'சுயமரியாதைக்காகப் போராடாதவர்களுக்கு விடுதலைக் கிடைத்திடத் தகுதியில்லை!'

>> Wednesday, October 29, 2008

'சுயமரியாதைக்காகப் போராடாதவர்களுக்கு விடுதலைக் கிடைத்திடத் தகுதியில்லை!'

இந்த வாசகத்தில்தான் எத்தனை உண்மைகள் அடங்கியிருக்கின்றன..! யாரோ ஒருவர் நமக்காகப் போராட வேண்டும். நாம் வாயை மூடிக் கொண்டு வேடிக்கைப் பார்க்க வேண்டும். இப்படித்தான் பலரின் எண்ணங்களிலும் கடந்த 51 ஆண்டுகளாக விதைக்கப்பட்டுவிட்டச் சிந்தனைகள் நர்த்தனமாடிக் கொண்டிருக்கின்றன.

நாட்டின் சுதந்திரத்திற்காக அனைவரும் போராடவில்லை, ஒரு சிலரின் தியாகத்தின்வழி கிடைத்த சுதந்திரக்காற்றை அனைவரும் சுவாசிக்கிறோம். இதுதான் உண்மை, ஆனால் இவ்வுண்மையில்தான் எவ்வளவு முரண்பாடு!

போராட்டம் என்பது ஏன் கடினமாகிறது? ஒரு சமுதாயத்தின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஒட்டுமொத்த சமுதாயமும் பங்கெடுத்தால் போராட்டம் என்பது அவல் திண்பது போன்றது என்கிறார் பிரபல எழுத்தாளரும் தன்முனைப்பாளருமான திரு.சீவ் கேரா.

ஆனால் உண்மையில் அப்படி நிகழாதிருப்பது நிதர்சனத்தின் அவல நிலை!

வாய்ச்சொல்லில் வீரர்கள் ஒருபுறம், பட்டம், பதவிகளுக்கென்று ஒருக்கூட்டம், அரசியல்வாதிகளின் குறுக்கீடு ஒருபுறம் என உரிமைப் போராட்டத்தை நாற்றமெடுத்த சாக்கடையாக்கிக் கொண்டிருக்க, அவற்றிலிருந்து மீண்டு வர அப்பாவி மக்களுக்கே போதும் போதும் என்று ஆகி விடுகிறது. இதில் உரிமையை எங்கு மீட்டெடுப்பது?!

இதுதான் பலரின் பொதுவான கருத்து!

ஆனால் அடுத்த 50 ஆண்டுகள் கடந்த 50 ஆண்டுகளைப் போல் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? இல்லையென்றால் நீங்கள் விரும்பும் மாற்றத்தை எப்படி கொண்டு வருவது..?

சீவ் கேரா பதில் கூறுகிறார்..

பகுதி 1


பகுதி 2


பகுதி 3


”வெற்றியாளர்கள் என்றுமே முற்றிலும் வித்தியாசமானச் செயல்களைச் செய்வதில்லை! ஒரு சாதாரணச் செயலை வித்தியாசமாகச் செய்கிறார்கள் !” -சீவ் கேரா-

Read more...

அமீர், சீமான் கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு...

>> Sunday, October 26, 2008

இலங்கையில், இலங்கை இராணுவப்படையினரால் கண்மூடித்தனமாக நடத்தப்பெறும் தமிழர்கள் இனப்படுகொலையை எதிர்த்து இராமேசுவரத்தில் கண்டனக்குரலெழுப்பிய இயக்குநர்கள் சீமானையும் அமீரையும் கைது செய்வதற்கு முன்பு நடத்தப்பட்ட நிருபர் சந்திப்புக் கூட்டத்தில்...

Read more...

தீபாவளி விளம்பரப் படக்காட்சி


(இரு தினங்களுக்கு முன்பு திரு.வேலுமணி வெங்கடாசலம் என்ற வாசகரொருவர் ஓலைச்சுவடிக்கு மின்னஞ்சல் விடுத்திருந்தார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பதிவு இங்கு இடம்பெறுகிறது)

ஈப்போவில் வானூர்தி பயிற்சிக் கூடத்தில் பணிப்புரியும் ஓர் ஏழைத் தொழிலாளியின் கதையிது. அத்தொழிலாளி பணிப்புரியும் இடத்தில் கூடவே சுற்றிவரும் அவனுடைய சின்னஞ்சிறு மகன் அங்கு காணும் சிறுரக வானூர்திகளைக் கண்டு அதனைத் தானும் இயக்க வேண்டும் என்று ஆசைகளை வளர்த்துக் கொள்கிறான். மகனின் ஆசையைப் பூர்த்தி செய்து அவனை எதிர்காலத்தில் ஒரு விமானியாக்கிப் பார்க்க வேண்டுமென்று கடுமையாக உழைக்கிறான் அத்தொழிலாளி.

அத்தொழிலாளி தன் மகனுக்காக ஒரு போலி வானூர்தியை வாங்கிக் கொடுப்பதற்கு கடுமையாக உழைப்பதைக் கண்டு வியக்கும் மேலதிகாரி "நீ காலம் முழுவதும் வேலைச் செய்தாலும் உன்னால் இந்த விமான இறக்கைகளை மட்டும்தான் வாங்க முடியும்" என்று அறிவுரைகள் கூறுகிறார். "என்னால் வானூர்தியை வாங்கிக் கொடுக்க முடியாவிட்டாலும் என் மகனுக்கு வானூர்த்தி நுட்பங்கள் அடங்கிய புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பேன்" என்று நம்பிக்கையோடு கூறுகிறான்.

அத்தொழிலாளியின் கம்பத்து வீட்டிலோ, அவனின் அன்பான மனைவி தன் மகனின் எதிர்காலக் கனவு விதைகளுக்கு நீரூற்றி பாதுகாக்கும் ஓர் அன்புத் தாயாக விளங்குகிறாள். போலி வானூர்தியை செய்வது குறித்த ஒரு புத்தகத்தை கொடுத்து மறுநாளே தன் மகன் ஒரு விமானத்தைச் செய்து பறக்க விட்டதைக் கண்டு பெற்றோர்கள் பூரித்து அவனோடு சேர்ந்து விளையாடியக் காலங்கள் ஒரு கனாக்காலமாகின்றது.

வருடங்கள் பல உருண்டோடுகின்றன..

சிறுவன் இளங்காளையாகிறான், தன் லட்சியக் கனவை நிறைவேற்றப் படிப்பில் தீவிரமாகிறான். அப்பொழுதும் அவனின் தந்தையானவர் கடுமையாக உழைப்பதை நிறுத்தவில்லை.

அந்த ஏழைத் தொழிலாளியின் உழைப்பும், தாயின் பராமரிப்பும், அவ்விளைஞனின் தன்னம்பிக்கையும் ஒன்றுசேர்ந்து அவனை ஓர் விமானியாக்குகின்றன. முதன் முதலாக வானூர்த்தியை இயக்கச் செல்வதற்குமுன் தன் தாயிடம் ஆசீர்வாதம் பெறுகிறான். ஆனால், அச்சமயம் அத்தாயின் அருகில் நின்று அவனை ஆசீர்வதிக்க அந்த ஏழைத் தொழிலாளி இல்லை. காலத்திற்கு என்றோ அவன் பதில் கூறிவிட்டான்.

தாயின் ஆசிகளோடும் மனதில் உவகையோடும் தன் கனவை நிறைவேற்ற வானூர்த்தி பயிற்சிக் கூடத்திற்குச் செல்கிறான். அங்கு அவனைக் கண்ட மேலதிகாரியின் உதடுகள் அவன் தந்தையின் சேவையை முணுமுணுக்கின்றன.

"நீ சொன்னதுபோல் உன் மகனுக்கு இறக்கைகளைக் கொடுத்துவிட்டாய்.."

இவ்வருட தீபாவளி திருநாளையொட்டி எடுக்கப்பட்ட 'பெட்ரோனாசின்' காணொளி விளம்பரம்தான் மேற்கூறியக் கதை. வருடா வருடம் சமயப் பெருநாட்களுக்கான விளம்பரங்களைச் சிறப்பாகப் படைத்து வரும் இந்நிறுவனம், இவ்வருடமும் புதியதொரு கதையம்சத்துடன், மிகுந்த பொருட்செலவில் உறவுகளை மையப்படுத்தி தீபாவளியின் மகத்துவத்தை மூன்று நிமிடங்களில் எடுத்துக்கூற முயற்சித்திருக்கிறது.

இவ்விளம்பரத்தை பலர் பார்த்திருக்கலாம், சிலர் பார்க்காமல் இருக்கலாம்..
இதோ உங்களுக்காக அவ்விளம்பரப் படக்காட்சி..



இவ்விளம்பரம் குறித்து பலரின் கருத்துகள் திரட்டப்பட்டன. பலர் இவ்விளம்பரத்தைக் கண்டு நெகிழ்ந்திருப்பதாகக் கூறினர். கதைக்கரு அமைந்த விதம் பலரின் மனங்களை நெகிழ வைத்திருப்பதில் சந்தேகமில்லை. ஆனால் நெகிழவைத்தது மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் பெட்ரோனாசின் விளம்பரங்கள் ஒரு சமுதாயதித்தின் உண்மை நிலைமையினை உள்ளதுபோல் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்பதால் சில கருத்துகளை முன்வைக்கிறேன்.

1.மொழி

தீபாவளித் திருநாளைக் கருப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இவ்விளம்பரப் படக்காட்சியில் ஒரு தமிழர் குடும்பத்தை முன்னிலைப்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் தமிழிலேயே உரையாடி இருக்கலாமே, மொழி புரியாதவர்களுக்காக வேண்டுமானால் ஆங்கிலம்/மலாய் மொழிகளில் வரிகளைக் கீழே ஓடவிட்டிருக்கலாம். 'அம்மா', 'அப்பா', 'மச்சான்' என்ற இம்மூன்று தமிழ் வார்த்தைகள் மட்டும்தான் அவ்விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தன. தன் இளையச் சகோதரியை மணந்துக் கொண்டவனை அழைக்க வேண்டிய உறவுப் பெயர் 'மச்சான்' என்பது. தேவையில்லாமல் மேலதிகாரியொருவர் தனக்குக்கீழ் பணிப்புரியும் ஒரு தொழிலாளியைப் பார்த்து 'மச்சான்' என்று அழைக்கிறார். நடைமுறையில் பலர் தன் நண்பர்களை 'மச்சான்' போட்டுக் கூப்பிடுவது வழக்கமாக இருந்தாலும், பிற இனத்தவர் அல்லது தமிழர்கள் தமிழர்களை சகட்டுமேனிக்கு 'மச்சான்' என்று அழைக்கும் கலாச்சாரத்தை இங்கு வலியுறுத்தக்கூடாது என்பது என் கருத்து. இனிமேல் தமிழர்கள் தொடர்பான விளம்பரப்படங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். இவ்விளம்பரப்படத்தில் கதாபாத்திரங்களை தமிழில் உரையாட வைத்திருந்தால் காட்சிகள் இயல்பு நிலையை எட்டியிருக்கும் என்பது என் கருத்து.

2.கதாபாத்திரங்கள்

இவ்விளம்பரத்தில் சொல்லவரும் கருத்துகளுக்கும், சூழ்நிலைகளுக்கேற்றாற்போலும் கதாபாத்திரங்கள் ஒன்றியிருத்தல் அவசியமாகிறது. ஏழ்மையின் விளிம்பில் வாழ்க்கை நடத்தும் ஒரு குடும்பம் எப்படி திரையில் காட்டப்பட்டிருக்க வேண்டும்? விளம்பரத்தில் பெண் வேடம் பூண்டிருக்கும் பெண்மணி ஏதோ ஒரு பொருளின் விளம்பரத் தாரகையாகத்தான் தென்படுகிறார். தந்தை, அரும்பு மீசைக் கொண்ட இளைஞன், விமானியாக வலம் வரும் இளைஞன் போன்ற கதாபாத்திரங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப ஒன்றவில்லை. விளம்பரத்தின் இறுதிக்கட்டத்தில் யாரோ ஒரு ஆணழகன் சைக்கிளில் உலா செல்வதுபோல் உள்ளது. விமானியாகத் தேர்வாகிவிட்டாராம், ஆனால் சைக்கிளில் செல்கிறாராம்.

3.தனித்தன்மை

விளம்பரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தமிழர்கள் கதாபாத்திரம் முற்றிலும் பொருந்தாது போவதற்கு முக்கியக் காரணம் அக்கதாபாத்திரங்கள் வெளிக்கொணராதத் தனித்தன்மைதான். தமிழன் என்றால் எப்படி இருப்பான்? அதிலும் ஏழைத் தமிழன் எப்படி இருப்பான்? என்று சற்று சிந்தித்து நிச காட்சிகளைத் திரையில் கொண்டுவர அதற்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மலேசிய விளம்பரங்களில் பெரும்பாலானவை சிவப்புத் தோல் கொண்டவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கி வருவது நாம் நிதர்சனத்தில் கண்டுவரும் ஓர் உண்மையாகும். கருப்புத் தோல் என்றாலே கேவலம் என்று தமிழர்களே நினைக்கும் அளவுக்கு காலனித்துவமும் மேற்கத்திய நவநாகரீகமும் நம்மை மாற்றி விட்டிருக்கிறது. இவ்விளம்பரத்தை பொறுத்தமட்டில் கருப்பு தோல் கொண்ட தமிழனை திரைமுன் காட்டியிருந்தால் கதாபாத்திரங்கள் உயிர்ப்பெற்றிருக்கும். முக்கால்வாசி மலேசியத் தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய கறுப்புத் தோலைத்தான் கொண்டிருக்கின்றனர். அடுத்தமுறை தமிழர்களைப் பிரதிபலிக்கும் எந்தவொரு விளம்பரமானாலும் சரி, கறுப்புத்தோலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். காரணம் அது தமிழனோடு பிறந்த ஒரு சொத்து.

4.பல்லினக் கலவை

மலேசியச் சூழலில் பெருநாளையொட்டி வெளிவரும் விளம்பரப் படக்காட்சிகளில் பல்லின மக்களின் கலவை இருப்பது அவசியமாகிறது. இவ்விளம்பரப்படக்காட்சியில் மூவினமும் பிரதிபலிக்கப்படுகின்றனவா என்பது தெளிவாக இல்லை. சீனர்களும் தமிழர்களும் இருப்பதுபோல் தென்படுகிறது. மேலதிகாரியை மலாய்க்காரர் என்று ஏற்றுக் கொள்வதா அல்லது சீனர் என்று ஏற்றுக் கொள்வதா என்றே தெரியவில்லை.

மேற்கூறிய சில விடயங்களில் விளம்பர நிறுவனம் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இது மறக்க முடியாத ஒரு விளம்பரமாகத் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
"வாழ்வில் எவ்வளவு தடைகள் வந்தாலும், தன்னம்பிக்கையும்,பகுத்தறிவும், அளவுகடந்த பாசமும் இருப்பின் நாம் இறக்கை விரித்துப் பறக்க அது வழிக்கோலும்" எனும் கருப்பொருளில் நல்லதொரு கதையமைப்புடனும் ஒளிப்பதிவுடனும் உருப்பெற்றிருக்கும் இவ்விளம்பரம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

இனிவரும் காலங்களில் விளம்பர நிறுவனங்கள் தமிழ் மொழிக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துவோமாக.

இவ்விடயம் குறித்து பதிவிடக் கோரிய திரு. வேலுமணி வெங்கடாசலம் அவர்களுக்கு நன்றிகள்.

Read more...

மனதை உறையவைக்கும் காட்சி!

>> Saturday, October 25, 2008

மனதளவில் நம்மை நிச்சயமாகப் பாதிக்கும் ஓர் ஒளிப்படக்காட்சியிது! மனித உரிமைகள் செத்துவிட்டக் காட்சிகள் இவை..

Read more...

தமிழர் இனப்படுகொலையை எதிர்த்து தமிழகத்தில் மனிதச் சங்கிலி!



கொட்டும் மழையில், தமிழக மக்கள் சக்தி ஒன்றுதிரண்டு படைத்த இந்தச் சாதனை அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டும். இதுபோன்ற நூதன போராட்டங்கள், தனிமனித சமுதாய, இன, தேசிய விடுதலைக்கு முற்றிலும் பொருந்தும்.

மக்கள் புரட்சி செய்தாலொழிய போராட்டம் வெற்றி பெறாது..! - இயக்குநர் சேரன்



வாழ்க மக்கள் சக்தி!!

Read more...

தமிழீழத்திற்காக குரல் கொடுக்கும் தன்மானத் தமிழன் சீமான்..!

>> Friday, October 24, 2008

தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..! அவனை அடித்தால் கேட்பதற்கென்று நாதியில்லை! ஆனால் தமிழனுக்கென்று தன்மானம் உண்டு, அந்தத் தன்மானம் உலகின் 13 கோடித் தமிழர்களுக்கும் உண்டென்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி வருவது தமிழீழ விடுதலைப் போராட்டம். தமிழ் தேசியத்தை வென்றெடுக்கும் முயற்சியில் தற்போது தமிழக மக்களும் அணிதிரண்டு இலங்கை அரசிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

சிறீ லங்கா அரசினால் இலங்கைத் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையைக் கண்டிக்கும் வகையில் தமிழ்த் திரையுலகத்தினர் கடந்த 19-ஆம் திகதி அத்தோபர் மாதம் இராமேசுவரத்தில் கண்டனக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்விற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் அலையலையாகத் திரண்டிருந்தனர். இக்கூட்டத்தில் இயக்குநரும் நடிகருமான திரு.சீமான் சிறப்பாக உரையாற்றி வந்திருந்தோரை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். இதோ அவரின் உணர்ச்சிகரமான உரை...

பகுதி 1



பகுதி 2



பகுதி 3



உணர்ச்சிப்பொங்க உரையாற்றிய தன்மானத் தமிழன் சீமானையும் இயக்குநர் அமீரையும் இன்று மாலை தமிழக காவல்த்துறையினர் கைது செய்துள்ளதாக அறியப்படுகிறது. இலங்கை தமிழருக்கு ஆதரவாக மனித சங்கிலி நடத்திய பிறகு பிரிவினையைத் தூண்டியதாகக் கூறி கொடுக்கப்பட்டப் புகாரின் அடிப்படையில் இருவரும் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்...!! தன்மானத் தமிழனுக்கு எங்குதான் எதிரிகள் இல்லை..!

****



கவனிக்கவும் !

வலைஞர் திரு சத்தீசு எமக்கு அனுப்பிய முக்கிய அறிக்கை :

ஈழத்தமிழ் மக்கள் படுகொலைக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்.
கடந்த 22-10-2008 அன்று,சை லேங் பார்க்,பிறையில் உள்ள ஜசெக பணிமனையில் வடக்கு மாநிலங்களை சேர்ந்த தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகளோடு நடத்தப்பட்ட சந்திப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை கீழ் வருமாறு :-

மிகக்கடுமையாக,கண்மூடித்தனமாக,முப்படைகளையும் கள்மிரக்கி தமிழ் ஈழ மக்களை படுகொலை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தையும்,அதற்கு துணைபோகும் இந்திய அரசாங்கத்தையும் எதிர்த்து இந்த கண்டனப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் வீடுகள்,பள்ளிக்கூடங்கள்,பொது மண்டபங்கள், கோயில்கள்,விளைச்சல் நிலங்கள் என பரந்த நிலையில் குண்டு அழிக்கும் சிறி லங்கா அரசிற்கு பாடம் கற்பிப்போம்.

இந்த படை நடவடிக்கையினால் எல்லாவற்றையும் இழந்து,சாலை ஓரங்களிலும்,மர நிழலிலும்,காய்ந்த வயிற்றோடும்,ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி அடுத்து என்ன நடக்குமோ என்று அஞ்சி, வயது முதிர்ந்த பெரியோரும்,வயிற்றில் கருவை சுமந்த தமிழ் தாய்மார்களும்,பள்ளி மாண்வர்களும் என ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பேரவலத்தை எதிர்கொண்டு தவிக்கின்றனர்.எனவே நமது தமிழ்ச் சொந்தங்களை காக்க

தமிழ் உணர்வுள்ள அனைவரும் குடும்பத்தோடு வருக!!
தமிழரின் துயர்போக்க அலையென திரண்டு வருக,வருக!!
தமிழரெல்லாம் ஒன்றிணைவோம்,பகைவர்தமை வென்றிடுவொம்!!

நாள் : 01-11-2008 (சனிக்கிழமை)
நேரம் : இரவு 7.30 மணிக்கு மேல்
இடம் : டேவான் சிறி மாரியம்மன்,பட்டவெர்த்து.
ஏற்பாடு : வட மாநிலங்களின் தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகள்

இக்கண்,

சத்தீசு முணியாண்டி,
ஏற்பாட்டுக்குழு செயலாளர்

( மேல் விவரங்களுக்கு : சத்தீசு 016-4384767 / குணாளன் 013-4853128)

*இம்முயற்சிக்கு பெரும் ஆதரவாக இருந்தவர்கள் :-

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி
ஜனநாயக செயல் கட்சி
உலக தமிழர் நிவாரண நிதி
மலேசிய தமிழ்நெறி கழகம்
மலேசிய திராவிடர் கழகம்
தமிழ் இளைஞர் மணிமன்றம்
இந்து இளைஞர் இயக்கம்
மக்கள் சக்தி நண்பர்கள்
பட்டவொர்த் மாரியம்மன் ஆலயம்
பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
மற்றும் பல தமிழ்,தமிழர் சார்ந்த் அமைப்புகள்

Read more...

10 இண்ட்ராஃப் உறுப்பினர்கள் நீதிமன்றத்தில்...


இன்று காலையில் காசாங் நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்ட 10 இண்ட்ராஃப் ஆதரவாளர்களின் வழக்கு தற்போது நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. மதிய உணவுக்குப்பின் 2.30 மணிக்கு மீண்டும் வழக்கு தொடர்கிறது.

இரண்டு வாரங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள காவல்த்துறையினர் அனுமதி கோரியுள்ள இவ்வழக்கு தற்போது சூடு பிடித்துள்ளது எனலாம். ஒருவேளை இவ்வழக்கு காவல்த்துறையினருக்கு சாதகமாக அமைந்துவிட்டால் அப்பத்து இண்ட்ராஃப் ஆதரவாளர்களும் தீபாவளியன்று தடுப்புக் காவலில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

ஆறு பேர் கொண்ட குழுவைத் தலைமை வகித்த மனித உரிமை நிர்வாகத்தின் வழக்கறிஞர் அமீர் அம்சா அர்சாட்டு, கைதான 10 இண்ட்ராஃப் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக காலையிலிருந்து கடுமையாக வாதாடி வந்தனர். இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும், மற்றும் நிருபர்களும் நீதிபதியின் உத்தரவின்பேரில் உள்ளேச் செல்லத் தடை விதிக்கப்பட்டதால் பலர் ஏமாற்றமடைந்தனர். ஆறு கலகத் தடுப்புப் படையினரின் லாரிகளும் ரசாயன நீரைப் பீச்சியடிக்கும் லாரிகளும் நீதிமன்றத்தின் வெளியே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வழக்கறிஞர் திரு.சுரேந்திரன் கருத்துரைக்கையில், கைதான 10 இண்ட்ராஃப் ஆதாரவாளர்கள் சங்கங்கள் சட்டம் 1966, பிரிவு 48-ன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்றும், இவர்கள் பிரதமரிடம் மனு கொடுக்கச் சென்றதற்கும் சங்கங்கள் சட்டத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையெனவும், தேவையில்லாது சங்கங்கள் சட்டத்தை எதற்கு இழுக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார்.

ஒருவேளை வழக்கு காவல்த்துறையினருக்குச் சாதகமாக அமைந்தால், நிச்சயமாக இவர்களை தீபாவளியன்று தடுப்புக் காவலில் வைத்து தண்டிக்கும் உள்நோக்கம் கொண்டதாகவே கருதப்படும் என அவர் மேலும் கூறினார்.


நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்றுக் கொண்டிருக்கையில் கைதானவர்களில் லூர்து மேரி எனும் பெண்மணியொருவர் காவல் நிலைய தடுப்புக் காவல் குறித்து விளக்கமளித்துக் கொண்டிருக்கையில் மயக்கமடைந்ததாக திரு.சுரேந்திரன் கூறினார். அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் தடுப்புக் காவலின்போது முறையான ஔடதங்களை அவர் உட்கொள்ள வாய்ப்பில்லாது போனதால் அவருடைய இரு கால்களும் வீங்கிய நிலையில் காணப்பட்டார் எனவும் அவர் கூறினார். அவர் மயக்கமடைந்து வீழ்ந்ததும் அவரை உடனடியாக புத்ரா செயா மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்ரனர். இதற்கிடையில் திரு.செயதாசும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தாம் இதுவரையில் நீதிமன்றத்தில் இதுப்போன்றதொரு சம்பவத்தைக் கண்டதில்லை என திரு.சுரேந்திரன் மிகவும் வருத்தத்தோடு கூறினார்.

வழக்கறிஞர் எம்.மனோகரன் கருத்துரைக்கையில், நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களை பெயர் பதிவு செய்துக்கொண்டு உள்ளேச் செல்ல வற்புறுத்தியதும், நிருபர்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்த காவல்த்துறையினரின் செயல் தம்மை வியப்பில் ஆழ்த்தியதாக அவர் கூறினார்.

இதுகுறித்து தாம் வழக்கறிஞர் மன்றத்திடம் முறையீடு செய்யவிருப்பதாக வழக்கறிஞரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.மனோகரன் தெரிவித்தார்.

வழக்கு பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் தொடங்குகிறது....

****

பரபரப்பாக நடைப்பெற்ற நீதிமன்ற வழக்கு விசாரணையின் முடிவில் கைதான 10 இண்ட்ராஃப் ஆதரவாளர்களும் மூன்று நாட்கள் காவல்த்துறையின் காவலில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பத்து இண்ட்ராஃப் ஆதரவாளர்களும் தீபாவளியன்று வீட்டிற்குச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவ்வழக்கில் ஆதரவாளர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்ற வளாகத்தில் திரண்ட ஆதரவாளர்களுக்கும், இக்கைது நடவடிக்கையைக் கண்டித்து குரலெழுப்பிய பல நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வோமாக..

Read more...

இண்ட்ராஃப் குரல் 24/10/2008


ஊடக அறிக்கை 24/10/2008

கரு : சாயிட் அமீட் ஓர் இனவாதி, வெறியன் மற்றும் பொய்யன்.

இண்ட்ராஃப் இயக்கத்தின் தடையை ஆதரித்து சாயிட் அமீட் அல்பார் வெளியிட்டுள்ள அறிக்கையையொட்டி இவ்வறிக்கை அமைகிறது.

இண்ட்ராஃப் இயக்கம் ஒரு வெறித்தனமான இயக்கம் எனவும், இவ்வியக்கம் மலாய் இனத்தவரையும் முசுலீம் மதத்தவரையும் தங்களுடைய எதிரிகளாகப் பாவிக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்வதாகவும் சயீட் அமீட் அல்பார் கூறியிருப்பது ஓர் அப்பட்டமானப் பொய்யாகும்.

இத்தகு பிரச்சாரங்களை இண்ட்ராஃப் மேற்கொண்டதற்கான ஆதாரங்களை சாயிட் அமீட் அல்பார் முன்வைக்குமாறு நாங்கள் சவால் விடுக்கிறோம். நிச்சயம் அவரால் ஆதரங்கள் எதனையும் முன்வைக்கமுடியாது என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் தொடர்ந்து பொய்யுரைகளை வெளியிட்டு அம்னோவில் தனது அரசியல் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ள சாயிட் அமீட் முனைவார். ஒவ்வொரு தடவையும் அம்னோ கட்சிக்குள் பூசல் என்று வரும்பொழுது இன, மதக் கலவரங்களைத் தூண்டி விடுவதென்பது அதன் வழக்கமாகிவிட்டது. மலேசிய வராலாற்றில் நாம் கடந்த 50 ஆண்டுகளாகக் கண்டுவிட்ட உண்மையிது!

இண்ட்ராஃப்பின் ஒவ்வொரு கருத்தரங்கு நிகழ்வுகளும் பொதுக்கூட்ட நிகழ்வுகளும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு ஊடகங்கள் தன்கைவசம் இருப்பதால் இண்ட்ராஃப் இயக்கத்தை மக்கள் மத்தியில் ஒரு தீவிரவாத இயக்கமாக எடுத்துக் காட்டவும் அதற்கு கெட்டப்பெயர் வாங்கிக் கொடுப்பதற்கும் அம்னோ அரசாங்கம் எந்நேரமும் தயாராக இருந்துவருவது நாங்கள் அறிந்த ஒன்றே.

அண்மைய காலமாகவே, அம்னோவின் அதிகாரத்தில் செயல்பட்டுவரும் சில மலாய் பத்திரிகைகளும் டி.வி 3 தொலைக்காட்சி நிறுவனமும் இண்ட்ராஃப் இயக்கத்தை தவறாகச் சித்தரித்து வருவதையும் நாங்கள் எதிர்ப்பார்த்தோம், இனியும் இதவிட மோசமான ஊடகப் பிரச்சாரங்களையும் நாங்கள் எதிர்க்கொள்ள தயாராக உள்ளோம். எங்கள் உரிமைக்காகவும் சனநாயகத்திற்காகவும் தொடங்கப்பட்ட போராட்டம் என்றுமே ஓயாது.

சாயிட் அமீட் அல்பார் ஒரு இனவாதி, வெறியன், பொய்யன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவரைப் பதவி துறக்கச் சொல்வதில் எந்த ஒரு அவசியமும் இல்லை, காரணம் இவருக்கு பண்பும் மரியாதையும் இல்லை. தொடர்ந்து நீதியைக் காப்பதாகக் கூறி பொய்யுரைகளைக் கட்டவிழ்த்துக் கொண்டிருப்பார்.

இண்ட்ராஃப் என்றுமே சமயம் சார்ந்த ஓர் இயக்கம் கிடையாது. கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையமும் வழங்கியிருக்கும் உரிமைகளின் அடிப்படையில், இண்ட்ராஃப் இயக்கம் மலேசிய வாழ் இந்துக்களின், இந்தியர்களின் அடிப்படை உரிமைகளையும் அமைதியான முறையில் தங்களுடைய சமயத்தைப் பின்பற்றுவதற்குமான சூழ்நிலையையும் கோரி வரும்.

இன்றுவரையில் மலாய் இனத்தவரிடையேயும் முசுலீம் மதத்தவரிடையேயும் எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியையும் இண்ட்ராஃப் இயக்கம் காட்டியதில்லை, ஆனால் இனவாதத்தினையும், ஒடுக்கும் நடவடிக்கைகளையும், பிரித்தாளும் கொள்கையினையும் கடைப்பிடிக்கும் அம்னோவின் மீது இண்ட்ராஃப் என்றுமே தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும்.

இண்ட்ராஃப் தலைவர்
பொ.வேதமூர்த்தி
இலண்டன்.

Read more...

இலண்டனிலிருந்து திரு.வேதமூர்த்தி...

திரு.வேதமூர்த்தி கூறியிருக்கும் கருத்துகள் ஒவ்வொன்றும் சிந்திக்கப்பட வேண்டியவை. அம்னோ அரசாங்கதிற்கும் புல்லுருவிகளுக்கும் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்..! இக்கருத்துகள் அடிமட்ட மக்கள்வரையில் சென்று ஒலித்திட வேண்டும்!!

பகுதி 1


பகுதி 2


பகுதி 3


பகுதி 4

Read more...

தாயும் சேயும் விடுதலை!


நேற்று கைதான 12 இண்ட்ராஃப் ஆதரவாளர்களில் திருமதி சாந்தி மற்றும் அவரின் 6 வயது மகள் வைசுணவியும் அடங்குவர். புத்ரா செயா மாவட்டக் காவல்த்துறை தலைமையகத்தில் ஓரிரவு தடுத்து வைக்கப்பட்டப் பின்னர் திருமதி.சாந்தியும் குழந்தை வைஷ்ணவியும் இன்று காலையில் விடுவிக்கப்பட்டனர்.

எஞ்சியிருக்கும் 10 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் இன்று காலை காஜாங் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். இவர்களின்மீது மேலும் விசாரணை மேற்கொள்வதற்கு தடுப்புக் காவலை நீட்டிக்கக் கோரி காவல்த்துறையினர் நீதிமன்றத்தின் அனுமதி கோரியுள்ளனர்.

நேற்று புத்ரா செயாவிலுள்ள பிரதமரின் அலுவலக கட்டடத்தின் முன்புறம் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு பிரதமரச் சந்தித்து மனு ஒன்றினைச் சமர்ப்பிப்பதற்காக முயன்றிருக்கின்றனர். ஆனால், கட்டடத்தினுள் நுழையாதபடி அங்குள்ள காவலாளிகள் இவர்களைத் தடுத்ததோடு மட்டுமல்லாது 'நீங்கள் இண்ட்ராஃபினர்!' எனக் காரணம் கூறியதாகவும், "இல்லை, நாங்கள் முற்போக்குச் சிந்தனை கொண்ட மலேசியக் குடிமக்கள்!, நாங்கள் வைசுணவிக்குத் துணையாக வந்திருக்கிறோம்" என்று மறுபதில் கூறியும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இறுதியில் 12 பேரை காவல்த்துறையினர் கைது செய்து புத்ரா செயா மாவட்டக் காவல்த்துறை தலைமையகத்திற்குக் கொண்டுச் சென்றனர்.

இவ்விடயம் காட்டுத் தீப்போல் பரவ பலர் இக்காவல் நிலையத்திற்கு அலைப்பேசியில் அழைத்து கண்டனம் தெரிவித்ததோடு, பலர் காவல் நிலையத்திற்குச் சென்று காவல்த்துறையினரின் அராசகத்தைக் கண்டித்து கண்டனக் குரல் எழுப்பினர். அலைப்பேசியின்வழி புத்ரா செயா காவல் நிலையத்தைத் தொடர்புக் கொண்டு பேசிய பொழுது, அங்குள்ள காவல்த்துறை அதிகாரிகள் பொறுப்பற்று பேசியதாகவும் அறியப்படுகிறது.

அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாகச் செயல்படும் காவல்த்துறையினர் வெளிப்படையாகவே மனித உரிமை மீறலைப் புரிகின்றனர். இது மக்கள் அரசாங்கமா அல்லது மாக்கள் அரசாங்கமா?!!

Read more...

குழந்தை வைஷ்ணவி கைது!!!

>> Thursday, October 23, 2008


அன்பர்களே ஒரு வருத்தமான விடயம்!!

இண்ட்ராஃப் இயக்கத்தின் தலைவர் திரு.வேதமூர்த்தியின் மகள் வைஷ்ணவியையும்(6 வயது) 11 இண்ட்ராஃப் ஆதரவாளர்களையும் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர். வைஷ்ணவியின் தாயார் திருமதி சாந்தியும் கைது செய்யப்பட்டுள்ளார். தீபாவளி பெருநாளுக்கு முன்பாக இண்ட்ராஃப் தலைவர்களையும், ராசா பெட்ரா மற்றும் பிற இ.சா கைதிகளையும் விடுதலைச் செய்யக் கோரி வைஷ்ணவியின் தலைமையில் பிரதமரிடம் மனு ஒன்றினை ஒப்படைக்க புத்ரா செயா சென்றபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வைஷ்ணவி பிரதமருக்கு வழங்கவிருந்த தீபாவளி வாழ்த்து அட்டையில் "இவ்வருட தீபாவளி ஐந்து இண்ட்ராஃப் தலைவர்கள் இல்லாமலும், ராசா பெட்ரா மற்றும் பிற .சா கைதிகள் இல்லாமலும் அர்த்தமற்றதாகிவிடும். எனவே, அவர்களை தயைக்கூர்ந்து தாங்கள் விடுவிக்க வேண்டும். அதோடு, இவ்வருடம் என் வீட்டின் திறந்த இல்ல உபசரிப்பிற்குத் தங்களை அன்போடு அழைப்பதில் மகிழ்வுக் கொள்கிறேன். மலர்களுடனும் அனிச்சத்துடனும் தங்களுடைய வருகையை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பேன். என்றும் தங்களுடைய அன்பு மகள் வைஷ்ணவி" என்று வைஷ்ணவியின் கைப்பட எழுதப்பட்டிருந்தது.

கோலாலம்பூர் காவல்த்துறையின் தலைமை அதிகாரி முகமது சப்துவைத் தொடர்புக் கொண்டு கேட்டதற்கு, வைஷ்ணவியை தாங்கள் கைது செய்யவில்லையென்றும், அவருடைய தாயாரின் அரவணைப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 8 ஆண்களும் 3 பெண்களும் சங்கங்கள் சட்டத்தின் கீழ் விசாரணைச் செய்யப்படுவர் என அவர் கூறினார்.

தற்போது இவர்களனைவரும் புத்ரா செயா காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தயவு செய்து மலேசிய இந்தியர்களனைவரும் இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் குறுந்தகவல் மூலம் அறியப்படுத்துங்கள். இக்கைது நடவடிக்கையைக் கண்டித்து புத்ரா செயா காவல் நிலையத்திற்கு அலைப்பெசியில அழைத்து அவர்களை விரைவில் விடுதலைச் செய்ய வற்புறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முடிந்தால் இப்பொழுது புத்ரா செயா காவல் நிலையத்தின் முன் கூடி இக்கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அவர்களை விடுதலைச் செய்வதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புத்ரா செயா காவல் நிலையம் : 03-88862222

கோலாலம்பூர் காவல்த்துறை தலைமையகம் : 03-21460522

குழந்தை என்றும் பாராமல் வைஷ்ணவியைத் தடுத்து வைத்த அம்னோ அரசாங்கத்திற்கு மூளையும் இல்லை, மனித உரிமையின் மீது மதிப்பும் இல்லை.

இவர்களுக்கு கடந்த மார்ச்சு மாதம் கற்றுக் கொடுத்தப் பாடம் போதவில்லை போலும்..!

தமிழர்களே விழித்தெழுங்கள்..! காவல்த்துறையின் அரசாகத்தை தட்டிக் கேட்கப் புறப்படுங்கள்!!

கைது செய்யப்பட்டவர்கள் : வேதநாயகி (42), செயதாசு (54), தர்மராசு (54), கேப்டன் பாலா (63), கண்ணன் ராமசாமி (36), ரவி (36), ராசசேகரன் (31), லூர்து மேரி (45), சிவகுமார் (41), பூபாலன் (26), சாந்தி (44)

Read more...

உதயாவின் வழக்கும் வேதமூர்த்தியின் கடப்பிதழும்

உதயாவின் நீதிமன்ற வழக்கு 20/10/08




உதயாவின் உற்சாகமூட்டும் பேட்டி




நீதிமன்ற வளாகத்தில் காவல்த்துறையினரால் தாக்கப்பட்ட லோகநாயகியின்பேட்டி



வேதமூர்த்தியின் அனைத்துலக கடப்பிதழ் ரத்து செய்யப்பட்டதற்கான ஆதாரம்



மேலும் தகவல்கள் :

கடப்பிதழ் ரத்துச் செய்யப்பட்டதற்கு ஆதாரம்


உதயாவிற்கு எதிரான வழக்கு அடுத்த ஆண்டி
ல் தொடரும்

ஸ்டார் ஆன்லைன் பத்திரிகை 'இண்ட்ராஃப்' இயக்கம் தடை செய்யப்பட்டது சரியானச் செயலா? என்று ஒரு கருத்துக்கணிப்பை நடத்துகிறது. அங்குச் சென்று வாக்களியுங்கள்! உங்களுக்குத் தெரியும் எதற்கு வாக்களிக்க வேண்டுமென்று..

http://www1.mstar.com.my/polls/result.asp?id=16

Tinjauan

Langkah mengharamkan kumpulan Hindraf tindakan wajar?

Read more...

சந்திரயான் - 1 விண்ணைத் தொட்டது!

>> Wednesday, October 22, 2008


இந்தியா தனது முதலாவது நிலவுக்கான விண்கலத்தை இன்று அதிகாலை (இந்திய நேரப்படி) 6.22 மணியளவில் வெற்றிகரமாக பாய்ச்சி புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. இவ்விண்கலம் சென்னையிலிருந்து வடக்கில் 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறீ அரிகோட்டா சத்தீசு தவான் ஏவுதளத்திலிருந்து விண்ணில் பாய்ச்சப்பட்டது.

சந்திரயான் 1 எனும் விண்கலத்தை சுமந்திருந்த பி.எசு.எல்.வி சி-11 என அழைக்கப்படும் விண்ணோடம் விண்ணில் செலுத்தப்பட்டு திட்டமிட்டபடி 4 கட்டங்களாகப் பிரிந்தது. இதில் நான்காவது மற்றும் இறுதிக் கட்டத்தில் விண்ணோடம் பிரிந்ததும் சந்திரயான்-1 விண்கலம் தனது புவிப் பாதையை வெற்றிகரமாக அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

விண்ணோடம் ஏவப்பட்ட 1,100 வினாடிகளில் சந்திரயான்-1 திட்டமிட்ட புவிப் பாதையை அடைந்ததாக 'இசுரோ' தலைவர் மாதவன் நாயர் உறுதிப்படுத்தினார்.



தற்போது சந்திரயான் -1 புவிவட்டப் பாதையில் இணைந்து புவியை வலம் வரத் தொடங்கியுள்ளதாகவும், சந்திரயான் -1 வலம் வரும் சுற்றுவட்டப்பாதை புவியிலிருந்து 250 கி.மீ உயரமாகவும் 23000 கி.மீட்டர் உயரமாகவும் மாற்றப்படும் என சிறீ அரிகோட்டா ஏவுதளத்தின் பேச்சாளர் திரு.எசு.சதீசு கூறினார்.

சந்திரயான் - 1 புவியை வலம் வந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்படுவதற்கு பெங்களூரிலுள்ள பைலாலு கட்டுப்பாட்டு மையம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. சந்திரயான் -1 நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைய 15 நாட்கள் எடுக்கும் என இசுரோ கட்டுப்பாட்டு மையத்திலுள்ள விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சந்திரயான்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியதன் மூலம், நிலவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பிய ஆறாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்குமுன் அமெரிக்கா, ருசியா, ஐரோப்பா, சப்பான், சீனா ஆகிய வல்லரசுகள் நிலவிற்கு விண்கலம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவிற்குப் போட்டியாக இருக்கும் சீனாவைவிட அதிக தொழில்நுட்பமும் மதிநுட்பமும் இந்தியா பெற்றிருப்பதாக திரு.சதீசு கூறினார்.

"விண்வெளி ஆய்வுக்காக இந்திய அரசு கோடிக் கணக்கில் செலவு செய்வதை விரும்பாததாலும், இத்திட்டத்திற்கு அரசியல்வாதிகளின் எதிர்ப்பு இருப்பதாலும் சீனாவைவிட சற்று மந்தமாகச் செயல்பட வேண்டியுள்ளது. எங்களுக்கு போதிய நிதி கிடைத்தால் நிலவிற்கு முதல் இந்தியரைக் கால்பதிக்க வைக்க எங்களால் முடியும்." என்று 'இசுரோ'வின் தலைவர் திரு.மாதவன் நாயர் தெரிவித்தார்.

2011-இல் இந்தியா நிலவிற்கு விண்கலம் ஒன்றினை அனுப்பி தரையிறங்கச் செய்து பல ஆராய்ச்சிகளை அங்கு மேற்கொள்ளவிருக்கிறது. அதனையடுத்து முதல் இந்தியனை அங்கு கொண்டுச் செல்லும் திட்டமும் வழிவகுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களுக்கு முன்னோடியாக சந்திரயான் - 1 விண்கலம் அமையும் என்றால் அது மிகையாகாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல ஆய்வுகளுக்கிடையில் உருவான சந்திரயான் - 1 இரண்டாண்டுகளுக்கு நிலவின் சுற்று வட்டப்பாதையில் வலம் வந்து ஆய்வுகள் மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்பை துல்லியமாகப் படம் பிடித்து அவ்வப்போது பூமிக்குத் தகவல் அளிப்பதோடு மட்டுமல்லாது, புவியில் கிடைக்கும் கனிமங்களின் சத்திக்கு பதிலாக மாற்று சத்தியைப் பெற்றுத் தரும் கனிமங்களையும் ஆய்வும் செய்யும்.

விண்வெளி என்பது மனிதனின் எதிர்காலக் கனவுகளை நிசமாக்கும் இருப்பிடம்! நிலவிற்கும் அப்பாற்பட்ட ரகசியங்களை உணர வேண்டுமென்றால், முதலில் நாம் நிலவிற்கு சென்றாக வேண்டும்! நிலாதான் விண்வெளியை எட்டிப் பார்க்கும் முதற்படி!" என்று திரு.சதீசு கூறினார்.

இந்தியாவின் எதிர்காலக் கனவுகள் நிசமாக அனைவரும் வாழ்த்துவோம். இக்கனவு திட்டங்களைச் செயல்படுத்துவதன் வழி முதற் தமிழன் நிலவைத் தொட்டால் அது நமக்குப் பெருமையே...

Read more...

சுவாராம் இயக்கப் போராளி இன்று விடுதலை!

>> Saturday, October 18, 2008


நேற்றிரவு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுவாராம் மனித உரிமை இயக்கத்தின் போராளி செங் லீ வீ இன்று விடுதலை செய்யப்பட்டார்.

காவல் நிலையத்தில் 19 மணி நேரங்கள் தடுத்து வைக்கப்பட்டப்பின் அவர் மாலை 6.04 மணியளவில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 1-ல் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆசராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மதியம் இரண்டு மணியளவில் சில காவல்த்துறை அதிகாரிகள், ஆதாரங்களைத் திரட்டுவதற்காக செங்கின் வீட்டிற்குச் சென்று அவருடைய மடிக்கணினியையும் விரலியையும் பறிமுதல் செய்துக் கொண்டுள்ளனர்.

மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் காவல்த்துறையினர் செங்கை நான்கு நாட்கள் தடுத்து வைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக சுவாராம் இயக்கத்தின் சொகூர் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஞாம் கூறினார்.

19 மணிநேர தடுப்புக் காவலில் காவல்த்துறையினரின் விசாரணைக்கு செங் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் கூறினார்.

தாம் ஒரு தப்பும் செய்யவில்லை என்றும், காவல்த்துறையின் இணையத்தளத்தில் பிளேந்தோங் குடியிருப்புப் பகுதியில் வீடுகள் உடைப்பு தொடர்பாக புகார் கொடுத்ததைத் தொடர்ந்து தம்மை காவல்த்துறையினர் கைது செய்ததாக செங் லீ வீ கூறினார்.

Read more...

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் ஒருவர் கைது!

00:01am


தற்சமயம் கிடைத்த ஒரு செய்தியில், சுவாராம் மனித உரிமைக் கழகத்தின் தன்னார்வச் சேவகரும் போராட்டவாதியுமான செங் லீ வீ என்பவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவர் சொகூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கதாகும். முந்தைய நாள் கம்போங் பாரு பிளெந்தோங் தெங்காவில் உள்ள மலாய் இனத்தவரின் குடியிருப்புப் பகுதியை இடித்துதள்ளும் போது ஏற்பட்ட கலகலப்பில் மொத்தம் 27 பேர் கைதாகினர்.

கம்போங் பாரு பிளெந்தோங் தெங்கா எனும் குடியிருப்புப் பகுதியானது கோலாலம்பூர் கம்போங் பாருவைப் போன்ற ஒரு குடியிருப்புப் பகுதியாகும். இப்பகுதியை வாங்கிக் கொண்ட புக்கிட்டு லெனாங்கு செண்டிரியான் பெர்காட்டு எனும் மேம்பாட்டு நிறுவனம் அங்குள்ள குடியிருப்புகளை உடைப்பதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்றுவிட்ட நிலையில், கடந்த 16-ஆம் திகதி அத்தோபர் மாதம் வீடுகளை உடைக்க மேம்பாட்டாளர்கள் 100 கலகத் தடுப்புப் படை அதிகாரிகளுடனும் 200 காவல்த்துறை அதிகாரிகளுடனும் அங்கு வந்தனர்.

கம்போங் பாருவிற்குள் நுழையவிடாது அங்கு வசிக்கும் பொதுமக்கள் சுமார் 2400 பேர் கைகளை ஒருவருக்கொருவர் பிண்ணிக் கொண்டு தடுப்பு கொடுத்து நின்றிருந்தனர். எனவே அங்கு கலகம் மூண்ட வேளையில் பலர் கைதாகினர். காவல்த்துறையினரின் மூர்க்கத்தனமான, அதே வேளையில் சட்டத்தை மீறிய கைது நடவடிக்கை குறித்து திருப்திக்கொள்ளாத 26 வயதுடைய செங் லீ வீ நேற்று பிற்பகல் மணி மூன்று அளவில் பெர்மாசு செயா காவல் நிலையத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.


அதன்பின் இரவு 8 மணியளவில் இன்சுபெக்டர் அசுமான் முசுதாப்பா செங் லீ வீயின் வாக்குமூலத்தைப் பெறுவதற்கு அவரை சிறீ அலாம் காவல் நிலையத்திற்கு வருமாறு பணித்துள்ளார். செங் லீ வீக்கு துணையாக சொகூர் பாரு சுவாராம் ஒருங்கிணைப்பாளர் ஞாம் கீ ஆன், மலேசிய சோசியலிசக் கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் சூ சின் செய், சுவாராம் இயக்கத்தின் தன்னார்வத் தொண்டூழியர் சீ சியு மீன் ஆகியோர் உடன் சென்றிருக்கின்றனர்.

செங் லீயின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டப் பின், சுமார் இரவு 10.45 மணியளவில் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர் டி.எசு.பி முகமது நோர் ரசீட்டு செங் லீயை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 28-இன் கீழ் கைது செய்வதாகக் கூறியுள்ளார்.

தவறான அறிக்கையை வெளியிட்டால் பிரிவு 28 சட்டம் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 28-இன் படி, “யாரொருவர் வாய்மொழியாகவோ, பத்திரிக்கை, கையேடு அல்லது எவ்விதமான அச்சு பிரசுரங்களையும் பயன்படுத்தி பிழையான அறிக்கையை வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை உண்டு செய்தால், அவர்கள் சட்டத்தை மீறியக் குற்றவாளிகள் எனக் கருதப்படுவார்கள்”. என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் செங் லீயின் வழக்கறிஞர்கள், சட்டப்பிரிவு 28-ல் காவல்த்துறையினருக்கு யாரொருவரையும் நீதிமன்ற விசாரணையின்றி தடுத்து வைக்க இடமளிக்கவில்லை என்பதால் அவரை 24 மணிநேரத்திற்குள்ளாக நீதிமன்றத்தில் கொண்டு விசாரணைச் செய்து, அவர்மீது குற்றஞ்சுமத்த வேண்டுமா அல்லது மேலும் விசாரணைக்கு தடுத்து வைக்க வேண்டுமா என்று முடிவெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதன்பின்னர் செங் லீ பாசீர் கூடாங் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மேல்விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த இருமாதங்களில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மூன்று சீனர்கள் கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்விவகாரம் தொடர்பான மேலும் பலச் செய்திகள் காலையில் பதிவிடப்படும்..

Read more...

லாலாங் நடவடிக்கை - கண்காட்சி நிகழ்வு


படத்தைச் சுட்டி பெரிதாக்கிப் பார்க்கவும்.

அத்தோபர் 27,1987 ஆம் ஆண்டு மலேசியா எனும் ஒரு சனநாயக நாடு வெட்கப்படக் கூடிய ஓர் அரசியல் தந்திர நாடகத்தைக் காண நேர்ந்தது. அம்னோவின் இனவாதக் கொள்கைகளால் திளைத்துப்போன நாட்டின் முன்னால் பிரதமர் மகாதீர் ஆட்சியில் மொத்தம் 106 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டச் சம்பவம் இன்னும் பலரின் மனங்களில் ஆறாத வடுவாக இருந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் சமூகப் போராட்டவாதிகளும் அடங்குவர்.

இச்சம்பவம் நடைப்பெற்று 21 ஆண்டுகள் நிறைவையொட்டி வருகின்ற அத்தோபர் 19-ஆம் திகதியன்று, பினாங்கு 'பிராங்கின் மால்'-இல் ‘இசாவைத் துடைத்தொழிப்போம்' எனும் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஒரு விழிப்புணர்வு கண்காட்சி நடைப்பெறவுள்ளது.

நண்பகல் மணி 12 தொடங்கி இரவு 8 மணிவரை நடைப்பெறவிருக்கும் இக்கண்காட்சியில் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொண்டு ‘லாலாங் நடவடிக்கையைப்' பற்றி மேலும் அறிந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர்.

இந்நிகழ்வில் ‘லாலாங் நடவடிக்கை' குறித்த ஆவணப் படங்கள் திரையிடப்படுவதுடன் உள்ளூர் கலைஞர்களின் இசை விருந்தும் நடைப்பெறும்.

எனவே மறவாமல் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு நன்மையடையுங்கள்...

Read more...

தீபாவளியன்று மது அருந்தலாமா?

>> Friday, October 17, 2008

நண்பன் நாளிதழ் 17/10/2008 பக்கம் 5



தருதலை : வணக்கோண்ணே...

முதலை : வணக்கம், வாழ்க தமிழ்! யாரது.. அடடே தருதலையா வாப்பா.. (முதலைக்கு புல்லரிக்கிறது)

தருதலை : தீபாவளி சீசன் வந்துருச்சுலே, அதான்...

முதலை : தெரியும்.. தெரியும் விளம்பரம்தானே.. எங்க காட்டு பாக்கலாம்..

தருதலை விளம்பரப் படிவத்தை நீட்டுகிறான். அதனைப் பெற்றுக் கொண்ட முதலை விளம்பரப் படிவத்தை சற்று நேரம் வெறித்து பார்க்கிறான்.. விளம்பரத்தை அலசிப் பார்த்துக் கொண்டிருந்த அவனது இருவிழிகளின் மேல் குடிகொண்டிருந்த புருவங்கள் நெறியத் தொடங்கியதைக் கண்ட தருதலைக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது.

முதலை : என்ன இது?!

தருதலை : விளம்பரம்...

முதலை : அது தெரியிது, பெரிய கோலம்.. அதுக்கு நடுவுல என்ன?

தருதலை : ஸ்கோல் பியர்..

முதலை : குத்துவிளக்கு எங்க?

தருதலை : அதுதான் இது...

முதலையின் புருவங்கள் மேலும் நெறிந்தன..

முதலை : இது சரி வராது.. நீ வேற ஆளே பாரு..

தருதலை : ஏன்? இந்த விளம்பரம் நல்லாதானே இருக்கு..!

முதலை : இத விளம்பரமா போட்டா என்ன நடக்கும்னு தெரியுமா?

தருதலை : என்ன நடக்கும்?

முதலை : இத விளம்பரப்படுத்திய மறுநாளே கண்டனத்துக்குமேலே கண்டனம் வரும்..

தருதலை : யார்கிட்டேர்ந்து...

முதலை : நம்மாளுங்ககிட்டேர்ந்துதாம்ப்பா...

தருதலை : அதுலாம் ஒண்ணும் வராதுண்ணா...

முதலை : எப்டி சொல்ற?

தருதலை : நம்மாளுங்களுக்கு தண்ணி இல்லாத தீபாவளியா என்ன?

முதலை : இல்ல.. இல்ல முடியாது! நம்பாளுங்க பாரம்பரிய கோலத்துக்கு நடுவுல பியர் போட்டல வெச்சது மட்டுமில்லாம, தீபாவளிங்கிற சமய திருநாளையும் கேவலப்படுத்தியிருக்கே..!

தருதலை: அட போங்கண்ணே, நீங்க வேணுண்ணா பாருங்க.. தீவாளி அன்னிக்கி நம்பப் பயலுங்க தண்ணிய போட்டுட்டு மல்லாக்க படுக்குறாங்களா இல்லியான்னு..! முதல்ல நீங்களே ஒரு தண்ணி கையி, நெஞ்ச தொட்டு சொல்லுங்க.. தீவாளிக்கு தண்ணி போடமாட்டீங்க??

முதலை தலையைச் சொறிந்துக் கொண்டான். தருதலையை நோக்கிப் புன்முறுவல் ஒன்றினை வீசிக் கொண்டே...

முதலை : அது வேறே.. இது வேறப்பா.. நம்ம ஒட்டு மொத்த சமுதாயத்தையும் கேவலப்படுத்துற மாறிலே இந்த விளம்பரம் இருக்கு..

தருதலை : அண்ணே, பேப்பர்லே முழுசா ஒரு பக்கம் இந்த விளம்பரத்த போடுறீங்க, இந்தாங்க பதினஞ்சாயிற வெள்ளி செக்கு கொண்டு வந்துருக்கேன்.

பதினைந்தாயிரம் வெள்ளி மதிப்புள்ள காசோலையைக் கண்ட முதலையின் வாய் பிளந்து கொண்டது.

தருதலை : அண்ணே வாய மூடுங்க.. ஈ புகுந்துற போகுது...!

முதலை, தருதலை நீட்டிய காசோலையை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்..

முதலை : சரிப்பா, நீ சொன்ன மாறியே போட்டுர்றேன்.. ஆனா இந்த விளம்பர்த்துக்குக் கீழே பியர் தண்ணி மிதக்குறமாறி போட்டுருக்கீங்களே, அத எடுத்துறலாமே..

தருதலை : தண்ணி போட்டு நம்பாளுங்க மிதக்கணும்னுதான் கீழே சிம்பாலிக்கா போட்டுருக்கோம்.

முதலை : நான் அதுக்கு சொல்லலப்பா, நம்ப ஆளுங்களும் இப்ப வரவர திருந்திகிட்டு வராங்க..

தருதலை வாய்விட்டுச் சிரிக்கிறான்.

தருதலை : என்னண்ணே காமெடி பண்றீங்க.. கொடுக்குற பணத்த வாங்கிட்டீங்கல்லே, விளம்பரத்த போடுங்க.. அப்படி யாருக்காவது இந்த விளம்பரத்து மேலே உடன்பாடு இல்லேன்னா என்ன இந்த முகவரில வந்து பார்க்க சொல்லுங்க, இல்லாட்டி இ-மெயில் பண்ண சொல்லுங்க, நான் பாத்துகிறேன் என்ன? எழுதிக்கோங்க..

Carlsberg Marketing Sdn Bhd
No. 55, Persiaran Selangor, Section 15
40200 Shah Alam, Selangor
P.O.Box 10617, 50720 Kuala Lumpur
Tel : 03-55226688 Fax : 03-55191931
Email : enquiry@carlsberg.com.my

ஓகேவா, எழுதிக்கிட்டீங்கலா?..

முதலை : ம்ம்... ( நமக்குத் தேவை பணம், அது வந்துருச்சி.. இவனுங்க கோலத்து மேல பியர் பாட்டிலே வெச்சா என்ன, பியர் தண்ணியிலே சாமிய அபிசேகம் பண்ணா நமக்கு என்ன? எக்கேடு கெட்டாவது போகட்டும்..) என்று மனதிற்குள் முதலை நினைத்து கொண்டிருக்கையில்...

தருதலை : சரிண்ணே, நான் கிளம்புறேன்.. வர்ற தீபாவளிக்கு வீட்டுக்கு வந்துருங்க.. பிராண்டி, விஸ்கி எல்லாம் இருக்கு.. ஓகேவா, பாய்...

முதலை வாயில் 32 பற்களும் தெரிகின்றன.. கண்களிரண்டும் காசோலையில் பதினைந்தாயிரம் வெள்ளிக்கு எத்தனை முட்டைகள் என்று சரியாக எண்ணிக் கொண்டன..

தீபாவளி நன்னாளில் மலேசியத் தமிழர்களை போதையில் திளைக்க வைக்கப் போகும் கார்ல்சுபேர்க்கு நிறுவனத்தாருக்கும் மற்றும் அதனை அழகாக விளம்பரப்படுத்திக் காட்டிய நண்பன் நாளிதழுக்கும் நமது வாழ்த்துகள்.

நாளிதழில் சமயத் திருநாளையும் தமிழர்களையும் இதைவிடச் சிறப்பாகக் வேறெப்படிக் கேவலப்படுத்த முடியும் என்று எண்ணிப் பாருங்கள்..

ஒட்டு மொத்த மலேசியத் தமிழர்களையும் கேவலப்படுத்தும் இவ்விளம்பரத்தை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். தமிழர்கள் குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்ற முத்திரையைக் கிழித்தாக வேண்டும்!

Read more...

இண்ட்ராஃப் குரல் 17/10/2008


ஊடக அறிக்கை 17/10/2008

கரு: பாரிசான் பங்காளிக் கட்சிகளனைத்தும் குரலெழுப்ப இதுவே தக்கத் தருணம்.


இண்ட்ராஃபின் உண்மைப் போராட்டத்தையும், மலேசிய இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் குறித்து பாரிசானின் உறுப்புக் கட்சிகளனைத்தும் ஒருங்கே குரலெழுப்ப வேண்டும் என இண்ட்ராஃப் அழைப்பு விடுக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்து 51 ஆண்டுகளாக அம்னோ அரசாங்கத்தின் ஆட்சியின்கீழ் மலேசிய இந்திய சமுதாயத்தின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வந்ததோடுமட்டுமல்லாது, ஒட்டு மொத்த மலேசிய இந்திய சமுதாயமும் பலவகையில் அடக்கப்பட்டு, தடுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு நிரந்தர காலனித்துவத்தின்கீழ் அடிமைப்பட்ட சமுதாயமாக புறந்தள்ளப்பட்டு வந்துள்ளது. இவ்வநீதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியில் இண்ட்ராஃப் முற்போக்கான நடவடிக்கைகளில் இறங்கி பலவிதமான இழப்புகளையும் தாங்கிக் கொண்டு வந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டங்கள் ஆவணச் செய்யும் சனநாயகக் குரலை ஒடுக்கும் ஒரு முயற்சியாக தற்போது இண்ட்ராஃப் இயக்கம் தடைச் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பாரிசானின் அனைத்து உறுப்புக் கட்சிகளும் தன்நிலையோடு முன்வந்து மலேசிய இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும், இண்ட்ராஃப் இயகத்தின் உண்மைப் போராட்டத்தினையும் அதனைத் தடைச் செய்வதன் வழி அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அவநம்பிக்கையையும் குறித்து ஒருங்கே குரலெழுப்ப வேண்டும் என இண்ட்ராஃப் இயக்கம்கேட்டுக் கொள்கிறது. தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்றும் மேற்கோள்காட்டி அடிப்படையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி, மக்களின் சனநாயகக் கருத்துகளை அம்னோ நிரந்தரமாக அடக்கிவிட முடியாது. தேசிய நலனையும், சட்ட ஒழுங்கினையும் பாதுகாத்திடவும்,பரிபாலிக்கவும் குரலெழுப்ப பாரிசானின் உறுப்புக் கட்சிகளுக்கு முக்கிய கடப்பாடு உண்டு. பாரிசான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல்லின உறுப்புக் கட்சிகளுக்கு ஆதரவாக ஓட்டு போட்ட மக்கள் தற்போது பொறுமை இழந்துவருவதோடு அவநம்பிக்கையும் அடைந்து வருவதால் நாளடைவில் இக்கட்சிகள் மக்களால் மறக்கப்பட்டுவிடலாம்.

அம்னோவின் அதிகாரத்துவ கர்வத்தையும், இண்ட்ராஃப்பை கேலிக்குள்ளாக்கும் பொறுப்பற்றச் செயலையும் கண்டனத்திற்குள்ளாக்க, நிதர்சன உண்மைகளின் அடிப்படையில் அனைத்து பாரிசான் உறுப்புக் கட்சிகளும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இண்ட்ராஃப் தலைவர்
பொ.வேதமூர்த்தி,
இலண்டன்.

இண்ட்ராஃப் ஊடக அறிக்கை ஆங்கிலத்தில் இங்கே : ஊடக அறிக்கை 17/10/2008

Read more...

இலங்கைத் தமிழர்களுக்காதரவான கண்டனக் கூட்டம் ஒத்திவைப்பு!

இன்று சாலான் பாரு முனீசுவரன் ஆலயம்,பிறையில் நடக்கவிருந்த இலங்கைத் தமிழர்களுக்காதரவான கண்டனக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவல்த்துறையினர் இந்நிகழ்விற்கு அனுமதி வழங்காததாலும், இண்ட்ராஃப் இயக்கம் தடைசெய்யப்பட்டதன் விளைவாக சில பொறுப்பற்றத் தரப்பினர்கள் கலகம் ஏற்படுத்த முனையலாம் என்ற அச்சத்தாலும் இந்நிகழ்வு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது என சனநாயக செயல் கட்சியின் சாலான் பாரு கிளைச் செயலாளர் திரு.சத்திசு தெரிவித்தார்.

காவல்த்துறையிடமிருந்து முறையாக அனுமதி பெறப்பட்டு இந்நிகழ்வு நடைப்பெறும் என்றும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்விற்கு பல தன்னார்வ அமைப்புகளும் குறிப்பாக திராவிடக் கழகமும் ஆதரவாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதுகுறித்த மேலும் தகவல்கள் பின்னர் பதிவிடப்படும்..

Read more...

இண்ட்ராஃப் நிகழ்வுகளுக்கு தற்காலிக நிறுத்தம்!


இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் திரு.வேதமூர்த்தி, தற்சமயத்திற்கு இண்ட்ராஃப் இயக்கத்தின் நிகழ்வுகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சட்ட வல்லுநரான திரு.வேதமூர்த்தி மலேசியச் சங்கங்கள் சட்டம் 1966-ஐ ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையில் இன்னும் சில தினங்களில் இண்ட்ராஃப் எடுத்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் அம்னோ அரசாங்கம் இண்ட்ராஃபிற்கு எதிராக விதித்தத் தடையை ஆட்சேபிக்கும் வகையில் அனைத்து இண்ட்ராஃப் ஆதரவாளர்களையும் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆரஞ்சு நிற உடையினை அணியுமாறு திரு.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். இத்தினங்களில் ஆரஞ்சு நிற உடையினை அணிந்து அம்னோ அரசாங்கத்தின் மீது இந்திய மக்களின் அவநம்பிக்கையையும் கண்டனத்தையும் அடையாளமாகக் காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில் மலேசிய மனித உரிமை ஆணையமான 'சுஹாக்காம்', இண்ட்ராஃபிற்கு விதிக்கப்பட்டத் தடைக்கு வித்திட்ட ஆதாரங்களை அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. கண்மூடித்தனமாக ஓர் இயக்கத்தை தடை செய்வதனால் மக்களின் போராட்டம் மேலும் வலுப்பெறுமே தவிர முடங்கிவிடாது என அது கருத்துரைத்தது.

ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கருத்துரைக்கையில், அம்னோ அரசாங்கத்தின் இத்தகு நடவடிக்கையானது கோழைத்தனம் என்றும் அராசகமானது என்றும் கூறினார்.

அம்னோ அரசாங்கம், இண்ட்ராஃபிற்கு எதிராக விதித்த தடைக்கான சட்டப்பூர்வமான காரணங்களை உடனடியாக வெளிபடுத்த வேண்டும் என்று இந்து நடவடிக்கை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.முகுந்தன் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இவ்வியக்கம் ஆயுதமின்றி உரிமைக்காக அமைதிவழி போராட்டத்தைக் கடைப்பிடிப்பவர்கள் என்றும், ஒடுக்கப்பட்ட மலேசிய இந்திய சமுதாயத்திற்காகக் குரல் கொடுக்கும் ஓர் உன்னத இயக்கம் என வர்ணித்தார்.

இண்ட்ராஃப் இயக்கத்தை தடை செய்ததன் வழி, அம்னோ அரசாங்கம் நெருப்புக் கோழியைப் போல தன் தலையையே மண்ணுக்குள் இட்டுக் கொண்டது என புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் லியூ சின் தோங் வர்ணித்துள்ளார்.

சிவில் மனித உரிமை போராட்டவாதியான டாக்டர் தோ கின் வூன் கருத்துரைக்கையில், உண்மையில் மத்திய அரசாங்கம் நேர்மையாகவும் மக்களின் மீது பரிவும் கொண்டிருந்தால் இதுபோன்ற இழிச்செயல்களில் ஈடுபடாது, மலேசிய இந்தியர்களின் அடிப்படைப் பிரச்சனைகளை கண்டறிந்துக் களைந்திருப்பர் என்று கூறினார்.

இவ்வியக்கத்தைத் தடைச் செய்வதன்வழி அம்னோ தன் நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொள்கிறது என அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில் பல மனித உரிமை இயக்கங்கள், அரசியல் கட்சிகள், தொண்டூழிய இயக்கங்கள் அம்னோ அரசாங்கத்தின் இனவாத அடிப்படையிலான அராசகத்தைக் கண்டித்து கண்டனக் குரல்கள் எழுப்பி வருகின்றன.

போராட்டம் தொடரும்...

Read more...

இலங்கைத் தமிழர்களுக்காதரவாக அமைதி மறியல்..

>> Thursday, October 16, 2008



சனநாயக செயல் கட்சியின் ஏற்பாட்டில் நாளை (17 அக்தோபர் 2008) சாலான் பாரு முனீசுவரன் ஆலயத்தின் முன்புறம் இங்கைத் தமிழர்களுக்கெதிராக இலங்கை அரசு புரியும் இனப்படுகொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டி ஒரு கண்டனக் கூட்டம் நடைப்பெறவுள்ளது.

இக்கூட்டத்திற்கு சுற்றுவட்டாரத் தமிழ் மக்கள் அனைவரும் வருகை புரியுமாறு சனநாயக செயல் கட்சியின் சாலான் பாரு கிளைச் செயலாளர் திரு.சத்திசு அழைப்பு விடுக்கிறார்.

இடம் : பிறை,சாலான் பாரு முனீசுவரன் ஆலயம் முன்புறம்

திகதி : 17-10-2008 ( வெள்ளிக்கிழமை )

நேரம் : இரவு 8.00 மணிக்கு மேல்

அன்புடன்,

சத்திசு முனியாண்டி,
செயலாளர்,
சனநாயக செயல் கட்சி
சாலான் பாரு கிளை,பிறை.


எதிர்க்கட்சி என்று அரசியல் முத்திரைக் குத்தி இங்கைத் தமிழர்களுக்காக உரிமைக் குரல் கொடுக்கும் இந்நிகழ்வை புறக்கணித்துவிடாதீர்கள். அனைத்து தரப்பினரும் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி இலங்கைத் தமிழர்களுக்கு நம்முடைய ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழுணர்வோடு நாளை அங்கு சந்திப்போம்...



இதற்கிடையில் தமிழக கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பதவி துறப்பு செய்யப்போவதாக மத்திய அரசுக்கு இருவாரங்கள் கெடு விதித்த செயலை ஓலைச்சுவடி ஆதரிக்கிறது. இந்திய அரசாங்கம் சிறீ லங்கா அரசிற்கு அளித்துவரும் ஆயுதங்கள், இராணுவப் பயிற்சி போன்றவற்றை உடனடியாக நிறுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாது, இலங்கைத் தமிழர்களுக்கெதிராக சிறீ லங்கா அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலைகளை உடனடியாக நிறுத்தக் கோரி எச்சரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Read more...

இண்ட்ராஃப் இயக்கத்திற்குத் தடை..!!!

>> Wednesday, October 15, 2008


இந்து உரிமைப் பணிப்படை இயக்கம் சட்டப்பூர்வமாக தடைச் செய்யப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் சாயிட் அமீட் அல்பார் இன்று பிரகடனப்படுத்தியுள்ளார். இத்தடை இன்று தொடங்கி நடப்புக்கு வருகிறது என்றும் பொதுமக்கள் இவ்வியக்கத்தின் செயல்பாடுகளுக்குத் துணைப் போக வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இண்ட்ராஃப் ஓர் இயக்கமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கடந்த வருடம் அக்தோபர் மாதம் 16-ஆம் திகதியன்று விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அந்த விண்ணப்பம் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பே இண்ட்ராஃப் நாடுதழுவிய நிலையில் பலவிதமான நிகழ்வுகளையும் மறியல்களையும் நடத்தி மலாய் இனத்தவருக்கிடையேயும் மலேசிய இந்தியர்களுக்கிடையேயும் உள்ள ஒற்றுமையை சீர்க்குலைத்துள்ளது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வெளிநாடுகளின் உதவிகளை நாடியதன் வழி மலேசியாவின் நன்மதிப்பையும் இண்ட்ராஃப் குழைத்துள்ளதாக தெரிவித்தார்.

இவ்வியக்கம் ஓர் இயக்கமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என விண்ணப்பித்து சரியாக ஒரு வருடம் பூர்த்தியடைந்த வேளையில், சட்டப்பூர்வத் தடையை இவ்வியக்கம் எதிர்நோக்கியுள்ளது.

நாட்டில் இனக்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை இண்ட்ராஃப் பாழ்படுத்துகிறது என ஆய்வின் வழியும் விசாரணைகளின் வழியும் தெரிய வருவதால் சட்டப்பிரிவு 5(1) மற்றும் சங்கங்கள் விதி 1966 (விதி 335)வழி இண்ட்ராஃப் இயக்கம் சட்டபூர்வமாக தடைச் செய்யப்படுகிறது என சாயிட் அமீர் அல்பார் பிரகடனப்படுத்தியுள்ளார்.

***

அரசாங்கம் இதுபோன்ற இழி நடவடிக்கையில் ஒருநாள் இறங்கும் என்று ஏற்கனவே எதிர்ப்பார்க்கப்பட்டதால் இத்தடை குறித்து இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடையவில்லை. ஊழல், இனவாதம், அதிகார துஷ்பிரயோகம் போன்ற சாக்கடை அரசியலில் ஊறிப்போன அம்னோ அரசாங்கமானது இதைவிட வேறென்ன சிறப்பாகச் செய்துவிட முடியும்.

இயக்கம் என்றொன்றிருந்தால்தான் மக்களை ஒன்றுபடுத்தி வழிநடத்த முடியும் என்று அர்த்தமில்லை. போராட்ட உணர்வும், உரிமை குறித்த விழிப்புணர்வும் மலேசிய இந்தியர்களுக்கு இருக்கும்வரையில் இக்கட்டமைப்பை உடைப்பது அவ்வளவு எளிதானக் காரியம் அல்ல. அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளின் சுயநலங்களுக்கு பாதகம் விளையாதிருக்க சட்டத்தின் கதவினை தட்டியிருக்கின்றனர்.

'மண்டோர்'களை விட்டு அடக்கப்பார்த்தனர், புல்லுருவிகளைவிட்டு ஒற்றுமையைக் குலைக்கப்பார்த்தனர், காவத்துறையைக் கொண்டு மிரட்டிப் பார்த்தனர் எதுவும் எடுபடாது என்கிற நிலையில் அம்னோ துரைகள் சட்டத்துறையைக் கையிலெடுத்து நம் வளர்ச்சியைத் தடை செய்யப்பார்க்கின்றனர்.

மலேசிய இந்திய மக்கள் என்றோ விழித்துக் கொண்டனர், ஆனால் அம்னோ தன் நெடிய உறக்கத்திலிருந்து இன்னும் எழவில்லை. நிதர்சனத்தைவிட கனவுதான் நிசமானது என்ற அறியாமையில் சுகங்கண்டு வருகிறது.

மக்களின் சுதந்திரத்தையும் அவர்களின் சுயமரியாதையையும் மதிக்கத் தெரியாத சட்டங்களால் என்ன லாபம்??

இன்று அச்சட்டங்களைக் கொண்டு நம்மை அச்சுறுத்தினால் நாம் பயந்துவிடுவோமா என்ன!

இவ்வேளையில் அண்ணல் மகாத்மா காந்தியின் பொன்மொழிகள் நினைவுக்கு வருகின்றன.

"நீ என்னை தடுக்கலாம், துன்புறுத்தலாம், கொல்லலாம், என் சவத்தை எடுத்துக் கொள்ளலாம்.. ஆனால் என் சுயமரியாதையை நீ அடிமையாக்க முடியாது..!!"

அம்னோ அரசாங்கத்திற்கு இண்ட்ராஃபின் பதில் இதுதான்..!!

போராட்டம் தொடரும்...

Read more...

பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு - உண்மை நிலவரம்

>> Monday, October 13, 2008

இண்ட்ராஃப் பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில் முறைக்கேடாக நடந்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டிய உத்துசானும் அம்னோவும் இதுவரையில் ஓர் ஆதாரத்தையும் காட்டவில்லை.
ஆனால், முறைக்கேடு ஏதும் நிகழவில்லை என்பதனை கீழே உள்ள படக்காட்சிகளே ஆதாரத்தோடு தெளிவுபடுத்துகின்றன.

பகுதி 1


பகுதி 2


பகுதி 3


நன்றி : பச்சைத்தமிழன்

Read more...

'ஓப்பராசி லாலாங்' - 21-ஆம் ஆண்டு நினைவுநாள்

>> Thursday, October 9, 2008

படத்தைச் சுட்டிப் பெரிதாக்கிப் பாருங்கள்.

பினாங்கு வாழ் மக்களுக்கு ஓர் அறிவிப்பு! 'ஓப்பராசி லாலாங்கின்' 21-வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு 'சுவாராம்' ஏற்பாட்டில் டேவான் சிறீ பினாங்கு மண்டபதிற்கு முன் மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி மறியல் கடந்த இருவாரங்களாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வு தொடர்ந்து இருவாரங்களுக்கு நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக, அமைதி மறியல் நடைப்பெரும் நாளன்று ஓர் அட்டையில் நாம் விருப்பப்படும் இ.சா கைதிகளுக்காக கடிதம் எழுதி 'சுவாராம்' அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் சேகரித்த அத்தனை கடிதங்களையும் 'சுவாராம்' பிரதிநிதியின்வழி கமுந்திங் தடுப்புக் காவலுக்கு எடுத்துச் சென்று உரியவரிடம் ஒப்படைப்பார்கள்.

இந்நிகழ்வு 'சுவாராம்' அமைப்பு ஏற்பாடு செய்திருந்தாலும், இண்ட்ராஃப் உறுப்பினர்களின் பங்கேற்பை அவர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கிறார்கள். எனவே, இண்ட்ராஃப் உறுப்பினர்கள் அடுத்த இரு வாரங்களுக்கு இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு, நம் இண்ட்ராஃப் தலைவர்களுக்காக கடிதம் எழுதி அனுப்புங்கள். இ.சாவை ஒழிக்க வேண்டும் என்று முழக்கமிட்டு வாருங்கள். மற்ற மனித உரிமை இயக்கங்களோடு நல்லிணக்கத்தை வளர்த்துக் கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

நாளை (10-10-2008),மற்றும் 17-10-2008 ஆகிய தினங்களில் நடைப்பெறவுள்ள இவ்வமைதி மறியலில் கண்டிப்பாகக் கலந்துக் கொண்டு ஆதரவைத் தெரிவியுங்கள்.

மனித உரிமைக்கு மனிதர்களாகப் போராடுங்கள்..

பி.கு : நிகழ்வில் கலந்துக் கொள்ளும் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் ஆரஞ்சு நிற உடையினை அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

போராட்டம் தொடரும்...

Read more...

இலங்கைப் படை அதிர்ந்தது!


தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியைப் பிடித்துக் காட்டுவோம் என்று சூளுரைத்துக் கொண்டு முன்னேறிய இலங்கைப் படைக்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய திறமையான முறியடிப்புப் தாக்குதலில், 65 இலங்கைப் படையினர் உயிரிழந்துள்ளதோடு 72 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் சாமர்த்திய வியூகங்களில் சிக்கிக் கொண்ட இலங்கைப் படை திணறிப் போனதுடன், தற்போது தமிழர் பகுதிகளில் குண்டு வீசுவதை அது நிறுத்திக் கொண்டுள்ளது.



இம்முறியடிப்புத் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கைப் படையினருக்குச் சொந்தமான பல படை ஆயுதங்களையும் கைப்பற்றியிருக்கின்றனர். இதற்கிடையில் 'த பொட்டம்லைன்' என்ற ஏட்டில் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கு குழிகளில் இருந்து தமது படைகளுக்கு கட்டளைப் பிறப்பித்து வருவதாக செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புக் கருதி கிளிநொச்சியிலிருந்து தமிழர்கள் வேற்றிடங்களுக்கு படிப்படியாக இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில் நேற்று இலங்கைப் படையினருக்கும் புலிகளுக்குமிடையே கடும் போர் மூண்டுள்ளது. கிளிநொச்சியிலிருந்து தங்களது படைநிலைகளை ஏற்கனவே விடுதலைப் புலிகள் வெளியேற்றி விட்டாலும்கூட, இலங்கைப் படைக்கு வெள்ளித் தாம்பளத்தில் வைத்து கிளிநொச்சியை புலிகள் ஒப்படைக்கப்போவதில்லையெனவும், முல்லைத் தீவின் மேற்குப் பகுதியில் முன்னேறிவரும் இலங்கைப் படைகளுக்கு புலிகளின் செறிவான மோர்ட்டார் மற்றும் ஆர்டிலறி தாக்குதல்களும், ஜொனி மிதிவெடிகளும் பெரும் சவாலாக அமையும் என்று அவ்வேடு கூறுகிறது.



மற்றுமொரு நிலவரத்தில், பிரபாகரன் பதுங்குக் குழிகளில் இருப்பதாகக் காரணம் கூறி இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்து அப்பாவித் தமிழர்களைக் கொன்ற விடயம் குறித்து இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழர் பகுதிகளிலும் கிளிநொச்சியிலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அக்கராயன் குளமாவிலும் நடத்தப்படும் இராணுவத் தாக்குதலை உடனே நிறுத்தும்படி தமிழக அரசியல் கட்சிகள் போர்கொடி தூக்கியுள்ள வேளையில், கலைஞர் கருணாநிதி தமிழக மக்களை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தந்தி அனுப்ப வேண்டுகோள் விடுத்திருந்தார். கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து பல்லாயிரக்கணக்கானவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குத் தந்தி அனுப்பி இலங்கை இராணுவத்தின் அராஜகத்தை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இலங்கை பிரச்சனை குறித்து கலைஞருடன் ஆலோசனை நடத்திய மன்மோகன் சிங், தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஆனால், இந்தியா இலங்கை படையினருக்கு இராணுவப் பயிற்சியும், இராணுவத் தளவாடங்களையும் கொடுத்து வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தற்போது இந்தியாவிடமிருந்து தொடர்நெருக்கடி வருவதால், இலங்கை அதிபர் மகிந்த ராசபக்சே இராணுவத் தாக்குதலை நிறுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது.

இருப்பினும் விடுதலைப் புலிகள் எந்நேரமும் விழிப்புடனேயே கிளிநொச்சியைக் காவல் காத்து வருகின்றனர்..

Read more...
Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP