திரு.செயதாசிற்காக திரண்டன நன்கொடைகள்!

>> Sunday, May 3, 2009


கடந்த 1-ஆம் திகதி மே மாதமன்று, நாடறிந்த போராட்டவாதியான திரு.செயதாசின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மேற்கொள்ளப்பட்ட நல்லெண்ண விருந்து நிகழ்வு இனிதே நிகழ்ந்தேறியது. கிள்ளான் ஒக்கியன் சீன மண்டபத்தில் நடந்தேறிய இந்நிகழ்வில் பலரும் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு அளித்தனர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கவாசகம், பூச்சோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கோபிந்த் சிங், வழக்கறிஞர் திரு.சுரேந்திரன், லத்திபா கோயா, மலேசிய சோசியலிச கட்சியின் தலைவர் , அக்கட்சியின் பொதுச்செயலாளர் திரு.அருட்செல்வன், ஓம்ஸ் தியாகராசன், ரத்னவள்ளி அம்மையார், செம்பருத்தி இதழின் ஆசிரியர் திரு.ஆறுமுகம் மற்றும் நாடு தழுவிய அளவில் இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் இசை மற்றும் உணவு விருந்துகளுக்கிடையில் சில பிரமுகர்களின் உரைகளும் இடம்பெற்றன. திரு.செயதாசு 1998-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை அவர் களமிறங்கிய போராட்ட நிகழ்வுகளைப் புகைப்படங்களாகத் தொகுத்து ஒளியிழையின்வழி காண்பிக்கப்பட்டது.

கிள்ளானில் அமைந்துள்ள ஓர் அனாதை இல்லத்து குழந்தைகளுக்கும் அன்று உணவு பரிமாறப்பட்டது சிறப்பு.

இந்நிகழ்வில் நானும் பினாங்கு மக்கள் சக்தி நண்பர்களுடன் கலந்துகொண்டேன். இந்நிகழ்வில் வலைப்பதிவர்கள் திரு.குமரன் மற்றும் மாதவன் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதில் பெருமகிழ்ச்சி. ‘சயாம்- பர்மா மரண இரயில் பாதைஎனும் ஆய்வு நூலை வடித்த எழுத்தாளர் திரு.அருண் அவர்களையும் சந்திக்க வாய்ப்பு கிட்டியது.

இரவு 8 மணியளவில் தொடங்கப்பட்ட இந்நிகழ்வு சுமார் 11 மணியளவில் திரு.ஆறுமுகம் ஐயா அவர்களின் உரையோடு ஒரு நிறைவை அடைந்தது.

அன்றைய நிகழ்வில் திரு.செயதாசிற்காக நன்கொடைகள் சுமார் ஒரு லட்சம் ரிங்கிட்டிற்கு திரட்டப்பட்டது. விரைவில், அவர் இந்தியாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, நலமுடன் நாடு திரும்பி தமது போராட்டத்தை தொடர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

போராட்டம் தொடரும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

கிருஷ்ணா May 5, 2009 at 5:41 PM  

நன்கொடையை முன்கூட்டியே அனுப்பி விட்ட நிம்மதியில் 'மாமியார் வீட்டிற்குச்' சென்றுவிட்டேன். இப்பொழுதுதான் தெரிகிறது.. அது எவ்வளவு பெரிய தவறு என்று! நண்பர் குமரன் என்னை திட்டித் தீர்த்திருப்பார்!

Sathis Kumar May 5, 2009 at 7:12 PM  

பரவாயில்லை நண்பரே, வேறு நிகழ்வுகளில் சந்திக்கும் வாய்ப்பு விரைவில் நமக்கு கிட்டட்டும்.. :)

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP