வெட்டப்படும் நிலையில் உதயாவின் கால்கள்!

>> Tuesday, February 17, 2009



இன விடுதலைக்காகவும் , சம உரிமைக்காகவும் நடந்த உதயாவின் கால்கள் இன்று வெட்டப்படும் நிலையில் உள்ளன. இண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதானவுடன் நாடெங்கிலும் மக்கள் பொங்கி எழுந்தனர். நாடு தளுவிய அளவில் ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் தொடர்ந்தாற்போல் நடைப்பெற்று வந்தன.

இன்று உதயா எனும் மாமனிதனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படாமல் தனது கால்களை இழக்கும் நிலையில் இருக்கிறார். ஒருத்தராவது குறைந்த பட்சம் ஆலயத்தில் அவரின் பெயரில் பிரார்த்தனை செய்திருப்போமா? அன்று இருந்த அந்த வேகமும் விடுதலைக்கான வேட்கையும் இன்று எங்கே?

இந்த நன்றிகெட்ட தனத்தையும் அஞ்சி நடுங்கும் கோழைத்தனத்தையும் மீண்டும் இந்திய சமூகம் காணாதா என ஏங்கிகொண்டிருந்த அம்னோவின் வயிற்றில் படிப்படியாக பாலை வார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனையான உண்மை. உதயாவை பெற்ற தாய் அங்கு கண்ணீர் வடிக்கிறாள்! என் மகனை காப்பாற்றுங்கள் என தள்ளாத வயதிலும் தெருவில் நின்று கூக்குரலிடுகிறாள். நாம் இவை அனைத்தையும் காலை தேநீரைச் சுவைத்துக்கொண்டே நாளிதழ்கள் படித்து தெரிந்துகொள்கிறோம். ஆனால், நம்மிடமிருந்து ஒரு சொற்ப முயற்சியும் வெளியில் எட்டிப் பார்க்கவில்லை!

மக்கள் சக்தி தலைவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் சில மூடர்கள் எனக்கு அந்த பதவியைக் கொடு, இந்தப் பதவிக்கு என்னை பரிந்துரை செய், சட்டமன்ற தேர்தலில் என்னை நிற்க வை! என சொந்த சுயநல வியாபாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளதால் உதயாவின் உடல் நிலை குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அந்த குறிப்பிட்ட தலைவர்களின் பின்னால் பித்து பிடித்து அலையும் விஷ பாம்புகளுக்கும் இவ்விடயத்தில் அக்கறையில்லை! இனி, அந்த கூட்டத்தை நம்பி ஒரு புண்னியமும் இல்லை!

ஒரு மனித உரிமை இயக்கம் எப்படி அரசியலுக்கு சோரம் போனது?! குறிப்பிட்ட கட்சிகளுக்கு கூஜா தூக்குவதற்குதான் மக்கள் சக்தி உருவானதா என்ற கேள்வி இன்று நம்முள் எழுகின்றது! இன்று யாரும் இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை, நினைவுக் கூறவும் விரும்புவதில்லை! அரசு எந்திரங்களின் தொடர் ஒடுக்குதலால் மீண்டும் சமுதாயம் அஞ்சி நடுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது! அன்றிருந்த வீர இளைஞர்கள் இன்று சோர இளைஞர்களாய் பயத்தின் நிழலில் இருந்துவருவதை கவனிக்க முடிகிறது!

அதனால்தான் இன்று உதயாவின் உயிருக்கு உலை ஏற்பட்டபின்பும் கேட்பதற்கு நாதியில்லாமல் அவரும் அவரது குடும்பத்தினரும் பரிதாப நிலையில் உள்ளனர். அவரின் தற்போதைய உடல் நிலையைப் பார்க்கும் பொழுது குறைந்தது இரு வாரங்களுக்குள் முறையான சிகிச்சை வழங்கியே ஆக வேண்டிய நிலை உள்ளது. வீணடிக்கப்படும் ஒவ்வொரு நொடியும் அவருடைய உடல் நிலை மேலும் மோசமடையலாம்!

இனி முடிவு பொதுமக்களின் கையில்தான் உள்ளது! என்ன செய்யப்போவதாய் உத்தேசம்? பிரதமருக்கு, உள்துறை அமைச்சருக்கு முறையான கடிதம் அனுப்பியாயிற்று! காவல்நிலையத்தில் புகார் செய்தாயிற்று! பதாகைகளையேந்தி நியாயத்தையும் கேட்டாயிற்று! இனி, உதயாவைக் காப்பாறுவதற்கு ஏதேனும் வழிகள் உண்டா? தயவு செய்து கூறுங்கள்....

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP