திருவெம்பாவை - பாடல் 3

>> Sunday, January 4, 2009


முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆ னந்தன் அமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைத்தீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

பாவையர்கள் பார்த்தார்கள். ‘இரண்டு பெண்களை எழுப்பிவிட்டோம். தவறாமல் அதிகாலையிலேயே எழுந்து நம்மை வழக்கமாய் எதிர் ஏற்கும் பெண்ணைக் காணவில்லையே! என்ன காரணம்?' என்று அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று அங்கே பாடுகிறார்கள்.

முத்தன்ன வெண்நகையாய்

முத்துப் போன்ற வெண்மையான பற்களையுடைய பெண்ணே!” என்று அந்தப் பெண்ணை வர்ணித்து, அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்கின்றார்கள் :

முன்பு எல்லாம், எங்களுக்கு முன்னரே துயில் எழுந்து, எங்களுக்கு எதிர்வந்து, இறையை வாய் இனிக்க இனிக்கப் போற்றுவாய். ‘ஆண்டவன் எனக்குத் தந்தை, இன்ப வடிவினன், அழிவற்றவன், அழகில் ஒப்பற்றவன், ‘அமுதன்' என்று. ஆனால், இப்பொழுது என்னவென்றால் உறங்குகின்றாயே! விழித்தெழுந்து கதவு திறக்கின்றாய் இல்லையே! ஈது என்னை?”

முத்து அன்ன வெண்நகையாய், முன்வந்து எதிஎழுந்துஎன்
அத்த, ஆனந்தன் அமுதன்என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்துன் கடைதிறவாய்

அத்தன் : தந்தையும் ஆவான், தலைவனும் ஆவான். இப்படி எழுப்ப வந்தவர்கள் கூற, எழுந்தவள் சொல்கின்றாள் :

பத்துடையீர், ஈசன் பழஅடியீர், பாங்குடையீர்
புத்தடியோம், புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ

பேரன்புடையீர், பக்தியுடையீர், நீங்கள் எல்லோரும் பழைய அடியார்கள். பக்குவம் நன்கு பெற்றவர்கள் ; என் போன்றவர்கள் புதிய அடிமைகள். எங்கள் குற்றத்தை ஆட்கொண்டால் தீங்காமோ?” இவ்வாறு சொன்னதற்கு, எழுப்ப வந்த பெண்கள் பதிலுரைக்கின்றனர்:

எத்தோநின் அன்புடைமை, எல்லோம் அறியோமோ

உன் அன்புடைமை எங்களுக்குத் தெரியாதா? அது எப்படிப்பட்டது, எத்தகையது என்பதை நாங்கள் அறியமாட்டோமா?” என்றார்கள்.

இதைக் கேட்டுப் படுத்திருந்த பெண்மணி சொல்கிறாள் :

சித்தம் அழகியார் பாடாரோ நசிவனை?”

மன நன்மையுடையார், இறைவன் திருவருளை நாடிப் பக்தி செய்பவர்கள், நம் சிவபெருமானைப் புகழ்ந்து பாடாது இருப்பார்களோ?”

இறைவன் திருவருளை நாடிப் பாடுவார்கள் என்றமையினால், ‘இப்பெண்கள் எல்லாம் இறைவனைப் பாடாமல் என்னைப்பற்றியப் பேசிப் பொழுதைக் கழிக்கின்றார்களே!' என்பதைக் கூறாமல் கூறுகிறாள். அதனால்தான் அந்தப் பெண்கள் தலைவி,

இத்தனையும் வேண்டும் எமக்குஏலோர் எம்பாவாய்

என்கிறாள். “ஆமாம், நமக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்என்ற வருத்தம் ஏற்படுகிறது.

திருவெம்பாவை - பாடல் 2

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

6 கருத்து ஓலை(கள்):

ச.சங்கர் January 4, 2009 at 2:56 PM  

நன்றாக எழுதி வருகிறீர்கள்.

தொடருங்கள்

அன்புடன்...ச.சங்கர்

சிவகுமார் சுப்புராமன் January 5, 2009 at 3:52 AM  

கீழ்கண்ட இணைய முகவரியில் சில தரங்கெட்ட தமிழர்களின் கருத்துக்கள் இடம்பெற்றுவருகிறது, அதனை கண்டித்து உங்கள் கருத்து மூலம் அவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்.

http://thatstamil.oneindia.in/news/2009/01/04/india-malaysia-has-no-immediate-plans-to-release.html

நன்றி.

Sathis Kumar January 5, 2009 at 8:20 AM  

அன்பின் சிவகுமார்,

அத்தளத்தை கண்ணுற்றேன். அநாகரிகத்தின் உச்சத்திற்கே பின்னூட்டங்கள் சென்றுவிட்டன. இதுபோன்ற காட்டுமிராண்டிகளிடம் எது கூறினாலும் எடுபடபோவதில்லை. அவர்கள் மலேசிய நாட்டில் நடைப்பெறும் பிரச்சனைகளை இந்திய அரசியலோடு ஒப்பீடு செய்து பார்க்கிறார்கள்.

அதிலும் அடிமைத்தனம் அவர்களின் பின்னூட்டங்களின் வாயிலாக வெளிப்படுகிறது. சிலர் அடிமை வாழ்க்கை வாழ்வதில் சுகம் காண விரும்பினால் நாம் என்ன செய்ய முடியும்.

எனவே, நீங்களும் அத்தளத்தில் பின்னூட்டமிடுவதை விட்டுவிடுங்கள்! உங்கள் பொன்னான நேரத்தை அந்த நாகரிகம் தெரியாத அடிமை மடையர்களுக்காக செலவழிக்க வேண்டாம்.

மு.வேலன் January 5, 2009 at 9:33 AM  

படித்தேன். நன்றி. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.

து. பவனேஸ்வரி January 6, 2009 at 10:59 AM  

அருமையான விளக்கம். தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous January 7, 2009 at 6:02 PM  

ஏன் திருவெம்பாவையை நிறுத்தி விட்டீர்கள்?

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP