்ளட்டும். அதன்வழி அவர்கள் பாடம் கற்கட்டும்.

பினாங்கில் உள்ள மற்றவர்கள் பற்றிக் கவலைப்படாமல் பினாங்கு அரசின் நலனைப் பற்றிக் கவலப்படாமல் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமவாசிகளில் சிலர் அடம்பிடிக்கிறார்களே அப்படிச் செய்தால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்த்தார்களா? நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்தற்காக அரசே கலைக்கப்படலாம்.

இவ்விவகாரத்தில், மாநில அரசு உயர்ந்த விலை கொடுத்து அந்நிலத்தைக் கையகப்படுத்த வேண்டுமா என்று பினாங்கு ஜசெக வலைத்தளத்தில் நடத்தப்படும் கருத்துக்கணிப்பில் கலந்துகொள்வோரில் 87 விழுக்காட்டினர் என் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.

*******************************************************

முதலில் இப்படியொரு வெக்கங்கெட்ட அறிக்கையை வெளியிட்ட விஜய பரத்திற்கு எனது கண்டனங்கள்!

இவ்வறிக்கையில் விஜய பரத் கிராம மக்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளுக்கு விடைகொடுக்க முனையவில்லை, மாறாக இண்ட்ராஃபை தாக்கியே ஆக வேண்டும் எனும் நோக்கத்தில் எழுதியுள்ளார்.

முதலில், இவ்விவகாரத்தில் இண்ட்ராஃபை தவிர்த்து, ‘ஜெரிட்’, ‘சுவாராம்’, மலேசிய சோசியலிச கட்சி என பல தரப்பினர் பாரிசானின் துரோகத்தையும் பக்காதானின் உண்மை முகமூடியையும் கிழி கிழியென கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்! இவ்விடயத்தில் இண்ட்ராபின் மீது மட்டும் எதற்கு உங்களுக்கு தேவையில்லாத காழ்ப்பு?!

மக்களின் நிலத்தை சட்டவிரோதமாக அபகரித்தது பாரிசான் அரசாங்கம்தான் என பலருக்கும் தெரியும். அதனை மீண்டும் மீண்டும் நீங்கள் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பக்காதான் பினாங்கில் ஆட்சியிலமர்ந்து 20 நாட்களுக்குப் பிறகுதான் நிலம் மேம்பாட்டாளர்களிடம் கைமாறியிருக்கிறது! அதுவும் பாக்காதான் அரசின் முழு அனுமதியோடு! இது எப்படி நடந்தது? இந்த கேள்விக்கு இன்றுவரையில் பக்காதானிடமிருந்து பதிலே கிடைக்கவில்லை.

மார்ச் 8 தேர்தலுக்கு முன்பு, பினாங்கு பக்காதான் தலைவர்கள் புவா பாலா கிராமத்தில் வாய் கிழிய வாக்குறுதிகள் கொடுத்தார்களே? அவர்களில் பலர் சட்டம் அறிந்தவர்களாயிற்றே! நிலத்தை கையகப்படுத்த முடியாது என்றால் அதனை அப்பொழுதே மக்களிடம் கூறியிருக்கலாமே! கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பை மாற்ற முடியாது என அப்பொழுதே ஒப்பித்திருக்கலாமே? தேர்தல் சமயம், கிராம நிலம் மக்களுக்குத்தான் சொந்தம், நிலமோசடியை அம்பலப்படுத்துவோம்! எங்கள் பிணத்தை தாண்டித்தான் நில மேம்பாட்டாளர்கள் இங்கு காலடி எடுத்து வைக்க முடியும்! என்றெல்லாம் கோஷமிட்டவர்கள் இன்று தலைக்கீழாக பேசுவதைத்தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! அதுவும், தெரிந்தே அந்நிலத்தை மேம்பாட்டாளரிடம் விற்க அனுமதித்த பாக்காதான் அரசாங்கத்தை கண்டிக்காமல் என்ன செய்வது?

தொட்டதெற்கெல்லாம் இண்ட்ராஃப் ஏற்படுத்திய மாபெரும் மக்கள் சக்தி அலையை மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்ன இவர்களுக்கு இன்று இண்ட்ராஃபின் பெயரைக் கேட்டால் கசக்கிறதோ? உண்மை சில நேரங்களில் கசக்கத் தானே செய்யும்!

பினாங்கு ஜனநாயக செயல் கட்சியின் தளத்தில் ஓட்டு கேட்டு மலிவு விளம்பரம் தேட முனையும் விஜய பரத்திடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்.

1) கிராம மக்களுடன் மனம்விட்டுப் பேச வேண்டும் என்றும், அழைப்பு விடுத்தால் வர மறுக்கிறார்கள் என கிராமவாசிகளின்மீது குற்றத்தை சுமத்திய லிம் குவான் எங், ஏன் கடந்த 30ம் திகதி சூன் மாதமன்று ஒட்டுமொத்த கிராமமும் கொம்தாருக்கு வந்தபொழுது சந்திக்கவில்லையாம்? இரவுவரை அங்கேயே காத்திருந்த மக்களை இறுதிவரை சந்திக்காத அவருக்கு அப்படி என்ன முக்கியமான வேலை இருந்தது?

2) மார்ச்27, பக்காதான் ஆட்சியிலிருந்த சமயம் ஏன் புவா பாலா நிலம் மேம்பாட்டாளருக்கு முழுமையாக கைமாற்றப்பட்டது? அதன் பின்ணனி என்ன?

3) சட்டம் அறிந்தவர்களோடுதான் முதலமைச்சரை சந்திப்போம் என வேண்டுகோள் விடுக்கும் கிராம மக்களுக்கு ஏன் அனுமதி மறுத்தளிக்கப்படுகிறது?

4) தொடக்கத்தில் ரி.90,000 மட்டுமே நஷ்ட ஈடாக மக்களுக்கு கொடுப்பதாக மக்களிடமே அறிவித்துவிட்டு, ஊடகங்களில் இரண்டு லட்சத்திற்கும் நஷ்ட ஈடு கொடுக்க மக்களுடன் பேரம் பேசியதாக பொய்யுரை பரப்பியது ஏன்?

5) 23 வீடுகளில் மொத்தம் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூட்டுக் குடும்பம் எனும் ரீதியில் வசித்து வருகின்றனர். ஒரு வீட்டிற்கு ரி. 2 லட்சம் மட்டுமே கொடுக்கப்படும் என அறிவித்தவர்கள் ஏனைய குடும்பத்தினருக்கு என்ன பதில் கூறவிருக்கின்றனர்?

6) புக்கிட் சீனா பாரம்பரிய கிராமத்திற்காக போராடிய லிம் குவான் எங், ஏன் பினாங்கின் கடைசி இந்தியர் பாரம்பரிய கிராமத்தை தக்க வைப்பதற்கான உரிய நடவடிக்கையை 15 மாதங்களுக்கு முன்பே எடுக்கவில்லை? காலம் கடத்தியது எதற்கு?

7) நில மோசடி என அப்பட்டமாக தெரிந்தும், நில ஆர்ஜித சட்டத்தையும் Section 116,1(d) (National Land Code section 76)யும் பயன்படுத்தி ஏன் நிலத்தை கையகப்படுத்தவில்லை?

8) மாறாக ஏன் தொடர்ந்துநில மேம்பாடாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்என்பதையே ஊடகங்களில் பெரிதுபடுத்தி லிம் குவான் எங் பேசுகின்றார். சட்ட ரீதியில் மேம்பாடாளர்களுக்கு சல்லி காசு கொடுக்க வேண்டியதில்லை! காரணம், நிலம் ஏமாற்றி விற்கப்பட்டதற்கான ஆதாரம் (Documentary Evidence) நிரம்ப உண்டு! ஏன் பாக்காதான் இவ்விடயத்தில் வாளாவிருக்கிறது?

9) இப்பொழுது மட்டும் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை தலையில் தூக்கிக் கொண்டு ஆடும் பாக்காதான், ஒரு காலத்தில் எத்தனை முறை நீதிமன்ற முடிவுகள் குறித்து தங்களின் அதிருப்திகளை தெரிவித்திருப்பார்கள்! அதேப்போன்று ஏன் கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவை ஒத்திவைப்பதற்கு சட்ட வல்லுநர்களை பயன்படுத்தவில்லை இந்த பக்காதான்? நீதிமன்ற முடிவை ஒத்திவைத்து மேலும் நில மோசடி தொடர்பான விசாரணையை தொடரலாமே? முடியாதா என்ன?

10) அம்னோவுடன் தொடர்புகொண்ட நுஸ்மெட்ரோ வெஞ்சூர்ஸ் எனும் நிறுவனத்தின் முக்கிய புள்ளி, பினாங்கில் 4 மில்லியன் செலவில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் தலைமையகக் கட்டிடத்தை கட்டிக் கொடுக்க சம்மதம் அளித்துள்ளதாகவும், அதனால்தான் பக்காதான் வாயை மூடிக்கொண்டிருக்கிறது எனவும் சில வதந்திகள் பரவுகின்றனவே, அது உண்மையா?

11) ஹெலன் மார்கிரேட் பிரவுன் இந்நிலத்தை அங்குள்ள மக்களிடம் கொடுத்து (Strait Settlement ) அரசாங்கத்தை Trustee-யாக வைத்துவிட்டுச் சென்றார். மலாயா சுதந்திரம் அடைந்ததும் நீரிணை மாநில அரசுகளின் சொத்துகள் முறையே மத்திய அரசாங்கத்தையே சாரும். இவ்விடயத்தில்புவா பாலாநிலத்திற்கு முறையே மத்திய அரசாங்கம்தான் ‘Trustee’. மாநில அரசு இந்நிலத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொண்டதற்கான ‘Documentary Evidence” எதுவும் இல்லாத பட்சத்தில் மாநில அரசு எப்படிபுவா பாலாநிலத்தை அம்மக்களுக்கே தெரியாமல்கோப்பராசிக்கும்’, கோப்பராசியிடமிருந்து நுஸ்மெட்ரோவிற்கும் கைமாற்றியது?’ இவ்விவகாரத்தில் முறையே பாரிசானும் பக்காதானும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஏன், இந்நிலமோசடி குறித்து பக்காதான் ஆட்சிக்கு வந்தவுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை? ஏன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை?

12) தொடர்ந்தாற்போல் மேம்பாட்டாளருக்கு ஆதரவாகவே இருந்துவரும் பாக்காதானிடம் இறுதியாக ஒரு கேள்வி, பாக்காதான் ராக்யாட் மேம்பாட்டாளருக்கு நண்பனா? அல்லது மக்களுக்கு நண்பனா?

விஜய பரத் முதலில் இக்கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கட்டும். ஓட்டு பொறுக்குவதை பின்பு பார்த்துக் கொள்ளலாம். மக்களுக்கு சட்டம் தெரியாது என்ற இறுமாப்பில் பாரிசானும் பாக்காதானும் மேம்பாட்டாளர்களுடன் இணைந்துகொண்டு என்னென்ன ஆட்டம் ஆடுகிறார்கள் பாருங்கள்!


பரிந்துரை : அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்

What are the options now for the PR Government on the Kampong Buah Pala issue?

Guan Eng on Buah Pala and Bukit Cina - see any difference

போராட்டம் தொடரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP