Showing posts with label தோட்டப்புற மக்கள். Show all posts
Showing posts with label தோட்டப்புற மக்கள். Show all posts

லண்டன் வழக்கு மலேசிய அரசை இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கலாம்

>> Monday, March 30, 2015

இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சிந்திய வியர்வைக்கும் இரத்திற்கும் நீதி கேட்கும் உரிமைப் போராட்டம்தான் இந்த லண்டன் வழக்கு: வேதமூர்த்தி

மலேசிய அரசியல் சாசனம் 1957-இல் வரையப்பட்டபோது, இந்தியர்களின் நலனையும் மற்ற இனத்தினரின் பாதுகாப்பையும் பிரிட்டிஷ் அரசு அடியோடு புறக்கணித்து விட்டதாக ஹிண்ட்ராஃப் தொடர்ந்துள்ள சிவில் வழக்கு, இலண்டன் உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருக்கின்ற நிலையில் இது, மலேசிய அரசை இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கலாம்; ஆனால், ஹிண்ட்ராஃப்-பின் நோக்கம் அதுவல்ல என்று இவ்வழக்கு தொடர்பாக இலண்டன் மாநகரில் முகாமிட்டுள்ள ஹிண்ட்ராஃப் தலைவர் பொ.வேதமூர்த்தி அங்கிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்திய தோட்டத் தொழிலாளர்களை அப்போதைய பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டே புறக்கணித்ததால், மலாயா இந்தியத் தொழிலாளர்கள் சொல்லவொண்ணா துயரத்திற்கு ஆளானதுடன், மலேசியாவில் வாழ்கின்ற மற்ற இனத்தினரின் ஓர் இளப்பமான பார்வைக்கும் ஆளான நேர்ந்தது.

ஏறக்குறைய 8 இலட்ச பாட்டாளிகள் இடம்பெயர வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளானதுடன், அவர்கள் வேலையை இழந்து, இருப்பிடம் இன்றி மொத்தத்தில் வாழ்வாதாரத்தைத் தொலைத்து நகர்ப் புறாத்தில் அல்லல்பட நேற்ந்தது. அத்துடன், ஏறக்குறைய 3 இலட்ச மலேசிய இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக ஆயினர். மொத்தத்தில் சுதந்திர மலேசியாவின் தேசிய பொருளாதார மேம்பாட்டில் இந்தியர்கள் ஒதுங்கி நிற்க நேர்ந்தது.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சுதந்திர மலேசியாவில், அம்னோ தலைமையிலான கூட்டணி அரசு, இன அடிப்படையிலும் ஏற்றத் தாழ்வு மனப்பான்மையிலும் செயல்படுவதற்கு பிரிட்டிஷ் ஆட்சியினர்தான் அடித்தளமிட்டனர் என்பதை மையக் கருத்தாகக் கொண்டுதான் ஹிண்ட்ராஃப் தொடுத்துள்ள வழக்கு இன்று மார்ச் 30-ஆம் நாள் விசாரணைக்கு வருகிறது என்று வேதமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய இந்தியப் பாட்டாளி சமுதாயம் எதிர் கொண்ட துயரத்திற்கும் நட்டத்திற்கு பிரிட்டிஷ் அரசு பொறுப்பாக முடியாது என்று இந்த வழக்கை பிரிட்டிஷ் அரசு எதிர்க்கலாம. அதேவேளை, பிரிட்டிஷ் அரசுதான் பொறுப்பு என்பதற்கு ஹிண்ட்ராஃப் ஆயிரக் கணக்கான ஆவணங்களைத் திரட்டியுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குடியேற்ற நிலம் வழங்குவதாக வாக்குறுதி தந்த அந்நாளைய பிரிட்டிஷ் நிர்வாகம் அப்பட்டமாக ஏமாற்றி விட்டது. கடல் பயணத்தின்போதும் மலாயாவின் காடுகளை அழித்து நிலத்தைத் திருத்தியபோதும் ஏறக்குறைய ஒரு இலட்சப் பாட்டாளிகள் மடிந்தனர். இதையும் பிரிட்டிஷ் அரசு மூடி மறைத்துவிட்டது.

மலாயாவின் பொருளாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கிய இரப்பர் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றியவர்கள் இந்தியத் தொழிலாளர்கள், குறிப்பாக தமிழர்கள். அத்துடன், நாடு முழுக்க இரயில் தண்டவாளங்களை அமைத்தது, கட்டடங்களை நிர்மானித்ததெல்லாம் தமிழர்கள்தான். குறைந்த சம்பளத்துடனும் அடிப்படை வசதிகூட இல்லாமலும் பாடுபட்ட தொழிலாளர்களுகாகக் குரல் கொடுத்த சமூகத் தலைவர்களான கணபதி, வீரசேனன் போன்றோரை கம்யூனிசவாதிகள் என்று முத்திரை குத்தி, அவர்களை தூக்கிலிட்டு கொன்றதும் பிரிட்டிஷ் அரசுதான்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மஇகா தலைவர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் கூட மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்காமல், அதிகார வர்க்கத்துடன் சமரசம் கண்ட தலைவர்களாக இருந்தனர்.
இன்னும் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ், பிரிட்டிஷ் நிர்வாகத்தில் இருந்த தோட்டங்களில் பிறந்த நம் முன்னோர், ‘1948 பிரிட்டிஷ் குடியுரிமை(தேசிய)ச் சட்ட’த்தின்படி பிரிட்டிஷ் பிரஜைகளாவர்.

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் பிரிட்டிஷ் அரசு தன் கடமையிலிருந்தும் பொருப்பில் இருந்தும் விலகிக் கொண்டதற்காக, குறிப்பாக நம் முன்னோர் சிந்திய இரத்தத்திற்கும் வியர்வைக்கும் நியாயத்தையும் நீதியையும் கேட்கும் உரிமைப் போராட்டம்தான் இந்த சிவில் வழக்கு என்று பொ.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பொ. வேதமூர்த்தி
தலைவர் - ஹிண்ட்ராஃப்

Read more...

”சயாம் - பர்மா மரண ரயில் பாதை” ஆவணப்படத் திரையிடல்


நாடோடிகள் கலைக்குழுவின் தயாரிப்பில் வெளிவந்துள்ள சயாம் - பர்மா மரண ரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) எனும் ஆவணப்படம் எதிர்வரும் 25-ஆம் தேதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமையன்று மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை பினாங்கு ரெக்சம் சீமியோ மண்டபத்தில் திரைக்காணவுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து இத்திரையிடல் நிகழ்ச்சியை சிறப்பித்து பயன்பெறுமாறு விழைகிறோம். இந்நிகழ்ச்சிக்கான நுழைவு முற்றிலும் இலவசம்.

நிகழ்ச்சி நிரல் :-

மாலை
5.30 : தேநீர் விருந்துபசரிப்பு
5.50 : நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் உரை
6.00 : கவிதைப் படைப்பு
6.05 : திரு.ராஜ்சங்கர் உரை (ஆவணப்பட இணை இயக்குநர்)
6.10 : ‘சயாம் - பர்மா மரண ரயில் பாதை’ ஆவணப்படம் திரையிடல்

இரவு
7.15 : கேள்வி & பதில் அங்கம்
7.45 : முடிவுரை / நிகழ்ச்சி நிறைவடைதல்

(நிகழ்ச்சி நிரல் ஏற்பாட்டாளரின் வசதிக்கேற்ப மாற்றம் காணலாம்)

இவ்வாவணப்படம் குறித்த சில தகவல்களுக்கு கீழ்கண்ட வலைத்தள தொடுப்பினை சுட்டவும் : http://www.jeyamohan.in/68380#.VRjFpPmUd8E

முகநூலின் வழி உங்களின் வருகையை உறுதி செய்ய இத்தொடுப்பைச் சுட்டவும் : https://www.facebook.com/events/635218089954878/

மேலதிக தகவல்களுக்கு : திரு.கனகசுந்தரம் / 017-4155449

Read more...

பினாங்கில் இண்ட்ராஃபின் உண்மை கண்டறியும் பயணம்

>> Saturday, August 27, 2011

அண்மையில் மனித உரிமை வழக்கறிஞரான திரு.சுரேசு குரோவர் மலேசியாவிற்கு வருகைப் புரிந்து பல இடங்களுக்கு பயணம் செய்து இந்திய மலேசியர்களுக்கெதிரான மனித உரிமை மீறல் சம்பவங்களை நேரடியாக கண்டு தகவல்களை திரட்டிச் சென்றுள்ளார். இவையனைத்தையும் இண்ட்ராஃபின் லண்டன் சிவில் வழக்கிற்கு தக்க ஆதாரங்களாகப் பயன்படுத்தவிருக்கின்றனர் லண்டனில் உள்ள சட்டக் குழுவினர். அத்தகைய பயணத்தின் ஓர் அங்கமாக பினாங்கிற்கும் வருகை தந்திருந்தார் திரு.சுரேசு குரோவர். அப்பயணத்தின் சில நிழற்படங்கள் உங்களின் பார்வைக்காக..










Read more...

பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி குறித்த ஆவணப்படம்

>> Thursday, January 6, 2011

பாகம் 1


பாகம் 2


பாகம் 3


பாகம் 4


போராட்டம் தொடரும்...

Read more...

பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி பெற்றோர் நடவடிக்கைக் குழு - நிகழ்நிலை அறிக்கை

>> Monday, August 30, 2010

கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் திகதியன்று பினாங்கு மாநில இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் பத்து கவான்வாழ் பொதுமக்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடந்தேறியது. பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பொருத்தமட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக எதிர்நோக்கிவரும் புதிய கட்டிட நிர்மாணம் குறித்த பிரச்சனையை மையமாக வைத்து அன்றைய நிகழ்வில் பல விடயங்கள் அலசி ஆராயப்பட்டன.

சரியாக மாலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் பத்து கவானைச் சார்ந்த இண்ட்ராஃப் அதரவாளரும் மனித உரிமைக் கட்சியின் உறுப்பினருமான திரு.அண்ணாதுரை சிறு உரையாற்றினார். தற்போது பத்து கவான் மக்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படை பிரச்சனைகளைத் தொட்டு அவர் உணர்ச்சிப்பொங்க கருத்துரைத்தார். அவரையடுத்து பினாங்கு மாநில இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.கலைசெல்வம் வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார். இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் இலக்கு குறித்து ஒளியிழையின்வழி காண்பித்து வந்திருந்த பொதுமக்களுக்கு அவர் விளக்கங்களையும் கொடுத்தார்.

அடுத்த அங்கமாக, நிகழ்வின் கருப்பொருளான ‘பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் எங்கே?’ எனும் தலைப்பில் திரு.கலைச்செல்வம் அப்பள்ளியின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடலைத் தொடக்கி வைத்து வழிநடத்திச் சென்றார். மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் கடந்தகால மற்றும் தற்போதைய நிலை குறித்து ஒளியிழையின்வழி சிறப்பாக எடுத்துக் காட்டி உரையாற்றினார்.

பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் எழுவதற்கான அறிகுறிகள் இதுவரையில் தென்படவில்லை என பல பெற்றோர்கள் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்தினர். அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு அறியப்படுத்தாமலேயே பள்ளியின் நிருவாகமும் ம.இ.காவினரும் சொந்தமாக கட்டிடக் குழுவினைத் தோற்றுவித்துக் கொண்டு இந்நாள்வரை மக்களை ஏமாற்றி வருவதாக அச்சங்கத்தின் முன்னால் துணைத் தலைவர் குற்றஞ்சாட்டினார். புதிய கட்டிட நிர்மாணிப்பிற்காக மத்திய அரசாங்கம் வழங்கிய இரண்டு லட்ச வெள்ளியை கட்டிடக் குழு என்ன செய்தார்கள் என ஒரு கேள்வியையும் எழுப்பினார். ’இனியும் நாங்கள் ஏமாறப்போவதில்லை’ என அனைவரும் ஒரு குரலாக முடிவெடுத்தனர்.

சுமார் 40 நிமிடங்கள் பொதுமக்கள் தங்களின் ஆதங்களை வெளிப்படுத்திய பின், இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் தேசிய மதியாலோசகரான திரு.நா.கணேசன் கலந்துரையாடலின் அடுத்த கட்ட அங்கத்தை தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தினார். பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த பெற்றோர்களின் உரிமைகளைத் தொட்டு அவர் விளக்கமளித்தார். அவ்வுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர்கள் எவ்வாறு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு உதவ முடியும் எனவும் எடுத்துக் கூறினார். உட்பூசல்களில் கவனத்தை சிதறடிக்காது நாம் திட்டமிட்டு வேலைகளைச் செய்து அடுத்தாண்டு சூன் மாத்த்திற்குள் அப்பள்ளியின் கட்டிட நிர்மாணிப்பு பணி தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் தற்போது கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 2 ஏக்கர் நிலத்தின் நிலப்பட்டாவையும் மற்ற முக்கியமான கோப்புகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் பெற்றோர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் எனவும், 2 ஏக்கர் நிலத்தை 5 ஏக்கராக மாநில அரசாங்கத்திடமிருந்து கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

முதற்கட்டமாக, பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்கள் ’நடவடிக்கை குழு’ ஒன்றினை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன்படியே 10 பேர் கொண்ட பெற்றோர் நடவடிக்கை குழு ஒன்று திரு.அண்ணாதுரையின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. அதோடு பத்து கவான்வாழ் பொதுமக்களாகிய 6 பேர் அக்குழுவிற்கு துணையாக இருந்து செயல்பட இணைக்கப்பட்டனர். இந்த 16 பேர் கொண்ட நடவடிக்கை குழு இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் ஆதரவையும் உதவியையும் முழுமையாக ஏற்பதாகவும், வற்றாத ஆதரவினை தொடர்ந்து இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சிக்கு வழங்கப்போவதாகவும் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நடவடிக்கைக் குழு கையொப்பமிட்ட அவ்வுறுதிமொழிக் கடிதத்தை பெற்றோர்களிடமிருந்து திரு.நா.கணேசன் பெற்றுக் கொண்டார்.
இந்த ‘நடவடிக்கை குழு’ எதிர்வரும் ஆகஸ்ட் 26-ஆம் திகதியன்று பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குச் சென்று பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கட்டிடக் குழுவோடு ஓர் அவசர சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு தலைமையாசிரியரிடம் கோரிக்கை வைக்கப்போவதாக முடிவெடுக்கப்பட்டது.

இறுதியாக இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டு சுமார் 9 மணியளவில் இக்கலந்துரையாடல் நிகழ்வு இனிதே முடிவடைந்தது.


இதனிடையே திட்டமிட்டப்படி கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாளன்று காலை 8.45 மணியளவில் ‘பெற்றோர் நடவடிக்கைக் குழு’ இண்ட்ராஃபைச் சார்ந்த திரு.அண்ணாதுரையின் தலைமையில் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாஸ் அவர்களைச் சந்தித்து ஒரு விண்ணப்பக் கடிதத்தைச் சமர்ப்பித்தனர். இக்கடிதம் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கப்படும்போது பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவர் திரு.கணேசன் அவர்களும் உடனிருந்தார்.


அக்கடிதத்தில் நடவடிக்கைக் குழுவிற்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் கட்டிடக் குழுவிற்கும் மத்தியில் ஓர் அவசர சந்திப்புக் கூட்டத்தினை இரண்டு வாரத்திற்குள் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அச்சந்திப்புக் கூட்டம் நடைப்பெறுவதற்கு ஆவண செய்வதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.காளிதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 3-ஆம் நாளன்று திட்டமிட்டப்படி, திரு.அண்ணாதுரை தலைமையில் ‘நடவடிக்கைக் குழுவினர்’ மீண்டும் தலைமையாசிரியரைச் சந்தித்து தற்போதைய நிலவரங்களைப் பெற்றுக் கொள்ள செல்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.








போராட்டம் தொடரும்...

Read more...

காணொளி : பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் எங்கே?

>> Monday, August 23, 2010

நேற்று (ஆகசுட்டு 22, 2010) ஞாயிற்றுக்கிழமையன்று பினாங்கு இண்ட்ராஃப் மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் பத்து கவான்வாழ் பொதுமக்கள் மற்றும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயின்றுவரும் பிள்ளைகளின் பெற்றோர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 8 ஆண்டுகளாக நீடித்துவரும் பத்து கவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிலம் மற்றும் புதிய கட்டிடம் குறித்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக இண்ட்ராஃப் இயக்கம் பொதுமக்களுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டது. அக்கலந்துரையாடலின் இறுதியில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. அந்நிகழ்வின் ஒரு பகுதியை காணொளி வடிவில் இங்கு இணைத்துள்ளேன். அடுத்தாண்டு சூன் மாதத்திற்குள் அப்பள்ளியின் புதிய கட்டிட நிர்மாணப்பணி தொடங்க வேண்டுமென இண்ட்ராஃப் எதிர்ப்பார்க்கிறது.



போராட்டம் தொடரும்...

Read more...

ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்தியர்கள் - ஓர் அடிப்படைப் பார்வை (தொடர்ச்சி)

>> Tuesday, April 20, 2010



முதல் பாகம் : ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்தியர்கள் - ஓர் அடிப்படைப் பார்வை

பல்வகை திறன்களைக் கைவரப் பெறாத நிலையில், குறைந்த சேமிப்பை கொண்டு தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்த தோட்டப்புற சமூகத்தினர், நகர்ப்புறங்களில் ஆங்காங்கே பெருமளவில் புறம்போக்கு நிலங்களிலுள்ள குடிசைகளிலும் மலிந்த விலை வீடுகளிலும் வாழத் தொடங்கினர். இச்சமூகத்தினரில் பெரும்பான்மையினர் கீழ் நிலையிலான தொழில்களில் ஈடுபட்டுவந்ததோடு மட்டுமல்லாது கிடைக்கும் குறைந்த வருமானத்திற்குக்கூட அந்நியத் தொழிலாளர்களுடன் போட்டிப் போடும் சூழ்நிலை ஏற்பட்டது. இவர்களில் இளையோர்கள் பலர் புதிய நகர் வாழ்க்கைச் சூழலிலிருந்து அந்நியப்பட்டு நிற்பதாக கருதி வந்தனர். குறைந்த கல்வி மற்றும் சரியான தொழில் வாய்ப்புகள் அற்ற நிலையில் அவர்களில் சிலர் சமூகச் சீர்கேட்டு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.

ஆகமொத்தத்தில், மலேசியர்களின் சராசரி வருமான ஈட்டுத் தொகையிலிருந்து 30 சதவிகிதம் மட்டுமே வருமானமாக ஈட்டும் ஏழை இந்தியர்களை இரு வகுப்பாகப் பிரிக்கலாம். முதல் வகுப்பைச் சார்ந்தவர்கள், தோட்டப்புறங்களில் வசித்துக்கொண்டும் அங்கேயே தொழில் செய்துகொண்டும் இருப்பவர்களாவர். இந்த வகுப்பினர் எந்தவொரு அரசாங்கத்தின் புறநகர் மேம்பாட்டுத் திட்டங்களிலும் இணைக்கப்படாதவர்களாவர். இரண்டாம் வகுப்பைச் சார்ந்தவர்கள், ஆரம்ப வாழ்க்கையை ரப்பர் தோட்டங்களில் தொடங்கி தற்போது நகர்ப்புறங்களில் அல்லது நகர்ப்புற அருகில் வசித்து தொழில் புரிந்து வருபவர்களாவர். இக்கட்டான சூழ்நிலையிலுள்ள ஏழை நகர்ப்புற இந்தியர்களும் மற்றும் பிற இன நகர்ப்புற ஏழைகளுமே ஒன்பதாவது மலேசிய திட்டத்தின்கீழ் உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய வகுப்பினர் ஆவர்.


இவ்விரு வகுப்பினரும் எதிர்நோக்கிவரும் இக்கட்டான சமூகப் பொருளாதார பிரச்சனைகளை அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருந்தபோதிலும், இச்சமூகத்தினரை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் திட்டங்களையோ அல்லது மானிய ஒதுக்கீடுகளையோ போதுமானதாக அரசாங்கம் அமைத்துக் கொடுக்கவில்லை. இச்சமூகத்தின் எதிர்ப்பார்ப்புகள் ஒன்பதாவது மலேசியத் திட்டத்தில் நிறைவேற்றப்படவேண்டியது அவசியமாகிறது. புறநகர் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளில் சிறப்புக் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணித்திட்டங்கள் ஆகியன இவர்களை இலக்காகக் கொண்டு ஏற்படுத்தப்பட வேண்டும். இச்சமூகத்தினர் பலடனடையும் வகையில் புதிய திட்டங்களானது செயல்வடிவம் கொள்வதை உறுதிச் செய்தலும் திட்ட வளர்ச்சி குறித்த அளவீடும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதே சமயத்தில் முறையான செயலாக்கம் மற்றும் அமுலாக்கக் கண்காணிப்பு திட்ட வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன.

மலேசிய இந்திய சிறுபான்மையினரை நாட்டின் முக்கிய வளர்ச்சித் திட்டத்தில் பங்கெடுக்கவைக்கும் முக்கியத் திட்டங்களை பொதுக் கொள்கைகள் ஆய்வு மையம் முன்வைக்கின்றது. நாட்டின் முக்கியத் துறைகளில் இவர்களை ஈடுபடுத்துவதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிதி ஒதுக்கீடுகள் கொண்டுவரப்பட வேண்டும். அதோடு, அமைச்சின் நேரடிப் பார்வையில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் திட்டங்கள் பாதிக்கப்பட்ட இந்திய சமூகத்தைச் சென்றடைவதை உறுதிச் செய்ய வேண்டும். தோட்டப்புறங்கள் அருகிலுள்ள கையிருப்பு நிலங்களை தோட்டப்புறத் தொழிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு சிறப்பாக ஒதுக்கி அவர்கள் விவசாயம் அல்லது கால்நடை வளர்ப்புத் தொழிலை மேற்கொள்வதற்கு ஆவண செய்ய வேண்டும். அதோடு, தோட்டப்புற சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு கூட்டு முறையிலான விவசாயத் திட்டங்கள், கால்நடை வளர்ப்புத் திட்டங்கள், உணவு உற்பத்தி, அழகுப் பூக்கள் நடவு மற்றும் விற்பனை போன்ற திட்டங்களுக்காக அரசாங்கம் சிறப்பு நிலத்திட்டங்களை கொண்டுவர வேண்டும்.

மேலும் இளையோர்கள் எதிர்நோக்கும் சமூகச் சீர்கேடுகளை குறைப்பதற்கு ஒன்பதவாது மலேசியத் திட்டத்தின்கீழ் சிறார் பராமரிப்பு மையங்களை எழுப்புவதற்கும், குறைந்த வருமானம் கொண்டவர்கள் வசிக்கும் இடங்களில் குறிப்பாக மலிவுவிலை மாடிக் குடியிருப்பு இடங்களில் பாலர்ப் பள்ளிகளை எழுப்புவதற்கும் அரசாங்கம் தாராள நிதி ஒதுக்கீட்டினைச் செய்ய வேண்டும். குறைந்த வருமானமுடைய குடும்பத்திலுள்ள இந்திய மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முழு மானியம் பெறாத அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் முழு மானியம் பெறும் பள்ளிகளாக அரசாங்கம் மாற்ற வேண்டும். இவற்றைத் தவிர்த்து, நகர்ப்புறத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அரசு சாரா இயக்கங்களைப் பயன்படுத்தி சிறப்புப் பயிற்சித் திட்டங்கள், வாழ்க்கைக் கல்விகளான தொழிற்திறன் மற்றும் வியாபாரத் திறன் குறித்த பயிற்சிகளை தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்த இளையோர்களுகு வழங்க வேண்டும்.

ஏழை இந்திய சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்கு கல்வி முக்கியப் பங்காற்றுவதால், தரமான ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேற்கல்விக்கான வாய்ப்புகள் இவர்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கும் இந்திய இளையோர்களுக்கு கல்வி மேற்கொள்ள இடங்கள் மற்றும் சிறப்பான வாய்ப்புகள் கிடைத்திட அரசாங்கம் முறையான நிதி ஒதுகீடுகள் செய்ய வேண்டும். இதன்வழி இவர்கள் நாட்டின் மனிதவள மேம்பாட்டிற்கு சரிசமமான பங்கை ஆற்றமுடியும். இறுதியாக தொழில் முனைவர் மேம்பாட்டிற்கென சிறப்பு நிதி ஒதுக்கீடு மிக முக்கியமாகும். ஒதுக்கப்படும் இந்நிதியின்வழி சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவர்கள் சுலபமாக ஊக்குவிப்புக் கடன் பெற்று வியாபாரம் தொடங்கி சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிக்கோல வாய்ப்பு உள்ளது. அதே சமயம், நாட்டின் மொத்த பொருளாதார சொத்து மதிப்பில் இந்திய சமுதாயத்தின் பங்கு விழுக்காடு 3 சதவிகிதத்தை எட்டுவதற்கு இத்திட்டங்கள் உதவி புரியும்.

Read more...

ஓரங்கட்டப்பட்ட ஏழை இந்தியர்கள் - ஓர் அடிப்படைப் பார்வை



மூலம் : சிறுபான்மை இனத்தவருக்கான வெற்றிகரமான குறியிலக்கை உறுதிச் செய்தல் : குறைந்த வருமானம் பெறும் மலேசிய இந்தியர்கள், ஒரு பார்வை. (பொதுக் கொள்கைகள் ஆய்வு மையம்)

1970-ஆம் ஆண்டுகள் தொடங்கி செயல்முறைப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் பெருந்திட்டங்களின் வரைவுகளை ஆய்வு செய்யும்பொழுது, குடிப்பெயர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள ஏழை கிராமப்புற இந்தியர்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதை பலகாலமாகவே அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருப்பதாகக் காட்டுகிறது. இந்நிலைமை குறித்த விழிப்புணர்வு இருப்பினும், நாளுக்கு நாள் பெருகிவரும் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக குறைந்த அளவிலான சில திட்டங்களே அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அதே சமயம், குறைந்த வருமானம் பெரும் இந்திய சமுதாயத்தினரின் ஏற்றத்திற்கு மானியத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதிகளும் அவை சென்றடைந்த வழிகளும் நிலைமையை சரி செய்வதில் தோல்வியடைந்துள்ளதைக் காட்டுகிறது.

பெரும்பான்மை இந்தியர்கள் சமூக-பொருளாதார ரீதியில் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் தோட்டப்புறங்களில் நிலவிய பொருளாதாரச் சூழ்நிலைதான். சில பரம்பரைகளாகவே வேலை வாய்ப்பிற்கும், குடியிருப்பு வசதிக்கும் இந்திய வம்சாவளியினர் தோட்டப்புற ஆலைகளை நம்பியிருந்த சூழ்நிலை இருந்து வந்தது. இந்த தோட்டப்புற தொழிலாளர்கள் குறைந்த வருமானம் பெருபவர்களாகவும், அடிப்படை வசதிகள் குறைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களாகவும், முறையான மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் அற்றவர்களாகவும் அதே சமயம், அவர்களின் பிள்ளைகள் குறைந்த அடிப்படை வசதிகள் கொண்ட தமிழ்ப் பள்ளிகளில் தங்களின் ஆரம்பக் கல்வியைப் பெறும் சூழ்நிலையும் இருந்து வந்தது. தோட்டப்புறங்களும் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என அரசாங்கத்தால் முத்திரைக் குத்தப்பட்டதன் விளைவாக, 70-ஆம் மற்றும் 80-ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் புறநகர் மேம்பாட்டுத் திட்டங்கள் தோட்டப்புற மக்களைச் சென்றடையவில்லை. இருப்பினும், தோட்டத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் என அரசாங்கம் வகைப்படுத்தியிருந்ததால், தோட்டப்புற குடியிருப்பு வசதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு சிறப்புத் திட்டங்களை அமுல்படுத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டு மிகக் குறைந்த அளவிலேயே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

1980-ஆம் ஆண்டு தொடங்கி நாட்டின் பொருளாதாரம் அதிவேகத்தில் முன்னேற்றத்தைக் கண்டுவந்த வேளையில், தோட்டப்புற இந்திய சமூகம் நாட்டின் பொருளாதார வெள்ளோட்டத்திலிருந்து பின்தள்ளப்பட்டும் அனைத்துவிதமான மேம்பாட்டுத் திட்டங்களிலிருந்து ஒதுக்கப்பட்டும் பாதிப்பிற்குள்ளாயினர். கடந்த 20 ஆண்டுகளில் புதிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கும் தோட்டப்புற நிலங்கள் துண்டாடப்பட்ட சமயங்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை இந்தியர்கள் குடிப்பெயர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தோட்டப்புறங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இவர்கள் தங்களின் வருமானம் ஈட்டும் தொழிலை மட்டும் இழக்கவில்லை, மாறாக, மேலும் முக்கியமாக குடியிருப்பு, வாழ்ந்தச் சூழல், அடிப்படைச் சலுகைகள், சமூக-கலாச்சார தொடர்புடைய வசதிகள் மற்றும் காலங்காலமாக தோட்டத் தொழிலாளர் சமூகம் கட்டியெழுப்பிய சமூக வலுவாக்க அரண் போன்றவற்றை இழக்க நேரிட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாது, தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் குடும்ப வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக தோட்ட நிறுவனம் வழங்கிய சிறு விவசாய நிலங்கள், கால்நடை வளர்ப்புக்கு வழங்கிய நிலங்கள் போன்றவற்றையும் இழந்துள்ளனர். தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு குடியமர்வு செய்யப்படும் தோட்டத் தொழிலாளர்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்நோக்குவார்கள் என்பது முன்பே அறியப்பட்ட விடயமாகும். பெருமளவிலான கட்டாயக் குடியமர்விற்கு ஆளான தோட்டத் தொழிலாளர்கள் உளவியல் ரீதியில் பல பிரச்சனைகளையும் எதிர்நோக்கிய வேளையில், இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எந்தவொரு திறன் பயிற்சிகளையும் வழங்கியோ அல்லது மேம்படுத்தப்பட்ட குடியிருப்புச் சூழலில் இவர்களை மறுகுடியமர்வு செய்ததோ கிடையாது.

தொடரும்...

Read more...

இந்திய சமுதாயம் எதிர்ப்பார்ப்பது என்ன? - உதயகுமார், ஆறுமுகம் விளக்கம்

>> Monday, April 12, 2010



Read more...

சொந்த நாட்டிலேயே கள்ளக்குடியேறிகளைப்போல் வாழ்க்கை!

>> Wednesday, March 17, 2010

ஏழை இந்திய மலேசியர்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சனைகளில் முதன்மையாகத் திகழ்வது பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாமை எனும் பிரச்சனைதான். சொந்த நாட்டிலேயே சுமார் ஒரு லட்சம் இந்திய மலேசியர்கள் கள்ளக்குடியேறிகளைப் போல் வாழ்ந்து வருகிறார்கள் என புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன. நாளுக்கு நாள் இப்பிரச்சனை தொடர்ச் சங்கிலியைப்போல் நீண்டுகொண்டே செல்கிறது.

அண்மையில் இண்ட்ராஃப் தலைமையிலான பிரித்தானிய மக்களவை கருத்தரங்கு நிகழ்வில், ஒரு தமிழர் குடும்பத்தின் அவல நிலையினை திரு.நரகன் பங்கேற்பாளர்களிடம் விளக்கிக்காட்டி, ஏழை இந்திய மலேசியர்கள் எவ்வாறு ஓரங்கட்டுதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதனை நன்கு படம்பிடித்துக் காட்டியிருந்தார்.

பினாங்கில் கம்போங் பாகான் செராய், பெர்மாத்தாங் பாவோ எனுமிடத்தில் மிக வரிய நிலையில் வாழ்க்கையை ஓட்டிவரும் அக்குடும்பத்தினரின் நேர்க்காணலின் ஒரு பகுதி இதோ :-

பாகம் 1

பாகம் 2


போராட்டம் தொடரும்...

Read more...

துவான், தவுக்கே அதிகாரத்தில் கட்டுண்டுகிடக்கும் இந்திய மண்டூர்கள் பதவி விலகட்டும்!

>> Tuesday, March 9, 2010

அங்கொன்றும் இங்கொன்றுமாக ரொட்டித் துண்டுகளைக் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பக்காதான் அரசாங்கம் ஆட்சி செலுத்தும் நான்கு மாநிலங்களில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் நிரந்தர நிலப்பட்டா உடனடியாக கொடுக்கப்பட வேண்டும்!

தொடர்ந்து மண்டூர்களிடம் கையேந்தி நிற்கும் சூழல்கள் வேலைக்காகாது!

யாரை அதிகமாக நம்பி மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் ஓட்டுப் போட்டார்களோ, அவர்களைத்தான் நாம் வலியுறுத்திக் கேட்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

ஏன், அம்னோவைக் கேட்கவில்லை, மஇகாவைக் கேட்கவில்லை என்று கதையை திசைத்திருப்புவதை விடுத்து, முதலில் மக்கள் கூட்டணி ஓரங்கட்டப்பட்ட இந்தியர்களின் தேவைகளையும் உரிமைகளையும் புரிந்து கொண்டு அதற்கானத் தீர்வை கொண்டுவர வேண்டும்.

அதன் முதல்கட்டமாக, பக்காதான் ஆட்சி புரியும் நான்கு மாநிலங்களில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் நிரந்தர நிலப்பட்டாவை மாநில அரசுகள் எழுத்துப்பூர்வமாகக் கொடுக்க வேண்டும்.

இதோ நிலம் என்று கைக்காட்டுவது, ரொட்டித் துண்டுகளைப் போட்டுவிட்டு நாளிகைகளில் விளம்பரப்படுத்துவது, புதிய தமிழ்ப்பள்ளி கட்டப்படும் என்று வெற்று அறிக்கை விடுவது போன்ற மக்களைக் குழப்பும் நடவடிக்கைகளில் இனியும் மக்கள் கூட்டணி அம்னோவைப்போல் செயல்படக் கூடாது.

நில விவகாரங்கள் அனைத்தும் முற்றிலும் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பட்சத்தில் உடனடியாக தமிழ்ப்பள்ளிகளின் நில விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி சிறுபான்மை இந்தியர்களின் உரிமைகளோடு மக்கள் கூட்டணி அம்னோவைப்போல் இனியும் விளையாடக்கூடாது!

அடுத்த பொதுத்தேர்தலில் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றியவுடன் இதற்கான தீர்வைக் காண்கிறோம் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம்! அடுத்தப் பொதுத்தேர்தலில் கையில் இருக்கும் நான்கு மாநிலங்களும் உருப்படியாக நிலைத்து நிற்குமா என்று உறுதி கூறமுடியாத நிலையில், உடனடியாக 53 வருடங்களாக இந்திய மலேசியர்கள் எதிர்ப்பார்த்த தமிழ்ப்பள்ளி நில விவகாரங்கள் முழுமையாக தீர்க்கப்பட்டுவிட வேண்டும் என்பதே இந்தியர்களின் கோரிக்கை!

இதனை மக்கள் கூட்டணி தலைவர்களிடம் அமர்ந்து பேசுவதற்கு ஒரு சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு முறையான கடிதம் வழங்கிய மனித உரிமைகள் கட்சி / இண்ட்ராஃப் இயக்கத்திற்கு எந்தவொரு மறுகடிதமும் கிடைக்காத பட்சத்தில், கடந்த 7/03/2010 அன்று இண்ட்ராஃப் கெஅடிலான் தலைமையகத்தின் முன்பு அமைதி மறியலை மேற்கொண்டது. இவர்களின் முயற்சியை மேலும் களங்கப்படுத்தும்வகையில், சில மண்டூர்களை கெஅடிலான் தலைமையகத்தின் முன்பு நிறுத்தி வைத்தது கண்டிக்கத்தக்கதாகும். ஓர் இந்தியனைக் கொண்டு மற்றொரு இந்தியனை சமாதானப்படுத்துவது, மோதவிடுவது, சமரசம் பேசுவது போன்ற அம்னோ வழியை மக்கள் கூட்டணியும் கையாண்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்!



போராட்டம் தொடரும்...

Read more...

நீதி கேட்கும் முன்னாள் நிக்கோ தொழிற்சாலை ஊழியர்கள்!

>> Tuesday, February 9, 2010

பாகம் 1



பாகம் 2


Read more...

பினாங்கு பிறையில் தேய்பிறையாகும் கம்போங் மானீசு இந்தியர்களின் எதிர்காலம்!

>> Wednesday, December 30, 2009

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஓரங்கட்டப்பட்ட கம்போங் மானீசு இந்திய கிராமவாசிகளின் சோகக் கதையிது. தகுதியிருந்தும் உதவிகள் கிடைக்காது ஏழ்மையில் வாடும் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக தொக்கி நிற்கிறது. புவா பாலா கிராமத்தைப்போலவே இக்கிராமமும் எதிர்காலத்தில் உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அரசியல் பலமில்லாத இம்மக்களுக்கு அதிகாரத்துவத்திடமிருந்து உரிய உரிமைகளைப் பெற்றுத் தர முடியுமா?

Read more...

ஓரங்கட்டப்படும் மலேசிய இந்தியர்கள் - பாகம் 1

>> Wednesday, December 2, 2009

இந்தத் தொடரின் வழியாக மலேசிய இந்தியர்கள் எப்படியெல்லாம் ஓரங்கட்டப்படுகின்றனர் என்பதனை படம் பிடித்துக் காட்ட விரும்புவதோடு, எப்படியெல்லாம் அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பனவற்றை அடுக்கடுக்கான விளக்கங்களோடு விவரிக்கவுள்ளேன். மலேசிய இந்திய ஏழை சமூகத்திற்கு எதிராக நடந்தவையெல்லாம் தவிர்க்கவியலாத காரணங்கள் என பரவலாக நிலவிவரும் மாயையை எனது தொடர் கட்டுரையின்வழி உடைத்தெறியவிருக்கிறேன். இச்சமூகத்தினரிடையே நற்பண்புகள் குறைந்திருப்பதாகவும், சமய அறிவு அற்றவர்களாகவும், அளவுக்கதிகமாக ஆஸ்ட்ரோ பார்த்துக் கொண்டிருப்பவர்களாகவும், அடிப்படையில் வன்முறை கொண்டவர்களாகவும் மற்றும் இன்னும் பலவிதமான மாயாவாத காரணியங்களை நம் சமூகத்திலுள்ளவர்களும் பிற சமூகத்தைச் சார்ந்த தற்காலத்திய தத்துவவாதிகள் நிறுவி நம்மை நம்பச் செய்கின்றனர்.

இதோ முதல் பகுதி

இத்தொடரை நன்கு விளங்கிக் கொள்ள சில அடிப்படை தகவல்களோடு துவங்கலாம் என நினைக்கிறேன்.

மலேசியாவின் அடிப்படைத் தரவு
இனவாரியான மக்கட் தொகை கணக்கெடுப்பு, 2009



மேற்காணும் பட்டியலில் மலேசிய இந்தியர்களின் தற்போதைய மொத்த எண்ணிக்கை 7.4 சதவிகிதம் என மலேசிய புள்ளிவிவர இலாகா தகவல் வெளியிட்டுள்ளது. இதில் மலேசிய இந்தியர்களின் எண்ணிக்கையானது தனித்தன்மை வாய்ந்த சிறுபான்மையினர் குழாம் எனத் தெளிவாகத் தெரிகிறது.

நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றுவரை நாட்டு மொத்த உற்பத்தியில் தனி நபரின் ஆண்டு வருமானமானது 1960-ஆம் ஆண்டில் ரிம2500லிருந்து 2008-ஆம் ஆண்டிற்குள் ரிம15000 வரை உயர்ந்துள்ளது. இது ஒரு கணிசமான உயர்வு என்றே கொள்ளலாம். அடிப்படையில் நாட்டின் பொருளாதாரமானது கொள்முதல் பண்டங்கள் உற்பத்தி மற்றும் வேளாண்பொருளாதாரத்தையே (ரப்பர் மற்றும் செம்பனை எண்ணெய் உற்பத்தி) நம்பியிருந்த காலம்போய், தற்போது தயாரிப்புத் துறையை சார்ந்திருக்கும் பொருளாதாரத்தை நம்மால் காண முடிகிறது.

கீழ்காணும் அட்டவணையைக் காண்க :



நாட்டின் வளப்பத்திற்கு அச்சாணியாகவும் நவீன விவசாய உற்பத்தியாகவும் கருதப்பட்ட ரப்பர் உற்பத்தித் துறையில் மலேசிய இந்தியர்களின் பங்கு அளப்பரியதாகும். மலேசிய இந்தியர்களில் பெரும்பாலானோர் ரப்பர் தோட்டங்களில் மரம் சீவும் உடலுழைப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். விவசாயத் துறை என்றாலே உணவு உற்பத்தி என்ற நிலையை மாறச் செய்து பெரும் முதலீடுகளை ஈர்த்து பணம் ஈட்டும் ஒரு துறையாகவும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வரும் ஒரு துறையாக ரப்பர் உற்பத்தித் துறை விளங்கத் தொடங்கியது. ரப்பர் உற்பத்தித் துறை வளர்ச்சி பெற்றுவந்த காலக்கட்டங்களில் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு பெருமளவில் மாற்றத்தை அடைந்து புதியதொரு பரிணாமத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது. நடவுத் தொழிலைச் சார்ந்திருந்த பொருளாதாரம் மெல்ல மெல்ல தொழிற்சாலை உற்பத்தியை சார்ந்திருக்கும் பொருளாதார நிலைமைக்கு தன்னை இட்டுச் செல்ல வழி அமைத்துக் கொண்டது. ஆங்காங்கே புதிய தொழிற்சாலைகள் பல தோன்றத் தொடங்கியதிலிருந்து ரப்பர் தோட்டங்களை நம்பியிருந்த பொருளாதாரம் தொழிற்சாலைகளை மையப்படுத்தி வளரத் தொடங்கியது. இதன்வழி நாட்டின் பெரும்பணம் ஈட்டும் முதன்மை துறையாக தொழிற்சாலை உற்பத்தித் துறை இடம்பெற்றது.

பொருளாதார நிலைமை பெரும் மாற்றத்தை கண்டுவந்த அதே சமயம் நாட்டின் அரசியல் நிலைமையும் பெரும் மாற்றத்தைக் கண்டுவந்தது. நம் நாட்டின் முக்கிய அரசியல் பரிணாமங்களை நான்கு கட்டங்களாக வகுக்கலாம், அதாவது 1957 முதல் 1969வரை, 1969 முதல் 1981வரை, 1981 முதல் 2004வரை, 2004 முதல் 2008வரையாகும். ஒவ்வொரு கட்டங்களும் வரலாற்று பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு, அவை நம் நாட்டின் தலையெழுத்தை மாற்றி எழுதிய சம்பவங்களோடு பிணைத்து, அவை ஏற்பட்டதற்கான காரணங்களையும் விளக்கிக் காட்ட வல்லவையாகும்.

இவ்வளவு பரிணாமங்களுக்கு இடையில் மலேசியாவின் சிறுபான்மையினராக விளங்கும் மலேசிய இந்தியர்கள் நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக முன்னேற்றங்களிலிருந்து திட்டமிட்ட தேசியக் கொள்கைகளினால் வெளிப்படையாகவே ஓரங்கட்டப்பட்டு வந்தனர்.

மலேசியா அடைந்துவந்த துரிதமான பொருளாதார வளர்ச்சியின் பலனாக குறிப்பிட்ட சில இனங்களுக்கு கிடைத்துவந்த பலவிதமான உதவிகளைப் போலவே மலேசிய இந்தியர்களுக்கு சரிசமமான உரிய பங்கீடு ஒதுக்கப்படவில்லை. இந்தத் தொடரின்வழி மலேசிய இந்தியர்களில் ஏழை வகுப்பினர் நாட்டின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எந்தெந்த ரீதியில் புறக்கணிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு வந்தனர் என்பதனையும், எதனால் அவர்கள் ஓரங்கட்டுதலுக்கு ஆளானார்கள் என்பதனையும் விளக்க முயல்கிறேன்.

பெரும்பாலும் நமக்கு சில உண்மைகள் தெரியும். ஆனால், நமக்குத் தெரிந்தவை அங்கும் இங்கும் நிகழ்கிற சில சம்பவங்கள், மற்றும் திரிந்துபோன சில செய்திகளை மட்டுமே நாம் அறிந்து வைத்திருக்கிறோம். நான் செய்யவிருப்பது என்னவென்றால், ஆங்காங்கே நடந்த பல்வேறு சம்பவங்களை இணைத்து, புள்ளிகளை இணைத்துப் பார்த்து அவை சொல்லும் உண்மைகளை ஒரு பெரிய படமாக வரைந்து அதன் பின்புலங்களை உங்களுக்குத் தெளிவாக காட்டவிருக்கிறேன்.

ஆனால், முதலில் ’ஓரங்கட்டப்படுதல்’ என்ற பதத்தின் அர்த்தத்தை சற்று விளக்கிவிடுகிறேன்.

சமூகவியல் பார்வையில் ‘ஓரங்கட்டப்படுதல்’ என்றால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை கட்டங்கட்டமாக சில அதிரடி மறைமுக செயல்முறைகளின்வழி தொடர்ச்சியாக ஒடுக்கியும், நாட்டின் முக்கிய பொருளாதார வளர்ச்சியில் இருந்து ஒதுக்கியும், சில வரைமுறைகளின்வழி சமுதாய அடிமட்டத்தில் எல்லைக்குட்படுத்தி முக்கியமற்றவர்களாக முத்திரைக் குத்தப்பட்ட ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்தி ( மலேசிய இந்தியர் சமுதாயத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு இது மிகப் பொருந்தும்) நிரந்தரமாக புறக்கணிப்பதுதான் அதன் அர்த்தம். ‘ஓரங்கட்டுதலின்’ கொடூர நீட்சியானது ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்களையே அடியோடு வேரறுக்க இன அழிப்புவரை அதன் கரங்களை நீட்டச் செய்யும்.

இன்றுவரை பல சமூகங்கள் ‘ஓரங்கட்டுதலுக்கு’ உள்ளாகி சின்னாப்பின்னமாகியிருக்கின்றன. அதன் விளைவாக பலர் தங்களின் குடியிருப்புகளையும் சொந்த நிலங்களையும் இழந்திருக்கின்றனர், வலுக்கட்டாயமாக வறுமை புரையோடும் ஒதுக்குப்புற இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர், பரம்பரை தொழிலையும் அதன் மூலம் ஈட்டக் கூடிய வருமானத்தையும் இழந்திருக்கின்றனர், வேலை வாய்ப்புகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர். மேற்படியாக தங்களின் கலாச்சாரத்தையும் இழந்து, சமூகத்தில் கிடைக்கப்பெற வேண்டிய அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டவர்களாக வலுவிழந்து போனவர்கள் ஏராளம்.

மலேசிய இந்திய சமுதாயம் தொடர்ச்சியாக மலேசிய சமூகத்திடமிருந்து ‘ஓரங்கட்டப்பட்டு’, இன்றுவரை சில அடிப்படை உரிமைகளுக்கே போராட வேண்டிய நிலைக்குள்ளாக்கப்பட்டதன் அடிப்படைக் காரணம் யாதெனில், அரசாங்கத்தின் நடைமுறைப் போக்குகளும், பக்கச்சார்பாக வகுக்கப்பட்ட தேசியக் கொள்கைகளும் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட செயல் திட்டங்கள் யாவுமே அதிகார வர்கத்தின் தேவைகளுக்கேற்பவும், தொடர்ந்து அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு நாட்டின் வளங்களைச் சூறையாடி, மலேசிய இந்திய சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்புகளை புறக்கணிப்பதும் தொடர்ந்து நடைப்பெறுவதால்தான். இந்த ’ஓரங்கட்டுதலை’ நடைமுறைப்படுத்துவதிலும், அதனை பொது கண்ணோட்டத்திலிருந்து மறைப்பதிலும், திசைத்திருப்புவதிலும் அதிகார வர்க்கத்தினருக்கு முக்கியமான பங்கு உண்டு. நம்மிடையே நிலவும் பொதுவான கருத்துகளை அதிகார வர்கத்தினருக்கு சாதகமாக நிலைப்பெறச் செய்வதிலும், வலுப்படுத்தச் செய்வதிலும் அவர்கள் பலவிதமான உத்திகளைக் கையாண்டு வருகிறார்கள். சமுதாயத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை உண்மையின் அடிப்படையில் தெரிந்து கொள்வதற்கும் அணுகுவதற்கும் நமக்கு விதிக்கப்பட்ட சில வரைமுறைகளின்வழியும் தடைகளின்வழியும் உண்மை நிலவரங்களைத் தவறாக புரிந்துகொள்ளக் கூடிய சாத்தியங்களை விதைக்கிறார்கள் அதிகார வர்க்கத்தினர். இதன் விளைவாக உண்மையிலேயே மலேசிய இந்திய சமுதாயம் ‘ஓரங்கட்டப்பட்டு’ வருகிறதா என்ற சந்தேகத்தினை நமது சிந்தனையில் நாமே விதைத்துக் கொள்ளக்கூடிய சாத்தியங்களை அதிகார வர்க்கத்தினர் ஏற்படுத்துகிறார்கள்.

என்னுடைய பணி இதுதான். நிலவரங்களைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதோடு மட்டுமல்லாது, அதற்கான பின்னணிகளை ஆய்ந்து எடுத்துரைக்கவிருக்கிறேன்.

மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கிவரும் ‘ஓரங்கட்டுதல்’ பன்முகங்கள் கொண்டவை. குறிப்பாக அதனை நான்கு பிரிவுகளாக நாம் வகுக்கலாம்.

1) பொருளாதார ரீதியில் ஓரங்கட்டப்படுதல்

மலேசிய இந்திய சமூகம் தன்னை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுத்திக் கொள்வதை நிராகரித்தல். நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வெள்ளோட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுதல்.

2) அரசியல் ரீதியில் ஓரங்கட்டப்படுதல்

நாட்டு வளப்பம் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான பிரத்தியேக ஒதுக்கீடுகள் குறித்த முடிவெடுக்கும், நிர்ணயிக்கும் தகுதிகளையும் சரிசமமான வாய்ப்புகளையும் அரசியல் ரீதியில் மலேசிய இந்தியர்களுக்கு வழங்காமல் புறக்கணித்தல். நாட்டின் நேர்மையான அரசியல் செயல்பாடுகள் அரசியல் செல்வாக்குகளின்வழி கைப்பற்றப்படுதல். அதன் விளைவாக நாட்டு குடிமகனுக்கும், சிறுபான்மை வகுப்பினருக்கும் உரிய அடிப்படை அரசியல் உரிமைகள் பறிக்கப்படுதல்.

3) சமூக ரீதியில் ஓரங்கட்டப்படுதல்

கொதிக்கும் நீரின்மீது மிதக்கும் அசுத்த நுரையாக மலேசிய இந்தியர்களில் உழைக்கும் வர்க்கத்தினரின்மீது பல்வகையான முத்திரைகளைக் குத்தி அவர்களை ஒதுக்கி வைத்தல். மலேசிய இந்தியர்களின்மீது பொதுவாக நிறுவப்பட்ட சில மதிபீடுகள் யாதெனில், கூலிகள், குடிகாரர்கள், நம்பிக்கையற்றவர்கள், கறுப்பர்கள், அசுத்தமாகவும் துர்நாற்றமும் வீசக் கூடியவர்கள், பிறரை நம்பி சார்ந்திருப்பவர்கள், மற்றும் ஏழ்மை என்ற ஒரே காரணத்தினால் இன்னும் சில முத்திரைப் பெயர்களை இவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதிலும் மலேசிய இந்தியர்கள் குறித்த மற்றுமொரு வேடிக்கையான மதிப்பீடானது என்னவென்றால், மலேசிய இந்தியர்கள் ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதால், அவர்கள் மற்ற இனங்களைக் காட்டிலும் தரத்தில் சற்று தாழ்ந்தவர்களாம்.

பட்டியல் நீண்டுபோகும் பல தடைகளை உள்வாங்கிக் கொண்டு போராடும் ஒரு ஏழைச் சமூகம், தன்னை உயர்த்திக் கொண்டு தானும் மனிதன்தான் என்ற பெருமையோடு முன்னேறிச் செல்வதானது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. வாய்ப்புகளைப் பெறவும், பயன்படுத்தவும், மேம்படுத்திக்கொள்ளவும் மறுக்கப்பட்ட ஏழை மலேசிய இந்திய சமுதாயம் தன்னுடைய முக்கிய அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூட வழியில்லாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

நான் மேற்குறிப்பிட்டப்படி ‘ஓரங்கட்டப்படுதல்’ எனும் திட்டங்களின் பிரிவுகளை ஒவ்வொரு கூறாக எனது தொடர் கட்டுரைகளின்வழி தெளிவுற விளக்கிக் காட்டவுள்ளேன். சமூகவியல் அடிப்படையில் ‘ஓரங்கட்டப்படுதல்’ ஏன் நிகழ்கிறது என்பதனை மேலும் விரிவாக விவாதிக்கவுள்ளேன். காலங்காலமாக மலேசிய இந்தியர்களின் நிலைமையினை மையப்படுத்தி எழுந்த பலவிதமான அலுப்புத் தட்டுகின்ற காரணங்களை உடைத்தெறிந்து, மலேசிய சமூகத்தின் வளர்ச்சியில் இந்தியர்கள் இன்று வகிக்கும் பங்கிற்கு மூலகாரணம் குறித்தும் எழுதவிருக்கிறேன். நிச்சயமாக இத்தனைக்கும் நாம் இந்தியர்கள் / தமிழர்கள் என்ற ஒரே காரணம் அல்லது நமக்குள் உறைந்திருப்பதாக பேசப்படும் இனவழி மரபும் அதன்மீது குத்தப்படும் முத்திரையும் நம்மை இந்நிலைக்கு இட்டுச் செல்லவில்லை. மலேசிய இந்தியர்கள் / தமிழர்கள் தாழ்ந்துபோன தரமும் இல்லை. நடப்பனவற்றைக் கண்டால் ஒருவேளை நம்மை நம்பக் கூடச் செய்துவிடும். அனைத்திற்கும் ஒரு நாட்டின் அரசியல் சார்ந்த பொருளாதாரமே காரணமென நான் துணிகிறேன்.

தொடர்ந்து வாருங்கள்...

திரு.நரகன்

Read more...

63 ஆண்டுகளாக கிணற்று நீரை அருந்திவரும் கிராமத்தினர்!

>> Wednesday, October 28, 2009




நன்றி : மலேசியா கினி நிருபர் திரு.சண்முகம் , பேராக் இண்ட்ராஃப் மக்கள் சக்தி

போராட்டம் தொடரும்...

Read more...

நாங்களும் படம் காட்டுவோம்..

>> Tuesday, October 27, 2009

அம்னோவைக்காட்டிலும் நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை நிரூபிக்கும் வகையில், பினாங்கு மாநில டி..பி தலைவர்களும் மண்டோர்களும் முன்னால் புவா பாலா கிராமவாசியான திருமதி சாந்தா ஏற்பாடு செய்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு நமக்கெல்லாம் படம் காட்டியிருக்கின்றனர். நுஸ்மெட்ரோ வழங்கிய சலுகையைப் பெற்றுக் கொண்டவர்களில் திருமதி சாந்தாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரவுன் கார்டனில் வசித்துவரும் திருமதி சாந்தா லிம் குவான் எங், இராமசாமி, ஆர்.எஸ்.என் இராயர், இரவீந்திரன், தனசேகரன் போன்றவர்களுக்கு பொன்னாடை இட்டு தீபாவளி விருந்து அளித்திருக்கிறார்.

புவா பாலா கிராம பக்கமே எட்டிப் பார்த்திடாத லிம் குவான் எங் மெனக்கெட்டு புவா பாலா அருகிலுள்ள பிரவுன் கார்டனுக்கு தீபாவளி விருந்துண்ண சென்றுள்ளது அவரின் தாராள மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

மக்கள் ஓசை (26 அத்தோபர் 2009, பக்கம் 14)


படம் காட்டுவது தொடரும்...

Read more...

அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்ட பத்து பூத்தே கிராமத்தினர்!

>> Monday, October 26, 2009

கீழ்காணும் நாளிகைச் செய்தியானது, இந்நாட்டில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதற்கான மற்றுமொரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. புக்கிட் செலாம்பாவில் சுங்கை கித்தா 2 தோட்டத்தை நினைவிருக்கிறதா? 50 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர் இல்லாது கிணற்று நீரையும், மெழுகுவர்த்தியையும் பயன்படுத்தி காலத்தை ஓட்டிய அம்மக்களைப் போலவே, கம்பார் பேராக்கில் அமைந்துள்ள பத்து பூத்தே எனும் கிராமத்தில் மக்கள் குடிக்க நீரின்றி அவதியுறும் அவலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ”ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை ஓட்டு பொறுக்கவரும் அம்னோ அரசாங்கம் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே அள்ளிவீசிவிட்டு எங்களை ஏமாற்றிச் செல்கிறார்கள்! அடிப்படை பிரச்சனைகளை களைய அவர்கள் முயற்சிக்கவில்லைஎன அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.

இதுபோன்ற தொடர் ஒடுக்குமுறைகளிலிருந்து மக்கள் வெளிப்பட ஒவ்வொருவருக்கும் நல்ல அரசியல் தெளிவு இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கு மக்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது கடமையாகிறது. காரணம், இந்நாட்டில் அதுமட்டுமே நம்முடைய குறைந்தபட்ச உரிமையாகிறது!

பத்து பூத்தே கிராமம் தொடர்பான மேலும் செய்திகள் பின்தொடரும்..



மலேசிய நண்பன் (26 அத்தோபர் 2009, பக்கம் 16)



போராட்டம் தொடரும்...

Read more...

புவா பாலா மாட்டுக் கொட்டகை, கிணறு உடைப்பு ! - பி.ப சங்கம் கேள்வி எழுப்புகிறது

>> Tuesday, October 20, 2009



பத்திரிகை செய்தி (1)
15.10.2009

கம்போங் புவா பாலா

புவா பாலா கிராமத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் தாங்கள் தினமும் பினாங்கு மாநிலத்தில் உள்ள பசும்பால் குடிக்கும் பயனீட்டாளர்களுக்கு வழங்கிவந்த பசும்பாலை தொடர்ந்து வழங்க முடியுமா என்ற அச்சத்தில் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

இந்த புவா பாலா கிராமத்தில் சுமார் 100 ஆண்டு காலமாக மிகப்பெரிய மாட்டுக்கொட்டகையை வைத்திருக்கின்ற இந்த 3 சகோதரர்களான சிவானந்தம், முருகன், சுப்பிரமணியம் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டுக்கொட்டகையின் ஒரு பகுதியை புவா பாலா கிராமத்தில் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளவிருக்கும் மேம்பாட்டாளர் உடைத்ததன் காரணமாக இந்த அச்சம் ஏற்பட்டிருப்பதாக பி..சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.



கடந்த புதன்கிழமை வரை இந்த சகோதரர்களுக்குச் சொந்தமான 150 மாடுகள் தினமும் 300 லிட்டர் பசும்பாலை கொடுத்து வந்தன. ஆனால் நேற்று மேம்பாட்டாளர் திடீரென்று மாட்டுக்கொட்டகையின் ஒரு பகுதியை உடைத்துத் தரைமட்டமாக்கியதால் திகிலும் பயமும் அடைந்த கறவைமாடுகள் 300 லிட்டர் பால் கொடுப்பதற்குப் பதிலாக 140 லிட்டர் பாலையே கொடுத்ததாக சிவானந்தம் பி..சங்கத்திடம் தனது மனக்குமுறலைக் கொட்டியதாக சுப்பாராவ் மேலும் கூறினார்.

ஏற்கெனவே வீடுகளை உடைத்த மேம்பாட்டாளர் இப்பொழுது திடீரென்று எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மாட்டுக்கொட்டகையை உடைத்தது மிகப்பெரிய தவறு என அவர் கூறினார்.

திரு சிவாவும் அவருடைய சகோதரர்களும் பிரிதொரு இடத்தில் மாட்டுக்கொட்டகையை கட்டிக்கொள்வதற்கு இரண்டு வாரம் காலக்கெட்டு கேட்டிருந்தார்கள். ஆனால் அதற்கும் மேம்பாட்டாளர் சம்மதிக்காமல் திடீரென்று மாட்டுக்கொட்டகையை உடைத்தது இந்தக் கால்நடைகள் மீது கருணை இல்லாததையே காட்டுகின்றது என்றார் அவர்.

இப்பொழுது இந்த மாட்டுக்கொட்டகையிலிருக்கும் மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் கறவை மாடுகள் கொடுக்கின்ற 300 லிட்டர் பால் இப்பொழுது 150 லிட்டர் பாலாக குறைந்திருக்கின்றது. இது மேலும் குறையக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அச்சகோதரர்கள் பி..சங்கத்திடம் கூறியதாக சுப்பாராவ் கூறினார்.

தங்களின் வருமானத்தை இழந்துள்ள இச்சகோதரர்களுக்கு மாநில அரசாங்கம் கட்டாயமாக நிதி உதவி செய்து தர வேண்டும் என்றும் என்.வி.சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.



பத்திரிகை செய்தி (2)
15.10.2009

200 ஆண்டு கால கிணறு மூடப்படுகின்றது

படத்தில் காணப்படும் கிணறுதான் சுமார் 200 ஆண்டு காலமாக இந்த கம்போங் புவா பாலா கிராமத்தில் இருக்கின்றது. ஒரு காலத்தில் பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இக்கிராமத்தில் இருக்கும் சுமார் இதே போன்ற 10 கிணறுகளிலிருந்துதான் பினாங்கு மக்களுக்கு இக்கிராமத்திலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டிருக்கின்றது.

கே.டி.சிவானந்தம் என்பவரின் மாட்டுக் கொட்டகையிலிருக்கும் இந்தக் கிணறு இப்பொழுது மேம்பாட்டாளரின் அராஜகப் போக்கினால் எந்த நேரத்திலும் மூடப்படக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றது. சிவானந்தம் தன் மாட்டுக் கொட்டகையில் இருக்கும் 150 மாடுகளுக்கும் 50 ஆடுகளுக்கும் இந்தக் கிணற்றிலிருந்தான் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்துகிறார்.



இந்தக் கிணற்றிலிருந்து சுமார் 50 லிட்டர் தண்ணீர் ஒரு தடவை எடுக்கப்பட்ட அடுத்த ஐந்தே நிமிடங்களிலேயே அந்தக் கிணற்றில் 50 லிட்டர் தண்ணீர் ஊறிவிடும். இந்தக் காட்சியை நாம் நேரடியாகப் பார்க்கும்பொழுதுதான் இந்த புவா பலா கிராமத்தில் எவ்வாறு கிணறுகளில் தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது என்ற உண்மை தெரிகிறது.

இந்த நீரின் சுவையே வித்தியாசமாக இருக்கிறது. இப்பொழுது இந்தக் கிணற்றை மேம்பாட்டாளர் மூடவிருப்பதால் சிவானந்தத்தின் 150 மாடுகளுக்கும் 50 ஆடுகளுக்கும் எங்கேயிருந்து அவர் தண்ணீர் எடுக்கப்போகின்றார் என்பதுதான் பெரிய கேள்வி.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திலும் தனது மனக்குறையை திரு சிவானந்தம் பகிர்ந்துகொண்டார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி

Read more...

"வீடு" - குறும்படம்

>> Monday, August 24, 2009

சுதந்திர மாதத்தை முன்னிட்டு "15 மலேசியா" எனப்படும் 15 குறும்படங்கள் வெளியீட்டின் வரிசையில், "வீடு" எனும் இக்குறும்படம் தற்கால இந்திய மலேசியர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளில் ஒன்றினை அழகாக நமக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளது.

இக்குறும்படத்தைப் பார்த்ததும் உங்களது மனக்கண்களில் 'சட்டென' நிழலாடும் அந்த விடயம் என்னவென்று யூகிக்க வேண்டிய அவசியமில்லை!

Read more...

புவா பாலாவில் மனிதச் சங்கிலி!

>> Friday, August 14, 2009

இன்று வருவானோ, நாளை வருவானோ என்று அனுதினமும் மன உளைச்சலுடன் வாழ்க்கையைக் ஓட்டிக் கொண்டிருக்கும் புவா பாலா கிராம மக்களுக்கு நேற்றுமொரு பலப்பரிட்சை ஏற்பட்டது. புலி வருது, புலி வருது என்கிற கதையாக அக்கிராம மக்களை அனுதினமும் மிரட்டிக் கொண்டிருந்த நுஸ்மெட்ரோ நில மேம்பாட்டாளர்கள், நேற்று காலை 7 மணியளவில் புல்டோசர்களுடன் கிராமத்தினுள் நுழைய, மக்களனைவரும் கொதித்தெழுந்துவிட்டனர். இச்செய்தி காட்டுத் தீப்போல் பரவ, சற்று நேரத்திற்கெல்லாம் பொதுமக்கள் ஒன்றுதிரளத் தொடங்கிவிட்டனர்.

புல்டோசர்களை உள்ளே நுழைய விடாமல் கிராம மக்கள் மனித சங்கிலி அமைத்து நில மேம்பாட்டாளர்களை தடுத்து நிறுத்தினர்.

ஆண்கள் வேளைக்குச் செல்லவில்லை! குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை! வீட்டில் உலை கொதிக்கவில்லை. காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மக்களுக்கெதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் நில மேம்பாட்டாளர்கள் பின் வாங்கினார். ஆனால், இரவு நேரங்களில் அங்குள்ள கிராம மக்கள் நிம்மதியான உறக்கத்தினைக் காண இயலவில்லை. கனவுகளிலும் புல்டோசர்களின் சத்தம்!

இன்னும் எத்தனை முறை இம்மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வேடிக்கை பார்க்கப்போகிறார்களோ??



போராட்டம் தொடரும்...

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP